மீன் ஓவியக் கவிதை
உயிரே...வா!
வஞ்சி விருத்தம் [மா+மா+காய்]
சீரே! உயிரே! தேரே..வா!
தாரே! சாரே! இன்வேரே!
வாரே! வேயார் வாகே..வா!
பேரே! பேறே! பேட்பருளே!
அருங்சொற்பொருள்
தார் - மாலை
சார் - அழகு
வேர் - மூலம்
வார் - நேர்மை
வேய் - மூங்கில்
வாகு - அழகு
பேர் - பெருமை
பேறு - செல்வம்
பேட்பு - விருப்பம்
கருத்துரை
என் வாழ்வின் சீரே! என்னுயிரே! வணங்கும் தேர்போல் வாராய்! மணக்கும் மாலையே வாராய்! அழகே வாராய்! இன்பத்தின் மூலமே வாராய்! நேர்மையே வாராய்! மூங்கிலைப்போல் பளபளக்கும் மேனியளே வாராய்! பெருமையை, பேறுகளை விருப்பமுடன் அருள்வாய்!
பாட்டரசர் கி. பாரதிதாசன்
11.11.2019
