Affichage des articles dont le libellé est கலிய. Afficher tous les articles
Affichage des articles dont le libellé est கலிய. Afficher tous les articles

samedi 2 novembre 2024

கலித்தாழிசை - 1

 


கலிப்மேடை - 58

கலித்தாழிசை - 1

 

அடியெனைத் தாகியும் ஒத்துவந் தளவினில்

கடையடி மிகுவது கலித்தா ழிசையே

[யாப்பருங்கல விரித்தி – 87]

 

அடிவரையறை சீர்வரையறை இன்றிக் கடையடி நீண்டு வருவது கலித்தாழிசையாகும். ஒரு பொருண்மேல் மூன்றாய் வருவனவற்றைக் கலியொத்தாழிசை என்றும், ஒன்றாயும் இரண்டாயும் மூன்றின் மிக்கும், மூன்றாய்ப் பொருள் வேறாயும் வருவனவற்றைக் கலித்தாழிசை என்றும் பெயர் வேறுபடுத்திச் சொல்வாரும் உளர்.

 

கலித்தாழிசை என்ற பெயரே இப்பாடலை இசைப்பா என உணர்த்தும். அடி வரையறை இல்லாமல் இரண்டடி முதல் எத்தனை அடிகளாலும் இப்பாடல் அமையும். ஓரடியில் எத்தனைச் சீர்களும் வரலாம் [நான்கு சீரடிகளே முன்னோர் இலக்கியங்களில் பெரும்பான்மையாக வந்துள்ளன] ஈற்றடி மற்ற அடிகளை விட ஒரு சீர் முதல் பல சீர்கள் மிகுந்து வரும். [ஈற்றடி முன்னடிகளை விட இரட்டிப்பாய் அமைந்த பாடல்களே இலக்கியங்களில் பெரும்பான்மை] மற்ற அடிகள் அளவொத்தும் வரும். அளவொவ்வாமலும் வரும். இறுதியடியின் முற்பாதியும் பிற்பாதியும் இறுதிப் பகுதியில் மடக்காக வரும். இடையடிகிளில் முற்பகுதிகள் மடக்காக வருதலும் உண்டு. வெண்டளையாலும் பிறதளையாலும் இப்பாடல் அமையும்.

 

ஈற்றடி மிக்கு ஏனையடி ஒத்து வருவன எல்லாம் சிறப்புடையக் கலித்தாழிசை எனவும், ஈற்றடி மிக்கு  ஏனையடி ஒவ்வாது வருவன எல்லாம் சிறப்பில்லாக் கலித்தாழிசை எனவும் கூறப்படும்.

 

சிறப்புடைய கலியொத்தாழிசை, சிறப்பில்லாத கலியொத்தாழிசை, சிறப்புடைய கலித்தாழிசை, சிறப்பில்லாத கலித்தாழிசை என்னும் இவற்றைச் சிறப்புடைய தளை ஏழு, சிறப்பில்லாத தளை ஏழு என்ற பதினான்கோடு உறழக் கலித்தாழிசை விரி ஐம்பத்தாறாகும்.

 

கலித்தாழிசை – 1

 

வெண்டளையால் வந்த கலித்தாழிசை

 

பெரியவனை மாயவனைப் பேருலகம் எல்லாம்

விரிகமல உந்தியுடை விண்ணவனைக் கண்ணும்

திருவடியும் கையும் திருவாயும் செய்ய

கரியவனைக் காணாத கண்ணென்ன கண்ணே !

……கண்ணிமைத்துக் காண்பார்தம் கண்ணென்ன கண்ணே !

[சிலப்பதிகாரம் ஆய்ச்சியர் குரவை]

 

தேகம் உருகுதடி! தென்றல் கொதிக்குதடி!

தாகம் பெருகுதடி! தாக்கி வதைக்குதடி!

காகம் கரையுதடி! காலை விடிவதுமேன்?  

மோக உணவூட்டும் மூக்கென்ன மூக்கோ?

……முட்டி யெனைச்சாய்க்கும் மூக்கென்ன மூக்கோ?

[பாட்டரசர்]

 

இது வெண்டளையால் அமைந்த நாலடிப் பாடல்தான். நான்காமடி மற்ற அடிகளைவிட நீண்டிருப்பதால் நடுவில் துணித்து ஐந்தாம் அடிபோல் அமைக்கப்பட்டுள்ளது.  

 

முதல் மூன்றடிகளும் நான்கு சீர்களைப் பெற்றன. நான்காமடி எண்சீர்களைக் கொண்டது. நான்கடியும் ஓரெதுகை பெற்றுவரும். நாலாமடியின்  முதற்சீருக்கு ஏற்ற மோனை ஐந்தாம் சீரில்வரும். முன்னுள்ள மூன்றடிகளில் ஒன்று மூன்றாம் சீர்களில் மோனை வரும்.   இறுதியடியின் முற்பாதியின் இறுதிச்சீர்க்கும் பிற்பாதியின் முதற்சீர்க்கும் வெண்டளை கட்டாயமில்லை. [கண்ணே – கண்ணிமைத்து]

 

இறுதியடியின் முற்பாதியும் பிற்பாதியும் இறுதிப் பகுதியில் மடக்காக வரும். [கண்ணென்ன கண்ணே] 

 

விரும்பிய பொருளில் இவ்வகைக் கலித்தாழிசை ஒன்று பாடுபாடு அன்புடன் வேண்டுகிறேன.

 

இலக்கணக்குறிப்பு

 

அடியெனைத் தாகியும் ஒத்துவந்து அளவினில்

கடையடி மிகுவது கலித்தா ழிசையும்

 

[இலக்கண விளக்கம் – 739]

 

அந்தடி மிக்குப் பலசில வாயடி

தந்தமில் ஒன்றிய தாழிசை யாகும்

 

[காக்கை பாடினியார்]

 

அந்தம் அடிமிக்கு அல்லா அடியே

தந்தமுள் ஒப்பன கலித்தா ழிசையே

 

[சிறுகாக்கை பாடினியார்]

 

ஈற்றடி  மிக்களவு ஒத்தன வாகிப்

பலவும் சிலவும் அடியாய் வரினே

கலிப்பா இனத்துத் தாழிசை யாகும்

 

[அவிநயம்]

 

அடிபல ஆகியும் கடையடி சீர்மிகின்

கடிவரை இல்லை கலித்தா ழிசையே

 

[மயேச்சுரம்]

 

அடிவரை யின்றி அளவொத்து அந்தடி நீண்டிசைப்பின்

கடிதலில் லாக்கலித் தாழிசை யாகும்

 

[யாப்பருங்கலக் காரிகை – 34]

 

ஈரடி யாதி எனைத்தடி யானும்வந்து ஈற்றில்நின்ற

ஓரடி நீளின் கலித்தாழிசை

 

[வீர சோழியம்]

 

கலித்தா ழிசையே கடையடி மிக்குமற்று

அடியெனைத் தாகியும் அளவொத்து ஒவ்வாது

ஒருமூன்று அடுக்கியும் ஒன்றுமாய் வருமே

 

[தொன்னுால் விளக்கம் – 245]

 

இரண்டடி யாய்ஈற்றடி நீண்டு இசைப்பது

கலித்தா ழிசையெக் கருதப் பாடுமே

 

ஒருபொருள் மேல்மூன் றடுக்கி யிரண்டடி

யாக வருவஃது அதன்சிறப் பாகும்

 

[முத்துவீரியம் – 48, 49]

 

பாட்டரசர் கி. பாரதிதாசன்

தலைவர்

கம்பன் கழகம் பிரான்சு

தொல்காப்பியர் கழகம் பிரான்சு

உலகத் தமிழ்ச் சிறகம்

பாவலர் பயிலங்கம்

01.11.2024