jeudi 28 février 2013

காதல் ஆயிரம் [பகுதி - 38]





காதல் ஆயிரம் [பகுதி - 38]


371.
வேலை முடிந்து விரைந்து குடில்வந்தேன்
சோலைக் கிளியிரண்டும் சூடேற்றும்! - கோலமுற
மாலைப் பொழுதை மனமெண்ணி ஏங்குதடி!
காலை கனிந்த கனவு!

372.
நினையாமை ஏனோ? நிறைமதிப் பெண்ணே!
உனையெண்ணி ஆண்மை உருகும்! - மனங்கள்
பிணையாமை வாழ்வா? பிறந்தபயன் காண
முனையாமை நீக்கி முழுகு!

373.
ஆடினாள்! பாடினாள்! அப்படியே விட்டென்னை
ஓடினாள்! உள்ளம் துடிக்குதடி! - தேடினேன்
நெஞ்சச் சுமையகற்றி நீள்துயர் நீக்குமிடம்!
தஞ்சம் அடைவேன் தனித்து!

374
முமுமையாய் உன்னழகை முத்தமிழில் பாடச்
செழுமையாய்ச் செந்தமிழைச் சேர்ந்தேன்! - எழுமைப்
பிறவிகள் போதுமோ? பின்னழகைக் கண்டும்
துறவிகள் எய்துவார் தூது!

375.
தேங்கிய எண்ணங்கள் தேனைச் சுரக்குதடி!
வீங்கிய வண்ணங்கள் வெல்லுதடி! - ஏங்கிமனம்
வாங்கிய கற்பனைகள் மாண்பாய் வளருதடி!
ஓங்கிய பாட்டில் ஒளிர்ந்து!

376.
ஆடுவதா? பாடுவதா? அன்புள்ளம் நீயின்றக்
கூடுவதா? கும்மியிசை கொட்டுவதா? - தேடிவர
மூடுவதா வாயிற் திருக்கதவை? முப்பொழுதும்
வாடுவதா? நேர்மை வளைந்து!

377.
காதடி தொங்கும் கலைமுத்துப் பேரழகால் 
மோதடி நெஞ்சை! முழுமோகக் - கீதத்தை
ஊதடி! உள்ளம் உருகிடும் பாவின்றி
ஏதடி வாழ்வும் எனக்கு?

378.
நந்தவனம் ஒன்று நடைபயின்று என்எதிரே
வந்ததினம் இன்று! வளருதடி - சிந்தையிலே
தந்தமணம் வென்று! தந்ததனப் போடுதடி
வெந்தமனம் நன்றே விரைந்து!

379.
தூக்கம் இலாமல் துடித்தே இளமையுறும்
ஏக்கம் எழுத எழுத்துண்டோ? - ஊக்கமுடன்
தாக்கும் விழியம்பு! தண்ணிலவே! என்துயரைப்
போக்கும் வழியைப் புகல்!

380.
உன்னெழிலைக் காணும்நாள்! உல்லாச சொர்க்கத்தின்
பொன்னெழிலைக் காணும்நாள்! பூவே!உன் - முன்னெழிலைப்
பின்னெழிலை எண்ணிப் பிதற்றுகிறேன்! பண்ணிசையால்
நின்றெழிலை நன்றே நிரப்பு!

(தொடரும்)

mercredi 27 février 2013

காதல் ஆயிரம் [பகுதி - 37]




காதல் ஆயிரம் [பகுதி - 37]

361.
கழுவும் பொழுதில் நழுவிடும் மீனாய்
எழுதும் மடல்எதற்கோ! கண்ணே! - உழவன்
தொழுது நிலங்காப்பான்! தூயவளே உன்னை
உழுது செழிக்கும் உயிர்!

362.
கொள்ளளவு மீறிக் கொழிக்குதடி! எந்நொடியும்
சொல்லளவு மீறிச் சுரக்குதடி! - நல்லமுதே!
கள்ளளவு போதைதரும் கண்ணழகு! காண்பதனால்
எள்ளளவும் உண்டோ இடர்!

363.
எனக்குள்ளே நீயும்! இனியதமிழ் பாடி
உனக்குள்ளே நானுமிணைந்(து) உள்ளோம்! - மணக்கும்
மனத்துள்ளே துன்பம் குடிபுகுந்தால், மாதே!
கணத்துள்ளே நீங்கும் கரைந்து!

364.
கண்ணன் குழலிசைபோல் கன்னல் கவிபாடும்
வண்ணன் குரலிசை வந்தினிக்க! - வெண்ணிலவே!
அன்னம் அசைந்துவர, ஆசை பெருகிவரக்
கன்னம் சிவக்கும் கனிந்து!

365.
வந்தாள் அருகில்! மயில்நடம் நான்மயங்கத்
தந்தாள்! தவிக்க எனைவிட்டாள்! - செந்தமிழ்ச்
சிந்தால் உயிரைச் சிறையிட்டாள்! காதல்பூப்
பந்தால் அடித்தாள் பறந்து!

366.
தூவும் பனிப்பொழிவாய்த் தோழியுன் இன்றமிழ்ப்
பாவும் குளிர்ச்சியைப் பாய்ச்சும்! - நாவினிலே
மேவும் சுவைசொட்டும்! மென்டொடியே! பொற்கவிக்
கோவும் மயங்கக் கொழித்து!

367.
மெல்லச் சிணுங்கி மெதுவாகத் தொட்டென்னை
வெல்ல நினைக்கும் வியப்பழகே! - செல்லமே!
வல்ல இரவு வடித்த கனவுகளைச்
சொல்லச் சுரக்கும் சுகம்!

368.
நவிலும் நறுஞ்சொற்கள்! நற்பணிகள்! பொற்சீர்
குவியும் பெருவாழ்வு கொஞ்சச் - சுவைசேர்
கவியும் கலையும் கவிஞன்என் பேரும்
அவளின் அளிப்பென ஆடு!

369.
பொன்தேர் செலுத்தும் புவியாளும் மன்னனைப்போல்
இன்தேர் செலுத்தும் இசைபுலவன்! - மன்பதையில்
என்பேர் செலுத்த எழிற்கொடுத்த பேரழகே!
உன்பேர் இயக்கும் உயிர்!

370.
உனைத்தொட்ட நாள்முதலாய் உள்ளம் குளிர!
மனைதொட்ட துன்பம் மறைய! - கனவின்
கணைதொட்ட நெஞ்சுள் கமழ்ந்தாடக் காதல்
சினைதொட்டு வாழும் செழித்து!

(தொடரும்)

mardi 26 février 2013

காதல் ஆயிரம் [பகுதி - 36]



காதல் ஆயிரம் [பகுதி - 36]


351.
காலை விடியல்! கருத்தைக் கவர்ந்திழுக்கும்
மாலை மயக்கம்! மனங்கமழும் - சோலையெழில்!
பாளைச் சிரிப்பு! தமிழினிப்பு! பாவையவள்
ஆளை அசத்தும் அழகு!

352.
பேசிட வேண்டும்! பிணைந்துயிர் பேரின்பம்
வீசிட வேண்டும்! விளைகின்ற - ஆசைமலர்
கூசிட வேண்டும்! குளிர்ந்து மனம்பொய்யாய்
ஏசிட வேண்டும் எனை!

352.
கொட்டும் குளிர்பனி! கொஞ்சும் நினைவலைகள்!
சொட்டும் மலைத்தேன்! சுடர்கொடியே! - சட்டென்று
கட்டும் கவிதையெனக் காதல் பெருகுதடி!
முட்டும் நரம்பின் முறுக்கு!

353
சந்தமிடும் கண்ணேஉன் காற்சிலம்பு! செந்தமிழைச்
சொந்தமிடும் கண்ணேஉன் சொற்சிலம்பு! - தந்ததன
விந்தையிடும் கண்ணேஉன் மெல்லிடை! ஆசைமிகச்
சிந்தையிடும் செல்லச் சிரிப்பு!

354.
வரும்நாளை எண்ணி வடித்துள பாக்கள்
திருநாளைப் போன்றுதித் திக்கும்! - அருந்தேன்
தரும்நாளை எண்ணித் தழைத்த மனததுள்  
கரும்(பு)ஆலை கண்டாய் களித்து!

356.
ஒருபார்வை பாரடி! உள்ளம் உருக்கும்!
திருப்பாவை போல்தேன் சுரக்கும்! - அருஞ்சீர்
தரும்பாவை நீயே! தமிழ்ப்பாவை! இன்பம்
தரும்பாவை உண்பேன் தனித்து!

357.
வரும்முறை தோறும் மனத்தினை வாட்டிப்
பெரும்சுகம் நல்கிடும் பெண்ணே! - விரும்பி
ஒருமுறை பாரடி! என்னுயிர் ஓங்கத்
திருமரைக் கண்ணைத் திறந்து!

358.
வேர்வைக் குளியல் உழைப்பின்பம்! வெண்பனிப்
போர்வைக் குளியல் மலர்பொழிவு! - ஊர்வசியே!
பார்வைக் குளியல் கவிபடைக்கும்! நம்முயிர்க்
கோர்வைக் குளியலைக் கூட்டு!

359.
ஒன்றும் அறியாக் குழந்தையென உள்ளமர்ந்து
வென்றெனை வீழ்த்தும் விளையாட்டேன்? - என்னவளே!
நன்றுன் செயலா? நடத்துகின்ற நாடகமா?
என்றெனைச் சேர்வாய் இயம்பு!

360.
உள்ளொன்று வைத்து வெளியென்று பேசுமொழி
முள்ளென்று குத்தி முடக்குமடி! - மெல்லவே
கல்லொன்று தேயுமடி! காதல் இலையென்று
சொல்லொன்று சொல்லுதல் சூது!

(தொடரும்)

lundi 25 février 2013

காதல் ஆயிரம் [பகுதி - 35]



காதல் ஆயிரம் [பகுதி - 35]


341.
என்னை மறந்தாயா? இன்பக் கவிபாடும்
பண்ணை மறந்தாயா? பைங்கிளியே! - உன்னுயிர்க்
கண்ணை மறந்தாயா? காதல் பயிர்விளையும்
மண்ணை மறந்தாயா? சொல்?

342.
அண்ணன் அடிக்க அரண்டாயோ? அன்பே!பா
வண்ணன் எனைநீ மறந்தாயோ? - விண்ணுலகில்
கண்ணன் கருணை இழந்தானோ! காதல்மொழி
உண்ணும் உளமே உடைத்து!

343.
மாமியும் மாமனும் வந்தே வதைத்தனரோ?
சாமிமேல் சத்தியம் கேட்டனரோ? - ஊமையாய்
ஆமைபோல் சென்றாயோ? அன்பை மறந்தாயோ?
தீமைமேல் தீமை திணித்து!

344.
தம்பியும் தங்கையும் சார்ந்துனைப் பேசியே
நம்பி இருந்து நடித்தனரோ? - அம்மம்மா!
கம்பியுள் பூட்டினரோ? காதல் சிறகுடைக்கத்
தும்பிபோல் வாட்டினரோ சூழ்ந்து!

345.
பாட்டி பகரும் பரிவுடைச் சொற்கள்;,உன்
கூட்டில் நடைபெறும் ஓட்டமே! - தீட்டிய
சீட்டுக் கவிபடித்தேன்! சேர்ந்ததுயர் எந்நொடியும்  
வாட்டும் உயிரையே மாய்த்து!

346.
வளம்பொங்கப் பாட்டெழுதி வஞ்சியவள் வாழ்வில்
நலம்பொங்க வாழ்த்துகிறேன் நாளும்! - குலவு
கலைபொங்கக் காதல் சுகங்பொங்க அன்பாம் 
நிலைபொங்கும் நெஞ்சம் நிறைந்து!

347.
பொய்யுரைத்துப் பாடும்பொற் பூவே! இனியென்முன்
மெய்யுரைத்துப் பாடு! விழைந்தாடு! - செய்!இனித்து
கைகொடுத்து வாழ்வை! கவிகொடுத்து நெஞ்சத்துள்
மைகொடுத்து வாழ்வை மயக்கு!

348.
காதலாம் காதலெனக் கண்ணிரண்டைக் கவ்வுதடி!
மோதலாம் மோதலென முந்துதடி! - மாதவமே!
ஈதலாம் ஈதலென இன்பமடி! காதல்நெறி
ஓதலாம் ஓதலாம் ஓர்ந்து! 

349.
கண்ணா வருக!என் மன்னா வருக!பொன்
வண்ணா வருக!இன் பந்தருக! - இன்னமுதப்
பண்ணா வருக! பசுந்தமிழ்ப் பா..பொழிக!
பெண்ணாய்ப் பிறந்ததென் பேறு!

350.
போதுமடா சாமி! பொலியும் அவளழகால்
மோதுமடா பொற்கனவு! மூளையிலே - மாதுருவம்
ஓதுமடா தேனொழுகும் காமக் கலைநூலை!
கோதுமடா காதல் கொழித்து!

(தொடரும்)

dimanche 24 février 2013

காதல் ஆயிரம் [பகுதி - 34]





காதல் ஆயிரம் [பகுதி - 34]


331.
போற்றும் புலமை பொலிந்தாடும் பூங்கொடியே!
காற்றும் எனக்கு..நீ! நற்கவிதை - ஊற்றும்..நீ!
தோற்கும் நடையழகில் தூயவெண் அன்னங்கள்!
ஏற்கும் அதனினம் என்று!

332.
அன்னமொன்று மெல்ல அசைந்து நடந்துவர!
என்னவென்று சொல்லிடுவேன் என்னிலையை! - மின்னலொன்று
கண்ணிலொன்றைக் கவ்வியது! காதல் பெரும்சுவையின் 
பண்ணிலொன்றைப் பாடுகிறேன் பார்!

333.
அடைகாக்கும் சிட்டென ஆசைகளைக் காத்தே
நடைகாக்கும் நற்றமிழ் நங்கை! - புடைத்த
உடைகண்டும் மென்மை இடைகண்டும் வாழைத்
தொடைகண்டும் நீங்கும் துயர்!

334.
மாலை மணியெட்டு! மங்கையவள் வந்திடுவாள்!
சோலைக் குளிருற்றுச் சொக்குகிறேன்! - சேலையெழில் 
மூளை முழுதும் பதிவாகி முட்டிடுமே? 
காளை கனவில் கலந்து! 

335.
சின்னவள்! மெல்லச் சிணுங்கும் செயலுயர்ந்து
பொன்னவள் ஆகிப் பொலிகின்றாள்! - பண்ணிசைக்கும்
என்னவள்! இன்பருவப் பெண்ணவள்! ஈடிலாத் 
தென்னவள் சீர்களைச் சேர்த்து!

336.
ஊக்கம் இலாமல், உயிர்பருகும் ஒண்டமிழ்
ஆக்கம் இலாமல் அலைவதுமேன்? - எக்கணமும்
தூக்கம் இலாமல் துவளுக்கின்ற என்னவளே 
ஏக்கம் எதுவோ எழுது!

337..
பாடிக் களிப்பாள்! பசுஞ்கவிஞன் என்னுடன்
ஆடிக் களிப்பாள்! நயனணிகள் - சூடியென்று
கூடிக் களிப்பாள்! இரு..கைகள் கொண்டின்று
மூடிக் களிப்பாள் முகம்!

338.
பொன்னணிக் கூடம்! பொலிபுதையல்! தேனுற்று!
மின்மினிக் கூட்டம்! மிளிர்பட்டு! - கண்மயக்கும்
விண்மினிப் பூக்கள்! வியப்பூட்டும் மத்தாப்பாம்!
என்னுயிர்ப் பெண்ணின் எழில்!

339.
இங்கு நலம்..நீ! இளையவளே! பேரழகே!
அங்கு நலமா..நான்! ஆரமுதே! - செங்கரும்பே!
தங்கு தடையின்றித் தண்டமிழ்ப் பாட்டிசைப்போம்!
பொங்கும் இளமை பொலிந்து!

340.
நினைந்துடல் மெல்ல நெகிழும்! வியர்வால் 
நனைந்துடல் ஆடும் நடனம்! - மணந்தே
இணைந்துடல் சொக்கும்! இளமை துடிக்கும்!
பிணைந்துடல் காணுமே பேறு!

(தொடரும்)

samedi 23 février 2013

காதல் ஆயிரம் [பகுதி - 33]





காதல் ஆயிரம் [பகுதி - 33]


321.
வாழும் வழியின்றி வற்றி வரண்டதுபோல்
ஏழு துயர்நாள்கள் ஏகினவே! - சூழுலகம்
பாழும் சடங்குகள் பார்ப்பதேன்? என்னுயிர்
ஆழும் நினைவில் அலைந்து!

322.
பட்டோ? மிளிர்மலர் மொட்டோ? சுவைபுட்டோ?
எட்டாத் தொலைவிலுள்ள வெண்தட்டோ? - கட்டழகோ!
சொட்டோ எனச்சொட்டும் தேனடையோ? இன்னமுதோ?
எட்டாம்நாள் வந்த(து) எழுந்து!

323.
ஒன்பது நாள்கள் உருண்டனவே! எண்ணங்கள்
தெம்பெதும் இன்றிச் சிதைந்தனவே! - செம்மலரே!
கம்பன் படைத்த கனித்தமிழே! கற்கண்டே!
எம்மின் துயரை இறக்கு!

324.
ஈரைந்து நாள்கள் இளையவளைப் பார்க்காமல்
ஓரைந்து மாதமென நாள்ஓடும்! - நீரின்றி
ஏர்குன்றிப் போகும்! இவளின்றி என்வாழ்வின்
சீர்குன்றிப் போகும் சிறுத்து!

325.
பத்துநாள் தீா்ந்து பதினொன்று வந்தேய்த
முத்துத்தேர் போல்அவள் முன்வருவாள்! - எத்திசையும்
கத்தும் குயில்கூடிக் காதல் மொழிபேசிச்
சித்தம் களிக்கும் செழித்து!

326.
வானத்துத் தேவதையாய் வந்து நடக்கின்றாய்!
கானத்துப் பூவெல்லாம் கண்சிமிட்டும்! - ஞானத்தை
நானுற்ற போதும்கூன் னுற்று நலிந்தனனே!
தேனொத்த உன்னழகில் தேர்ந்து!

327.
புதிய பொலிவொன்று நற்புலவன் என்னுள்
பதிய படைக்கும் பருவம்! - முதிய
மதிபோல் ஒளிரும் மலர்முகம் கண்டால்
நதிபோல் கொழிக்கும் நலம்!

328.
வண்ணத்துப் பூச்சிகள் வந்து வரிசையாய்
எண்ணத்துள் வட்டமிடும்! என்னவளே! - உண்ணென்றே
ஒண்சித்து வித்தைகளை ஊட்டும் உனைக்கண்டு
கண்செத்து மீளும் கமழ்ந்து!

329.
ஆயிரம் பூக்கள் அணிவகுத்து நின்றேங்கும்!
தாயிடம் வண்ணக் கிளிசாற்றும்! - கோயில்
சிலையென மின்னும் சிரிப்பழகே! பேச்சைக்  
கலையெனக் கற்றவிடம் காட்டு!

330.
மாங்கனித் தோப்பு! மதியொளிர் வானழகு!
தேங்கனிச் சாறு! திணைமாவு! - பூங்கொடியே!
நானினி என்செய்வேன்? நங்கையுன் பேரழகில்
ஊனினி வாடும் உடைந்து!

(தொடரும்)