Affichage des articles dont le libellé est இலாவணி. Afficher tous les articles
Affichage des articles dont le libellé est இலாவணி. Afficher tous les articles

jeudi 21 mai 2020

தனிச்சொல் இலாவணி


தனிச்சொல் பெற்று வந்த இலாவணி

நாட்டினிலே ஏழ்மையினைக் கூட்டுகிற ஆட்சியினை
நாமெழுந்து நீக்குவதும் என்றோ என்றோ...? - நம்மின்
வீட்டினிலே நல்லறிவு மீட்டுகிற கல்விமுறை
மேவிவரத் துன்பொழியும் அன்றோ அன்றோ...!
  
சாதிவெறி கூடுவதேன்? மோதிமதம் ஆடுவதேன்?
சாக்கடையோ இவ்வுலகு சாற்று சாற்று...? - ஆளும்
நீதிநெறி கொல்லுகிற சூதுமனக் காரர்களை
நீயிணைந்து போர்தொடுத்து மாற்று மாற்று!
  
வாக்குப்பெறப் பற்பொருளை ஊக்கமுடன் நல்குவதேன்?
வள்ளலென நல்லமனம் கொண்டு கொண்டு...! - பொய்யாய்
நாக்குநலப் பேச்சிருக்கும்! தேக்குநிதி யூட்டிருக்கும்!
நாலுதலை வாழ்முறைக்குக் கண்டு கண்டு...!
  

பாட்டரசர் கி. பாரதிதாசன்,
கம்பன் கழகம், பிரான்சு,
தொல்காப்பியர் கழகம், பிரான்சு.
21.05.2020.



samedi 16 mai 2020

இலாவணி


இலாவணி

உழவனும் உழத்தியும் பாடும் வண்ணம் இந்த இலாவணிக்  கண்ணிகள் அமைந்துள்ளன.  ஒவ்வொரு கண்ணியிலும் முதலடி உழவனின் கேள்வியாக அமைகிறது. உழத்தியின் பதிலாக இரண்டாமடி தொடர்கிறது.

1.
சோலையெழில் பூத்தொளிரும் சேலையெழில்  கொண்டவளே
துாயமொழி ஒன்றெடுத்துச் சொல்லு சொல்லு...!
காலைமுதல் மாலைவரை காளையுனைக் காணுகிறேன்
கட்டுடனே கையடக்கி நில்லு நில்லு...!

2.
ஏர்நடத்தும் நீர்வயலில் போர்நடத்தும் பூங்குயிலே
ஈட்டுகிறாய் எப்பொழுதும் வெற்றி வெற்றி...!
வேர்பழுத்த வாசமெனச் சீர்பழுத்த வாயழகா
வீசுவதேன் பொய்யுரைகள் சுற்றிச் சுற்றி...!

3.
சின்னஇடை பின்னவர, அன்னனடை மின்னிவர,
சில்லெனவே ஏறுதடி போதை போதை...!
என்னவொரு பொய்நடிப்பு! என்னதொட உன்னுடிப்பு!
இவ்வகையில் நீயுமொரு மேதை மேதை!

4.
நாற்றுநடும் நல்லவளே! ஏற்றுமெனைக் கூத்துமிட
நல்லதொரு சொல்லெடுத்துப் பாடு பாடு...!
ஆற்றுநடை ஆணழகா! சாற்றுமொழி ஏறலையோ?
அத்தைவரும் நேரமடா ஓடு ஓடு...!

5.
கட்டழகு காரிகையே! தொட்டழகு நேயமுறக்
கண்ணடித்துப் பூங்கணையை ஏவு ஏவு...!
மொட்டழகு சீர்படைத்துப் பட்டழகு காட்டுவதேன்
மோகநிலை விட்டிடமே தாவு தாவு...!

6.
ஏற்றமிடும் ஏந்திழையே! காற்றுமிடும் வேதனையை
ஆற்றிடவே அன்புமொழி பேசு பேசு...!
ஆற்றலுடன் ஆசைகளைச் சாற்றுகின்ற பைத்தியமே!
நாற்றெடுத்து மூலையிலே வீசு வீசு...!

7.
கள்ளளிக்கும் கண்ணழகி! முள்ளளிக்கும் செயலகற்றிக்
காதலுறம் நல்லுறவைக் காட்டு காட்டு...!
நெல்லடிக்கும் நேரமிது மல்லடிக்கும் வீணகற்றி
நெஞ்சொழுகும் ஆசைகளை ஓட்டு ஓட்டு...!

8.
ஆலமரத் துாஞ்சலிலே கோலமுடன் ஆடிடவே
அத்தமகச் சித்திரமே வாடி வாடி...!
பாலமுத உன்மொழியைக் கேளவொரு நாழியிலை
பார்..எனக்கு வேலைபல கோடி கோடி...!

9.
வேர்பிடித்து  ஓங்குதடி மார்பிடித்த உன்னினைவு
வேண்டுவரம் தந்திடுவாய் கண்ணே கண்ணே...!
கார்பிடித்து வான்பொழியும்! நார்பிடித்துத் தேர்நகரும்!
கால்பிடித்துப் பேசுவதோ மண்ணே மண்ணே...!

10.
கெண்டைவிழி துள்ளுதடி! தண்டையொலி கிள்ளுதடி!
கேணியிடம் வந்திடுவாய் தேனே தேனே...!
மண்டைவெறி உற்றதுமேன் அண்டைநிலை அறியாமல்
மாமா.நீ ஏங்குவது வீணே வீணே...!

பாட்டரசர் கி. பாரதிதாசன்,
கம்பன் கழகம், பிரான்சு,
தொல்காப்பியர் கழகம், பிரான்சு.
12.05.2020.

mardi 12 mai 2020

இலாவணி   



சிந்துப்பா மேடை - 9
  
இலாவணி
  
புலவர் இருவர் எதிரெதிரே அமர்ந்து கொண்டு "டேப்" எனும் ஒருவகைத் தோற்கருவியை அடித்துப் பாட்டுப் பாடுவார். ஒரு புலவரின் வினாவுக்கு எதிரே உள்ள புலவர் விடை சொல்வதாக இந்நிகழ்ச்சி அமையும். [சக்கரவர்த்தி திருமகன் திரைப்படத்தில், புரட்சித் தலைவரும், என் எச். கிருட்டினனும் பாடும் பாடல் காட்சி இவ்வகையைச் சற்றே ஒத்திருக்கும்]
  
அடி: ஆதிதாள வட்டணையில் அடங்கும் எண்சீரடி.
சீர் : நான்மை நடையது.
இயைபு : அடியிறுதிகளில் அடுக்குத் தொடராக இயைபுத்தொடை அமைவது இதன் தனியியல்பு.
  
ஏட்டினிலே வீரத்தமிழ் தீட்டிவைத்துப் பாவரசன்
என்றபுகழ் பெற்றவனும் யாருயா ரு...?
நாட்டுரிமை வேட்டினிய பாட்டினிலே போர்தொடுத்த
நல்லகவி பாரதியாம் பேருபே ரு...!
  
[கலைமாமணி, கவிஞர் தே. சனார்த்தனன்]
  
ஒரடி எட்டுச் சீர்களைப் பெற்றிருக்கும். [ 'ஏட்டினிலே' என்பது முதல் 'யாரு' என்பது வரையில் ஓரடி]
  
முதல் 6 சீர்களில் ஒவ்வொன்றிலும் 4 சிந்தசைகள் வரவேண்டும். [நான்கு எழுத்துக்கள்] [ஏட்/டி/னி/லே - நான்கசை உள்ளசைக் காண்க] சிந்துப்பா அசைகள் இரண்டு. அவை, குறிலசை, நெடிலசை எனப்படும்.
  
குறிலசை
  
தனிக் குறில் [அ] [க]
  
நெடிலசை
  
தனி நெடில் [ஆ] [கா]
குறில் ஒற்று [அல்] [கல்]
நெடில் ஒற்று [ஆல்] [கால்]
  
7, 8 ஆம் சீர்கள் அடுக்குத்தொடராக அமையும். [யாருயாரு - பேருபேரு] 8 ஆம் சீரில் ஓரசையுடன் இசை நீட்டம்பெறும். இசை நீட்டத்தைப் புள்ளியிட்டுக் காட்டியுள்ளேன்.
[யா.ருயா ரு...] [பே.ருபே ரு...]
  
முதல் சீரும் ஐந்தாம் சீரும் மோனைபெறும் [ஏட்டினிலே - என்றபுகழ்]
  
முன் அரையடியில் பொழிப்பெதுகை அமையும் [ஏட்டினிலே - தீட்டிவைத்து] [நாட்டுரிமை - பாட்டினிலே]
  
இப்படி வரும் இரண்டடிகள் ஓரெதுகையில் அமைய வேண்டும். [ஏட்டினிலே - நாட்டுரிமை]
  
இரண்டு அடிகளிலும் இறுதிச்சீர்கள் இயைபு பெறவேண்டும் [யாருயாரு - பேருபேரு]
    
இதுவே இலாவணியின் ஒரு கண்ணியாகும்.
  
விரும்பிய பொருளில் 'இலாவணி'யில் முக்கண்ணிகள் பாடுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.
  
பாட்டரசர் கி. பாரதிதாசன்,
கம்பன் கழகம், பிரான்சு,
தொல்காப்பியர் கழகம், பிரான்சு.
12.05.2020.