Affichage des articles dont le libellé est எண்சீர் விருத்தம். Afficher tous les articles
Affichage des articles dont le libellé est எண்சீர் விருத்தம். Afficher tous les articles

samedi 23 décembre 2023

கண்ணாடிக் காரி

 


கண்ணாடிக் காரி

 

1.

கண்ணாடி போட்டொளிரும் கட்டழகு கன்னி!

         கவிமனத்தைப் பின்னுகிறாள் கணக்காக எண்ணி!

தண்ணாழி ஆழத்தில் கண்டெடுத்த அமுதோ?

         தளிர்மேனி மதுவூறி மணக்கின்ற குமுதோ?

பெண்ணாகி வந்தவுருப் படைத்தவனின் விந்தை!

         பிஞ்சிவிரல் எனைத்தழுவத் தினமேங்குஞ் சிந்தை!

புண்ணாகி வாடுமனம் அவளழகைக் கண்டு!

         பொன்முகத்தைப் பூவென்று நம்புதடா வண்டு!

 

2.

கார்நிலையில் பூத்தகுழல் கனவுகளைச் சூட்டும்!

         காலழகும் கையழகும் கவியமுதை யூட்டும்!

நீர்நிலையில் குடமேந்தி வருகின்ற காட்சி!

         நெஞ்சத்துள் எந்நொடியும் காமனவன் ஆட்சி!

தேர்நிலையில் அலங்காரம் திருமகளின் தோற்றம்!

         தேவியவள் சிரிப்பழகே என்..துயரை மாற்றும்!

ஏர்வயலில் உழுவதுபோல் காதலினை யுழுதாள்!

         எப்பொழுதும் எனைவேண்டி ஈசனையே தொழுதாள்!

 

3.

பொன்மாலை அணிமணிகள் அவள்மார்ப்பைத் தழுவும்!

         புலவனுளம் பெச்செரிப்பில் தினம்பொங்கி யழுவும்!

மின்னாலைத் தறியாக எண்ணங்கள் ஓடும்!

         மின்னலிடை செந்தமிழின் வண்ணங்கள் சூடும்!

இன்மாலை வெண்ணிலவு மேகத்துள் மறையும்!

         என்னவளின் முன்னாலே அதனழகு குறையும்!

நன்னாளை எதிர்பார்த்துக் காதலுயிர் ஏங்கும்!

         நங்கைதரும் தரிசனத்தால் எவ்வாறு துாங்கும்!

 

4.

வளையோசை காதுக்குள் சங்கீத மீட்டும்!

         மணியோசை தந்ததன தாளங்கள் சூட்டும்!

கலையோசை யத்தனையும் கையசைவு காட்டும்!

         கவியோசைச் சந்தங்கள் காலசைவு தீட்டும்!

அலையோசை யழகாகக் கற்பனைகள் மூட்டும்!   

         அகத்தாசை தான்பெருகி ஆரமுதை யூட்டும்!  

தலையோசை கொலுசோசை ஆகியெனை வாட்டும்!

         தனியோசை முத்தங்கள் தாகத்தைக் கூட்டும்!

 

5.

பொட்டழகு தந்திடுமே புதுமைபல கோடி!

         புடவையெழில் தந்திடுமே தேன்சுளையை வாரி!

மொட்டழகு தந்திடுமே மதுக்குடத்தைப் பொங்கி!

         மூக்கழகு தந்திடுமே புதுக்கருத்தைச் சுங்கி!

கட்டழகு தந்திடுமே நினைவுகளை மின்னிக்

         கண்ணழகு தந்திடுமே கனவுகளைப் பின்னி!

பட்டழகு தந்திடுமே இளையவளின் மேனி

         பகலிரவாய்த் தந்திடுமே இன்பத்தைப் பேணி!

 

6.

காதோரம் அணிந்துள்ள கல்லொளிரும் கம்மல்!

         கண்டதனைப் பாடுவதில் நானன்றோ செம்மல்!

மாதோரம் சேருகின்ற பொருள்வாசம் வீசும்!

         மார்போரம் சேருகின்ற மணி..கவிதை பேசும்!

ஆதாரம் ஆவதுபோல் பதிலொன்று சொல்லும்!

         ஆகாரம் போலென்னை யுண்டுசுவை கொள்ளும்!

சேதாரம் ஆகாமல் வேண்டுகிறேன் காப்பு!

         தேவியவள் பேரழகு செழித்தமிழாம் தோப்பு!

 

7.

ஒட்டாமல் இருக்கின்ற ஒட்டியாணம் ஏனோ?

         ஓரவிழிப் பார்வையிலே உள்ளதொரு மானோ?

கொட்டாமல் பூத்தாடும் வண்ணமலர்ச் சோலை!

         கோதையுடல் தனைத்தழுவி மணக்குதடி சேலை!

கட்டாமல் சுற்றிவரும் என்னுடைய நெஞ்சம்!

         கன்னிமுகம் கண்டவுடன் கம்மென்று கொஞ்சும்!

தட்டாமல் வந்திடுமோ கைகளிடும் ஓசை!

         தழுவாமல் அடங்கிடுமோ காதலிடும் ஆசை!

 

8.

மெட்டெடுத்துப் பாடுகிறேன் மெட்டியொலி சந்தம்!

         மேனகையும் ஊர்வசியும் அவளுடைய சொந்தம்?

பட்டெடுத்து வருகின்றேன் அன்பலைகள் தொடரும்!

         பார்வையெழில் பதிவாகிப் பலகவிகள் படரும்!

தட்டெடுத்து நிற்கின்றேன் உணவுதர வேண்டும்!

         தங்கமெனக் கொண்டவுடல் இன்பத்தைத் துாண்டும்!

எட்டெழுத்து மந்திரமாய் மங்கைபெயர் ஆகும்!

         இரவெல்லாம் விழிப்புற்றுக் காதலுயிர் வேகும்!

 

9.

மூக்குத்தி நல்லழகில் மோகநிலை கூடும்!

         முன்னழகும் பின்னழகும் முத்தமிழைச் சூடும்!

நாக்கத்தி மொழிகொண்டு வெட்டுகிறாள் என்னை!

         நான்..போதை ஏறிடவே காட்டுகிறாள் கண்ணை!

பூச்சட்டி ஏந்திவரும் காட்சியினைக் கண்டு

         புல்லரித்துப் புடைக்குமுடல் புதுமைநிலை கொண்டு!

தீச்சட்டி முன்னாலே தருகின்றேன் வாக்கு!

         சீா்கட்டி மணந்திடுவேன் சேர்துயரைப் போக்கு!

 

10.

தோற்றழுவும் உடைகண்டு சுதிமீட்டும் உள்ளம்!

         தோட்டழுவும் பைகண்டு மதிகூட்டும் வெல்லம்!

காற்றழுவும் அடிகண்டு மெய்ம்மயங்கி நிற்கும்!

         கார்தழுவும் முடிகண்டு கலைபலவுங் கற்கும்!

சேற்றழுவும் விழிகண்டு சிக்கிமனம் வாடும்!

         சீர்தழுவும் மொழிகண்டு சொக்கிமனம் ஆடும்!

மேற்றழுவும் பொருள்கண்டு சாற்றியுள்ள பாடல்

         வேற்றழுவும் தமிழ்மறவன் வாழுகின்ற கூடல்!

 

பாட்டரசர் கி. பாரதிதாசன்

தலைவர்

கம்பன் கழகம், பிரான்சு

தொல்காப்பியர் கழகம், பிரான்சு

உலகத் தமிழ்ச்சிறகம்.

23.12.2023

lundi 4 juillet 2022

நன்றி..நன்றி..நன்றி..

நன்றி..நன்றி..நன்றி..


ஏன்பிறந்தேன் என்றெண்ணி வாடும் வேளை

        இவ்வரங்கின் பாவலர்காள்  ஒன்றாய்க் கூடி

நான்பிறந்தேன் தமிழ்காக்க, உரிமை காக்க,

        நற்றமிழர் மாண்பியலை நன்றே காக்க,

வான்பிறந்தேன் மழையாக, கம்பன், கீரன்,

        வழிபிறந்தேன்! மறவரணி பிறந்தேன்! சந்தத்

தேன்பிறந்தேன் என்றழகாய்ப் போற்றிப் பாடிச்

        சீருரைத்தீர்! மகிழ்வுற்றேன்! நன்றி! நன்றி!!

 

முன்வினையின் செயலென்று மூளை சோர்ந்து

        மூலையிலே முடங்கியுயிர் கிடக்கும் வேளை

என்வினையின் செயல்யாவும் தமிழர் ஏற்றம்!

        எண்டிசையும் புகழ்பாடி நாளும் போற்றும்!

பொன்வினையின் அணியாகப் பாக்கள் மின்னும்!

        புலவர்தம் உள்ளத்தைச் சேர்த்தே பின்னும்!

இன்வினையின் நலமாக வாழ்த்துப் பாடி

        என்னுயிரை மகிழ்வித்தீர்! நன்றி! நன்றி!!

 

என்னென்றும் ஏதென்றும் அறியா வண்ணம்

        என்றலையைத் துயர்கூடி அழுத்தும் வேளை

துன்பென்னும் கடலுக்குள் முழுகா வண்ணம்

        தேணியெனக் கவியளித்தீர்! கரையைக் கண்டேன்!

வென்றென்றும் வாழ்கின்ற புலமை போற்றி,

        விழியிரண்டில் கமழ்கின்ற கருணை சாற்றி,

அன்பென்னும் ஆரமுதை யள்ளி யூட்டி

        அகங்குளிரச் செய்வித்தீர்! நன்றி! நன்றி!!

 

நாளெல்லாம் நற்பணிகள் செய்த போதும்

        நலிவுற்ற காரணத்தை அறியா வேளை

தோளெல்லாம் கவிமாலை சுமக்கச் செய்தீர்!

        துணையில்லா வாழ்க்கைக்குத் துணிவைத் தந்தீர்!

தாளெல்லாம் கிறுக்குகின்ற குழந்தை போன்று

        தத்தளித்து மகிழ்வுற்றேன்! தமிழே யுண்டேன்!

கோளெல்லாம் என்செய்யும்? உங்கள் வாழ்த்துக்

        குன்றெனவே எனைக்காக்கும்! நன்றி! நன்றி!!

 

விதிசெய்த சூழ்ச்சியிலே சிக்கிச் சிக்கி

        வீழ்வுற்றுத் துயரடியில் சுருண்ட வேளை

மதிசெய்த செந்தமிழால் விடிவைக் காட்டி,

        மதுச்செய்த விருத்தத்தால் இனிமை கூட்டி,

நதிசெய்த இருகரையாய்க் காவல் நாட்டி,

        நரம்புக்குள் புத்துணர்வை நன்றே ஏற்றி,

துதிசெய்த அருட்பாவாய் வாழ்த்தைத் தந்தீர்!

        தொடர்கின்றேன் தமிழ்ப்பணியை! நன்றி! நன்றி!!

 

பாட்டரசர் கி. பாரதிதாசன்

கம்பன் கழகம் பிரான்சு

தொல்காப்பியர் கழகம் பிரான்சு

02.07.2022

samedi 2 avril 2022

எண்சீர் விருத்தம் - 17

 


விருத்த மேடை - 64

 

எண்சீர் விருத்தம் - 17

 

எழு மா +  ஒரு காய்

 

சுற்றிச் சுற்றிச் சுழலு நினைவாற்

   துாக்க மின்றித் துவளு மென்னுயிரே!

முற்றி முற்றி முட்டும் விதியால்  

   மூச்சுக் குள்ளே மோதுந் துயரலையே!

பற்றிப் பற்றி யுண்ணும் புழுவாய்ப்

   பாவ மேறிப் பாதை தடையுறுமே!

ஒற்றி யொற்றி யுற்ற பழிகள்

   ஓதி யோதி நின்றால் விட்டிடுமோ?

 

[பாட்டரசர்]

 

ஓரடியில் ஏழு மாச்சீர்களும் ஒரு காய்ச்சீரும் வரவேண்டும். ஒன்றைந்தாம் சீர்களில் மோனை அமைய வேண்டும். இவ்வாறு நான்கடிகள் ஓரெதுகையை ஏற்க வேண்டும் 

 

விரும்பிய தலைப்பில் இவ்வகை எண்சீர்  விருத்தம் ஒன்று இயற்றுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.

 
அன்புடன்
பாட்டரசர் கி. பாரதிதாசன்
கம்பன் கழகம் பிரான்சு
தொல்காப்பியர் கழகம், பிரான்சு
02.04.2022


தொல்காப்பியர் கழகம், பிரான்சு
02.04.2022

samedi 10 mars 2018

மகளிர் நன்னாள் வாழ்த்து

மகளிர் நன்னாள் வாழ்த்து
  
பெண்ணடிமை நீங்கிடவே முரசம் கொட்டிப்
   பெரும்புலவர் அருந்தமிழில் பாக்கள் செய்தார்!
மண்ணடிமை நீங்கியவர் மகளிர் தம்மை
   மனையடிமை ஆக்கிமனம் மகிழ்ந்தார்! நாற்றப்
புண்ணடிமை செயல்யாவும் புதைய வேண்டும்!
   பொலிவேந்திப் பூவையர்கள் வாழ வேண்டும்!
பண்ணடிமைப் பாட்டரசர் வாழ்த்து கின்றேன்!
   பார்முழுதும் பாவையர்கள் நலமே காண்க!
  
மங்கையராய்ப் பிறந்திடவே தவமே வேண்டும்!
   மணிக்கவியை மனங்கொண்டு பெண்மை போற்று!
தங்கையராய் உடன்பிறந்து குடும்பம் தன்னைத்
   தலைமீது சுமந்தவளின் தண்மை சாற்று!
இங்கயரா[து] உழைக்கின்ற பெண்கள் தாமே
   இல்லத்தின் முதுகொலும்பு! வாழ்வின் அச்சு!
செங்கதிராய்ச் சீர்நல்கும் தாய்மைப் பண்பு
   செழித்திடவே மண்ணுலகைக் காக்கும்! வாழ்த்து!
  
புதுவையிலே பிறந்திட்ட புரட்சி யாளன்!
   புகழ்த்தமிழின் பண்பாளன்! பாட்டின் வேந்தன்!
புதுமையிலே இவ்வுலகம் மலர வேண்டிப்
   பூவையரின் விடுதலைக்குப் போர்வாள் கொண்டான்!
வதுவையிலே ஆணுக்கோர் நீதி! பூத்த
   மலரான மாதுக்கோர் நீதி! இங்குப்
பொதுமையிலே எந்நெறியும் இயற்ற வேண்டும்!
   பொய்புரட்டுச் சடங்கெல்லாம் பொசுங்க வேண்டும்!
  
வீட்டுக்குள் செல்வியரைப் பூட்டி வைத்த
   விலாவெடித்து முகங்கிழித்து மடமை சாய்த்துப்
பாட்டுக்குள் விடுதலையைப் பாடி வென்ற
   பாரதியை வணங்குகிறேன்! பறவை போன்று
கூட்டுக்குள் வாழுவதோ? ஆண்மை ஆளும்
   குரலுக்குத் தாழுவதோ? மேன்மை யோங்க
நாட்டுக்குள் நங்கையரின் நன்மை காத்தால்
   ஏட்டுக்குள் நம்பெயரைக் காலம் தீட்டும்!
  
தன்மானத் தமிழ்அரிமா! அறிவின் செல்வர்!
   தள்ளாத அகவையிலும் தடியை ஊன்றி
நன்மானம் உரைத்திட்ட மறவர்! சூடு
   நரம்பேற, நாம்மாற உழைத்த மல்லர்!
பொன்வானக் கதிர்கொண்ட பெரியார்! ஆய்ந்து
   பொழுதெல்லாம் பெண்ணுரிமை வேண்டி நின்றார்!
துன்பான போக்கெல்லாம் துாள்துாள் ஆக
   இன்பான வழிபடைத்தார்! பெண்ணே வாழி!
  
பிறப்பொக்கும் நெறியுரைக்கும் குறளும், பெண்ணின்
   பெருந்தக்க சீருரைக்கும்! மேல்கீழ் எண்ணம்
இறப்பொக்கும் என்றிடுவேன்! பெண்மை போற்றல்
   இனிப்பொக்கும் என்றிடுவேன்! முன்னே காத்த
சிறப்பொக்கும் வாழ்வியலைச் சூடி வாழச்
   செந்தமிழின் குறள்நெறியை ஏற்பீர் நன்றே!
திறமொக்கும் வண்ணத்தில் மகளிர் சட்டம்
   திருத்தமுற இயற்றிடுவீர்! செழிக்கும் வாழ்வே!
  
மண்கலமும் சுமந்திடுவாள்! வானில் செல்லும்
   விண்கலமும் அமர்ந்திடுவாள்! முன்னை யாப்பின்
பண்கலமும் பயின்றிடுவாள்! பயிற்சி பெற்றுப்
   படைக்களமும் புகுந்திடுவாள்! குளிர்ச்சி நல்கும்
தண்கலமும் தமிழ்க்களமும் நெஞ்சம் ஏந்தித்
   தகைக்களமும் கண்டிடுவாள்! கணினிக் கல்வி
எண்கலமும் தேர்ந்திடுவாள்! அறிவால் ஓங்கும்
   நுண்கலமும் ஓர்ந்திடுவாள்! உலகே போற்று!
  
கொடியழகு வஞ்சியினைப் பெற்ற இல்லம்
   அடியழகுப் பாடல்போல் இனிக்கும் என்பேன்!
செடியழகு பூத்தொளிரும்! பெண்ணின் உள்ளம்
   செயலழகு காத்தொளிரும்! மேகம் கொண்ட
முடியழகு! முகமழகு! முல்லைப் பற்கள்
   முத்தழகு! மொழியழகு! அன்னம் போன்றே
அடியழகு! துடியழகு! அறமே மின்னும்
   அகமழகு! அணியழகு! பெண்மை வாழ்க!
  
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்
08.03.2018