mercredi 25 novembre 2015

வெண்பாக் கொத்து


பெண்ணின் பெருந்தக்க யாவுள?

குறள் வெண்பா!
பெண்ணின் பெருமையைப் பேணும் உலகினில்
மண்ணும் மணக்கும் மலர்ந்து!

நேரிசைச் சிந்தியல் வெண்பா

பெண்ணின் அழகால் பெருகிவரும் பாட்டாறு!
கண்ணுள் புகுந்து களிப்பூட்டும்! - தண்மலரின்
வண்ணம் மணக்கும் மலர்ந்து!

இன்னிசைச் சிந்தியல் வெண்பா

பெண்ணின் விடுதலையைப் பேணாத் திருநாட்டில்
நண்ணும் இருளே! நரிகள் அரசாண்டால்
மன்னும் மடமை மலர்ந்து?

நேரிசை வெண்பா

பெண்ணின் சிறப்பால் பெருகும் வளம்ஏற்போம்!
பண்ணின் இனிய பயனேற்போம்! - விண்ணருளின்
ஆட்சி மணக்கும் அழகேற்போம்! அந்தமிழின்
மாட்சி மணக்கும் மலர்ந்து!

இன்னிசை வெண்பா


பெண்ணின் தவமுணர்ந்து பேசும் நிலத்தினிலே
எண்ணிலா ஏற்ற எழில்மேவும்! நல்லியற்கைத்
தண்மை தழைக்கும்! தமிழ்அருள் வள்ளலென
வண்மை தழைக்கும் மலர்ந்து!

பஃறொடை வெண்பா

பெண்ணின் வடிவமாய்ப் பேசும் மொழிகொண்டோம்!
மண்ணின் வடிவமாய் மாண்பளித்தோம்! - தண்ணதிக்கும்
அன்னை பெயர்படைத்தோம்! அன்பு வயலென்றோம்!
பொன்னை நிகர்த்த பொலிவென்றோம்! - உன்னை
அளித்த அருமறையே அம்மா! இதனை
உளத்துள் பதித்தால் உயர்வோம்! - வளமெய்தக்
கண்ணின் மணியாய்க் கவிக்கருத்தைக் காத்திடுவோம்!
உண்மை உணர்ந்தே உலகம் உருண்டால்
நலங்கள் மணக்கும்! நறுஞ்சோலை போன்றே
வளங்கள் மணக்கும் மலர்ந்து!

இலக்கண விளக்கம்

வெண்பா கொத்தெனும் இப்பாட்டில் குறள் வெண்பா, நேரிசைச் சிந்தியல் வெண்பா, இன்னிசைச் சிந்தியல் வெண்பா, நேரிசை வெண்பா, இன்னிசை வெண்பா, பஃறொடை வெண்பா இடம்பெறவேண்டும்.

அனைத்து வெண்பாக்களிலும் முதல் சீர் ஒன்றாக வரவேண்டும். ஈற்றுச்சீரும் ஒன்றாக வரவேண்டும்.

மேல் உள்ள வெண்பாக்கள் 'பெண்ணின்', என்ற சீரை முதல் சீராகக் கொண்டுள்ளன. 'மலர்ந்து' என்ற சீரை ஈற்றுச் சீராகக் கொண்டுள்ளன.

09.08.2015

samedi 14 novembre 2015

அடிமுதல் கண்ட குறள்!




 அடிமுதல் கண்ட குறள்!

குறளின் தொடக்கமும் முடிவும் ஒன்றாக இருக்க வேண்டும்! இரண்டும் வெவ்வேறு பொருளில் வரவேண்டும்!

1.
படித்தேன் அளிக்கின்ற பாவையின் பாட்டைப்
படித்தேன் பறந்த படி!

2.
கண்டுமொழி கொண்டவளே! காதல் கொழிக்குதடி!
வண்டுவிழி வண்ணங்கள் கண்டு!

3.
அடியழகு பெண்ணே! அருந்தமிழ் மின்ன
அடியழகு தந்தா யடி!

4.
கொடியேற்றி ஆடுமவள் கூரழகு! போதை
குடியேற்றி ஆடும் கொடி!

5.
துடியிடைப் பெண்ணின் சுவைநடை பாடிச்
சுடர்கவி நெஞ்சே துடி!

6.
கட்டுமலர் சூடிவரும் காரிகையைக் கண்டே..நீ
மெட்டுமலர் இட்டுகவி கட்டு!

7.
கலையழகே! கண்மணியே! காலம் உணர்ந்து
சிலையழகே! சீற்றம் கலை!

8.
அணையினை மீறி அகத்தாசை பொங்கும்!
இணையெனை ஏந்தி அணை!

9.
அணியொளிர் பெண்ணே! அருஞ்சுவையே! என்னை
மணியொளிர் மார்பில் அணி!

10.
கழையழகு தோள்கள்! கனிமொழியே உன்றன்
குழையழகு கூட்டும் கழை! 

14.11.2015
 

mardi 10 novembre 2015

விளக்கணி விழா வாழ்த்து!




விளக்கணி விழா வாழ்த்து!

எங்கும் தமிழ்நெறி பொங்கிப் பரவட்டும்!
தங்கும் வளங்கள் தழைக்கட்டும்! - மங்கலம்
நல்கட்டும்! வண்ண விளக்கணி நன்னாளே!
பல்கட்டும் நன்மை படர்ந்து!

10.11.2015

jeudi 5 novembre 2015

குறள் வெண்செந்துறை!



குறள் வெண்செந்துறை!

1.
பன்மொழி கற்றுப் பயனறும் வாழ்வு
தன்மொழி இலையேல் துன்னிழி வெய்தும்!

2.
ஊழ்வகை என்றே உட்கார்ந் திருந்தால்
வாழ்வகை யாவும் வற்றிப் போகும்!

3.
என்னிறை ஒன்றே ஏற்றம் என்று
வன்னிறை கொண்டால் மண்ணிறை மாயும்!

4.
அன்பின் சிறந்த அரும்பொருள் உலகில்
என்றும் இலையென நன்றே உணர்க!

5.
தாய்மை உலகைத் தாங்கும் சக்தி!
வாய்மை உயிருள் ஓங்கும் சக்தி!

6.
ஆல்போல் தழைக்கும்! அறுகாய்ச் செழிக்கும்!
பால்போல் தூய்மை படைத்த மனமே!

7.
உன்னுள் அறங்கள் ஓங்கி ஒளிர்ந்தால்
பொன்னுள் மணியாய்ப் பொலியும் வாழ்வே!

8.
ஊக்கம் உன்றன் உறவெனக் கொண்டால்
ஆக்கம் உன்றன் அடிதொழும் என்பேன்!

9.
ஒழுக்கம் உன்றன் உயிரெனக் கொண்டால்
அழுத்தும் துயரம் அடியோ டோடும்!  

10.
விண்ணொளி போன்று விரிநிலை யுற்றுப்
பண்ணொளி மின்னும் பைந்தமிழ் மொழியே!

இலக்கண விளக்கம்!

ஓரடியில் நான்கு சீர்கள் முதல் எத்தனைச் சீர்கள் வேண்டுமானாலும் வரலாம்.

மற்றோர் அடியும் அதே அளவு அமைந்திருக்க வேண்டும்.

இரண்டடியும் ஓரெதுகை பெற்றிருக்க வேண்டும்

நாற்சீரடியாயின் 1, 3 ஆம் சீர்களில் மோனை அமைய வேண்டும்.

சீர்களுக்கள் எந்தத் தளையும், எவ்வகைச் சீரும் வரலாம்.

குறள் வெண் செந்துறை விழுமிய பொருளும் ஒழுகிய ஓசையும் பெற்றிருக்க வேண்டம். இவ்வாறு இரண்டடியாய்த் தம்முள் அளவொத்து வருவதை வெண்செந்துறை என்று கூறுவர். இதற்கு வெள்ளைச் செந்துறை என்றும் பெயருண்டு.

03.11.2015