Affichage des articles dont le libellé est மும்முற மொழிதல். Afficher tous les articles
Affichage des articles dont le libellé est மும்முற மொழிதல். Afficher tous les articles

vendredi 11 janvier 2019

மும்முற மொழிதல்


மும்முற மொழிதல்
  
எழுதுகோலும் கண்ணும் வாளும்
  
கூருண்டாம்! கொண்ட குகையுண்டாம்! குத்துகின்ற
போருண்டாம்! பூத்த பொலிவுண்டாம்! - நீருண்டாம்!
ஆளுண்டாம்! தாள்காண் அழகுண்டாம்! கோல்..முன்னே
நீளுண்ட வாள்,கண் நிகர்!
  
ஆள் - ஆட்செய்கை, அரசு.
  
எழுதுகோல்
  
கூா்மை கொண்டிருக்கும். மூடியால் மூடியிருக்கும். எழுத்துப்போர் நடத்தும். மலர்ச்சியை நல்கும். நீர் போன்ற மையை ஏற்கும். அது எழுதிய எழுத்து உலகில் நிலைத்திருக்கும் [எழுத்து ஆற்றலால் ஆட்சி அடைந்தவர் உள்ளார்] தாளில் எழுதும்போது அழகேந்தும்.
  
கண்
  
தாக்கும் தன்மையால் வேல்விழி என்று பெயர்பெறும்[கூர்மை] கண்ணை இமையானது மூடிப் பாதுகாக்கும். காதல் போர் நடத்தும். மலர்விழி என்றும் பொன்விழி என்றும் எழிலேந்தும். கண்ணீரைக் கொண்டிருக்கும். கண்ணழகில் ஆட்பட்டுக் கிடப்போர் உள்ளார். கண் நாணமுற்று மண்ணைப் பார்க்கும்பொழுது பேரழகு கொள்ளும்.
  
வாள்
  
கூா்மை கொண்டிருக்கும். குகைபோன்று உறையிருக்கும். பகைவரைச் சாய்க்கப் போர் செய்யும். பெற்றிபெற்றுச் செழிப்பை வழங்கும். செந்நீரில் நனையும். உலகை வென்று ஆளும். மறவன் வாள் முனையைத் தன் கால் அருகே வைத்து நிற்கின்ற காட்சி அழகளிக்கும்.
  
எனவே, நீள்விழி, நெடுவாள், எழுதுகோல் ஆகியவை ஒன்றுக்கொன்று நிகராகும். [தமிழுலகத்திற்கு 'மும்முற மொழிதல்' நான் தரும் புதிய வகையாகும்]
  
பாட்டரசர் கி. பாரதிதாசன்
11.01.2019