dimanche 19 février 2017

விருத்த மேடை - 2



அறுசீர் விருத்தம்  - 2
[மா + மா + காய் அரையடிக்கு]

வயலில் வளரும் களைகளினால்
   வளமே குன்றிப் பயிர்வாடும்!
புயலில் சிக்கும் கரையூர்கள்
   பொலிவை இழந்து துயர்மேவும்!
அயலில் உள்ள பிறமொழியை
   அன்னைத் தமிழில் கலப்பதுவோ?
உயிரில் கொடிய நஞ்சியினை
   ஊட்டும் செயலாம் உணருகவே!  
  
இப்பாடல் "மா + மா + காய் + மா + மா + காய்" என்ற சீரமைப்பை ஓரடியாகக் கொண்டது. இவ்வமைப்பிலேயே நான்கடிகள் அமைந்திருக்க வேண்டும். நான்கடிகளும் ஓரெதுகை பெற்றிருக்க வேண்டும். ஒன்று, நான்காம் சீர்களில் மோனை அமைதல் வேண்டும்.
    
இலக்கணம் நுாற்பா
  
இருமா காய்ச்சீர் அரையடிக்காய்  
இவையே மற்ற அரையடிக்கும்  
      - விருத்தப் பாவியல் [2]

  
கையூட்டைக் குறித்து [ஊழல்] இவ்வகை அறுசீர் விருத்தம் ஒன்றைப் பாடுமாறு பாவலர்களை அன்புடன் வேண்டுகிறேன்.
    
"பாவலர் பயிலரங்கம்" என்ற குழுவில் இணைந்து தங்கள் வெண்பாவைப் பதிவிட வேண்டுகிறேன்!
     
அன்புடன்
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்:
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்
17.02.2017

படமும் பாட்டும்





கண்ணன் என் காதலன்!

குன்றேந்திக்
கன்றினைக் காத்தவன்!
துண்டேந்திக்
கன்னியைக் காக்கிறான்!

ஆநிரையை
அருளேந்திக் காத்தவன்!
ஆயிழையை
அன்பேந்திக் காக்கிறான்!

ஆடையை
எடுப்பதும் - பின்
கொடுப்பதும் - அவனின்
அலகிலா விளையாட்டும்!

கருமேகக் கண்ணன்!
வருமேகம் காணாமல்
உறவாடும் காட்சியினை
உடையால் மறைக்கின்றான்!

திருவாயில்
உலகுடையான்!
அவள் வாயில்
உளமுடையான்!

கண்ணழகில்
மறந்தாள் பாதை!
மயங்கும் கோதை!

பெண்ணழகில்
மறந்தான் கீதை!
மாமலை மேதை!

நீல வண்ணன்
நீந்துகிறான்
காதலால்!
கோல விழிகளின்
மோதலால்!

மொழியின்றி
விழிகள் பேசும்!
முகுந்தன் முகத்தழகு
மோகம் வீசும்!

உடைகொண்டு மறைத்து - தேன்
அடையுண்ண எண்ணுகிறான்!
இடையொன்று இல்லாமல்
இவள் வளைந்து மின்னுகிறாள்!

புல்லாங்குழலாகப்
பொன்மகளை வாசிக்கக்
கண்ணன்
திட்டமிடுகின்றான்!
கள்ளன்
கொட்டமிடுன்றான்!
காதல்
வட்டமிடுகின்றான்!
உடையால்
பட்டம் விடுகின்றான்!

உடை,
குடையானது! - காதல்
கொடையானது!
எடை,
குறைவானது! - இன்பம்
நிறைவானது!
இடை,
கொடியானது! - சொர்க்கப்
படியானது!
நடை,
நடமாடுது! - தேன்
குடம்சூடுது!
தடை,
உடைந்தோடுது! - ஆசை
உறைந்தோங்குது!

தீராத விளையாட்டுப்
பிள்ளை! - அவன்
தீண்டாமல் அகன்றிடுமோ
தொல்லை!
ஆறாத ஆசைக்கேது
எல்லை? - அவன்
அழகுருவம் பூத்தாடும்
கொல்லை!

மாயக் கண்ணன்!
நேயக் கண்ணன்!
கொஞ்சும் காட்சி! - காதல்
விஞ்சும் மாட்சி!

படத்தைக் கண்டு
படைத்த சொற்கள்!
படிப்போர் மனத்தில்
படைக்கும் நற்..கள்

பாட்டரசர் கி. பாரதிதாசன்
18.02.2017

jeudi 16 février 2017

வெண்பாக் கொத்து




காதலர் வெண்பாக் கொத்து!

குறள் வெண்பா!

பூத்து மலராடும் பொற்கொடியே! முத்தத்தால்
கூத்து நடத்திடுவோம் கூடு!

இன்னிசைச் சிந்தியல் வெண்பா
  
பூத்து மணம்வீசும் நற்பொழிலே! புன்னகையால்
ஈர்த்து  மயக்காதே! என்னை வதைக்காதே!
கோத்துக் களித்திடுவோம் கூடு!

நேரிசைச் சிந்தியல் வெண்பா

பூத்து மனமாடும் பூங்குயிலே! எந்நாளும்
மூத்துச் சுவையாடும் முத்தம்..தா! - ஆத்தாடி
கூட்டுப் புரிந்திடுவோம் கூடு!

இன்னிசை வெண்பா

பூத்து மகிழ்வோங்கும்! பொங்கித் தமிழோங்கும்!
காத்து விழியோங்கும்! கன்னல் கனவோங்கும்!
நீந்தும் நினைவோங்கும் நேரிழையே! மஞ்சத்துள்
கூந்தல் மணமோங்கும் கூடு!
  
நேரிசை வெண்பா

பூத்து வளர்ந்தாடும்! போதை நிறைந்தாடும்!
ஏத்துப் புகழ்சீர் இனித்தாடும்! - சேர்த்தணைத்[து]
ஓடை மரத்தடியில் உள்ளம் உவந்திடவே
கூடைக் கனியத்துக் கூடு!
  
இன்னிசைப் பஃறொடை வெண்பா

பூத்து நலமளிக்கும் பொங்கல் திருநாளாய்ப்
பார்த்து நலமளிக்கும் பைங்கிளியே! சூத்திரமாய்
இன்பம் சுரக்கின்ற ஈடில் கதைபேசித்
துன்பம் துடைக்கின்ற துாயவனே! என்னுயிரே!
செல்லம் எனும்மொழியில் உள்ளம் உவக்கின்ற
செல்வக் களஞ்சியமே! தேனே! செழுந்தமிழே!
சொக்கிக் கிடக்கின்றேன்! தோளைப் பிடித்தழகாய்
எக்கி அளித்திடுவாய் இன்முத்தம்! கொக்கியெழில்
ஓடம் அழைக்குதடி! உள்ளிருக்கும் நம்மிதயக்
கூடம் குளிர்ந்திடவே கூடு!
  
நேரிசைப் பஃறொடை வெண்பா

பூத்து மதுவூட்டும் போற்றி உனைக்கிங்குச்
சாத்தும் கவியாவும்! தண்ணிலவே!  - ஆத்திமரப்
பாத்தி வயலுக்குள் பாடிக் களித்தசுகம்
போர்த்தி எனைவாட்டும்!  புண்ணியனின் - தீர்த்தமென
வார்த்துக் கனியமுதை வாடும் உயிர்காப்பாய்!
பார்த்தன் அளித்ததுபோல் மார்பளித்தேன்! - ஆர்த்திடுவாய்!
ஆர்த்தி அறையாக அன்பே உனக்களித்தேன்
கூத்தன் கொடுத்த..என் கூடு!

பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்:
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்
14.02.2016