Affichage des articles dont le libellé est நான்காரச் சக்கரம். Afficher tous les articles
Affichage des articles dont le libellé est நான்காரச் சக்கரம். Afficher tous les articles

dimanche 27 octobre 2019

நான்காரச் சக்கரம்


நான்காரச் சக்கரம்
  
அகமே அடங்கு!
[ஆசிரியப்பா]
  
சென்ம மறிக! மேவு பணியின்
தன்னடை வேதனின் மனையை யேறு!
அரணி யாகவே கரணி சேரின்
தரணி யேயுன் கரனளி யழகே!
கேணி வட்டம்! தோணி வட்டம்!செவ்
வாதி, பூமி, ஆழி வட்டம்!
அகமே அடங்கு! ஆசை யகற்று!
இகமே சுழியே! ஊது சங்கே!
  
இது நான்காராய்க் குறட்டின் நடுவே 'த' என்ற எழுத்து நின்று, குறட்டைச் சூழ நான்கு எழுத்துக்கள் வந்தன. ஆர்மேல் பத்து எழுத்துக்கள் நின்றன. சூட்டின்மேல்[வட்டம்] நாற்பத்தெட்டு எழுத்துக்கள் அமைந்தன.
  
செய்யுளில் முதல் இரண்டடிகள் சேர்ந்து 25 எழுத்துக்களையும், மூன்று நான்காமடிகள் சேர்ந்து 25 எழுத்துக்களையும், ஐந்து ஆறாமடிகள் சேர்ந்து 24 எழுத்துக்களையும், ஈற்றிரண்டடிகள் சேர்ந்து 24 எழுத்துக்களையும் பெற்றன. செய்யுட்கண் 98 எழுத்துக்கள் உள்ளன. சித்திரத்தில் 92 எழுத்துக்கள் வந்தன.
  
இதுச்செய்யுள், மேலாரின் முனைதொடங்கியிறங்கிக் கீழாரின் முனையிறுதி சென்று முதல் இரண்டடிகள் முற்றி, இடப்பக்கத்து ஆரின் முனைதொடங்கி வலப்பக்கத்தாரின் முனையிறுதி சென்று மூன்றாமடியும் நான்காமடியும் முற்றி, மறித்தும் அம்முனைநின்ற 'கே' தொடங்கி வட்டை வழியே இடஞ்சுற்றி ஈற்று நான்கடிகள் சென்று தொடங்கிய 'கே' எழுத்தில் பாடல் நிறைவுறும்.
  
ஆரத்தில் 1 முதல் 20 வரை எழுத்துக்களை இடஞ்சுற்றிப் படிக்கக் கீழுள்ள குறள் பிறக்கும்.
  
மணியை யறிக! மனமே கனிக!
பணிவே யுயிரி[ன்] அணி!
  
அருஞ்சொல் விளக்கம்
  
நடை - ஒழுக்கம்
வேதன் - மறையின்வழி வாழ்பவன்
அரணி - கவசம்
கரணி - செய்பவன்
தரணி - பூமி
கரன் - நிலையுள்ளவன்
கேணி - கிணறு
தோணி - ஆற்றைக் கடக்க உதவும் பரிசல்
செவ்வாதி - சூரியன்
ஆழி - கடல்
இகம் - இப்புறப்பு
சுழித்தல் - சுழலுதல்
  
கருத்துரை:
  
உயிர்களின் பிறப்பு இறப்புச் சுழற்சியை உணர்த்தும் வண்ணம் இப்பாடல் அமைந்துள்ளது. பிறப்பை அறிவாய். ஒழுக்கமுடன் தன் பணிகளைச் செய்கின்ற நீதியாளனின் இடத்தை அடைவாய். அரண் அளிப்பவன் இடமடைந்து நிலையாக வாழ்கின்ற உன்னால் இப்புவி அழகைப்பெறும். கிணறு, பரிசல், சூரியன், பூமி, கடல் அகியவை வட்டமாக அமைந்துள்ளன. அகத்தை அடக்கு, ஆசையை அகற்று இப்புறப்பும் வட்டமாகச் சுழலும் என்பதை உணர்ந்து சங்ககெடுத்து ஊதுகவே.
  
பாட்டரசர் கி. பாரதிதாசன்
25.10.2019