Affichage des articles dont le libellé est புதியதோர் உலகம் செய்க. Afficher tous les articles
Affichage des articles dont le libellé est புதியதோர் உலகம் செய்க. Afficher tous les articles

lundi 24 décembre 2012

புதியதோர் உலகம் [பகுதி - 8]




புதியதோர் உலகம் செய்க
ஒண்மை உள்ளம் இறைநினைவில்
    ஒன்றிக் கலந்து உவக்கட்டும்!
திண்மை உள்ளம் எத்திசையும்
    திளைக்கும் புகழைப் படைக்கட்டும்!
நுண்மை உள்ளம் நுாலாய்ந்து
    நோக்கும் வாழ்வை உரைக்கட்டும்
வண்மைக் கண்ணா! புத்துலகை
    உண்மை ஒளிர அமைத்திடுக!

தொடரும்

dimanche 23 décembre 2012

புதியதோர் உலகம் [பகுதி - 7


புதியதோர் உலகம் செய்க!

கறுப்பு சிவப்பு நிறவெறியால் 
    கரைந்த கண்ணீர் பெருங்கடலோ!
மறுப்பு கூற வழியின்றி 
    வாடும் அடிமை  நிலையோனோ?
எறும்பும் எந்தத் தடையினையும் 
    ஏகிச் செல்லும்! இழிவின்றிச் 
சிறக்கும் வண்ணம் புத்துலகைச் 
    சிந்தை மணக்க அமைத்திடுக!

(தொடரும்)

samedi 22 décembre 2012

புதியதோர் உலகம் |பகுதி - 6]



புதியதோர் உலகம் செய்க!

வீட்டுக் குள்ளே பெண்மணியைப்
    பூட்டி வைத்தால் உயா்வேது?
பாட்டுக் குள்ளே பாரதியும்
    பழமை ஒழிய நெருப்பிட்டான்!
காட்டுக் குள்ளே வாழ்விலங்கு
    நாட்டுக் குள்ளே உலவுவதோ?
கோட்டுக் குள்ளே புத்துலகைக்
    கோலக் கண்ணா அமைத்திடுக!

வடலுார் வள்ளல் வடித்திட்ட
    வல்ல மார்க்கம் மணக்கட்டும்!
உடலுார் உணா்வில் உயிர்க்கருணை
    ஓங்கி ஒளியை ஏற்றட்டும்!
கடலுார் மீன்போல் மொழிக்கடலில்
    கவிஞா் நெஞ்சம் களிக்கட்டும்!
மடலுார் மணமாய்ப் புத்துலகை
    மாய கண்ணா அமைத்திடுக!

(தொடரும்)

vendredi 21 décembre 2012

புதியதோர் உலகம் [பகுதி - 5]




புதியதோர் உலகம் செய்க

தோட்டி பறையன் குறவனென
    வாட்டி வதைத்தல் பெருங்கொடுமை!
போட்டி போட்டு மதப்பேயைப்
    போற்றிக் களித்தல் துயா்மடமை!
ஈட்டி கூா்மைச் சொல்லேந்தி
    இருளை நீக்கு! வாழ்வினிமை!
ஆட்டி அசைக்கும் திருவரங்கா
    அறிவின் உலகை அமைத்திடுக!

(தொடரும்)

jeudi 20 décembre 2012

புதியதோர் உலகம் [பகுதி - 4]



புதியதோர் உலகம் செய்க

நானோ உயா்ந்த பிறப்பென்று
    நீயோ தாழ்ந்த பிறப்பென்று
தானோ தீனோ புளுகெல்லாம்
    சாற்றும் நபரைப் படைக்காதே!
ஆணோ பெண்ணோ இருசாதி!
    ஓளவை தந்த நன்னீதி!
ஊணோ(டு) ஊறிப் பொதுவுடைமை
    ஒளிரும் உலகை அமைத்திடுக!

(தொடரும்)

mercredi 19 décembre 2012

புதியதோர் உலகம் [பகுதி - 3]




புதியதோர் உலகைச் செய்க!

ஒன்றே இறைவன்! பலவல்ல!
    உள்ளம் கோயில்! உணா்ந்திடுக!
அன்றே இருந்த அருந்தமிழை
    அகில மொழியாய் ஆக்கிடுக!
மன்றே மணக்கும் மதியுரையில்
    மனமே மணக்கும் மாண்புரையில்
நன்றே நடக்கும் புத்துலகை
    நற்றேன் நாதா அமைத்திடுக!

(தொடரும்) 

mardi 18 décembre 2012

புதியதோர் உலகம் [பகுதி - 2]



புதியதோர் உலகைச் செய்க!

அறமே ஆள! அமுதுாறும்
    அருளே சூழ! உலகொளிரும்
திறமே மேவ! அறிவொளிரும்
    செயலே ஆழ! செந்தமிழின்
குறளே உலகப் பொதுமறையாய்க்
    கொண்டே செழிக்க! அலகிலா
மறமே! மாலே! மண்ணுலகை
    மாண்பில் மணக்க வடித்திடுக!

(தொடரும்)

lundi 17 décembre 2012

புதியதோர் உலகம் [பகுதி - 1]




புதியதோர் உலகைச் செய்க!

புத்தா் பொழிந்த பொன்மொழிகள்
    பூத்து மணக்க! நெஞ்சத்துள்
சித்தா் ஞான மலா்க்காடு
    செழித்து மணக்க! எந்நாளும்
எத்தா்! பித்தா் இல்லாமல்
    இயற்கை மணக்க! பேரழகா!
அத்தா! அரங்கா! புத்துலகை
    அன்பில் மணக்க அமைத்திடுக!

(தொடரும்)