samedi 25 septembre 2021

பாவலர் கவிப்பாவை

 


பாவலர் கவிப்பாவை பிறந்தநாள் வாழ்த்துமலர்

 

கன்னல் தமிழ்மேல் காதல் பூண்டு

   களிக்கும் கவிப்பாவை!

பின்னல் பூவாய்ப் பிறந்து சொற்கள்

   பேணும் சுவை..நாவை!

மின்னல் விழிகள் மீட்டும் இசையுள்

   விளையும் தமிழ்க்கோவை!

என்னுள் கமழும் இன்பத் தமிழாய்

   என்றும் வாழியவே!

 

வடலுார் வள்ளல் வழியை ஏற்று
   வாழும் கவிப்பாவை!

மடலுார் மணமாய் மனத்தின் எண்ணம்

   வழங்கும் செயல்மாட்சி!

கடலுார் ஆழம் கருத்தே ஊறும்

   கவிதைப் புகழாட்சி!

உடலுார் உணர்வில் உயர்ந்தோர் நெறிகள்

   ஒளிர வாழியவே!

 

அல்லும் பகலும் அருட்பா அமுதை

   அருந்தும் கவிப்பாவை!

சொல்லும் செயலும் துாய்மை காக்கும்

   துாயோர் மனமாக!

வெல்லும் கவிதை துள்ளும் மான்போல்

   வித்தை பலகாட்டும்!

செல்லும் இடத்தில் சிறப்பை ஏற்றுச்

   செழித்து வாழியவே!

 

அருளார் மனமும் அமைதிக் குணமும்

   அமைந்த கவிப்பாவை!

திருவார் பத்தி சோ்த்த சத்தி

   தேனின் சுவையூட்டும்!

வருவார் போவார் வாழ்த்தும் வண்ணம்

   வழங்கும் கொடையுள்ளம்!

பொருளார் தமிழில் பொங்கும் புலமை

   பொலிந்து வாழியவே!

 

கம்பன் கவியால் கண்ணன் கழலால்

   கனிந்த கவிப்பாவை!

நம்மண் மரபை நன்றே போற்றி

   நடக்கும் தமிழச்சி!

செம்பொன் நுால்கள் செப்பும் வழியில்

   திளைத்து வாழியவே!

அம்மன் கோவில் அழகாய் வாழ்க்கை

   அமைந்து வாழியவே!

 

பாட்டரசர் கி. பாரதிதாசன்

கம்பன் கழகம் பிரான்சு

தொல்காப்பியர் கழகம் பிரான்சு

பாலவர் பயிலரங்கம்  பிரான்சு

mardi 14 septembre 2021

வெண்பா மேடை - 212


 வெண்பா மேடை - 212

 

முன் பின் வெண்பா!

 

காதல் கனி

1.

மனமூறும் பாடல் மதுவூறும் சோலை!

புனலுாறும் ஆசை புரண்டு! - தினமும்

வனமூரும் வாசம்! வளமூறும் நேசம்!

கனவூறும் காதல் கனிந்து!

2.

வனமூரும் வாசம்! வளமூறும் நேசம்!

கனவூறும் காதல் கனிந்து! - தினமும்

மனமூறும் பாடல் மதுவூறும் சோலை!

புனலுாறும் ஆசை புரண்டு!

 

மின்னும் தமிழ்மொழி

 

1.

கன்னல் சுரந்திடுமே! காதல் அளித்திடுமே!

இன்னல் அகற்றிடு மே!இங்கு - மின்றமிழே!

முன்னே உதித்ததுவாம்! மூன்றாய்ச் செழித்ததுவாம்!

தன்னேர் இலாததுவாம் சாற்று!  

2.

முன்னே உதித்ததுவாம்! மூன்றாய்ச் செழித்ததுவாம்!

தன்னேர் இலாதது வாம்சாற்று! - மின்றமிழே!
கன்னல் சுரந்திடுமே! காதல் அளித்திடுமே!

இன்னல் அகற்றிடுமே இங்கு!


முதல் வெண்பாவின் முன் வந்த ஏழு சீர்கள், இரண்டாம் வெண்பாவில் இறுதியாக வரவேண்டும். முதல் வெண்பாவின்  பின் வந்த ஏழு சீர்கள், இரண்டாம் வெண்பாவில் முன்னே வரவேண்டும்.

 

'முன் பின் வெண்பா' எழுதுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.

 

பாட்டரசர் கி. பாரதிதாசன்

கம்பன் கழகம் பிரான்சு

தொல்காப்பியர் கழகம் பிரான்சு

14.09.2021