dimanche 24 mars 2024

கலித்துறை மேடை - 10

 

கலித்துறை மேடை - 10

 

கலிமண்டிலத்துறை

 

அடிமறியாய் ஐஞ்சீர் நான்கடியாய் வருவது. இப்பாடலில் யாதோர் அடியை எடுத்து முதல் நடு கடையாக உச்சரிப்பினும் ஓசையும் பொருளும் மாறுபடாது அமையும்.

 

கண்ணே! மணியே! கவிதை தருவாய் களித்திடவே!

விண்ணே! நிலவே! மிளிரு மழகே! வியனருளே!

மண்ணே மணக்கும் மலரே! மயக்கு மதுக்குடமே!

பெண்ணே துதிக்கும் பெருமை யுடைய பெருந்தவமே!

 

[பாட்டரசர்] 25.12.2023

 

மேலுள்ள கட்டளைக் கலித்துறையின் அடிகளை இடம் மாற்றிப் படித்தாலும் யாப்பும் பொருளும் அமையும். இவ்வாறு அடிமறியாக அமையும் கலித்துறைகளைக் கலிமண்டிலத் துறை என்று வழங்குவார்.

 

ஓரடியில் ஐந்து சீர்கள் இருக்கும். நான்கு அடிகளைப் பெற்று வரும். நான்கடிகளும் ஓரெதுகை பெறும். 1.5 ஆம் சீர்களில் மோனை.

 

முதல் நான்கு சீர்களில் வெண்டளை அமைந்திருக்கும். அடியின் ஈற்றிலிருந்து அடியின் தொடக்கத்திற்கு வெண்டாளை அமைய வேண்டியதில்லை

 

ஐந்தாம் சீர் விளங்காயாக அமைய வேண்டும்.

 

முதல் நான்கு சீர்களில் ஈரசை சீர்களும், மாங்காய்ச் சீர்களும் வரும். முதல் நான்கு சீர்களில் விளங்காய்ச் சீர் வராது.

 

பாடல் ஏகாரத்தில் முடிய வேண்டும்.

 

நேரசையில் தொடங்கினால் ஓரடியில் 16 எழுத்துக்களும் நிரையசையில் தொடங்கினால் 17 எழுத்துக்களும் பெறும்.

மேற்கண்ட கலிமண்டிலத் துறை ஒன்றே ஒன்று விரும்பிய தலைப்பில் இயற்றுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.

 

பாட்டரசர் கி. பாரதிதாசன்

கம்பன் கழகம், பிரான்சு.
தொல்காப்பியர் கழகம், பிரான்சு.

பாவலர் பயிலரங்கம், பிரான்சு

24.03.2024

எல்லாமாகிய...

 


எல்லாமாகிய....

[நேரொன்றிய ஆசிரியத்தளை]

 

பொன்னும் என்ன? பூவும் என்ன?

மின்னும் வண்ண விந்தை யென்ன?

விண்ணும் என்ன? மண்ணும் என்ன?

தண்ணும் என்ன? தென்றல் என்ன?

தாயே உன்முன் தீயே யென்ன?

காயே யென்று காய்ந்த தென்ன?

துன்பங் கோடி சூழ்ந்த தென்ன?

என்றும் என்னை உன்னுள் வைத்துக்

காத்த தென்ன? கண்ணீர் என்ன?    

ஆத்தா வுன்றன் அன்புக் கீடாய்

ஈசன் இல்லை! வாசன் இல்லை!

ஆசா னாக ஆற்றல் தந்தாய்!

உண்டைச் சோற்றை ஊட்டி விட்டுத்

தொண்டை காய்ந்து துாக்கம் கொண்டாய்!

கற்றே மைந்தன் காப்பான் என்று

பற்றே வைத்தாய்! பாலம் இட்டாய்!

அக்கம் பக்கம் அல்லல் பட்டும்

சிக்கல் பட்டும் சீரே தந்தாய்!

என்பேர் ஒன்றே உன்வாய் சொல்லாய்

என்றும் ஆகி இன்பம் காணும்!

பாட்டின் மன்னன் பட்டம் பெற்றேன்!

ஏட்டில் தாயின் ஏற்றம் கற்றேன்!

அங்கே யன்னை இங்கே பிள்ளை

எங்கே செல்வேன் ஏங்கும் நெஞ்சே!

 

பாட்டரசர் கி. பாரதிதாசன்

24.03.2024

 

samedi 16 mars 2024

யாப்பு வகுப்பு - 5


 

உலகத் தமிழ்ச் சிறகம்

தமிழிசைக் கலையகம் - சிங்கப்பூர்

கம்பன் கழகம் - பிரான்சு

உலகத் தமிழ்க் கலை இலக்கியப் பேரவை - டென்மார்க்கு

இணைந்து நடத்தும் தமிழ் இலக்கண வகுப்பு

 

ஆசிரியர்

பாட்டரசர் கி. பாரதிதாசன்

 

வகுப்பு - 5

யாப்பின் நான்கசைச் சீர்கள்

 

நாள்:

17.03.2024 [ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும்]

 

நேரம்:

காலை 10.00 மணி - அமெரிக்கா EST

காலை 07.00 மணி - அமெரிக்கா PST

காலை 10.00 மணி - கனடா

மாலை 15.00 மணி - இங்கிலாந்து

மாலை 16.00 மணி - யூரோப்பு

மாலை 20.30 மணி - இந்தியா

இரவு 23.00 மணி - சிங்கப்பூர்

 

Join Zoom Meeting

https://zoom.us/j/91614787602?

pwd=VXZabXRPVkhjUi9FWIIoQmdEWmk1dz09

Meetin ID : 916 1478 7602

Passcode: 2024

 

தமிழில் நனைவோம் வாரீர்

கவிதை புனைவோம் வாரீர்

 

பாட்டரசர் கி. பாரதிதாசன்

தலைவர்

கம்பன் கழகம், பிரான்சு

உலகத் தமிழ்ச் சிறகம்

பாவலர் பயிலரங்கம்