jeudi 27 décembre 2012

மீண்டுமோர் ஆசை [பகுதி - 2]



மீண்டுமோர் ஆசை

சீதை இராமன் நோக்கியதைச்
     சிறிய தென்று சொல்லிடுவேன்!
கோதை கொண்ட குளிர்விழிகள்
     கொள்கை மறவன் எனைநோக்கப்
போதை யேறி நான்பெற்ற
     புதுமை உணா்வு! கவிபாடும்
பாதை காட்டும் பார்வையினைப்
     பார்க்க மீண்டும் ஓா்ஆசை!

பெண்ணின் பெருமை பேசுகிற
     பெருநுால் உண்டு! அவள்கொண்ட
கண்ணின் பெருமை பேசுகிற
     கவிஞன் நான்!என் கவியெல்லாம்
விண்ணின் பெருமை விஞ்சிடவே
     வேண்டி அசையும் அவள்விழி!
மண்ணின் பெருமை மொழிகின்ற
     மலா்க்கண்  பார்க்க மீண்டுமாசை!

(தொடரும்)

9 commentaires:

  1. அழகான ஆசைகள்!!

    (கவிஞரே... அநேகமாக அந்த அம்மாளுக்கு வயதாகி இருக்குமே... எப்படி உங்கள் ஆசை நிறைவேறும்? ஒரு சமயம் அதிகப்படியான ஆசையோ...!!)

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      அழகான ஆசைகள்! என்னகத்துள் நாளும்
      பழமாக முற்றும் படா்ந்து!

      Supprimer
  2. விண்ணின் பெருமை விஞ்சிடவே
    வேண்டி அசையும் அவள்விழி!//
    நல்ல கற்பனை ,அத்தனையும் அருமை

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்! நன்றி!

      நற்றமிழ் அன்னை! நறுங்கவி நான்பாடக்
      கற்பனை தந்தால் கனிந்து!

      Supprimer
  3. Réponses

    1. வணக்கம்! நன்றி!

      ஆகா எனவுன்னை ஆடிடச் செய்யும்!தேன்
      பாகாய் இனிக்குமே பாய்ந்து

      Supprimer
  4. வேண்டி அசையும் அவள்விழி!

    காயைக் காணோம்.

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      காய்வரும் இடத்தில் முற்றல்
      கமழ்விளம் வரலாம்! என்றன்
      தாய்தரும் சொற்கள்! பாட்டில்
      தழைத்திடும் இன்பம் நல்கும்!
      போய்..வரும் காலம் தன்னில்
      புலம்பிய கவிகள்! காதல்
      நோய்தரும்! மரபைக் கற்போர்
      நுண்ணிய புலமை ஏற்பார்!

      தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி!

      காய்ச்சீா் வரவேண்டிய இடத்தில் அவள்விழி என்று
      விளா்ச்சீா் வந்துள்ளது

      காய்வரும் இடத்தில் விளா்ச்சீா் வரலாம் என்பது
      யாப்பிலணக்க விதி!

      கூவிளம் வரலாம் என்றாலும்
      கவிதை நுட்பம் அறிந்தோர்
      கருவிளச்சீரையும், கருவிளாச் சீரையும் அமைத்து எழுதுவார்!

      நாமார்க்கும் குடியல்லோம்! நமனை அஞ்சோம்!
      நரகத்தில் இடா்ப்படோம்! நடலை இல்லோம்!
      ஏமாப்போம் பிணியறியோம் பணிவோம் அல்லோம்!
      இன்பமே எந்நாளும் துன்பம் இல்லை
      அப்பா் தேவாரம்

      இடா்ப்படோம், இன்பமே
      காய்வரும் இடத்தில் விளம் வந்துள்ளதைக் கண்டுணா்க!

      இந்தக் கவிதையை எமுதும்பொழுது அவள்விழிகள்
      என்றே நான் எழுதினேன்!
      அவள்விழிகள் என்பதே சிறந்த ஓசையை அளிக்கும்.

      பல இலட்ச கவிதைகளை எழுதியுள்ள நான்
      ஒருநாளைக்கு ஒரு கவிதையாவது வலையேற்ற வேண்டும்
      என்பது என் விருப்பம்.

      இரவு 1.00 மணிக்கு ஒவ்வொருநாளும் வலையேற்றம்
      செய்யக் காலம் வாய்க்கிறது.

      துாக்கம் என்கண்களைத் தழுவ
      என் கைகள் தமிழைத் தழுவ
      வலையேற்றம் நிறைவுறும்!

      மீண்டும் ஒருமுறை படித்துப் பார்க்க நிமிடம் இன்றிப்
      படுக்கையில் விழுந்துவிடுவேன்!

      பதிவுப்பிழை காண்போர் எடுத்துரைக்கவும்!
      திருத்திப் படிக்கவும்!

      Supprimer

  5. வணக்கம்!

    கருத்துக்கள் யாவும் கவிமனத்துள் தென்னைக்
    குருத்தெனப் பூக்கும் குவிந்து

    RépondreSupprimer