mercredi 30 octobre 2019

ஆறாரச் சக்கரம்


ஆறாரச் சக்கரம்
[ஈற்றடி மாலை மாற்றாய் அமைந்தது]
  
கல்வியே கண்!
[நேரிசை வெண்பா]
  
வண்ணணெறி கற்கவே யேகுக!வாழ்வின்ப
மண்ணெறி வாகே!மால் வேகமுறு! - தண்ணென்ப
பண்பணிகள்! தேவிவேண் டிப்..படி! நீசேம
வண்மண் படி!படி..பண் மண்!
  
அருஞ்சொல் விளக்கம்
  
வாகு - அழகு
மால் - காற்று
தண் - குளிர்
சேமம் - காவல், இன்பம்
வண் - வண்மை
பண் - இசைப்பாட்டு
  
இஃது ஆறாராய், குறட்டின் நடுவே 'வே' நின்று, 'கல்வியே கண்' என்னும் பெயர் குறட்டைச் சூழ் நின்று, ஆர்மேல் ஆறெழுத்துப் பெற்று, சூட்டின்மேல்[வட்டம்] பன்னிரண்டு எழுத்துப்பெற்று, அவ்வெழுத்து மாலை மாற்றாய் முடிந்தது. இந்நேரிசை வெண்பாவின் முதல் மூன்றடிகள், ஒவ்வொன்றும் 17 எழுத்துக்களைப் பெற்றது. ஈற்றடி 12 எழுத்துக்களைக் கொண்டது. செய்யுட்கண் 63 எழுத்துக்கள் உள்ளன. சக்கரத்தில் 55 எழுத்துக்கள் வந்தன.
  
இது, மேலாரின் முனைதொடங்கிக் கீழாரின் முனையிறுதி சென்று முதலடி முற்றி, அடுத்துள்ள இடப்பக்கத்து ஆரின்முனை தொடங்கி வலப்பக்கத்தாரின் முனையிறுதி இறங்கி இரண்டாமடி முற்றி, அடுத்த இடப்பக்கத்து ஆரின்முனை தொடங்கி வடப்பக்கத்தாரின் மேலேறி மூன்றாமடி முற்றி, செய்யுள் தொடங்கி எழுத்தில் நான்காமடி தொடங்கி வட்டை வழியிடஞ்சுற்றிச் சென்று நான்காமடி முற்றியது. வட்டத்தில் அமைந்த அவ்வடி மாலை மாற்றாய் அமைந்தது.
  
பாட்டரசர் கி. பாரதிதாசன்
30.10.2019

dimanche 27 octobre 2019

நான்காரச் சக்கரம்


நான்காரச் சக்கரம்
  
அகமே அடங்கு!
[ஆசிரியப்பா]
  
சென்ம மறிக! மேவு பணியின்
தன்னடை வேதனின் மனையை யேறு!
அரணி யாகவே கரணி சேரின்
தரணி யேயுன் கரனளி யழகே!
கேணி வட்டம்! தோணி வட்டம்!செவ்
வாதி, பூமி, ஆழி வட்டம்!
அகமே அடங்கு! ஆசை யகற்று!
இகமே சுழியே! ஊது சங்கே!
  
இது நான்காராய்க் குறட்டின் நடுவே 'த' என்ற எழுத்து நின்று, குறட்டைச் சூழ நான்கு எழுத்துக்கள் வந்தன. ஆர்மேல் பத்து எழுத்துக்கள் நின்றன. சூட்டின்மேல்[வட்டம்] நாற்பத்தெட்டு எழுத்துக்கள் அமைந்தன.
  
செய்யுளில் முதல் இரண்டடிகள் சேர்ந்து 25 எழுத்துக்களையும், மூன்று நான்காமடிகள் சேர்ந்து 25 எழுத்துக்களையும், ஐந்து ஆறாமடிகள் சேர்ந்து 24 எழுத்துக்களையும், ஈற்றிரண்டடிகள் சேர்ந்து 24 எழுத்துக்களையும் பெற்றன. செய்யுட்கண் 98 எழுத்துக்கள் உள்ளன. சித்திரத்தில் 92 எழுத்துக்கள் வந்தன.
  
இதுச்செய்யுள், மேலாரின் முனைதொடங்கியிறங்கிக் கீழாரின் முனையிறுதி சென்று முதல் இரண்டடிகள் முற்றி, இடப்பக்கத்து ஆரின் முனைதொடங்கி வலப்பக்கத்தாரின் முனையிறுதி சென்று மூன்றாமடியும் நான்காமடியும் முற்றி, மறித்தும் அம்முனைநின்ற 'கே' தொடங்கி வட்டை வழியே இடஞ்சுற்றி ஈற்று நான்கடிகள் சென்று தொடங்கிய 'கே' எழுத்தில் பாடல் நிறைவுறும்.
  
ஆரத்தில் 1 முதல் 20 வரை எழுத்துக்களை இடஞ்சுற்றிப் படிக்கக் கீழுள்ள குறள் பிறக்கும்.
  
மணியை யறிக! மனமே கனிக!
பணிவே யுயிரி[ன்] அணி!
  
அருஞ்சொல் விளக்கம்
  
நடை - ஒழுக்கம்
வேதன் - மறையின்வழி வாழ்பவன்
அரணி - கவசம்
கரணி - செய்பவன்
தரணி - பூமி
கரன் - நிலையுள்ளவன்
கேணி - கிணறு
தோணி - ஆற்றைக் கடக்க உதவும் பரிசல்
செவ்வாதி - சூரியன்
ஆழி - கடல்
இகம் - இப்புறப்பு
சுழித்தல் - சுழலுதல்
  
கருத்துரை:
  
உயிர்களின் பிறப்பு இறப்புச் சுழற்சியை உணர்த்தும் வண்ணம் இப்பாடல் அமைந்துள்ளது. பிறப்பை அறிவாய். ஒழுக்கமுடன் தன் பணிகளைச் செய்கின்ற நீதியாளனின் இடத்தை அடைவாய். அரண் அளிப்பவன் இடமடைந்து நிலையாக வாழ்கின்ற உன்னால் இப்புவி அழகைப்பெறும். கிணறு, பரிசல், சூரியன், பூமி, கடல் அகியவை வட்டமாக அமைந்துள்ளன. அகத்தை அடக்கு, ஆசையை அகற்று இப்புறப்பும் வட்டமாகச் சுழலும் என்பதை உணர்ந்து சங்ககெடுத்து ஊதுகவே.
  
பாட்டரசர் கி. பாரதிதாசன்
25.10.2019

ஆறாரச் சக்கரம்


ஆறாரச் சக்கரம்
  
கண்ணா தருவாய் கவி!
[ஆசிரியப்பா]
  
மாதவ மனமே யெழுதகை தா..தா!
மாதாய்! ஏக வான் வாமம்..தா!
அரண்..தா! வாழென அருள்..தா தா!
வருக கண்ணா! மயில மாடு
வண்ண மினிநீக்கா வாழ்வே..தா!
தண்விண் ணா! நுாழை யாரெ ழாலே!
மாண்பே! வளமே! தா..அன்பே!தா!
ஆண்ட வன்மை ஆறே தா..தா!
தாதே! தீதே தீய விடு!பா
வோதிடப் பாலே ஊட்டுக தேவே!
  
இஃது ஆறு ஆராய், குறட்டின் நடுவே 'தா' என்ற எழுத்தும் நின்று, குறட்டைச் சூழ ஆறு எழுத்துக்கள் வந்தன. ஆர்மேல் ஒன்பது எழுத்துக்கள் நின்றன. சூட்டின்மேல் [வட்டம்] நாற்பத்திரண்டு எழுத்துக்கள் அமைந்தன.
  
முதல் இரண்டடிகள் 23 எழுத்துக்களையும், அடுத்த இரண்டடிகள் 23 எழுத்துக்களையும், அடுத்த இரண்டடிகள் 23 எழுத்துக்களையும், பின் இரண்டடிகள் 21 எழுத்துக்களையும், ஈற்றிரண்டடிகள் 21 எழுத்துகளையும் பெற்றன. செய்யுட்கண் 111 எழுத்துக்கள் உள்ளன. சித்திரத்தில் 103 எழுத்துக்கள் வந்தன.
  
இச்செய்யுள், இடப்பக்கத்தின் முனைநின்று தொடங்கி வலப்பக்கத்தாரின் முனையிறுதி மேலேறி முதல் இரண்டடிகள் முற்றி, அடுத்த கீழாரின் முனைநின்று மேலாரின் முனையிறுதி மேலேறி மூன்று நான்காம் அடிகள் முற்றி, அடுத்த வலப்பக்கத்தாரின் முனைநின்று இடப்பக்கத்தாரின் முனையிறுதிமேலேறி ஐந்து ஆறாம் அடிகள் முற்றி, ஈற்று நான்கடிகள் செய்யுள் தொடங்கி இடப்பக்க எழுத்தில் தொடங்கி வட்டைவழி இடஞ்சுற்றிப் பாடல் நிறைவுறும்.
  
இடப்பக்க ஆரில் 1, 2, 3, 4 என்ற எண்களின் முறையே இடஞ்சுற்றிப் படிக்கக் கீழுள்ள குறள் பிறக்கும்.
  
வண்ண மலரென வானின் மழையெனக்
கண்ணா தருவாய் கவி!
  
அருஞ்சொல் விளக்கம்
  
ஏகன் - கடவுள்
வாமம் - அழகு
நுாழையார் - நுண்மையர்
எழால் - யாழிசை
ஆறு - வழி
தாது - பூந்துாது
  
கருத்துரை:
  
கண்ணனிடம் வேண்டிக் கேட்பதாக இப்பாடல் அமைந்துள்ளது. கண்ணா! குளிர்ந்த வைகுந்தத்தில் வாழும் விண்ணா! தேவா! மாதவத்தால் விழிப்புறும் மனத்தழகைத் தருக..தருக..! என் அன்னையே! விண்ணுலகில் வாழும் வாழ்வைத் தருக! காவல் தருக! வாழ்கவென்று அருளைத் தருக..தருக..! தோகை விரித்தாடும் வண்ண வாழ்வை இனி நீக்காமல் தருக! கலைவல்லுநர் இசைக்கும் யாழமுதை, மாண்பை, வளத்தை, உன்னன்பைத் தருக..தருக..! ஆண்ட வன்மையின் வழியைத் தருக..தருக..! மலராக மணப்பவனே! என் தீய வினையை எரித்துவிடு. உன்னைப் போற்றிப் பாடிட ஆழ்வார்களுக்கு அளித்த தமிழ்ப்பாலை எனக்கும் ஊட்டுக.
  
பாட்டரசர் கி. பாரதிதாசன்
27.10.2019

mardi 15 octobre 2019

வெண்பா மேடை - 146   


வெண்பா மேடை - 146
  
130 எழுத்துக்களில் அமைந்த நேரிசை வெண்பா
  
ஈர்ப்புணர்ந்தேன்! பார்த்துயிர்ப்பின் வேர்ப்புணர்ந்தேன்! சீர்த்தமிழ்ச்சொல்
சேர்ப்புணர்ந்தேன்! தேர்ப்புகழ்த்தென் தீர்ப்புணர்ந்தேன்! - கூர்ப்புணர்ந்தேன்!
ஆர்ப்புணர்ந்தேன்! மெய்ம்மலர்த்தேன் வார்ப்புணர்ந்தேன்! மண்ணுயிர்ப்பாழ்ந்[து]
ஓர்ப்புணர்ந்தேன் மெய்த்தமிழ்ச்சால்[பு] ஊர்ந்து!
  
ஈற்றுச் சீரைத் தவிர மற்றச் சீர்கள் யாவும் ஐந்து ஒற்றுகளைப் பெற்றுவந்த கூவிளங்காயாகும். காசு வாய்பாட்டில் இரண்டு ஒற்றுகளைப் பெற்று ஈற்றுச்சீர் அமையவேண்டும். இவ்வகையில் அமையும் வெண்பா 130 எழுத்துக்களைப் பெறும்.
  
விரும்பிய பொருளில் 130 எழுத்துக்களில் அமைந்த வெண்பா ஒன்றைப் பாடுமாறு அன்புடன் வேண்டுகிறேன். "பாவலர் பயிலரங்கம்" என்ற குழுவில் இணைந்து வெண்பாவைத் தனிப்பதிவாகப் பதிவிடுக.

பாட்டரசர் கி. பாரதிதாசன்
15.10.2019

dimanche 6 octobre 2019

ஆழ்ந்த இரங்கல்


ஆழ்ந்த இரங்கல்
  
அக்கா மலர்ஆதி லட்சுமியார் ஏன்பிரிந்தார்?
சொக்கா! கொடுமை துணிந்தாயே! - எக்காலும்
நின்றுழைத்த நெஞ்சத்தை என்றினிக் காண்பேனோ?
துன்பளித்த கூற்றே..நீ சொல்லு!
  
கம்பன் கழகம் தொடங்கிய காலத்திலிருந்து
அதன் உயர்வுக்கு உழைத்திட்ட
பாவலர் ஆதிலட்சுமி வேணுகோபால் அவர்கள்
இன்று மாலை இறைவனடி சேர்ந்தாரெனும் செய்தியை
ஆழ்ந்த வருத்ததுடன் தெரிவிக்கின்றோம்.
  
கம்பன் கழகம் பிரான்சு
06.10.2019

கம்பன் காட்டும் அழகியல்


கம்பன் விழாக் கவியரங்கம்
தலைமைக் கவிதை
  
பகுதி - 2
  
கம்பன் காட்டும் அழகியல்
  
நடையழகு ஓங்கிவரும்!
குடையழகு தாங்கிவரும்!
தொடையழகுக் கம்பனவன் பாட்டு - அது
கொழித்தகனி தேனமுதக் கூட்டு!
  
படையழகு துள்ளிவரும்!
பணியழகு அள்ளியிடும்!
உடையழகு உத்தமனைப் போற்றும் - கம்பன்
உரைத்தகவி சால்புகளைச் சாற்றும்!
  
இடையழகு மின்னிவரும்!
இசையழகு பின்னிவரும்!
அடையழகு ஏந்துசுவை நிற்கும் - அதை
அறிஞரினம் ஆழ்ந்துமனம் கற்கும்!
  
ஊரழகு கண்மேவும்!
உறவழகு பண்மேவும்!
தேரழகு கொண்டதமிழ்க் கூத்து! - நுாலில்
திருராமன் சீர்மணக்கும் பூத்து!
  
நாட்டழகு நற்காட்சி!
நறுந்தமிழின் பொன்மாட்சி!
பாட்டழகு நெஞ்சத்தை அள்ளும்! - சந்தக்
கூட்டழகு மானாகத் துள்ளும்!
  
தோளழகை வில்..காட்டும்!
தொண்டழகைச் சொல்..காட்டும்!
தாளழகைத் தாமரையே ஏற்கும்! - விருத்தத்
தமிழழகை நம்கண்கள் ஈர்க்கும்!
  
வேலழகு... கண்ணழகு!
பாலழகு... பெண்ணழகு!
காலழகுச் சீதையினைக் கண்டு - அன்னம்
கால்..அழகு என்றேங்கும் நின்று!
  
மரகதமோ? மாகடலோ?
மழைமுகிலோ? மாலழகு!
அருளொளியோ? அன்பமுதோ? பாடல் - கம்பன்
அளித்ததமிழ் இன்பத்தின் கூடல்!
  
மூக்கழகுச் சூர்ப்பணகை!
முன்னின்று செய்த..பகை!
நாக்கழகு கம்பனையே தாக்கும்! - அவள்
நடையழகு பாக்கோடி யாக்கும்!
  
அலையழகு நல்லீழம்!
ஆணழகு வல்வீரம்!
கலையழகு மாமன்னன் ஆட்சி! - புகழ்க்
கம்பனவன் காவியமே சாட்சி!
  
காலணியும் ஆண்ட..கதை!
காலத்தை வென்ற..கதை!
மாலணியும் வாலணியும் கூறும்! - இதை
மார்பணியும் மாந்தர்நலம் ஏறும்!
  
ஆழியெனக் கருத்தழகு!
அரங்கனவன் கருத்தழகு!
வாழியெனப் வாழ்த்தியுளம் பூக்கும்! - கம்பன்
வடித்தகவி வண்டமிழைக் காக்கும்!
  
தொடரும்
  
பாட்டரசர் கி. பாரதிதாசன்
நிறுவுநர்
கம்பன் கழகம் பிரான்சு
தலைவர்
தொல்காப்பியர் கழகம் பிரான்சு

vendredi 4 octobre 2019

வெண்பா மேடை - 145


வெண்பா மேடை - 145
  
116 எழுத்துக்களில் அமைந்த நேரிசை வெண்பா!
  
எண்ணுணர்ந்தேன்! இன்னிதழ்த்தேன் தண்ணுணர்ந்தேன்! மெய்ப்புகழ்சேர்
மண்ணுணர்ந்தேன்! செய்ந்நலஞ்சேர் மாண்புணர்ந்தேன்! - விண்ணுணர்ந்தேன்!
சிந்துணர்ந்தேன்! சீர்புணர்ந்தேன்! தென்சுடர்ப்..பாப் பேர்தொடர்ந்தேன்!
செந்தமிழ்த்தாய் செம்மலர்த்தாள் சேர்ந்து!
  
ஈற்றுச் சீரைத் தவிர மற்றச் சீர்கள் யாவும் நான்கு ஒற்றுகளைப் பெற்றுவந்த கூவிளங்காயாகும். காசு வாய்பாட்டில் இரண்டு ஒற்றுகளைப் பெற்று ஈற்றுச்சீர் அமையவேண்டும். இவ்வகையில் அமையும் வெண்பா 116 எழுத்துக்களைப் பெறும்.
  
விரும்பிய பொருளில் 116 எழுத்துக்களில் அமைந்த வெண்பா ஒன்றைப் பாடுமாறு அன்புடன் வேண்டுகிறேன். "பாவலர் பயிலரங்கம்" என்ற குழுவில் இணைந்து வெண்பாவைத் தனிப்பதிவாகப் பதிவிடுக.
  
அன்புடன்
பாட்டரசர் கி. பாரதிதாசன்
நிறுவுநர்
கம்பன் கழகம் பிரான்சு
தொல்காப்பியர் கழகம் பிரான்சு
04.10.2019

mercredi 2 octobre 2019

துளசி ஓவியக் கவிதை


கம்பன் விழா 2019 பிரான்சு


























கவியரங்கம் 2019 பகுதி 1


கம்பன் விழாக் கவியரங்கம்
தலைமைக் கவிதை
  
பகுதி - 1
  
திருமால் வாழ்த்து!
    
கடல்மீது பாலுாறும்! கண்மீது அருளுாறும்!
காக்கின்ற திருமாலே வாராய்!
கரைமீது நண்டூரும்! கனிமீது வண்டூரும்!
கவிமீது நீ..யூர வாராய்!
  
மடல்மீது மணமூறும்! மலர்மீது மதுவூறும்!
மனமீது நீ..யூற வாராய்!
வான்மீது கோலுாரும்! தேன்மீது தமிழூறும்!
மாமாயா ஒருபார்வை பாராய்!
  
சுடர்மீது ஒளியூரும்! தொடர்மீது வாழ்வூறும்!
சொன்மீது நீ..யூற வாராய்!
தொகைமது புவியூரும்! நகைமீது நெஞ்சூறும்!
தகைமீது நான்..ஊறச் சேராய்!
  
திடல்மீது மறமூரும்! படம்மீது காலுாரும்!
திறமூறும் அரங்கா..நீ வாராய்!
தித்திக்கத் தித்திக்கச் சித்திக்கச் சித்திக்க
முத்தாகத் தமிழள்ளித் தாராய்!
  
தமிழ் வாழ்த்து!
    
நீரோங்கும் மண்மீதே ஏரோங்கும் வளமாகச்
சீரோங்கும் தமிழே..நீ வாராய்!
தேரோங்கும் நெறிகொண்டு நிறையோங்கும் செயற்கொண்டு
நெஞ்சோங்கும் கவியே..நீ தாராய்!
  
சீரோங்கும் தொடைகொண்டு பேரோங்கும் நடைகொண்டு
சிங்காரத் தமிழே..நீ வாராய்!
தேரோங்கும் எழிற்கொண்டு தேனோங்கும் பழங்கொண்டு
தெம்மாங்குச் சந்தங்கள் தாராய்!
  
ஊரேங்கும் அருள்கொண்டு பாரோங்கும் பொருள்கொண்டு
உயர்வோங்கும் தமிழே..நீ வாராய்!
உயிரோங்கும் அறங்கொண்டு பயிரோங்கும் உரங்கொண்டு
உணர்வோங்கும் உள்ளத்தைத் தாராய்!
  
கூரோங்கும் வேல்கொண்டு தாருாங்கும் படைகொண்டு
கொழித்தோங்கும் தமிழே..நீ வாராய்!
போரோங்கும் களங்கொண்டு வேரோங்கும் புகழ்கொண்டு
புவியோங்கும் பொன்வாழ்வைத் தாராய்!
  
அவையோர் வாழ்த்து!
  
இன்போதைத் தமிழ்நாடி, மென்போதைக் கவிநாடி
எழுந்துள்ள அவையோரே வணக்கம்!
இளையோரே! இனியோரே! இணையில்லாச் சான்றோரே!
என்பாட்டுச் செவிமேவி மணக்கும்!
  
பொன்போதைப் பெண்டீரே! கண்போதை கொண்டீரே!
பண்போதை நெஞ்சத்தின் வணக்கம்!
பொருள்போதை பெற்றோரே! அருள்போதை யுற்றோரே!
புதுப்போதை என்பாட்டுக் கொடுக்கும்!
  
வன்போதை மதுவாக, மென்போதை மாதாக
மயக்கத்தை என்பாட்டுப் படைக்கும்!
துன்போதைத் தீயோரைத் தொடர்போதைப் பகையோரைத்
துாள்துாளாய் என்பாட்டு உடைக்கும்!
  
நன்போதை நடையேந்தி நறும்போதை தொடையேந்தி
நலமேந்தி என்பாட்டு நடக்கும்!
நற்போதைத் தமிழ்காக்கும் கற்றோரின் முன்னாலே
பற்றோடே என்னெஞ்சம் அடங்கும்!
  
தொடரும்
  
பாட்டரசர் கி. பாரதிதாசன்
நிறுவுநர்
கம்பன் கழகம் பிரான்சு
தலைவர்
தொல்காப்பியர் கழகம் பிரான்சு
22.09.2019