Affichage des articles dont le libellé est கண்ணீர்க் கவிதை. Afficher tous les articles
Affichage des articles dont le libellé est கண்ணீர்க் கவிதை. Afficher tous les articles

samedi 13 avril 2024

ஏன் சென்றார்

 

சந்தப்பாமணி

புலவர் அரங்க. நடராசர் ஏன் சென்றார்?  

 

பண்ணியல் ஆய்ந்து படைத்தது போதுமென

விண்ணியல் காண விரைந்தாரோ? - கண்ணியல்பு

இன்றி இழியும்! அரங்க. நடராசர்

என்று வருவார் இயம்பு?

 

நுண்ணிய ஆழ்புலமை! நோக்கம் தமிழ்மேன்மை!

எண்ணிய தெல்லாம் இனவுயர்வு! - கண்ணியம்

மிக்க அரங்க. நடராசர் மேலடைந்தார்!

செக்கெனச் சுற்றும் துயர்!

 

மரபும் கவியும் வடித்தநட ராசர்

திருளும் துயரிட்டேன் சென்றார்? - உரவிடம்

வேகும்! வெடிக்கும்! விழிகள் அலைந்தழுவும்!  

போகும் அவர்பின் புகழ்!

 

ஐயத்தைத் தீர்க்கும் அரங்க நடராசர்

வையத்தைத் தாண்டி வழிகண்டார்! - மையகத்தை

நீக்க வருவாரோ? நெஞ்சம் நினைந்துருகி

ஏக்க முறுமே இருண்டு!

 

எத்தனை மேடைகள்? ஏத்தனை ஆய்வுரைகள்?

சொத்தெனத் தந்த சுடர்மதியர்! - இத்தரையை

விட்டுப் பிரிந்ததுமேன்? கொட்டும் துயர்மழை

கட்டுக் கடங்காது காண்!

 

பாட்டரசர் கி. பாரதிதாசன்

தலைவர்

கம்பன் கழகம், பிரான்சு

உலகத் தமிழ்ச் சிறகம்

பாவலர் பயிலரங்கம், பிரான்சு

samedi 11 février 2023

கண்ணீர் வெண்பா

 


பாவலர் நிறைமதி நீலமேகம் அவர்களின்
தாயும் தந்தையும் மண்மறைந்த செய்தியால்
கண்வழிந்த வெண்பா!

 

தந்தையும் தாயும் தரைவிட்டுச் சென்றனரே!

சிந்தையும் சேர்ந்து சிதைவுற்றோம் - நிந்தனை

ஏனோ இறைவா? இறைஞ்சுகிறோம் தந்தருள்வாய்

வானே வழங்கும் வழி!

 

ஈற்று நொடிவரை ஈடில் தமிழ்பேசிக்

காற்றில் கலந்த கருணையினர்! - போற்றிப்

தொழுதேன் திருக்கூத்தா! துாயவரை ஏற்க

அழுதேன் தருவாய் அருள்!

 

பாட்டரசர் கி. பாரதிதாசன்

தலைவர்
கம்பன் கழகம் பிரான்சு

தொல்காப்பியர் கழகம் பிரான்சு

பாவலர் பயிரங்க முகநுால் குழுமம்

11.02.2023

 

கண்ணீர் வெண்பா

 


தனித்தமிழ்ப் பாவலர்

அறவாழி கி. சினிவாசன் அவர்களின்
தந்தையார் விண்ணடைந்த செய்தியால்
கண்வழிந்த வெண்பா!

 

மண்மறைந்த செய்தியால் கண்வழிந்த என்றமிழ்

விண்ணிறைந்த வேந்தனை வேண்டுமே! - நல்லார்

கிருட்டின சாமியார் கேண்மைக் குணத்தார்!

அருணிலை காண்பார் அவர்!

 

நல்ல நெறியில் நடைபோட்ட நெஞ்சத்தார்

வல்ல இறையடியில் வாழ்ந்திடுவார்! - வெல்லும்
திருநீறு நெற்றிக்குத் தில்லைச் சடையன்

அரும்பே[று] அளிப்பான் அறி!  

 

பாட்டரசர் கி. பாரதிதாசன்

தலைவர்
கம்பன் கழகம் பிரான்சு

தொல்காப்பியர் கழகம் பிரான்சு

பாவலர் பயிரங்க முகநுால் குழுமம்

11.02.2023

dimanche 28 août 2022

தமிழ்க்கடல் நெல்லைக் கண்ணன்

 


தமிழ்க்கடல் நெல்லைக் கண்ணன்

 

நெல்விளைந்து செழிப்பதுபோல், வளஞ்சேர் ஆற்றில்

      நீர்நிறைந்து பாய்வதுபோல், மறவன் எய்தும்

வில்விரைந்து செல்வதுபோல், உலகம் வாழ

      விண்பொழிந்து குளிர்வதுபோல், பகைவர் முன்னே

மல்விளைந்து புடைப்பதுபோல், சோலைக் குள்ளே

      மலர்மணந்து மணப்பதுபோல், மேடை தோறும்

சொல்விளைந்து  கொழித்திடுமே! நெல்லைக் கண்ணன்

      சுவைத்தமிழில் மயங்காதார் உலகில் உண்டோ?

 

கோடையிலே கிடைத்திட்ட நிழலோ? கொண்ட

      கொள்கையிலே மாறாத குன்றோ? சான்றோர்

ஆடையிலே வெண்மையுறும் அழகோ? அஞ்சா

      அகத்தினிலே பெருந்தலைவர் உருவோ? வண்ணக்

கூடையிலே குவிந்துள்ள கனியோ? எங்கள்

      கோவிலிலே தமிழ்வார்த்த கோவோ? கம்பன்

மேடையிலே வீற்றிருக்கும் நெல்லைக் கண்ணன்

      வியனழகை யெடுத்தோதச் சொற்கள் உண்டோ?

 

பொய்யாடும் அரசியலை மாற்ற வேண்டிப்

      புறப்பட்ட புயலென்பேன்! ஊழல் தன்னை

நொய்யாகும் வண்ணத்தில் குத்திக் குத்தி

      நோய்போக்கும்  மருந்தேன்பேன்! வாழும் இந்தச்

செய்வாடும் கொடுமைகளைப் புரிவோர் தம்மைச்

      சிதைத்தோட்டும் அறமென்பேன்! கேட்போர் தம்மின்

மெய்யாடும் மொழியுடைய நெல்லைக் கண்ணன்

      வெல்லுதமிழ்க் கடலென்பேன்! ஈடும் உண்டோ?

 

அஞ்சாத நெஞ்சுரமும், எதிலும் எங்கும்

      அசையாத வன்றிறமும், குழந்தை யாகப்

பஞ்சாக மென்மனமும், தேனே யூறும்

      பழமாக நற்குணமும், கற்கு மாசை

துஞ்சாத நல்விழியும், மக்கள் தொண்டில்

      துவளாத சிந்தனையும், பதவிக் காகக்

கெஞ்சாத நன்னெறியும் நெல்லைக் கண்ணன்

      கீர்த்திமிகு வாழ்வாகும்! ஈடும் உண்டோ?

 

ஏடுபுகழ் கவியரசர் கண்ண தாசன்

      எழுத்தெல்லாம் தன்மனத்துள் பதியம் போட்டு,

நாடுபுகழ் பெருந்தலைவர் காம ராசர்

      நல்வழியில் நடைபோட்டு, நற்பேர் சேர்த்துக்,

காடுகமழ் தமிழ்க்கம்பன் கவிகள் தம்மைக்

      கண்ணுக்குள் கருத்துக்குள் அடையே காத்து

நீடுபுகழ் மணக்கின்ற நெல்லை கண்ணன்

      நிறைஞானத் தமிழாழி!  ஈடும் உண்டோ?

 

ஊற்றாகச் சுரக்கின்ற சொற்கள், உற்ற

      உயிராகத் திகழ்கின்ற கொள்கை, பச்சை

நாற்றாக விளைகின்ற வாழ்க்கை, இன்ப

      நயமாக மொழிகின்ற நுட்பம், யாப்பில்
ஈற்றாகச் சிறக்கின்ற வெண்பா போன்றே

      இதயத்தைக் கவர்கின்ற பேச்சு, மூச்சுக்

காற்றாகத் தமிழ்கொண்ட நெல்லைக் கண்ணன்

      கற்காத நுாலுண்டோ? ஈடும் உண்டோ?

 

அனல்பறக்கும் என்றிடுவார்! வாழ்வைக் காக்கும்

      அணையளிக்கும் என்றிடுவார்! வேகங் கொண்டு

புனல்நடக்கும் என்றிடுவார்! எட்டுத் திக்கும்

      புகழ்படைக்கும் என்றிடுவார்! கேட்டுக் கேட்டு

மனஞ்செழிக்கும் என்றிடுவார்! கல்வி யாளர்

      மதிகொழிக்கும் என்றிடுவார்! பிறந்து வந்த

இனஞ்செழிக்கும் என்றிடுவார்! நெல்லைக் கண்ணன்

      இடத்தினிலே எழுந்ததமிழ்! ஈடும் உண்டோ?

 

வள்ளுவத்தை வாழ்வுயரப் பேசிப் பேசி

      வளமளித்த வாயெங்கே? வாடும் மாந்தன்

உள்ளகத்தை ஒளிமேவ வேண்டு மென்றே

      ஊரெங்கும் நடந்திட்ட கால்கள் எங்கே?

கல்லகத்தை யுற்றவர்கள் மாற வேண்டிக்

      கருத்துகளை உதித்திட்ட சிந்தை யெங்கே?

நல்லகத்தைக் கொண்டொளிர்ந்த நெல்லைக் கண்ணன்

      சொல்லறத்தை என்னென்பேன்? ஈடும் உண்டோ?

 

பாரதியின் விழிகாட்டிப், புதுவை தந்த

      பாவேந்தன் மொழிகூட்டிப், பொதுமைச் சீவா

பாரதிரும் நடைசூட்டிப், புதுமை தீட்டிப்,

      பண்ணமுத வடலுாரார் சீர்மை யூட்டிச்,

சாரதியின் அருணொளியை யெங்கு மேற்றித்,

      தண்டமிழின் பேரழகை நன்றே சாற்றிச்,

சீரொளிரும் செயலுடைய நெல்லைக் கண்ணன்

      பேரொளிரும் இவ்வுலகில்! ஈடும் உண்டோ?

 

நானடத்தும் கவிக்கம்பன் விழாவில் நெல்லை

      நல்குதமிழ் ஒலிக்கலையே! யெண்ணி யெண்ணி

வானடத்தும் இடிமின்னல் போராய்க் கண்ணீர்

      வந்தொழுகும் நிற்கலையே!  இறைவ னென்ற

கோனடத்தும் ஆட்டத்தை யறிவார் யாரோ?

      கொள்ளையிடல் முறையோ? பாடு மென்றன்

ஊனடத்தும் எண்ணத்துள் நிலையாய் நின்றே

      ஒளிர்கின்ற தமிழ்க்கண்ணன்! ஈடும் உண்டோ?

 

பாட்டரசர் கி. பாரதிதாசன்

கம்பன் கழகம் பிரான்சு

தொல்காப்பியர் கழகம் பிரான்சு

27.08.2022