Affichage des articles dont le libellé est சித்திரகவி. Afficher tous les articles
Affichage des articles dont le libellé est சித்திரகவி. Afficher tous les articles

mercredi 17 juillet 2019

சேவல் பந்தம்



சேவல் ஓவியக் கவிதை
  
கட்டழகே கண்!மின்பொன் மிக்கு வியனழகே!
மொட்டழகே! காதல் மொழிமிகு - பட்டழகே!
சொத்தென ஆடும் கொடிவாழும் பின்னழகே!
மத்தென வாடும் மனம்!
  
பாட்டரசர் கி. பாரதிதாசன்
17.07.2019

lundi 15 juillet 2019

வேல் பந்தம் 1


 சித்திர கவி மேடை - 4
  
வேல் சித்திர கவிதை
  
கண்கள் வேலோ? காவோ?
பண்கள் தேனோ? பாலோ?
புண்கொள் கோலோ? போரோ?
பெண்கள் மேவு பேறே!
  
இந்தக் கட்டளை வஞ்சி விருத்தத்தில் ஒவ்வோர் அடியும் எட்டு எழுத்துக்களைப் பெற்று வரும். அடிதோறும் மூன்றாம் சீரில் மோனை அமைய வேண்டும்.
  
பாடலில் ஒன்றி வரும் எழுத்துக்கள்.
[1-11] [6-22] [12-20] [16-21]
  
விரும்பிய பொருளில் "வேல் சித்திரக் கவிதை" ஒன்று பாடுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.
  
"பாவலர் பயிலரங்கம்" என்ற குழுவில் இணைந்து தங்கள் 'வேல் சித்திரக் கவிதையைப்' பதிவிட வேண்டுகிறேன்!
  
பாட்டரசர் கி. பாரதிதாசன்
15.07.2019

lundi 8 juillet 2019

மும்மீன் சித்திர கவிதை


மும்மீன் சித்திர கவிதை
  
காழ்வேன் பெருமுறுதி! கானந்..தா! செந்திருவே!
கார்மேனி மன்னனே! வாழ்வே..நீ! - சீரேநீ!
வான்மேகா! மீனேநான் தேறிட வாமனா!
கான்தேகா! வா!தேனே கா!
  
காழ் - மரவயிரம்
கா - காத்தல்
கான் - மணம், மலர்
  
கருத்துரை - உன்னிடத்தில் வன்மையாக உறுதிவைத்துள்ளேன்! செந்திருவே இசையை எனக்குத் த் தாராய்! கருமை நிறத்தைக் கொண்ட என் மன்னனே என் வாழ்வே நீ. நானுற்ற சீரே.. நீ. மழை தருகின்ற வான்மேகனே! வாமனனே! மலர்மணம் வீசுகின்ற மேனியனே! தேனே! இந்த மும்மீன் கவிதையை நான் எழுதிட, என்னைக் காக்க வாராய்!
  
பாட்டரசர் கி. பாரதிதாசன்
07.07.2019

samedi 6 juillet 2019

சித்திர கவிமேடை - 4


சித்திர கவிமேடை - 4
  
சங்குச் சித்திர கவிதை
  
குன்றுறுங் கோகுலத்துச் சீர்த்தேனே! விண்ணரசே!
என்றுறும் பொன்னருளே! வா..திருவே! - அன்புறுந்பே
ரிங்கேந்தும் கன்னல்மிகும் வந்தொளிர் வாழ்வேந்தச்
சங்கேந்தும் கண்ணனே தாங்கு!
  
78 எழுத்துக்களைக் கொண்டிருக்கும் இவ்வெண்பா சித்திரத்தில் 73 எழுத்துக்களைப் பெற்றிருக்கும். ஒன்றாக வரும் எழுத்துக்கள் [1-78] [5-77] [16-75] [30-34] [56-69]
  
விரும்பிய பொருளில் சங்குச் சித்திர கவிதை ஒன்று பாடுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.
  
"பாவலர் பயிலரங்கம்" என்ற குழுவில் இணைந்து தங்கள் சங்குச் சித்திர கவிதையைப் பதிவிட வேண்டுகிறேன்!
  
பாட்டரசர் கி. பாரதிதாசன்
06.07.2019

ஓம் சித்திர கவிதை




ஓம் சித்திர கவிதை

வள்ளலே! என்றன் மனக்குளத்திள் பூத்திடுவாய்!
எள்ளலே இன்றி இசைத்திடுவாய்! - முள்வாய்
கழித்தே எழில்தருவாய்! காத்துநலம் செய்வாய்!
பழிபடா வாழும்..பாப் பாடு

பாட்டரசர் கி. பாரதிதாசன்
06.07.2019

jeudi 4 juillet 2019

கோபுர ஓவியக் கவிதை


கோபுர ஓவியக் கவிதை
  
சிந்தை வேண்டும் சீர்மிக! நாடி
விந்தை பொழிய விரிவிழி! மாபொன்
மாதே! கழையே! தாயே! பூமனத்து
மீதே மனமாழ் காவே மின்னிடக்
காண்பண்! காண்திண்! கமழ்தவத் தேனே!
காண்செம்மை தந்தமை பெருகுமே தண்தகை
வகைதரும் வண்டமிழ் மதுமழை பொழிகவே!
  
கோபுரத்தின் அடியிலிருந்து ஒவ்வொரு கட்டமாக எழுத்துக்களைக் கூட்டிப் படிக்க,பாடலின் ஈற்றடி கோபுரத்தின் தலையிலிருந்து இறங்கி வருவதைக் காணலாம்.
  
பாட்டரசர் கி. பாரதிதாசன்
04.06.2019

samedi 29 juin 2019

மிறைக்கவி மேடை - 3



மிறைக்கவி மேடை - 3

துாசங்கொளல்
துாசங்கொளல் என்பது, ஒருவன் ஒரு வெண்பாச் சொன்னால், அதன் ஈற்றெழுத்தே ஈறாக, அதன் முதல் எழுத்தே முதலாக மற்றொரு வெண்பா ஈற்றினின்று மேற்பாடுவது.
அத்தி வரதா
கஞ்சி வரதரே காயும் கடுவெயிலுக்
கஞ்சிக் கிடந்தீரோ? நீர்க்குளத்தில் - மஞ்சன..நீர்
ஆட்டக் கரையேறும் அத்தி வரதாவுன்
காட்டா வடிவம்தான் காட்டு!
பாவலர் ஐயப்பன்
கண்ணுறக்கம் தண்குளத்துள் காண்பதுமேன்? பன்னாளாய்
மண்ணுறக்கம் இன்றி வதைகின்றேன்! - விண்ணுறக்கம்
நானுறும்..முன் வேண்டுகிறேன்! நாரணா உன்னுடைய
கானுறும் பூமுகம் காட்டு!

பாவலர் ஐயப்பன் பாடிய பாடலுக்கு நான் பாடிய துாசங்கொளல்.

பிரான்சில் நடைபெறும் யாப்பிலக்க வகுப்பில் மாணவர்களுக்கு மிறைப்பா நடத்தினேன்.  மாணவ மாணவியர் பாடிய வெண்பாவுக்குத் துாசங்கொளல் பாடினேன்.

நாவினிக்க நற்றமிழை நல்கிடுவாய்! வெள்ளிதழ்ப்
பூவிருக்கும் நாயகியே! பொற்கொடியே! - பாவினிக்கும்
சிந்தையுறச் செந்தமிழின் சீர்மகளே! என்றும்..நீ
விந்தையுறை வேதத்தின் வித்து!

பாவலர் கவிப்பாவை
23.06.2019

பாவலர் கவிப்பாவையின் வெண்பா 'நா' என்ற எழுத்தில் தொடங்கி 'து' என்ற எழுத்தில் நிறைவுற்றது.

'து' என்ற எழுத்திலிருந்து மேனோக்கி 'நா' என்ற எழுத்தில் நிறைவுறும் வண்ணம் ஒரு சில நிமிடங்களில்  நான் எழுதிக் காட்டிய வெண்பா.

நானினிக்கப் பாடுகிறேன் நாளெல்லாம் நாரணனே
தேனினிக்கப் பாடுகிறேன் சீர்பெறவே! - வானொலிக்கத்
தங்குபுகழ் மின்னுமே! சந்த நடையேந்திப்
பொங்குதமிழ் மின்னுமே பூத்து!

பாட்டரசர் கி. பாரதிதாசன்
23.06.2019

மிறைப்பா மேடை - 1


மிறைப்பா மேடை - 1

கூட சதுர்த்தம்

நான்காம் அடியிலுள்ள எழுத்துக்கள் மற்றைய மூன்றடிகளுள்ளும் மறைந்து நிற்குமாறு இயற்றப்படும் செய்யுள் கூட சதுர்த்தம்.

கூடம் - மறைந்திருப்பது, சதுர்த்தம் - நான்காம் அடி. மறைவாக நான்காம் அடியை உடையதென்பது பொருள்.

பல நுால்கள் கூட சதுர்த்தத்தை, கூட சதுக்கம் என்று குறிப்பிட்டுள்ளன.

பாரதியே போற்றுகிறேன்!

நாட்டுக் குழைத்தாய்! பற்றுடனே
          நம்மின் நற்றேன் நெறிக்குழைத்தாய்!
ஏட்டுக் குழைத்தாய்! பாவையர்தம்
          இழிவைக் கிள்ளிப் போர்தொடுத்தாய்!
வீட்டுக் குழைத்தாய்! பாத்தாயே
          வியக்கப் பார்த்த சாரதியின்
பாட்டுக் குழைத்தாய்! பாரதியே
          பாதம் பற்றிப் போற்றுகிறேன்!

[பாட்டரசர் கி. பாரதிதாசன்]

கருத்துரை: செந்தமிழ் நாட்டுக்கும் பாரத நாட்டுக்கும் உழைத்தாய். தமிழ்த்தாயின் நெறிகள் பரவ உழைத்தாய். நல்ல நுால்களை படைத்திட உழைத்தாய். பெண்ணின் விடுதலைக்கு உழைத்தாய். பரம்பொருள் நல்கும் விண்வீட்டுக்கு உழைத்தாய். பாட்டின் தாயாகிய பைந்தமிழ் வியந்திடவே கண்ணன் புகழ் வீசும் பாட்டுக்குழைத்தாய். மகாகவி பாரதியே உன்றன் பாதங்களைப் பற்றிப் போற்றுகிறேன். 

இவ்விருத்தத்தின் நான்காமடியிலுள்ள எழுத்துக்களெல்லாம் ஏனைய மூன்றடிகளுள்ளும் ஆங்காங்கே மறைந்துள்ளன.

பாட்டரசர் கி. பாரதிதாசன்
24.06.2019

மிறைப்பா மேடை - 2


மிறைப்பா மேடை - 2
  
விசித்திர அகவல்
  
ஒரு குறள் வெண்பாவிலுள்ள ஒவ்வோர் எழுத்தையும் ஒவ்வோரடியின் ஈற்றில் அமையுமாறு பாடுவது விசித்திர அகவல் ஆகும்.
  
குறள் வெண்பா
  
குமுத மலராகக் கோலவிதழ் பின்னும்
தமிழமின் வாழ்க தழைத்து!
  
இக்குறள் வெண்பாவிலுள்ள ஒவ்வோர் எழுத்தையும் கீழ்க்கண்ட விசித்திர அகவலின் ஓவ்வோர் அடியின் ஈறறில் அமைந்துள்ளதைக் காணலாம்.
  
அன்னைத் தமிழின் அமுதைப் பருகு
மன்பன்! ஆற்றல் அரிமா! கி.மு
முன்னே மொழியைத் முனைந்து காத்த
தன்னே ரில்லாத் தமிழன் நாம
மோதும் மறவன்! முத்தமிழ் வல்ல
தாதும் மணக்கும் தகையன்! தீரா
ஆசை கவிமேல்! ஆக்கம் வாழ்க!
மீசைக் கவிமேல் மேவும் உணர்வைக்
காட்டும் நெஞ்சன்! கண்ணியன் என்கோ!
சூட்டும் மின்னிதழ்த் துாயன்! கால
மூட்டும் சீரை உடையன்! அருவி
போலத் தண்மைப் பொழிலன் தந்த
கோல இதழ்கள் கூட்டும் நற்புகழ்!
பாடும் புலவர் நாடும் நட்பி
லாடும் மனத்தன்! அருங்கணி வரையன்!
படங்கள் யாவும் பட்டாய் மின்னு
முடைமை கற்றவன்! ஊக்கம் பின்னும்
தன்மை பெற்றவன்! மாட்சி தழைத்த
வன்மை உற்றவன்! வாழும் பூமி
சுற்றும் செயலாய்த் தொண்டே சூழ
நற்றமிழ் காப்பவன்! நன்றே தமிழமி
னுற்ற பெருமையை ஓதி மகிழ்ந்தேன்!
உலகை உவக்கும் ஒப்பில் தேவா!
நலமே நண்பன் நாளும் இங்காழ்
வண்ணம் செய்க! வளமே பொழிக!
எண்ணம் என்றும் இன்பங் குழைத்த
தாகம் தணித்த தகையுடை இன்மழை
யாக வேண்டும்! அருளைக் கொடுத்துத்
தமிழமிழ் வாழ்வைத் தாங்கியே உயர்த்து!
உமதுயிர்த் தமிழை ஓங்கியே சாற்று!
எல்லாம் அறிந்த அல்லா அழகைச்
சொல்லி, அகவல் அடிகளில் தோன்றும்
ஈற்றாம் எழுத்தைப் போற்றிப் படித்தால்
சாற்றிய நற்குறள் ஊற்றெனத் துள்ளும்!
விசித்திர அகவல் வேண்டி விளைத்தேன்!
பசியுறு புலமைப் பான்மை தெரிக்கவே!
  
பாட்டரசர் கி. பாரதிதாசன்
29.06.2019

lundi 5 mars 2018

கோமூத்திரி



பசுவின் பாய்ச்சல் ஓவியக் கவிதை
[கோமூத்திரி]
  
குறள்வெண் செந்துறை
  
ஈசா உன்னையே எண்ணம் நாடும்
வாசா உன்னையே வண்ணம் பாடும்
  
பசுவானது நடந்தவாறு சிறுநீர் கழிக்க, உண்டாகும் சுவட்டின் மேல் எழுத்துக்கள் அமையும் பாடல். கோ - பசு, மூத்திரி - மூத்திர வடிவுடையது.
  
நேராக எழுதப்பட்ட இரண்டடிகள். சுவட்டின் வழியாகவும் அமைவதைக் காணலாம்.
  
பாட்டரசர் கி. பாரதிதாசன்
05.03.2018

jeudi 1 mars 2018

ஓவியக் கவிதை

ஓவியக் கவிதை
  
ஆறாரைச் சக்கரம்
[கட்டளைக் கலித்துறை]
  
பாடுவாய் பாரதி பாக்களை நெஞ்சார மாவுலகே!
நாடுக நுட்பமே! சூடுக நன்மையே சங்கமென!
தேடுக பாடம் சிறக்க! வளமையின் தேனுறவே!
பாடுக நாளுமே! தேவியே கேட்பன பண்வேதமே!
  
இச்செய்யுள் ஆறாரைச் சக்கரத்தில் அமையும்போது நடுவே 'க' என்னும் எழுத்து நிற்க, ஆறு ஆரங்களிலும் முறையே ஒன்பது எழுத்துகள் அமைவதைக் காணலாம். ஆரங்களிலுள்ள நடுவெழுத்தை வலஞ்சுழியாகப் படிக்க, 'பாட்டரசன்' என்னும் சொல் பெறப்படுவதைக் காணலாம்.
  
இச்செய்யுளின் முதன் மூன்றடிகள் 19 எழுத்துகளைப் பெற்றும், ஈற்றடி 18 எழுத்துகளை பெற்றும் வரும். மொத்தம் 75 எழுத்துகளில் அமையும் இப்பாடல் சித்திரத்தில் 67 எழுத்துகளைப் பெறும்.
  
கட்டளைக் கலித்துறையின் கணக்கின்படி ஒற்று நீக்கி எண்ணிட ஒவ்வொரு அடியும் 16 எழுத்துகளைப் பெற்றிருக்கும்.

பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்
01.03.2018

lundi 18 décembre 2017

நான்காரைச் சக்கரம் 2




சித்திர கவிதை
நான்காரை சக்கரம்

வாடி தேன்பா நாடி..வா!
வாடி நாளும் பாடி..வா!
வாடி பார்வை யாடி..வா
வாடி யாழ்..நீ தேடி..வா

இது நான்கு ஆராய், நடுவே வா என்னும் எழுத்து நிற்க, ஆர்மேல் ஒவ்வொரு எழுத்து நிற்க, வட்டையின் மேல் பன்னிரண்டு எழுத்துக்கள் நிற்கப் பாடப்படும் கவியாகும்.

முப்பத்திரண்டு எழுத்துகளை உடைய இச்செய்யுள், நான்காரைச் சக்கரத்தில் அமைக்குங்கால் முப்பத்திரண்டு எழுத்துகள் பதினேழாகச் சுருங்கும்.

நடுக் குறட்டினின்ற வா என்னும் எழுத்து, எட்டுமுறை படிக்கப்பட்டு எட்டு எழுத்தாகும். ஆரையில் நின்ற எட்டு எழுத்துக்களும் இரு முறை படிக்கப்பட்டுப் பதினாறு எழுத்துக்களாகும். சுற்று வட்டத்தில் உள்ள எழுத்துக்கள் எட்டு.  ஆக எழுத்துக்கள் முப்பத்திரண்டும் பதினாறாக அடங்கும். 

பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்
18.12.2017