jeudi 30 janvier 2020

இனிய வணக்கம்



திருவள்ளுவர் ஆண்டு 2051
30.01.2020
  
பிறப்பொக்கும் என்ற பெருநெறியும், ஞானச்
சிறப்பொக்கும் சிந்தையும் சீரும் - நிறையொக்கும்
தொண்டும் தருவாய் சுடர்த்தமிழே! இங்கென்னை
அண்டும் பகையை அழித்து!
  
பீடுடைய செந்தமிழே! பித்துடைய என்மனத்துள்
காடுடைய நன்மணத்தைக் காத்தளிப்பாய்! - ஏடுடைய
ஏற்றம் இசைத்திடுவாய்! எந்நாளும் நுண்ணறிவாம்
தேற்றம் விளைத்திடுவாய் சேர்த்து!
  
பாட்டரசர் கி. பாரதிதாசன்
நிறுவுநர்
கம்பன் கழகம் பிரான்சு
தொல்காப்பியர் கழகம் பிரான்சு

mercredi 29 janvier 2020

கேட்டலும் கிளத்தலும்


கேட்டலும் கிளத்தலும்
  
ஐயா வணக்கம்
  
சிலப்பதிகாரம், இருப்புப்பாதை இந்தச் சொற்களுக்குப் புணர்ச்சி விதியைப் பதிவு செய்யுங்கள்
  
அன்பரசி அண்ணாமலை
சென்னை
  
----------------------------------------------------------------------------------------------------------------
  
வன்றொடர் மொழியும் மென்றொடர் மொழியும்
வந்த வல்லெழுத் தொற்றிடை மிகுமே
மெல்லொற்றுத் தொடர்மொழி மெல்லொற் றெல்லாம்
வல்லொற் றிறுதி கிளையொற் றாகும்.
[தொல். எழுத்து 415]
  
மென்றொடர் மொழியுள் சிலவேற்றுமையில்
தம்மினம் வன்றொடர் ஆகா மன்னே.
[நன்னுால் 184]
  
வன்றொடர்க் குற்றுகரமொழியும் மென்றொடர்க் குற்றுகரமொழியும் நிற்ப, வருமொழி வல்லெழுத்தினது ஒற்று அவ்விடையே மிகும். மெல்லொற்றுத் தொடர்மொழிக் குற்றுகரத்தின் மெல்லொற்றுக் கிளையொற்றாகிய வல்லெழுத்தாகி முடியும்.
  
இரும்பு + பாதை = இருப்புப்பாதை
  
மெல்லொற்று வல்லொற்றாய்த் திரிந்து வருமொழி வல்லெழுத்து மிகுந்தது.
  
சிலம்பு + அதிகாரம் = சிலப்பதிகாரம்
  
உயிர்வரின் உக்குறள் மெய்விட்டு ஓடும்
[நன்னுால் 164]
  
உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பு
[நன்னுால் 240]
  
மெல்லொற்று வல்லொற்றாய்த் திரிந்து, நன்னுால் விதியின்படி புணர்ந்தது.
  
பாட்டரசர் கி. பாரதிதாசன்
கம்பன் கழகம் பிரான்சு
தொல்காப்பியர் கழகம் பிரான்சு
29.01.2020

mardi 28 janvier 2020

இனிய வணக்கம்!





திருவள்ளுவர் ஆண்டு 2051
28.01.2020

பண்பொளிரும் வாழ்வும், படர்ந்தொளிரும் மாவளமும்,
விண்ணொளிரும் மாண்பும், விரிபுகழும், - மண்ணொளிரும்
சீரும் சிறப்பும் செழுந்தமிழே ஈந்திடுவாய்!
பேரும் புகழும் பிணைத்து!

பாடும் படைப்போங்கப் பாரும் உயர்ந்தோங்கச்
சூடும் அறமோங்கத் தொல்தமிழே! - கூடும்
மதி..தருவாய்! வண்ண வழி..தருவாய்! உன்றாள்
கதி..தருவாய் என்றும் களித்து!

பாட்டரசர் கி. பாரதிதாசன்
நிறுவுநர்
கம்பன் கழகம் பிரான்சு
தொல்காப்பியர் கழகம் பிரான்சு

jeudi 23 janvier 2020

இனிய வணக்கம்!


படம் இதைக் கொண்டிருக்கலாம்: பூ, செடி, வானம், இயற்கை மற்றும் வெளிப்புறம்


இனிய வணக்கம்!

திருவள்ளுவர் ஆண்டு 2051
24.01.2020

நையும் உலகத்தை நல்வழியில் வாழ்விக்கும்
கையும் கருத்தும் கனிந்தீவாய்! - மையிருளைப்
போக்கும் அறமருள்வாய்! பூந்தமிழே! நற்பசுமை
தேக்கும் திறமருள்வாய் சேர்த்து!

நொடிப்பொழுதும் நீங்காதே! நொய்யளவும் மண்டைத்
தடிப்பெதுவும் சேர்க்காதே! தாயே! - துடித்தெழுதும்
ஊக்கம் உவந்துாட்டி உன்மகனைக் காத்திடுவாய்!
தாக்கும் பகையைத் தகர்த்து!

நோக்கம் சிறந்தொளிரும்! நுண்மாண் நுழைபுலத்தால்
ஆக்கம் அமுதுாறும்! அன்பூறும்! - பூக்கும்
மலர்க்காடே! மாத்தமிழே! வானமுதே! இன்பக்
கலைக்காடே! காப்பாய் கமழ்ந்து!

பாட்டரசர் கி. பாரதிதாசன்
நிறுவுநர்
கம்பன் கழகம் பிரான்சு
தொல்காப்பியர் கழகம் பிரான்சு

mercredi 22 janvier 2020

இனிய வணக்கம்


இனிய வணக்கம்!
  
திருவள்ளுவர் ஆண்டு 2051
22.01.2020
  
நெறிமணக்கும் நெஞ்சும், நிறைமணக்கும் சொல்லும்,
பொறிமணக்கும் நற்செயலும் பூக்க, - பறிமணக்கும்
பாக்கள் படைக்கப் பசுந்தமிழே உன்னடிக்குப்
பூக்கள் புனைந்தேன் புகழ்ந்து!
  
பொறி - அறிவு
பறி - பொன்
  
நேரிய பார்வை! நிலைகொண்ட நற்கொள்கை!
சீரிய சிந்தை! செழும்வாழ்வு! - வீரிய
மாநடை வேண்டுகிறேன் வண்டமிழே! உன்..முன்னே
பாநடை வேண்டுகிறேன் பார்!
  
பாட்டரசர் கி. பாரதிதாசன்
நிறுவுநர்
கம்பன் கழகம் பிரான்சு
தொல்காப்பியர் கழகம் பிரான்சு

mardi 21 janvier 2020

இனிய வணக்கம்!


இனிய வணக்கம்!
  
திருவள்ளுவர் ஆண்டு 2051
15.01.2020
  
நுண்ணறிவு வேண்டுகிறேன்! நோக்கும் நினைவேங்கத்
தண்ணறிவு வேண்டுகிறேன்! தண்டமிழே! - பண்ணறிவுத்
தேன்பாய வேண்டுகிறேன்! செந்தமிழ்ப் பாட்டாறாய்
நான்பாய வேண்டுகிறேன் நன்கு!
  
நுாலறிவும், நன்றே நுவலறிவும், கூருடைய
வேலறிவும், வெற்றி விளையறிவும், - மேலறிவும்
தந்தெனைக் காத்திடுவாய் தண்டமிழே! தாயே!என்
சிந்தனை சீருறவே செய்!
  
மேலறிவு - வான்போன்று விரிவுடை அறிவு
  
பாட்டரசர் கி. பாரதிதாசன்
நிறுவுநர்
கம்பன் கழகம் பிரான்சு
தொல்காப்பியர் கழகம் பிரான்சு

lundi 20 janvier 2020

நாடகத்தமிழ்ப் பொங்கல்


திருவள்ளுவர் ஆண்டு 2051 தைத்திங்கள் 6
20.01.2020
  
நாடகத்தமிழ்ப் பொங்கல் பொங்குகவே!
  
சிலம்பும் மணியும் தமிழ்க்கலையின்
   சிறப்பை முழங்கும்! காலணிகள்
குலுங்கும் நடனம் தமிழ்ச்சொத்து!
   கூத்தன் சூடும் மலர்க்கொத்து!
இலங்கும் பொன்சேர் மணியாக
   ஈடில் கலையை அணிந்திடுவோம்!
துலங்கும் வாழ்வு! கூத்திசையால்
   கூறும் கதைகள் மனமாளும்!
  
முல்லை மலரைச் சிறுவண்டு
   முகர்ந்து நடனம் புரிந்திடுமே!
கொல்லை ஒளிர மயிலழகாய்க்
   கோல நடனம் அளித்திடுமே!
எல்லா இல்லாக் காதலினால்
   இளமைக் கண்கள் கூத்திடுமே!
தில்லை இறைவன் அருள்பாடித்
   தேனார் பொங்கல் பொங்குகவே!
  
பாட்டரசர் கி. பாரதிதாசன்,
கம்பன் கழகம், பிரான்சு,

dimanche 19 janvier 2020

இசைத்தமிழ்ப் பொங்கல்


திருவள்ளுவர் ஆண்டு 2051 தைத்திங்கள் 5
19.01.2020
  
இசைத்தமிழ்ப் பொங்கல் பொங்குகவே!
  
யாழ்சேர் பாணன் இசைப்பொங்கல்
   இன்பத் தமிழின் புகழ்மீட்டும்!
கீழ்சேர் உலகைச் சரிசெய்து
   கீர்த்தி காண வழிகாட்டும்!
ஆழ்சேர் கடலின் வளமுடைய
   அமுதத் தமிழே துயர்..ஓட்டும்!
ஊழ்சேர் பொழுதில் இறைவனுடன்
   ஒளிரும் எங்கள் தமிழ்மொழியே!
  
இசையாய் வாழ்க்கை இனிக்கட்டும்!
   எழிலாய் உள்ளம் சிறக்கட்டும்!
அசையாய்ப் பிறக்கும் நேர்நிரையே!
   அறத்தால் பிறக்கும் சீர்நிறையே!
தசையாய்.. உயிராய்த் தமிழ்மொழியைத்
   தாங்கி வாழ்வோம்! தகைகாண்போம்!
நசையாய்ச் சொன்ன கருத்தேந்தி
   நாளும் பொங்கல் பொங்குகவே!
  
பாட்டரசர் கி. பாரதிதாசன்,
கம்பன் கழகம், பிரான்சு,
தொல்காப்பியர் கழகம், பிரான்சு.

samedi 18 janvier 2020

வெண்பா மேடை - 153


வெண்பா மேடை - 153
  
உண்மையொளிர் குறள்!
  
முகம்நக நட்பது நட்பன்று, நெஞ்சத்[து]
அகம்நக நட்பதே நட்பு!
  
[திருக்குறள் - 786]
  
இக்குறட்பா, எது உண்மையான நட்பு? எது உண்மை நட்பன்று? என்பதை உரைக்கின்றது. இதைப்போன்று கல்வி, செல்வம், புகழ், உறவு, உயர்வு..... போன்ற எதாவது உங்களுக்கு விருப்பமான ஒருபொருளைக் கருவாகக்கொண்டு உண்மையொளிர் குறள் ஒன்றைப் பாடுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.
  
அன்னைத் தமிழே!
  
1.
அன்னியச் சொற்கள் அமுதன்று! பண்பூறும்
அன்னையின் சொற்கள் அமுது!
  
2.
பன்மொழி காத்தல் தகையன்று! பாங்குடன்
தன்மொழி காத்தல் தகை!
  
3.
கற்ற அயல்மொழி காக்கும் உறவன்றாம்
உற்ற தமிழே உறவு!
  
4.
பொன்னும் பொருளும் அழகன்று! சேய்..காக்கும்
அன்னை மொழியே அழகு!
  
5.
வன்மை படையும் அரணன்று! வண்டமிழாம்
அன்னையே வாழ்வின் அரண்!
  
6.
வண்ண வளமும் வளமன்று! குன்றாத
வண்டமிழே வாழ்வின் வளம்!
  
7.
ஓங்கித் தழைத்தல் உயர்வன்று! தண்டமிழைத்
தாங்கித் தழைத்தல் உயர்வு!
  
8.
பிறமொழி வாழ்கல்வி பீடன்று! தாயால்
பெறுமொழிக் கல்வியே பீடு!
  
9.
பிறமொழிப் போதை அழகன்று! பெற்ற
அறவழிப் பாதை அழகு!
  
10.
அயல்மொழி மோகம் அறிவன்றாம்! அன்னை
உயர்மொழித் தாகம் அறிவு!
  
அன்புடன்

பாட்டரசர் கி. பாரதிதாசன்
கம்பன் கழகம் பிரான்சு
தொல்காப்பியர் மன்றம் பிரான்சு
18.01.2020

இயற்றமிழ்ப் பொங்கல்



திருவள்ளுவர் ஆண்டு 2051 தைத்திங்கள் 4
18.01.2020
  
இயற்றமிழ்ப் பொங்கல் பொங்குகவே!
  
ஏடு மணக்கும் இயற்றமிழை
   ஏந்தும் பொங்கல் வாழியவே!
பீடு மணக்கும் நன்னுாலும்,
   பெருமை மணக்கும் நல்லுரையும்,
நாடு மணக்கும் நலஞ்சூட்டும்!
   நன்மை மணக்கும் வழிகாட்டும்!
வீடு மணக்கும் வண்ணத்தில்
   விளித்துப் பொங்கல் பொங்குகவே!
  
ஈடு மணக்கும் சொல்யாவும்
   இனிமை மணக்கும் கற்றிடுவீர்!
நீடு மணக்கும் நன்னெறியால்
   நெஞ்சு மணக்கும்! எந்நாளும்
மேடு மணக்கும் சான்றோரை
   மேவி மணக்கும் செயல்வாழ்க!
காடு மணக்கும் வண்ணத்தில்
   கமழும் பொங்கல் பொங்குகவே!
  
ஈடு - திருவாய்மொழி உரைநுால்
மேடு - பெருமை
  
பாட்டரசர் கி. பாரதிதாசன்,
கம்பன் கழகம், பிரான்சு,
தொல்காப்பியர் கழகம், பிரான்சு.

jeudi 16 janvier 2020

காணும் பொங்கல்


திருவள்ளுவர் ஆண்டு 2051 தைத்திங்கள் 3
17.01.2020

 
கருணை பொங்கி மணம்வீசும்
   காணும் பொங்கல் வாழியவே!
அருணைத் தேவன் திருவருளால்
   அன்பும் அறிவும் மலருகவே!
சுருணை உலகம் சுடர்த்தமிழின்
   துாய நெறியைச் சூடுகவே!
வருணை அழகே! மலர்ப்பெண்ணே!
   வாழ்வே இனிக்கப் பொங்குகவே!
  
ஏழை எளியோர் இன்பமுற
   இனிக்கும் இந்நாள் வாழியவே!
வாழை தென்னைத் தோப்பாக
   வளமே எங்குஞ் சேருகவே!
யாழை மீட்டித் தமிழுணர்வை
   ஏந்தும் பாக்கள் பாடுகவே!
தாழை மணமே! தமிழ்மகளே!
   தவமே! பொங்கல் பொங்குகவே!
  
பாட்டரசர் கி. பாரதிதாசன்,
கம்பன் கழகம், பிரான்சு,
தொல்காப்பியர் கழகம், பிரான்சு.

mercredi 15 janvier 2020

மாட்டுப் பொங்கல்


திருவள்ளுவர் ஆண்டு 2051 தை 2
16.01.2020
  
உழவர் திருநாள் வாழ்த்துக்கள்!
  
மாட்டுப் பொங்கல் பொங்குகவே!
  
உழவே உலகின் அச்சாணி!
   உறவே வயலை உழுகாளை!
தொழுமே குறளை எத்திசையும்!
   தொண்டே இனத்தின் அடையாளம்!
விழுதே போன்று குடிதாங்கும்
   வீறே தமிழர் வியன்மாட்சி!
அழகே! அமுதே! தைப்பெண்ணே!
   அறமே இனிக்கப் பொங்குகவே!
  
ஏறு துள்ளும் கலத்தினிலே
   இளமை துள்ளும் வளமேந்தி,
ஆறு பாயும் நிலமாக
   அன்பே பாயும் அருளேந்தி,
ஊறு மகத்துள் எந்நாளும்
   உயர்ந்த கவிதை சுவையேந்தி,
வேறு வேறாய் நிற்காமல்
   வேராய் வன்மை பொங்குகவே!
  
பாட்டரசர் கி. பாரதிதாசன்
கம்பன் கழகம் பிரான்சு
தொல்காப்பியர் கழகம் பிரான்சு

mardi 14 janvier 2020

தைப்பொங்கல்!


திருவள்ளுவர் ஆண்டு 2051 தை 1
15.01.2020
  
தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துக்கள்
தைப்பொங்கல் பொங்குகவே!
  
அன்னைத் தமிழின் புத்தாண்டை
   ஆடிப் பாடி வரவேற்போம்!
பொன்னை நிகர்த்த தைம்மகளைப்
   போற்றித் தொழுது மலர்புனைவோம்!
முன்னைப் பெருமை முழங்கிடவும்,
   முல்லைக் காடாய் வாழ்வுறவும்,
என்னைச் சேர்ந்த கவிப்பெண்ணே!
   இனத்தின் பொங்கல் பொங்குகவே!
  
குறளாம் வாழ்வு பொங்குகவே!
   குணமாம் மாண்பு பொங்குகவே!
உறவாம் அன்பு பொங்குகவே!
   உயிராம் பண்பு பொங்குகவே!
மறமாம் காப்புப் பொங்குகவே!
   மதுவாம் சொற்கள் பொங்குகவே!
அறமாம் அணியே! கவிப்பெண்ணே!
   அமுதப் பொங்கல் பொங்குகவே!
  
பாட்டரசர் கி. பாரதிதாசன்
கம்பன் கழகம் பிரான்சு
தொல்காப்பியர் கழகம் பிரான்சு

lundi 13 janvier 2020

போகிப் பொங்கல்


போகிப் பொங்கல் பொங்குகவே!
  
பொல்லா நினைவை நெருப்பிடுக!
   பொய்யைப் புரட்டை நெருப்பிடுக!
செல்லாக் காசாய்க் கிடக்கின்ற
   சிறுமைப் போக்கை நெருப்பிடுக!
எல்லாத் திசையும் உறுஞ்சாதி
   இழிவை அள்ளி நெருப்பிடுக!
மல்லா! வில்லை! என்றமிழா!
   மாட்சி பொங்க நெருப்பிடுக!
  
வெறியாம் நெஞ்சைத் தீயிடுக!
   வெற்றுப் பேச்சைத் தீயிடுக!
பொறியாம் ஆசைக் குப்பைகளைப்
   பொசுக்க வேண்டித் தீயிடுக!
அறிவாம் சுடரை ஏற்றிடவே
   அகஞ்சோ் அழுக்கைத் தீயிடுக!
நிறைவாம் உலகைச் சமைத்திடவே
   நேயம் பொங்கத் தீயிடுக!
  
பாட்டரசர் கி. பாரதிதாசன்
கம்பன் கழகம் பிரான்சு
தொல்காப்பியர் கழகம் பிரான்சு
14.01.2020

samedi 11 janvier 2020

மாயவன் மகிழும் மார்கழி!


மாயவன் மகிழும் மார்கழி!
  
சூடிக் கொடுத்த சுடர்க்கொடி ஆண்டாள் பாடிக் கொடுத்த திருப்பாவையின் முப்பது பாக்களின் முதற்சீரை முதலாகக் கொண்டு முப்பது வெண்பாக்களை அந்தாதியில் பாடியுள்ளேன். இவ்வகையில் நம்மாழ்வாரின் திருவாய்மொழிக்கு, மணவாள மாமுனிகள் "திருவாய்மொழி நுாற்றந்தாதி" அருளிச்செய்தார். எனக்கு மாலியத்தை ஓதுவித்த அருட்குருநாதர் ஏந்துார்ச் சடேகோப இராமாநுசர் அவர்கள், நம்மாழ்வாரின் திருவாய்மொழிக்குத் "திருவாய்மொழிக் கலம்பகம்" பாடினார்.
  
காப்பு!
  
சூடிக் கொடுத்த சுடர்க்கொடியின் சொல்லேந்திப்
பாடிக் களிக்கப் பசுந்தமிழே! - நாடியே
வந்திடுவாய்! வாழ்த்தி வணங்குகிறேன்! வண்ணமெலாம்
தந்திடுவாய் தாயே தழைத்து!
  
நுால்
  
1.
மார்கழி மாதவனே! மாமறை யானவனே!
கார்பொழி மேனியனே! கண்ணனே! - சீர்பொழி
துாயவனே! தொண்டர்தம் நேயவனே! என்றலைமேல்
மாயவனே உன்னடியை வை!
  
2.
வையத்துப் பேரொளியே! வண்கடலே! வாழ்விலுறும்
ஐயத்தைப் போக்கிடுவாய் ஆரமுதே! - மையூறும்
கண்ணழகாய் மின்னும் கலையழகே! எந்நாளும்
ஒண்டமிழாய் என்னாவில் ஓங்கு!
  
3.
ஓங்கிப் புகழொளிர, உண்மை யுளமொளிரத்
தாங்கித் தலைமேல் தமிழ்தருவாய்! - வேங்கைவலம்
சேர்த்திடுவாய்! தேனே! திருவே! கவிநடையில்
வார்த்திடுவாய் ஆழி மழை!
  
4.
ஆழிமழைச் சீர்தருவான்! அன்புமழைத் தேன்தருவான்!
வாழிநுழை யாற்றல் வழங்கிடுவான்! - மேழி
வளர்ந்திட வல்ல வளமருள்வான்! வாழ்வு
மலர்ந்திட மாயனை மன்னு!
  
5.
மாயனைப் பாடிடுவாய்! மாவுலகைக் கொண்டொளிரும்
வாயனைக் கூடிடுவாய்! மாவழகு - ஆயனைச்
சாற்றி வணங்கிடுவாய்! சால்புடனே உன்மனத்துள்
போற்றி வலம்வருமே புள்!
  
6.
புள்ளும் இசைத்தன பூபாளம்! என்..தோழி
துள்ளும் விழிதிறவாய்! துாயநீர் - அள்ளி
மிசைத்திடுவாய்! மீட்டி விளையாடி நீயும்
இசைத்திடுவாய் கீசுகீ[சு] என்று!
  
7.
கீசுகீ சென்று கிலுகிலுக்கும் கைவளையல்!
வாசுகி ஊர்ப்பெண்ணே வந்தெழுவாய்! - கேசவனால்
வாழ்வோம்! அடியார் மனைசேர்வோம்! வாழ்வோங்க
ஆழ்வோம் அவனடிக் கீழ்!
  
8.
கீழ்வானம் மெல்லக் கிளர்ந்தெழும்! உள்ளத்துள்
ஆழ்வானம் ஆயன் அடிகாட்டும்! - சூழ்புகழ்
ஞானமே மின்னும்! நலமுறக் கண்ணா..தா!
மானமே என்..துா மணி!
  
9.
துாமணியே! நற்றுழாய் மாமணியே! தொன்மொழிப்
பாமணியே! பண்மணியே! பாரளந்த - தேமணியே!
தண்மையுடன் பாடித் தழைத்த தமிழளித்தேன்!
நுண்மையுடன் நற்றவம் நோற்று!
  
10.
நோற்றுப் புரிகின்ற நுண்தவம் வேண்டிலேன்
போற்றும் தமிழ்போதும் புண்ணியனே! - சாற்றி
விளிப்பேன்! வியனாழ்வார் மீட்டும் இசையுள்
களிப்பேன் கவிநயம் கற்று!
  
11.
கற்றுமகிழ் வாழ்வளிப்பாய்! கண்ணா திருவடியைப்
பெற்றுமகிழ் வாழ்வளிப்பாய்! பேரொளியே! - நற்றேன்
நனைந்துருகும் வாழ்வளிப்பாய்! நாரணா உன்மேல்
கனிந்துருகும் நெஞ்சம் கனைத்து!
  
12.
கனைத்திளங் கன்றழுவும் காட்சிபோல், உன்னை
நினைத்திள நெஞ்சழுவும்! நேயம் - புனைந்திளகும்
கண்ணியா! கட்டழகா! காவியா! என்மனமே
புண்ணியா நீ..வரும் புள்!
  
13.
புள்ளின்வாய் கீண்டானைப் போற்றிப் பணிந்திட்டால்
கள்ளின்..வாய் கொண்ட களிப்பூறும்! - அள்ளிநமைக்
காக்குமே கண்ணன் கருணையுளம்! பொன்மலரைப்
பூக்குமே உங்கள் புழை!
  
புழை - வாயில்
  
14.
உங்கள் புழைவாயில் உண்மையொளி வீசிடுமே!
திங்கள் திருமுகத்துச் செல்வியரே! - மங்கலமே
தந்தாளும் தாமோ தரனை மறந்தாரை
எந்நாளும் துாற்றியே எல்!
  
15.
எல்லே எனவிளித்த இன்கவி யாண்டாளின்
சொல்லே மணக்கும்! சுவையளிக்கும்! - அல்லே
அழிக்கும்! அணியிழையே! அச்சுதன்..நம் வாழ்வை
எழுப்பும் எழில்..நா யகன்!
  
16.
நாயகனாய் என்னுள் நடமிடுவான்! பெற்றுகந்த
தாயகமாய்த் தாங்கித் தகைதருவான்! - வாயழகு
கண்மயக்கும்! போற்றிக் களித்திடுவோம்! தந்திடுவான்
பண்மணக்கும் நல்..அம் பரம்!
  
அம் - அழகு
பரம் - விண்ணுலகம்
  
17.
அம்பரமே மின்னும் அணியரங்கா! காக்கின்ற
செம்பரமே! மின்னும் சிறப்பீய்வாய்! - நம்பியென
உள்ளொளியை நானேற்க உத்தமனே! எந்நொடியும்
ஒள்ளொளியை என்மனத்துள் உந்து!
  
அம்பரம் - ஆடை
  
18.
உந்தும் உடலடக்கி, ஓடும் உளமடக்கி,
முந்தும் வினையடக்கி முன்வந்தேன்! - நந்தா!
நலமோங்க நல்லருளை நல்கிடுவாய்! என்றன்
குலமோங்க முத்திரை குத்து!
  
19.
குத்தும் வலிபோக, குற்றும் வினைபோக,
பித்தும் பிணியும் பிணைந்தோட, - கொத்துமலர்
சூடுகிறேன் துாயவனே! சுந்தரனே! உள்ளொன்றிப்
பாடுகிறேன் வெண்பா..முப் பத்து!
  
20.
முப்பத்து மூவரை முன்படைத்தாய்! நம்மாழ்வார்
பப்பத்து முண்டாய் பரம்பொருளே! - எப்பொழுதும்
பொன்னுள் மணியெனவே, பூவுள் மணமெனவே,
என்னுள் திருவொளி ஏற்று!
  
21.
ஏற்ற பிறப்பை எழின்மேவச் செய்திடுமே!
ஆற்ற லளித்திடுமே! ஆரமுத - வூற்றினைச்
சாந்தமென ஈந்திடுமே! சார்ங்கனே! கவ்வுமே
காந்தமென உன்றன்..அங் கண்!
  
22.
அங்கண் மரையோ? அருட்கடலோ? ஆரமுதோ?
எங்கண் உறுமெழிலோ! இன்றேனோ? - பொங்கு..கவி
தந்தளித்தாய்! ஆயர்தமைத் தாங்கக் குடையாக
வந்தெடுத்தாய் மாரி மலை!
23
மாரி மலைதவழும்! வண்டு மலர்தவழும்!
தாரில் மணந்தவழும்! நீ..வரும் - தேரினிலே
சூழ்ந்தருள் சீர்தவழும்! என்னுயிர்..உன் தாள்தவழும்!
ஆழ்ந்தருள் அன்புடன் அன்று!
  
24.
அன்று சிலையொடித்தாய்! ஆயர் அருமனைச்
சென்று தயிர்குடித்தாய்! செற்றாரை - வென்று
பயனோங்கச் செய்தாய்! பசும்பற்ப நாபா!
உயிரோங்கத் தாராய் ஒருங்கு!
  
ஒருங்கு - முழுமை, அடக்கம்
  
25.
ஒருத்தி உருகுகிறாள்! உள்ளோருத்தி உள்ளம்
வருத்தி உளறுகிறாள்! மாயா! - திருத்தியெமை
ஆண்டள்ளி ஈவாய் அமுதை! அரங்கா!உன்
மாண்பள்ளி வார்க்குதே மால்!
  
மால் - ஆசை, மயக்கம், காமம்
  
26.
மாலே! மணிவண்ணா! மாயமலர்க் கண்ணா!உன்
காலே பிடித்தாழ்வார் கண்டுரைத்த - நுாலே
மாண்வீசும்! மாதுறை மாமார்பா! என்னிடத்தில்
வீண்பேசும் கூடாரை வெல்!
  
27.
கூடாரை வெல்லும் குலமளிப்பாய்! உன்புகழ்
பாடாரைப் நீக்கிப் பயனளிப்பாய்! - வாடாமல்
மண்ணுாறத் தண்ணளிப்பாய்! மாமன்னா! என்னை..நீ
கண்ணுாறப் பாலாய்க் கற!
  
கண் - அறிவு
கற - கறத்தல்
  
28.
கறவைகள் பால்சுரக்கும், காதலினால் வண்ணப்
பறவைகள் பாடிப் பறக்கும் - உறவை..யாம்
உற்று மனமகிழ்வோம்! ஊர்வலமாய்ப் பாடுவோம்!
சிற்றஞ் சிறுகாலே சென்று!
  
29.
சிற்றஞ் சிறுகாலே சென்றுமனம் வேங்கடனைப்
பற்றும்! பணிந்துருகும்! பண்ணிசைக்கும்! - முற்றிப்
படுமளவு தேனுாறும்! பார்த்தன்அன் புக்கே
கடுகளவு வங்கக் கடல்!
  
30.
வங்கக் கடலழகா! வண்ணத் தமிழழகா!
சிங்க முகத்தழகா! சீராளா! - செங்கண்ணா!
தந்தழகாய்ச் சூழ்க தகையாவும்! மாமாயா!
வந்தழகாய் வாழ்க..என் மார்பு!
  
நுாற்பயன்
  
சங்காழிக் கையனைச் சாற்றும் அருட்டமிழை
இங்கோதி நாம்வாழ்வோம்! இல்லத்துள் - பொங்குவளம்
பூக்கும்! புகழ்சேர்க்கும்! பொன்னுலகப் பேறளிக்கும்!
காக்கும் இனத்தைக் கமழ்ந்து!
  
பாட்டரசர் கி. பாரதிதாசன்
கம்பன் கழகம், பிரான்சு
தொல்காப்பியர் கழகம், பிரான்சு
05.12.2020

mardi 7 janvier 2020

மார்கழிப் பெண்ணே


மார்கழிப் பெண்ணே
  
[மார்கழியைக் காதலியாக எண்ணிப் பாடிய வெண்பா மாலை. ஆண்டாள் அருளிய திருப்பாவைப் பாடல்களின் முதல் சீர்களைக் கொண்டு இந்நுால் அமைந்துள்ளது]
  
காப்பு
  
மணமோங்கும் மார்கழி மங்கை வடிவைக்
குணமோங்கும் வண்ணம் கொடுக்க, - அணியோங்கும்
தாயே! தமிழணங்கே தாள்பணிந்தேன்! நீ..என்றன்
வாயே இருந்து வழங்கு!
  
1.
மார்கழிப் பெண்ணே! மதுமலர்க் கண்ணே!உன்
சீர்பொழி பேரழகில் சிக்குண்டேன்! - ஊர்..பொழி
லாடை தரிக்கும்! அமுதே..உன் பார்வை,பா
வோடை சுரக்கும் உளத்து!
  
2.
வையத்துப் பேரழகே! வாழ்கவி என்னெஞ்சின்
மையத்துப் பேரொளியே! மாங்குயிலே! - ஐயத்[து]
இடமின்றிச் சொல்வேன் இசைத்தேன்..நீ! பொன்னார்
குடமொன்றிக் கொள்வேன் குளிர்!
  
3.
ஓங்கி யொளிர்பவளே! ஒண்டமிழை உள்ளத்துள்
தாங்கித் தழைப்பவளே! தண்கொடியே! - ஏங்கி..நான்
நிற்கின்றேன்! நீள்விழி நேரிழையே! நின்னுருவில்
கற்கின்றேன் காதல் கவி!
  
4.
ஆழிபோல் சுற்றுதடி அன்பே நினைவலைகள்!
மேழிபோல் பற்றுதடி மேனியை! - ஊழிபோல்
என்னை யுருட்டாதே! ஏற்றருள்வாய்! உன்னுறவு
முன்னைத் தவத்தின் முளைப்பு!
  
5.
மாயனைச் சேர்ந்த திருமகளாய்ப் பாட்டரசு
நேயனைச் சேர்ந்த நிறைமதியே! - தாயனைய
பொன்மகளே! பொங்கும் புகழ்மகளே! நன்மணிகள்
மின்மகளே தாராய் விருந்து!
  
6.
புள்ளும் இசைபாடப் பூவும் நடமாட
அள்ளும் அழகோ அகஞ்சூடத் - துள்ளும்
கயல்விழிப் பெண்ணே! கனிமொழியே! உன்னால்
உயா்வழி காணும் உயிர்!
  
7.
கீசுகீ சென்று கிளையாடும்! என்னாசை
வீசுவீ சென்று விளையாடும்! - பேசுபே
சென்று மனமேங்கும்! என்னவளே! நான்மகிழ
என்றும் தருவாய் இடம்!
  
8.
கீழ்வானம் போலழ[கு] ஆழ்ஞானம் சூடுதடி!
சூழ்மானம் பூத்தபுகழ்ச் சுந்தரியே! - வாழ்வானாய்!
என்றன் வளமானாய்! ஈடில் கவிபாட
உன்றன் உறவமுதை யூட்டு!
  
9.
துாமணியே! இன்பச் சுவையணியே! என்னுயிர்ப்
பாமணியே! தேனுாறும் பண்மணியே! - மாமணியே!
மார்கழிப் பெண்மணியே! மாண்பொளிர் கண்மணியே!
சீர்மொழி தந்தெனைச் சேர்!
  
10.
நோற்றுனை யிங்கீந்த நுண்மையைப் போற்றுகிறேன்!
காற்றுனைச் சுற்றிக் களிப்புறுமே! - ஊற்றென
நெஞ்சம் குதிக்குதடி! நேரிழையே! உன்னழகில்
தஞ்சம் உறுமே தமிழ்!
  
11.
கற்றுக் களிக்கின்றேன்! காதல் கவித்தேனைப்
பெற்றுக் குடிக்கின்றேன்! பெண்ணழகே! - முற்றுமுனைப்
பாடத் துடிக்கின்றேன்! பாவையுனைப் பாற்கடலில்
ஆட அழைக்கின்றேன் ஆழ்ந்து!
  
12.
கனைத்திளம் எண்ணத்தைக் காட்டுகிறேன்! பெண்ணே!
நினைத்துளம் பாராய்! நிலவே! - அணைத்துளம்
இன்புற வேண்டுமடி! என்னவளே! வள்ளுவம்போல்
அன்புற வேண்டுமடி ஆழ்ந்து!
  
13.
புள்ளின்வாய் ஓசை புலவன் உணர்வினை
நெல்லின்வாய் போல்குத்தும்! நேரிழையே! - சொல்லின்வாய்
உன்னைக் கவிபாட உள்ளுருகும்! மார்கழியே!
என்னை மடியில் இருத்து!
  
14.
உங்கள் கவியால் உருகுகிறேன் என்றாள்!நற்
றிங்கள் முகத்தழகி! தேரழகி! - தங்க
அகத்தழகி! ஆரமுத அன்பழகி! என்றன்
தவத்தழகி தந்தாள் தமிழ்!
  
15.
எல்லே உனதழகு! ஈடில் உயர்வழகு!
சொல்லே மயக்குஞ் சுவையழகு! - வில்லே
விடுக்கும் விழியழகு! வெல்லழகு! இன்பம்
கொடுக்கும் மொழியழகு கூர்ந்து!
  
16.
நாயகனாய் நான்வாழ நற்றவமே நீவேண்டும்!
தாயகமாய் மேன்மை தரவேண்டும்! - துாயவளே!
வண்ணக் கவிபாட மாலையிலே நீவேண்டும்!
எண்ணம் இனிக்க இணைந்து!
  
17.
அம்பரமே மின்ன அசைந்துவரும் பேரழகே!
எம்பரமே போன்றிங் கெனைக்காப்பாய்! - செம்மலரே!
ஏங்கும் இதயத்தைத் தாங்கும் அருள்பொழிவாய்!
தேங்கு நலந்தருவாய் சேர்ந்து!
அம்பரம் - ஆடை
  
18.
உந்தும் கனவுகளை, உள்ளம் உவந்துருக
முந்தும் நினைவுகளை மூட்டுகிறாய்! - வந்தென்னைச்
சேரும் திருநாளைச் செப்பிடுவாய்! கொண்டாடும்
ஊரும் உறவும் உவந்து!
  
19.
குத்து விழியம்பு கூட்டும் மயக்கத்தை!
கொத்து மொழியம்பு கோலமிடும்! - முத்தும்
செவிகண்டு தள்ளாடும் மோகத்தால்! செந்தேன்
கவிகண்டு தள்ளாடும் கண்!
  
20.
முப்பத்து மாதங்கள் மோகத்தால் வாடுகிறேன்
எப்பற்றுப் போக்கும் இதயவலி! - குப்பத்துக்
காட்டுக்கு வந்திடுவாய்! கண்ணே! கனிமொழியே!
பாட்டுக்குச் சேர்ப்பாய் பதம்!
  
21.
ஏற்ற செயல்யாவும் என்றும் எழில்மேவும்!
ஆற்ற லொளிரும் அணியழகே! - ஊற்றென
ஆசை சுரக்குதடி! அன்புறவே என்னகம்
பூசை புரியுதடி பூத்து!
  
22
அங்கண்..மாச் சீரினிமை! மின்னும் அணிமூக்கு
செங்கண்மா லீந்த சிறப்பாகும்! - இங்குன்..மா
வேற்றம் எழுதச்சொல் லேதாம்! இளமயிலே!
சீற்றம் விடுத்தெனைச் சேர்!
  
23.
மாரி நிகர்..கூந்தல்! மான்நிகர் பார்வை!சீர்
ஏரி நிகர்..பசுமை ஏந்துநலம்! - பாரிநிகர்
நன்னெஞ்சம் கொண்டவளே! நற்றமிழே! எந்நாளும்
உன்னெஞ்சம் தாராய் உணர்ந்து!
  
24.
அன்றிவ் வலைகள் அடித்த அகத்துள்ளே
நன்றிவ் வழகை..நீ நல்கினாய்! - சென்றெங்கும்
நற்புகழை நாட்டுகிறேன்! நாளும் மனத்துள்..உன்
பொற்புகழைத் தீட்டுகிறேன் பூத்து!
  
25.
ஒருத்தியுனை ஒண்டமிழாய் ஓதியே காப்பேன்!
விரும்பியுனைச் சீர்கள் விளைப்பேன்! - விருத்தியுரை
நல்லழகை நாடி நவின்றிடுவேன்! சொக்கிடுவேன்
பல்லழகைப் பாடிப் பணிந்து!
  
26.
மாலே பெருகுதடி! மங்கையுன் கண்ணிரண்டில்
சேலே தவழுதடி! சித்திரமே! - பாலேபோல்
உள்ளம் படைத்தவளே! ஒண்ணுதலே! நற்பதிலைத்
துள்ளும் இளமானே சொல்!
  
27.
கூடாரைப் போன்றென்னைக் கூறி வெறுக்காதே!
கேடாரைப் போன்றென்னைக் கீறாதே! - நாடகமே
ஆடாதே! ஆருயிரே! ஆசை அகமிருந்தும்
ஓடாதே உள்ளம் ஒளித்து!
  
28
கறவைகள் மேய்கின்ற காட்டினிலே, காதல்
பறவைகள் பாடிப் பறக்கும்! - உறவைமனம்
எண்ணி இளகுதடி! ஏந்திழையே! என்னெஞ்சுள்
கண்ணி கமழுதடி காத்து!
  
29.
சிற்றஞ் சிறுபொழுதே சிந்தனை ஓயாமல்
முற்றும் உளத்தை முறுக்குதடி! - சற்றுமெனைப்
பாராமல் செல்வதுமேன்? பைங்கொடியே! உன்னருள்
நேராமல் வாடுதடி நெஞ்சு!
  
30.
வங்கக் கவிக்கடலே! மங்கையிவள் தாள்தொட்டே
அங்கம் குளிர்ந்தனையோ? யானறியேன்! - பொங்குதமிழ்
பாடி அகங்குளிர்ந்தேன்! மார்கழிப் பாவையை
நாடி நலமடைந்தேன் நான்!
  
நுாற்பயன்
  
காதல் சுவைபாயும்! கன்னல் கவிபூக்கும்!
ஓதல் பணிசிறக்கும்! உள்ளுவக்கும்! - மாதவமாம்
மார்கழி மாண்பொளிரும்! வாயாரப் பாடியே
சீர்வழி காண்பீர் செழித்து!
  
பாட்டரசர் கி. பாரதிதாசன்
கம்பன் கழகம் பிரான்சு
தொல்காப்பியர் கழகம் பிரான்சு
29.12.2019

samedi 4 janvier 2020

காலை வெண்பா


திருவள்ளுவர் ஆண்டு 2049 மார்கழி 19
04.01.2020
  
நல்லார் உறவின் நலந்தருவாய்! பாட்டுலகின்
வல்லார் உறவின் வலந்தருவாய்! - செல்லுமிடம்
வெற்றிப் புகழை விளைத்திடுவாய்! நற்றமிழே!
பற்றி யளிப்பாய் பயன்!
  
நாடோங்கும் தொண்டளிப்பாய்! நன்னெறியை என்னெஞ்சக்
கூடோங்கும் வண்ணம் குவித்தளிப்பாய்! - ஏடோங்கும்
நற்புலமை நல்கிடுவாய்! நற்றமிழே! நல்லவையுள்
சொற்பெருமை ஈவாய் சுடர்ந்து!
  
நின்னைச் சரணடைந்தேன் நீடு தமிழ்மொழியே!
பொன்னை நிகர்த்த புகழளிப்பாய்! - முன்னை
இலக்கணத்தை முற்றும் எடுத்துரைப்பாய்! என்றன்
தலைக்கனத்தை முற்றும் தகர்த்து!
  
நீரலையாய் ஓங்கும் நினைவலைகள்! வான்தவழும்
காரலையாய் ஓங்கும் கவியலைகள்! - தாரழகே!
சீரலையாய் ஓங்கும் செழுந்தமிழே! உன்னருளால்
பேரலையாய் ஓங்கும் பெயர்!
  
பாட்டரசர் கி. பாரதிதாசன்
நிறுவுநர்
கம்பன் கழகம் பிரான்சு
தொல்காப்பியர் கழகம் பிரான்சு