Affichage des articles dont le libellé est அகவல். ஆசிரியப்பா. நேரிசை ஆசிரியப்பா. Afficher tous les articles
Affichage des articles dont le libellé est அகவல். ஆசிரியப்பா. நேரிசை ஆசிரியப்பா. Afficher tous les articles

samedi 21 avril 2018

ஆசிரியப்பா மேடை - 3



ஆசிரியப்பா மேடை - 3

இணைக்குறள் ஆசிரியப்பா

ஆட்சி பிடிக்க அலைந்தே வந்தார்!
மாட்சி மொழியை வடித்தார்!
உயிரே! உறவே! என்றார்!
பயிர்போல் பசுமை படைப்போம் என்றார்!
ஊழல் யாவும்
வீழும் என்றார்!
நலமே இங்கு நாடும் என்றார்!
இலவய மாகப் பொருள்கள் ஈந்தார்!
வாங்கிக் கொண்டு வாக்கும் இட்டோம்!
ஏங்கி இன்று துாக்கம் கெட்டேம்!
வாயில் வந்து வாக்குப் பெற்றார்
நாயாய் நம்மை நடத்து கின்றார்!
பொல்லார் இங்கே
நல்லார் போன்றே
காதி அணிந்து காட்சி தருகிறார்!
நீதித் தாயின் நெஞ்சைப் பிளக்கிறார்!
மாற்றம் எந்நாள் வருமோ?
போற்றும் புலமை புலம்பும் இங்கே!

[பாட்டரசர் கி. பாரதிதாசன்]

நேரிசை யாசிரியப்பாவின் இடையிடையே குறளடியும் சிந்தடியும் கலந்து இப்பா நடக்கும். நேரிசை யாசிரியப்பாவில் சிந்தடி வருகிறது. சிந்தடியோடு  குறளடியும் வருவதால் இணைக்குறள் ஆசிரியப்பா எனப் பெயர் பெற்றது.
ஆசிரியப்பாவின் பொது இலக்கணத்தைப் பெற்று, முதலடியும் ஈற்றடியும் நாற்சீர் கொண்ட அளவடியாகவும், இடையில் நாற்சீர் அடிகளாகிய அளவடியோடு இருசீராகிய குறளடியும், முச்சீராகிய சிந்தடியும், ஒரோ வழி ஐஞ்சீராகிய நெடிலடியும் கலந்து வரும்.  [ஈற்றயல் அடி முச்சீரை பெற்று வரும்]  

இலக்கண விளக்கம்

முதல் அடியும் ஈற்றடியும் நான்கு சீர்களைப் பெற்றிருக்க வேண்டும். ஈற்றயலடி முச்சீரைப் பெற்று வரவேண்டும்.

இடையில் இருசீர் அடியும் முச்சீர் அடியும் கலந்து வரும்.

ஈசைச்சீர்கள் நான்கும் பயின்று வரும். [தேமா, புளிமா, கூவிளம், கருவிளம்]

இரண்டடி ஓரெதுகைப் பெற்று வரும்.

ஒன்று மூன்றாம் சீர்களில் மோனை பெறும். [மூன்றில் அமையவில்லை யெனில் இரண்டாம் சீரில் அல்லது நான்காம் சீரில் மோனை அமையவேண்டும்] [இருசீர் அடியில் மோனை கட்டாயமில்லை]

மூன்றடிக்குக் குறையாமல் எத்தனை அடிகளிலும் வரலாம். [சிற்றெல்லை 3 அடி, பேரெல்லை அளவில்லை]

ஈற்றடியின் கடைசி ஏகாரத்தில் முடிய வேண்டும்.  

நேரொன்றிய ஆசிரியத் தளையும், நிரையொன்றிய ஆசிரியத்தளையும், இயற்சீர் வெண்டளையும் கலந்து நடக்கும்.

இணைக்குறள் ஆசிரியப்பாவின் நுாற்பாக்கள்

[யா. கா - 28]
இடைபல குன்றின் இணைக்குறள்.

இணைக்குறள் இடைபல குறைந்திறின் இயல்பே.
 [யா.வி - 74]

இடைபல குறைவது இணைக்குறள் ஆகும்.
[அவிநயனார்]

இடையிடை சீர்தபின் இணைக்குறள் ஆகும்.
[சிறுகாக்கை பாடினியார்]

அளவடி அந்தமும் ஆதியும் ஆகி
குறளடி சிந்தடி என்றா இரண்டும்
இடைவர நிற்பது இணைக்குறள் ஆகும்.
[காக்கை பாடினியார்]

ஈற்றயல் குறைந்த நேரசை யிணையாம்
ஏற்ற அடியின் இடைபல குறைந்தன.
[மயேச்சுரம்]

அளவடி அந்தமும் ஆதியும் ஆகிக்
குறளடி சிந்தடி என்றா இரண்டும்
இடைவர நிற்பின் இணைக்குறள் ஆதலும்.
[இலக்கண விளக்கம் 734]

ஆதியும் அந்தமும் அளவடி யாகிக்
குறளடி சிந்தடி என்றாங்கு இரண்டும்
இடைவரல் இணைக்குறள் ஆசிரி யம்மே.
[முத்து வீரியம் 25]

இணைக்குறட்பா
ஏற்ற குறள்சிந்து இடையே வரும்.
[வீரசோழியம் 115]

இணைக்குறள் முதல்ஈற்று ஈரடி அளவடி
இடைக்குறள் சிந்தடி இணையப் பெறுமே.
[தொன்னுால் விளக்கம் 225]

'இன்றைய அரசியலார் போக்கை உரைக்கும் வண்ணம் இணைக்குறள் ஆசிரியப்பா  ஒன்றை 12 அடிக்கு மிகாமல்  பாடுமாறு பாவலர்களை அன்புடன் வேண்டுகிறேன்.
"பாவலர் பயிலரங்கம்" என்ற முகநுால் குழுவில் இணைந்து தங்கள் விருத்தத்தைப் பதிவிட வேண்டுகிறேன்!
அன்புடன்
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்:
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்
17.03.2018

dimanche 11 mars 2018

ஆசிரியப்பா மேடை - 1


ஆசிரியப்பா மேடை - 1
  
தமிழில் இன்று வழங்கி வரும் பாக்கள் நான்கு. 1. ஆசிரியப்பா, 2, வஞ்சிப்பா, 3. கலிப்பா, வெண்பா.
  
ஆசிரியப்பா நான்கு வகைப்படும். 1. நிலைமண்டில ஆசிரியப்பா, 2. நேரிசை ஆசிரியப்பா, 3. இணைக்குறள் ஆசிரியப்பா, 4. அடிமறி மண்டில ஆசிரியப்பா.
  
வஞ்சிப்பா இரண்டு வகைப்படும். 1. குறளடி வஞ்சிப்பா, 2. சிந்தடி வஞ்சிப்பா.
  
கலிப்பா நான்கு வகைப்படும். 1. ஒத்தாழிசைக் கலிப்பா. 2. கலிவெண்பாட்டு, 3. கொச்சகக் கலிப்பா, 4. உறழ்கலிப்பா.
  
ஒத்தாழிசைக் கலிப்பா மூன்று வகைப்படும். 1.நேரிசை ஒத்தாழிசைக் கலிப்பா, 2. அம்போதரங்க ஒத்தாழிசைக் கலிப்பா, 3. வண்ணக ஒத்தாழிசைக் கலிப்பா.
  
கலிவெண்பாட்டு இரண்டு வகைப்படும். 1 வெண்கலிப்பா, 2. கலிவெண்பா.
  
கொச்சகக் கலிப்பா ஐந்து வகைப்படும். 1. தரவு கொச்சகக் கலிப்பா, 2. தரவிணைக் கொச்சகக் கலிப்பா, 3. சிஃறாழிசைக் கொச்சகக் கலிப்பா, 4. பஃறாழிசைக் கொச்சகக் கலிப்பா, 5. மயங்கிசைக் கொச்சகக் கலிப்பா,
  
உறழ்கலிப்பா இன்று வழக்கில் இல்லை.
  
வெண்பா நான்கு வகைப்படும். 1. குறள் வெண்பா. 2. சிந்தியல் வெண்பா, 3. அளவியல் வெண்பா, 4. பஃறொடை வெண்பா.
  
மருட்பா என்ற வகை முன்னே இருந்தது. இன்று வழக்கில் இல்லை. அது நான்கு வகைப்படும். 1. புறநிலை வாழ்த்து மருட்பா, 2. வாயுறை வாழ்த்து மருட்பா, 3. செவியறிவுறுாஉ மருட்பா, 4. கைக்கிளை மருட்பா.
  
ஆசிரியப்பாவின் விளக்கம்
  
ஆசிரியப்பாவை அகவல் என்றும் சொல்லப்படும். இதுவே முதலில் தோன்றிய பாவென்று யாப்பறிஞர் உரைப்பார். சங்க காலத்தில் இந்தப் பாவினமே அதிகமாகப் பாடப்பட்டது. அகநானுாறு, புறநானுாறு, நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநுாறு, பதிற்றுப்பத்து, திருமுருகாற்றுப்படை, பொருநராற்றுப்படை, பட்டினப்பாலை, மலைபடுகடாம், சிலப்பதிகாரம், மணிமேகலை, பெருங்கதை முதலிய பழந்தமிழ் நுால்களெல்லாம் ஆசிரியப்பாவால் ஆனவையாகும்.
  
சீரினானும் பொருளினானும் ஓசையினானும் ஆகிய நுண்மையைத் தன்கண் கொண்டு நிகழ்வதாலும், புறநிலை வாழ்த்து முதலாகிய பொருள்களை ஆசிரியனே போல நின்று அறிவிக்கும் ஆகலானும் ஆசிரியம் என்பது காரணக் குறியாகும். ஆசு எனினும் சிறிது எனினும், நுண்ணிது எனினும் ஒக்கும். இதனைப் பாடுதல் எளிமை நோக்கி 'மென்பா' என்பர். இஃது மயில்போல் அகவிக் கூறும் ஓசையுடையது. [இப்பாவை விரைவாக எழுதலாம். எனவே ஆசிரியப்பாவை அவசரப்பா என்றும் உரைப்பர்]
  
ஆசிரியப்பாவின் இலக்கணம்
  
ஈசைச்சீர்கள் நான்கும் வரும். [தேமா, புளிமா, கூவிளம், கருவிளம்]
  
அடிதோறும் நான்கு சீர்கள் பெற்று வரும்.
  
இரண்டடி ஓரெதுகைப் பெற்று வரும்.
  
ஒன்று மூன்றாம் சீர்களில் மோனை பெற்று வரும். [மூன்றில் அமையவில்லை யெனில் இரண்டாம் சீரில் அல்லது நான்காம் சீரில் மோனை அமையவேண்டும்]
  
மூன்றடிக்குக் குறையாமல் எத்தனை அடிகளிலும் வரலாம். [சிற்றெல்லை 3 அடி, பேரெல்லை அளவில்லை]
  
ஈற்றடியின் கடைசிச் சீர் ஏகாரத்தில் முடிவது சிறப்பு. [ஓ, ஈ, ஆய், என், ஐ எனவும் முடிவதுண்டு] நேரிசை ஆசிரியப்பா ஏகாரத்தில் மட்டுமே முடியும்.
  
மூவசைச் சீர்கள் அருகி வரும். [தேமாங்காய் புளிமாங்காய் வரலாம்] மற்ற இரு காய்கள் வராமல் இருப்பது நன்று.
  
கருவிளங்கனி, கூவிளங்கனி வரக்கூடாது [மற்ற இரு கனிகள் வராமல் இருப்பது நன்று]
  
அகவல் ஓசையைப் பெற்றிருக்க வேண்டும். [ஈரசைச் சீர்களைப் பயன்படுத்தி எழுதினால் அகவல் ஓசை சிறப்பாக அமையும்] நேரொன்றிய ஆசிரியத் தளையும், நிரையொன்றிய ஆசிரியத்தளையும், இயற்சீர் வெண்டளையும் விரவி வரும்.
  
நேரிசை ஆசிரியப்பா
  
அன்பும் பண்பும் அமைந்த வாழ்வில்
இன்பம் என்றும் இணைந்தே இருக்கும்!
பச்சைப் பசுமை படரும் வயல்போல்
இச்சை யாவும் எழிலே மேவும்!
உயிர்கள் யாவும் ஒன்றே என்ற
உயர்நெறி நெஞ்சுள் ஓங்கி ஒளிரும்!
வடலுார் வள்ளல் வகுத்த
படர்புகழ்ப் பாதை பாரில் வளர்கவே!
  
               [பாட்டரசர்]
    
ஆசிரியப்பாவின் பொது இலக்கணத்தைப் பெற்று ஈற்று அயலடி முச்சீராய் வருவது நேரிசை ஆசிரியப்பா ஆகும். ஈற்றயலடியை, எருத்தடி என்று வழங்கப்படும். நேரிசை ஆசிரியப்பா ஏகாரத்தால் மட்டுமே முடியும்.
  
அன்பின் பெருமையை உணர்த்தும் வண்ணம் நேரிசை ஆசிரியப்பா ஒன்றை 12 அடிக்கு மிகாமல் பாடுமாறு பாவலர்களை அன்புடன் வேண்டுகிறேன்.
  
"பாவலர் பயிலரங்கம்" என்ற முகநுால் குழுவில் இணைந்து தங்கள் விருத்தத்தைப் பதிவிட வேண்டுகிறேன்!
  
அன்புடன்
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்:
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்