samedi 24 août 2019

இரத பந்தம்


பாட்டரசரின் பெருந்தேர் ஓவியக்கவிதை
  
இத்தேரின் வடிவமைப்பு என்னால் உருவாக்கப்பட்டதாகும். முன்னோர் வடிவமைத்த தேர்கள் பதினாறையும் விட இத்தேர் பெரியதாகும். இத்தேரின் உயரம் இருபத்தைந்து கட்டங்களைக் கொண்டது. தேரின் சக்கரங்கள் இரண்டு குறட்பாக்களில் அமைந்துள்ளன. இரண்டு குறட்பாவின் ஈற்றெழுத்தும், தேர்ப்பாடலின் முதலெழுத்தும் ஈற்றெழுத்தும் ஒன்றி அமைகின்றன.
  
இரண்டு சக்கரங்களில் அமைந்த குறள்வெண்பாக்கள், சக்கரத்தின் நடுவில் தொடங்கி உள்வட்டத்தைச் சுற்றிப் பின் மேல் வட்டத்தைச் சுற்றித் தேரின் தொடக்கவெழுத்தில் [பு] நிறைவுறும்.
  
கலிவெண்பாவில் அமைந்த தேரின் பாடல் தேரின் அடியில் தொடங்கி இடவலமாகச் சுற்றிச்சுற்றி மேலேறி உச்சியிலிருந்து இறங்கினால் நிறைவுறும்.
  
தேரின் மேற்றட்டில் அமைந்த குறட்பாவில் என்னுடைய வேண்டுகோள் உள்ளதைக் காண்க.
  
கலிவெண்பா
  
புதுப்பார் படைக்கப் புனை..பண்! தமிழே!
முதுமை கமழு மரபே! - புதுமை
வழியே! படரும் வளமே! மதுர
மொழியே! உலகின் முதலே! - பொழிலே!
உயர்வை யளிக்கு மொளியே! இறையே!
வியத்திருவே! வெல்லு மறமே! - இயற்கை
யெழிலே! மிகுபசுமை யின்பமே! தாயே!
அழகே! அமுதே! அருளே! - பழமையைக்
காத்திடும் வாழ்வே! தொழுங்கலையே! வேரடர்ந்து
பூத்த கொடியே! புகழே!கண் - கோத்தினிக்கும்
மாண்பே! நனிபொற்பே! வண்ணக் கவிவெற்பே!
கேண்மை யுழவே! செழுமையே! - மேன்மையே!
வான்மழையே! சிந்தை மணக்குந் தகையே..நீ
தேன்கல மே!பண்ணே நல்கியென் - னுான்வாழ்
மலர்மணமே! புண்ணியமே! ஓத வுளமே
நலமே மிகுமே! பெரும்பேர் - நிலமே!
கதிரே! கவிவனமே! பாகுறுமின் யாழே!
நதியே! நயமே! கலைநற்கா வே!இன்பஞ்
சேர்..தாயே! தா.. சாத னம்!வழங்கும் கண்ணிமையால்
சீர்மைமனம்! தேறிட வை!நன் மதுவே!
புதுவைமண் சாற்றும் புலமை - பொதுமை
பதிய மொழிக படைப்பு!
  
சக்கரத்தில் அமைந்த குறள்
  
1.
பொன்னின் புதுப்பொலி வே!பூந்தேன் காரிகையே!
கன்னித் தமிழே..நீ காப்பு!
  
2.
தங்கத் தமிழே! தவமொழியே! செங்காந்தல்
பொங்கும் புகழே!நீ காப்பு!
  
தேரின் மேற்றட்டில் அமைந்த குறள்
  
கனிந்த தமிழே! கனக மணியே!
இனமே மகிழ வெழு!
  
பாட்டரசர் கி. பாரதிதாசன்
24.08.2019

dimanche 18 août 2019

இரத பந்தம்


தேர் ஓவியக் கவிதை 16
  
பதின்சீர் ஆசிரிய விருத்தம்
  
வேர்கனத்தோ டும்வன்மை காட்டுகவே!  
   விருந்தேயூண் சுவைதேமா
      நீ!நற்சு ளைநீ!செய்க பொங்கக்
         கனிதிருச்சொல், சீர்விகமே!
சீர்யாவும் வண்மேவு கண்ணாகக்
   கண்பொங்குந் திருவருளைத்
      தேனருள்கவி மாதே..நீ சீர்த்தமர்ந்து
         வாழ்வருள்வாய்! மாண்பருள்வாய்!
மார்பொங்கிக் கருக்கமழ்ந்து துணிவேயெம்
   மதியாழ்ந்து மாய்வுவல்ல
      மனங்குணந்தந் து,குன்றாய்மல் லு,திருவாள்தந்
         தெம்புகழ்மின் ன,த்தமிழ்வாழ்
கார்கனத்த கூத்தர்தம் மனம்பொங்கித்
   கருக்கமழ்ந்து மிகுந்துகற்க
      கலைபொங்கக் கவிபொங்கக் கண்பொங்குந்
         திருவருளை யூட்டுகவே!
  
நான்காரச் சக்கரம்
    
வஞ்சி விருத்தம்
    
தாயே..நீ கவிவானே..தா!
தானே..வா மதிநாவே..தா!
தாவே..நா[ன்] அறு தாழே..தா!
தாழே..தா! தகை நீயே..தா!
    
தாவு - பகை
தாழ் - திறவுகோல்
தாழ் - பணிவு
    
மாதாவே வாழ்வே தாமா!
மாதாவே ஆய்வே தாமா!
மாதாவே ஆழ்வே தாமா!
மாதாவே ஆர்வே தாமா!
    
ஆழ்வு - ஆழம்
ஆர்வு - நிறைவு
    
இத்தேரின் சக்கரங்கள் நான்கார ஓவியக்கவிதையில் அமைந்துள்ளன. வஞ்சி விருத்தப் பாடல் 32 எழுத்துக்களைப் பெறும். சக்கர ஓவியம் 17 எழுத்துக்களைப் பெறும். தேரில் அமைந்த பதின்சீர் விருத்தம் 237 எழுத்துக்களைப் பெறும். ஓவியம் 206 எழுத்துக்களைப் பெறும். மூன்று பாடல்களும் சேர்ந்து 301 எழுத்துக்களைக் கொண்டுள்ளன. ஓவியம் 206 எழுத்துக்களைக் கொண்டுள்ளது.
  
பதின்சீர் விருத்தம் தொடங்கிய இடத்திலேயே முடிவதைக் காணலாம். தேரின் கீழே 'வே' என்ற இடத்தில் விருத்தம் தொடங்கி மேலேறி இடப்பக்கம் வலப்பக்கம் என மாறி மாறி மேலேறித் தேர்த்தட்டின் இடது முனையிலிருந்து 4 கட்டங்கள் இறங்கி நேராகத் துாணேறி அங்கிருந்து நான்கு கட்டங்கள் இறங்கித் தேரின் மேல் தட்டில் சென்று வலது இடது என மேலேறி உச்சியை அடைந்து, அங்கிருந்து நேரே கீழிறங்கி வலது பக்க மேல் தட்டு முனைக்குச் சென்று 4 கட்டங்கள் மேலேறி அங்கிருந்து துாணிறங்கி, 4 கட்டங்கள் மேலேறித் தேரின் கீழ்த் தட்டு மையத்திலிருந்து இறங்கித் தொடங்கிய இடத்தில் நிறைவுறும்.
  
சித்திரக்கவி இலக்கியங்களில் கண்டுணர்ந்த 16 வகைத் தேர்களையும் இங்கு நான் பாடியுள்ளேன். பிரான்சு கம்பன் கழகத்தின் 19 ஆம் ஆண்டு கம்பன் விழா 21.09.2019 அன்று நடைபெறவுள்ளது. கம்பன் விழா நிறைவுற்றதும் மற்றுமுள்ள சித்திரங்களை எழுதுகிறேன்.
  
பாட்டரசர் கி. பாரதிதாசன்
18.08.2019

jeudi 15 août 2019

மும்மலர்ப் பந்தம்


மூன்றுமலர் ஓவியக் கவிதை
  
மகாகவி பாரதியார்
  
ஞானமன மான,இன மானமன மான,கன
வானமன மானகவி! கானமன - மானகவி!
சிந்துக் கவித்தந்தை! சீர்மைமிகு பாரதியை
முந்துபுகழ் நெஞ்சே முழங்கு!
  
பாவேந்தர் பாரதிதாசனார்
  
காலைநிலை வேலையலை சோலைமலை ஓலையிலை
மாலைநிலை கொண்ட வடிவழகை - ஆலைமது
ஏந்தும் கவிதைகளி லீந்திட்ட பாவேந்தர்!
நீந்துமென் நெஞ்சம் நினைந்து!
  
கவியேறு வாணிதாசனார்
  
தேடிமுடி! நாடியடி! ஓடியிடி! பாடிவெடி!
கோடியடி தீட்டிக் கொடுத்தவர்! - பாடி
யழகள்ளித் தந்தவர்!மாண் பாண்டகவி யேறு
மொழியள்ளி நெஞ்சே முழங்கு!
  
படிக்கும் முறை
  
இம்மலர் வெண்பா 64 எழுத்துக்களைப் பெறும். ஓவியம் 57 எழுத்துக்களைப் பெறும். முதலடி 16 எழுத்துக்களையும், இரண்டாமடி 16 எழுத்துக்களையும், ஈற்றிரண்டடிகள் 32 எழுத்துக்களையும் பெற்று வெண்பா அமையும். முதலடியின் இரட்டை எண்களில் அமையும் எழுத்துக்கள் ஒன்றி ஒரே எழுத்தாக மலரின் நடுவில் நிற்கும். இரண்டாமடி நடுவிதழ் வட்டத்தில் சுற்றி அமையும். மூன்று நான்காம் அடிகளிள் மேலிதழ் வட்டத்தில் சுற்றி அமையக் காணலாம்.
  
புதுவைக்குப் புகழ்சேர்த்த கவிஞர் மூவரை மும்மலர் ஓவியத்தில் பாடியுள்ளேன்.
  
முதல் வெண்பாவின் கருத்துரை
  
பாட்டுக்கோர் புலவர் பாரதியார் ஞான நெஞ்சுடைக் கவிஞர். இனத்தின் பெருமையுடைக் கவிஞர். விரிந்த வானம்போன்று மனமுடைக் கவிஞர். இசைமனமுடைக் கவிஞர். சிந்துக்கவிக்குத் தந்தையெனப் போற்றப்படுபவர். சீர்மை மிகுந்தவர். புகழை முந்திநின்று ஏந்தும் என்னெஞ்சே மகாகவியின் மேன்மையை முழங்குகவே.
  
இரண்டாம் வெண்பாவின் கருத்துரை
  
விடியலின் அழகை, கடலலையின் எழிலை, சோலை, மலை, ஓலை, இலைகளின் வடிவை, மதி தவழும் மாலை அழகை, மதுவேந்தும் பாக்களில் படைத்தவர் பாவேந்தர் பாரதிதாசனார். அவரை நினைத்து என்நெஞ்சம் நீந்தி மகிழும்.
  
மூன்றாம் வெண்பாவின் கருத்துரை
  
பகைவர் எங்குள்ளார்? தேடி, நாடி, அழிக்க, விரைந்தோடித் தீயவரை இடிக்க, கவிபாடி அவரை வெடிக்கக் கோடி அடிகளைப் பாடிக் குவித்தவர். [பாடி - ஊர்] ஊரின் அழகை எழுதிக் களித்தவர். மாண்பினை ஆட்சி செய்த கவியேறு வாணிதாசனாரின் மொழியை முழங்குவாய் என்னெஞ்சே!
  
பாட்டரசர் கி. பாரதிதாசன்
15.08.2019

vendredi 9 août 2019

தேர்ப்பந்தம்


தேர் ஓவியக் கவிதை - 15
  
தனித்தமிழறிஞர் க. தமிழமல்லனார்
புகழைப் போற்றுகவே!
  
நேரிசை வெண்பா
  
மதுத்தந்த பூவினை,வான் கொண்டபுகழ் சீரைப்
புதுப்..பார் நிறைபொற்பைத் தாழைப் - பதமணத்தை
யிங்களிக்க மல்லா்புனை பாட்டுக்கு நற்சங்கே!
பொங்கு! புகழைப் புனைந்து!
  
கருத்துரை:
  
தனித்தமிழறிஞர் க. தமிழமல்லனார் எழுதுகின்ற பாடல்கள் இனிக்கும் தேனை அளிக்கும். வானளவு புகழைப் பெருமையை வழங்கும். புத்துலக நிறையழகைப் பொழியும். தாழைபோல் மணக்கும், நற்சங்கே அவரின் புகழைப் போற்றிப் பொங்குகவே!
  
வஞ்சி விருத்தம்!

நீடு பாடல் காடு..நீ!
நீடு காணும் நாடு..நீ!
நீடு நாடல் மேடு..நீ!
நீடு மேவும் பாடு..நீ!
    
கருத்துரை:
    
நீடு - நிலைத்திருக்கை.
நீடுதல் - செழித்தல், நிலைத்தல், மேம்படுதல்.
மேடு - பெருமை.
பாடு - உலகவொழுக்கம்.
  
நிலைத்த பாக்காடு நீ! செழித்த நாடு நீ! நிலைபெறத் தேடும் பெருமை நீ! மேன்மை தரும் உலகவொழுக்கம் நீ!
  
நீடு கூட்டு மேடு..நீ!
நீடு மேற்று மேரு..நீ!
நீரு மேற்ற மேரு..நீ!
நீரு மேற்ற கூடு..நீ!
    
கருத்துரை:
    
கூட்டும் ஏடு [ஏடு - நுால்]
ஏற்றும் ஏர்
மேரு - மலை
கூடு - உடல்
  
நிலைத்த வாழ்வைக் கூட்டுகின்ற நுால் நீ! செம்மையை அளிக்கும் ஏர் நீ! மழையைத் தருகின்ற மலை நீ! இளநீர் போன்று தண்ணெஞ்சம் கொண்டாய் நீ!
  
பாட்டரசர் கி. பாரதிதாசன்
09.08.2019

jeudi 8 août 2019

மலர்ப்பந்தம்


மலர் ஓவியக் கவிதை
  
மாதேகா! துாயா! மாதா..வா!
மாதாவா நேயா! மாவாயா!
மாவாயா! மேயா! மாவாகா!
மாவாகா! மாயா! மாதே..கா!
  
துாயா - துாய்மையானவனே!
நேயா - அன்பானவனே!
மேயா - ஆடு மாடுகளை மேய்த்தவனே!
மாயா - மாயம் புரிந்தவனே!
  
மாதேகா - அழகுடைய மேனியை உடையவனே!
மாதா..வா - என் தாயே வா!
மா தா வா - [மா - பெரிய] [தா - வலிமை] பெரிய வலிமை உடையவனே வாராய்!
மா வாயா - உலக்தை உண்ட திருவாயை உடையவனே!
மா ஆயா - பெருமையுடைய ஆயர் குலத்தில் பிறந்தவனே!
மா வாகா - [வாகு - திறமை] மிக்க திறமையுடையவனே!
மா வா கா [மா - செல்வம்] செல்வனே வராய்! காப்பாய்!
மாதே கா - [மாது - பெண்] பெண்ணாகிய என்னைக் காத்திடுவாய்!
  
இது, நடுப்பொகுட்டினின்றும் மேல் வலக்கோணத்துள்ள அகவிதழ் புறவிதழ் சென்று வலமே அடுத்த புறவிதழ் அகவிதழ்வழியே பொகுட்டினிழிந்து அடுத்த அகவிதழ்வழி புறவிதழ்சென்று முதலடி முற்றி, மறித்தும் பொகுட்டினின்றும் கீழ் வலக்கோணத்துள்ள அகவிதழ் புறவிதழ்வழி அடுத்த கீழ்க்கோணத்துள்ள புறவிதழ் அகவிதழ்சென்று பொகுட்டினிழிந்து கீழ்க்கோணத்துள்ள அகவிதழ்வழி அதன் புறவிதழ் சென்று இரண்டாமடி முற்றி, மறித்தும் பொகுட்டினின்றும் கீழிடக்கோணத்துள்ள அகவிதழ் புறவிதழ்வழி இடக்கோணத்துள்ள புறவிதழ் அகவிதழ்சென்று பொகுட்டினிழிந்து மேலிடக்கோணத்துள்ள அகவிதழ்வழி அதன் புறவிதழ் சென்று மூன்றாமடி முற்றி, மறித்தும் பொகுட்டினின்றும் மேலிடக்கோண அகவிதழ் புறவிதழ்வழி அடுத்த மேற்கோணத்துள்ள புறவிதழ் அகவிதழ்சென்று பொகுட்டினிழிந்து முதலடி தொடங்கிச் சென்ற கோணத்திதழ்களில் சென்று நான்காமடி முற்றிவாறு காண்க.
  
பாட்டரசர் கி. பாரதிதாசன்
08.08.2019

மலர்ப்பந்தம்



மலர் ஓவியக் கவிதை
  
வேலா யிடு பாவே!
வேதா தடு நோவே!
வேடா கொடு பூவே!
வேரா இரு நாவே!
  
கருத்துரை:
  
வேலவனே நற்பாக்களைத் தருவாய். என் மன நோயைத் தடுப்பாய். மணமுள்ள பூக்களைக் கொடுப்பாய். தாங்கும் வேராக என்னுடைய நாவில் நிலைத்து நிற்பாய்.
  
ஓரடிக்கு 6 எழுத்துக்கள் வரவேண்டும். முதல் எழுத்தும் ஈற்றெழுத்தும் ஒன்றி வரவேண்டும்

பாட்டரசர் கி. பாரதிதாசன்
08.08.2019

mercredi 7 août 2019

இரத பந்தம்


தேர் ஓவியக் கவிதை
  
வேதா!தா தா!தகை தந்தரு ளே,தேரு
மோதுருக, ஓங்கு கலைகற்க! கண்ணா
குவிகனி கோத்த கவியே தருக!
புவியே பொழிக கவி !
  
அருளே! நனிதேவே! ஆரமுதே! தேனே!
தெருளே யளி!தாராய் திண்மை! - திருவாழ்
தகவே தருக! பகருன் தமிழே!
புகழே பொழிக புவி!
  
இத்தேர் ஓவியக் கவிதையில், தேரின் மேல் தட்டுக் கூரையிலும் நடுவிலும், கீழ்த்தட்டு நடுவிலும் என நான்கு முறை 'வேதா தருக கவி' என்ற தொடர் வந்துள்ளதைக் காணலாம்.
  
கருத்துரை:
  
தாதா - தந்தை
தகை - அழகு, அன்பு, அருள், பெருமை, நன்மை.
தகவு - தகுதி, அறிவு, கற்பு, நல்லெழுக்கம், கற்பு, நன்மை.
திரு - திருமகள், செல்வம், சிறப்பு, அழகு, பொலிவு, தெய்வத்தன்மை.
  
வேதம் உரைக்கும் பரம்பெருளே! தந்தையே! தகையைத் தந்தருள்வாய்! கற்போர் மனம் உருகும் வண்ணத்தில் இத்தேர் கவியை ஓதிடுவாய்! கண்ணா! கனிகளின் சுவை மிகும் வண்ணம் கவிதையைத் தருவாய்! இப்புவி புகழைப் பொழியும் உயர்வை அளித்திடுவாய்!
  
அருளால் காக்கும் உயர்ந்த இறைவனே! திகட்டா அமுதே! இனிக்கும் தேனே! அறிவின் தெளிவை அளிப்பாய்! திண்மை தருவாய்! என்னுள்ளத்துள் திருமகள் வாழ்கின்ற தகுதியைத் தருவாய்! நீ விரும்பும் தமிழை பகர்வாய்! இப்புவி புகழைப் பொழியும் உயர்வை அளித்திடுவாய்!
  
பாட்டரசர் கி. பாரதிதாசன்
07.08.2019

மலர்ப்பந்தம்

மலர் ஓவியக் கவிதை
  
[ஏகபாதம்]
  
கண்ணா வாழ்க!
கண்ணா வாழ்க!
கண்ணா வாழ்க!
கண்ணா வாழ்க!
  
[சொல்லணியுள் மடக்கு வகைகளுள் ஒன்றாகிய நான்கடியும் மடக்காய் வருவது ஏகபாதம் ஆகும்] ஓரடியே நான்கடியும் மடக்காய் வருவது.
  
கண்ணா வாழ்க - என்னைக் காக்கும் திருக்கண்ணா வாழ்க!
கண் நா ஆழ்க - என் கண்ணிலும் நாவிலும் ஆழ்ந்திருப்பாய்!
கண் நா ஆழ்க - [கண் - அறிவு] அறிவாக என் நாவில் ஆழ்ந்திருப்பாய்!
கண் நா ஆழ்க - [கண் - மூங்கில்] வேய்ங்குழல் இசையாக என் நாவில் ஆழ்ந்திருப்பாய்!
  
இது, நடுப்பொகுட்டினின்றும் மேல் வலக்கோணத்துள்ள அகவிதழ் புறவிதழ் சென்று வலமே அடுத்த புறவிதழ் அகவிதழ்வழியே பொகுட்டினில் முதலடி நிறைவுறும். இவ்வாறே மற்ற மூன்றடிகளும் காண்க.
  
பாட்டரசர் கி. பாரதிதாசன்
06.08.2019

lundi 5 août 2019

இரதபந்தம்



தேர் ஓவியக் கவிதை 14
  
புதுவைப் புலவர்
சந்தப்பாமணி அரங்க. நடராசனார் வாழியவே!
  
கட்டளைக் கலித்துறை
  
உளமோங்கி வாழும் பெருமை! அருளளி வேல்வடிவ
நலமோங்கி வாழும் புலமை!..வல் வேய வெழிற்சுவைவாய்!
குளமேந்து பூநட ராசர்முத் தாளு முயரணியர்!
வளமோங்கி வாழுங் கவிதை புவிவார்த்து வாழியவே!
  
கருத்துரை:
  
புதுவைப் புலவர், சந்தப்பாமணி அரங்க. நடராசனாரின் உள்ளத்துள் பெருமை நிலையாக வாழும். நுால்களில் நலமோங்கி வாழும் கூரிய புலமையுடையவர். வல்ல வேய்ங்குழல் இசைபோல் இனிக்கும் திருவாயைப் பெற்றவர். குளம்பூத்த தாமரைபோல் அழகுடைய வாழ்வைப் பெற்றவர். முத்துப்போல் வெண்மை அணியர். வளமோங்கி வாழும் கவிதைகளைப் புவிக்களித்து வாழியவே!
  
பாட்டரசர் கி. பாரதிதாசன்
04.08.2019

dimanche 4 août 2019

இரத பந்தம்



தேர் ஓவியக் கவிதை - 13
    
இயலிசைப்புலவர்
இராச. வேங்கடசனார் வாழியவே!
  
மதுப்பூத்த வேயேதான் மார்புரையாம்! நாவை
நதிவனத்துத் தேன்சேரும்! நன்றாய் - விதுப்பும்
நயமதும்..சீர் நன்கிசைக்கும்! மெல்லிசைத் துாயர்!
இயலிசை வேந்தரை யேத்து!
  
கருத்துரை:
  
புதுவை இயலிசைப்புலவர் இராச. வேங்கடேசனார் நெஞ்சமளிக்கும் உரைகள் இனிக்கும் வேய்ங்குழல் இசையைப்போன்றிருக்கும். அவரின் திருநாவைப் பாய்ந்தோடும் ஆற்றுவளமுடைய சோலைதரும் தேன் சேரும். [தேன்போல் அவர் சொற்கள் இனிக்கும்] நன்றாய் அவரின் ஆசைகள் நமக்கு நன்மைகளை மிக்களிக்கும். சிந்து, சந்தம் ஆகிய மெல்லிசை பொழிகின்ற துாயவர். இயலிசை மன்னவர். அவரை ஏத்திப் போற்றுகவே.
  
பாட்டரசர் கி. பாரதிதாசன்
03.08.2019

samedi 3 août 2019

இரதபந்தம்

 தேர் ஓவியக் கவிதை 11
[செய்யுள் 172 எழுத்து, ஓவியம் 155 எழுத்து]
  
நுாற்கடல் தி.வே. கோபாலையரைப்
பாற்கடல் என்றே பகர்!
  
[கலிவெண்பா]
    
புதுவை நகர்போற்றுஞ் சீர்மேக வாணர்!
பதித்தநுாற் றேனே பகுத்து - மதன்சேர்க்கும்!
கூர்மை..வே லென்மொழியர்! கோல வுரைச்சுடர்!
சீர்மைமிகு நெஞ்சர்! கவிதைகள் - வார்க்கும்
பெரும்புலமை பொங்கூற்று! பேரறிஞர்! அன்னை
யரும்புகழ் பாடு மறத்தர்! - திருவுடையர்!
வாயே மணக்க இலைபோட்டுக் கோடிநலத்
தாயேபோல் வாழ்வருள் தி.வே.கோ! - துாயசுவை
நுாற்கடற்கார்! சூடிய ஈடிற் சுவடியே
பாற்கட லென்றே பகர்!
    
இலக்கியங்களில் காணப்படும் தேர்க் கவிதைகளில் இதுவே பெரியதாகும். தேரின் நடுத்தட்டு 9, 11, 13 எழுத்துகளைப் பெற்றுவரும் கவிதைகளே மிக அதிகமாகப் பாடப்பட்டுள்ளன. இத்தேர் நடுத்தட்டில் 17 எழுத்துக்களைப் பெற்றுள்ளது.
  
கருத்துரை:
  
தி.வே.கோபாலையர் அவர்கள் திருமாலின் திருப்பெயருடையவர், தமிழை மழையாகப் பொழிந்தவர். புதுவைநகர் போற்றும் புகழுடையவர். அவா் எழுதிய நுால்கள் தேனை அளிக்கும். கல்வியழகைக் கொடுக்கும். நுண்மொழியாளர். இலக்கண உரையாசிரியர்களில் சுடராக ஒளிர்ந்தவர். சிறப்புடைய மனத்தை உடையவர். மிக்க புலமையுடைய கவிதை ஊற்றவர். பேரறிஞர். தமிழ்த்தாயின் புகழ்பாடி அறநெறியில் வாழ்ந்தவர். இறையருள் பெற்றவர். வெற்றிலை போடும் பழக்கத்தை உடையவர். கோடி நலங்களைத் தருகின்ற பெற்ற தாயைப்போன்று வாழ்வளித்தவர்.
  
நற்சுவையுடைய நுாற்கடல் தி.வே. கோபாலாலையர் அவர்கள் எழுதிய இணையிலா நுால்கள் பாற்கடலாகும்.
  
பாட்டரசர் கி. பாரதிதாசன்
03.08.2019

vendredi 2 août 2019

இரத பந்தம்


தேர் ஓவியக் கவிதை 10
    
புலவர் இறைவிழியனார் புகழ் வாழியவே!
    
ஆசிரியப்பா
[செய்யுள் 130 எழுத்து - ஓவியம் 115]
    
நாவே பூவே திகழ்புகழ் நல்லார்!
பாவாய்ப் பாக்கள் வார்க்கும் புலவர்!
நம்சீர் காக்கவே முன்னே நின்றார்!
தம்பேர் பதியத் தமிழ்ப்பெயர் பூண்டார்!
நற்றமி ழிதழை யெழிலுற நல்கினார்!
கற்றோர் விரும்பும் வண்ணம் நிறைமதி
கனிந்துரு வித்தகர்! துாயநற் பனிபோ[ல்]
இனிய விறைவிழி யர்சீர் வாழ்கவே!
    
கருத்துரை:
  
புதுவைப் புலவர், நற்றமிழ் இதழாசிரியர் மு. இறைவிழியனார் அவர்கள் மணக்கின்ற நன்மொழி பேசுகின்ற புகழுடைய நல்லார். பாகாய் இனிக்கின்ற பாக்களைப் பாடும் புலமையுடையவர். தமிழினத்தின் சீரைக் காக்க முன்னின்று போராடினார். 'சாமிகண்ணு' என்ற தம்முடைய பெயரை 'இறைவிழியன்' என்று தனித்தமிழில் வைத்துக்கொண்டார். நற்றமிழ் என்ற திங்களிதழைச் சிறப்பாக வெளியிட்டார். கற்றவர் போற்றுகின்ற முற்றறிவாளர். வல்லவர். துாய பனிபோல் குளிர்ந்த குணமுடைய இனிய இறைவிழியனார் புகழ் வாழ்கவே.
    
பாட்டரசர் கி. பாரதிதாசன்
01.08.2019