mercredi 30 avril 2014

கண்ணதாசன் - பகுதி 6

   நானும், கவியரசரின் மைந்தா் அண்ணாதுரை கண்ணதாசனும்
                 கண்ணதாசன் விழா 26.04.2014

           கவிதைத் தலைவன்

26.
மத்துவத்தின் வழியாந்தார்! மற்றும் உள்ள
           மார்க்கத்தின் நெறியாந்தார்! விளக்கம் கண்டார்!
தத்துவத்தின் முத்தெடுத்துத் தந்த பாக்கள்
           தர்மத்தின் அரணாகக் காவல் காக்கும்!
சத்தியத்தின் புகழ்பெற்ற காந்தி அண்ணல்
           சாந்தியத்தின் அகமேற்ற அருமைப் புத்தர்
வித்துவத்தின் ஒளியேற்றி விற்றி ருக்கும்
           வியன்நெஞ்சர் கவியரசர் கண்ண தாசர்!

27.
சீருண்டு! சிறப்புண்டு! செழிப்பும் உண்டு!
           சிந்தனையோ சிறகடித்துப் பறப்ப(து) உண்டு!
பேருண்டு! பெருமையுண்டு! பெரியோர் போற்றிப்
           பேணுகின்ற பேறுண்டு! புகழ்த்தாய் நல்கும்
தாருண்டு! கொடியுண்டு! தமிழ்த்தாய் தந்த
           தேருண்டு! தேனுண்டு! செல்வம் உண்டு!
காருண்ட குழலழகில் காதல் பொங்கிக்
           கவிபாடும் கவியரசர் கண்ண தாசர்!

28.
விண்தூதர் இறையேசு புகழைப் போற்றி
           விளைத்துள்ள காவியத்தைப் படித்தால் போதும்
பண்தூதர் எனும்பெரைப் பாரில் பற்றிப்
           பாவலர்கள் பயனுறுவார்! அன்பை ஊட்டும்
மண்தூதர் ஆற்றுகின்ற கடமை யாக
           மகிழ்வூட்டும் மாண்புகளை வாரித் தந்த
தண்தூதர்! தமிழ்த்தூதர்! ஈடே இல்லாக்
           கவித்தூதர் கவியரசர் கண்ண தாசர்!

29.
பழனியப்பா! பழனியப்பா! ஞானச் செல்வப்
           பழனியப்பா! இசைத்தபுகழ்ப் பாடல் கேட்டேன்!
குழவியப்பா என்றினிக்கும் சொற்கள் கூட்டிக்
           கொஞ்சுதமிழ் உரிமையினைக் கோரும் ஓளவை!
கழகமப்பா என்றெண்ணிக் கவிஞர் கூட்டம்
           கவிக்கலையைக் கற்றொளிரக் காதல் கொள்ளும்!
வழக்கமப்பா எந்நாளும் அவர்..பா ஓதல்!
           வாழ்வளிக்கும் கவியரசர் கண்ண தாசர்!

30.
செவிநுகரும் உரைசெல்வம் வாரித் தந்தார்!
           சீருலவும் வாழ்வுபெற வழிகள் சொன்னார்!
புவிநுகரும் வண்ணத்தில் வாழ்ந்த வாழ்வைப்
           புகழ்வாச நூலிரண்டில் புனைந்து வைத்தார்!
அவிநுகரும் தேவருக்கும் ஆசை மேவும்
           அருந்தமிழின் சுவைநுகர ஆக்கம் செய்தார்!
கவிநுகரும் சொன்மணக்கக் கருத்தைக் பாடிக்
           கனிந்தளித்த கவியரசர் கண்ண தாசர்!

தொடரும்

mardi 29 avril 2014

கண்ணதாசன் - பகுதி 5




கவிதைத் தலைவன்

21.
நடிப்பென்னும் நற்கலையின் சிகர மாக
           நன்குயர்ந்த சிவாசியும், மக்கள் நெஞ்சத்
துடிப்பென்னும் வண்ணத்தில் கவர்ந்து நின்ற
           துணிவுடைய நம்.எம்.சி. ஆரும், ஆடை
பிடிப்பென்னும் வண்ணத்தில் மகிழ்ச்சி கொள்ளப்
           பிறந்தகவி அத்தனையும் காலம் வெல்லும்!
வெடிப்பென்னும் பெருந்துயரில் வீழ்ந்த போதும்
           விரைந்தெழும் கவியரசர் கண்ண தாசர்!

22.
ஆண்டியிடம் ஓடிருக்கும்! அதுவும் இன்றி
           அரசாண்ட பெருந்தலைவர் காம ராசர்!
வேண்டிவரும் உறவுகளாய் இருந்த போதும்
           விளைத்தநெறி மாறாமல் பணிகள் செய்தார்!
தோண்டிதரும் குளிர்நீராய் ஆட்சி கண்டார்!
           தூயவரின் தொண்டுளத்தைக் கண்டு பாடித்
தாண்டிவரும் விளையாட்டாய்த் தமிழில் சந்தம்
           தாங்கிவரும் கவியரசர் கண்ண தாசர்!

23.
கால்பிடித்தே வாக்கெய்தும் உலகம்! ஆட்சிக்
           கட்டில்மேல் அடிமையெனக் கிடக்கும்! உண்மைக்
கோல்பிடித்தே எழுதுகின்ற கவிதை மன்னர்
           கீழ்விழுந்து வணங்குவதை மறுத்து விட்டார்!
வால்பிடித்தே வாழுவதும் வாழ்க்கை யாமோ?
           கோள்முடித்தே வாழுவதும் மேன்மை யாமோ?
பால்குடித்தே வளர்கின்ற குழந்தை போன்று
           பாக்குடித்தார் கவியரசர் கண்ண தாசர்!

24.
வேல்பிடித்துப் போராடும் மறவர் போன்றும்
           சால்பிடித்து நீர்பாய்ச்சும் உழவர் போன்றும்
சேல்பிடித்து விழியிரண்டில் கொண்ட பெண்கள்
           நூல்படித்து வாழ்வுபெற உழைத்தோர் போன்றும்
ஆல்பிடித்துத் தாங்குகிற விழுதைப் போன்றும்
           மேல்படித்துப் பயன்கொடுக்கும் மேலோர் போன்றும்
மால்பிடித்து மனம்பதித்த ஆழ்வார் போன்றும்
           வாழ்வளித்த கவியரசர் கண்ண தாசர்!

25.
கோலமெனும் சொல்லுக்குச் சான்றாய் மின்னும்
           கொஞ்சுதமிழ் மாண்புரைத்தார்! மகிழ்வ ளித்தார்!
ஆலமெனும் வேலமெனும் வன்மை கொண்ட
           அருந்தமிழில் அமுதேந்தும் பாக்கள் ஈந்தார்!
காலமெனும் ஆழியினைப் புயலாய் வீசும்
           காற்றுமழை ஊழியினை வென்று வாழ்ந்தார்!
ஞாலமெனும் புவிப்பந்து வணங்கி வாழ்த்தும்
           நல்லதமிழ்க் கவியரசர் கண்ண தாசர்

தொடரும் 

dimanche 27 avril 2014

கண்ணதாசன் - பகுதி 4



கவிதைத் தலைவன்

16.
வாழ்நிலையை வரலாறை வடிவாய்த் தீட்டி
           வருகின்ற தலைமுறைக்கு வைத்தார்! பொல்லாச்
பாழ்நிலையை உருவாக்கும் தீயோர் தம்மின்
           பல்லுடைத்துப் பறந்தோடச் செய்தார்! நம்மின்
ஊழ்நிலையை உணர்ந்திட்டால் துன்பம் இல்லை!
           உறவியலை உளங்கொண்டால் பகையே இல்லை!
சூழ்நிலையை எதிர்கொண்டு துணிந்து நின்று
           தொடர்ந்துழைத்த கவியரசர் கண்ண தாசர்!

17.
ஆசைவரை ஆனவரை பாக்கள் பாடி
           அமுதொத்த தமிழ்மொழியைப் பரவச் செய்தார்!
பூசைவரை நாமிட்டுப் போற்றிப் பாடப்
           பொற்கண்ணன் புகழ்புனைந்தார்! சுப்பன், சுல்தான்,
சூசைவரை உயிர்கலந்தே சுவைக்கும் பாவால்
           சூழ்ந்துள்ள துயர்துடைத்தார்! முன்னோர் கண்ட
ஓசைவரை நிற்காமல் மேலும் மேலும்
           உருகொடுத்தார் கவியரசர் கண்ண தாசர்!

18.
பாட்டெழுதப் பயில்வோரின் கையே(டு) ஆனார்!
           பகைவா்களும் பணிகின்ற மெய்யே(டு) ஆனார்!
சீட்டெழுதும் பாரதிபோல் சிறந்தோர் வாழ்வின்
           சீரெழுதும் கவியானார்! உலகை எய்த்துத்
தீட்டெழுதும் கொடுமைகளைத் தீய்க்க வேண்டிக்
           செங்களத்தில் போராடும் மறவர் ஆனார்!
கேட்டெழுதும் சந்தங்கள் கொட்டித் தந்த
           கெழுமைமிகு கவியரசர் கண்ண தாசர்!

19.
கூட்டெழுதும் வன்மையென அணிகள் தம்மைக்
           குவித்தெழுதும் திறனுடையார்! முன்னே மெட்டுப்
போட்டெழுதும் களத்தினிலே ஈடே இன்றிப்
           புகுந்தாடும் மறமுடையார்! பழமை தன்னை
மீட்டெழுதும் மதியுடையார்! பாடும் பாட்டில்
           விரைந்தோடும் நதியுடையார்! நெருப்பாய்க் கோபம்
மூட்டெழுதும் பொழுதினிலே முனிவர் ஆனார்!
           முதுமொழியார் கவியரசர் கண்ண தாசர்!

20.
எத்திக்காய்ச் சென்றாலும் அமுதை ஊட்டும்
           அத்திக்காய்ப் பாட்டொலிக்கும்! வாழ்வை வெல்லும்
சத்துக்காய்ப் படைத்தகவி! புலமை மின்னும்
           சான்றுக்காய்க் கிடைத்தகவி! பாடும் நுட்ப
உத்திக்காய் உவப்புக்காய் உதித்த பாக்கள்
           உறவுக்காய் உயர்வுக்காய் நெறிகள் ஓதும்!
சொத்துக்காய் உலகோடும்! தமிழ்த்தாய் வாழும்
           சொத்தானார் கவியரசர் கண்ண தாசர்!

தொடரும்

samedi 26 avril 2014

கண்ணதாசன் - பகுதி 3




கவிதைத் தலைவன்

11.
அன்றுள்ள அரசியலார் நாட்டை எய்க
           அணிந்திருந்த முகத்திரையைக் கிழித்தார்! நம்முன்
நன்றுள்ள அரசியலார் யார்?யார்? என்று
           நன்குணர்ந்து அவர்பெருமை மொழிந்தார்! மண்ணில்
நின்றுள்ள இந்துமத மேன்மை மின்ன
           நிலைத்தொளிரும் புகழ்நூல்கள் நெய்தார்! ஆசை
வென்றுள்ள ஞானியர்போல் நெற்றிப் பட்டை!
           மின்னறிவுக் கவியரசர் கண்ண தாசர்!

12.
ஏடெடுத்தால் ஓடிவரும் எண்ணம் கோடி!
           இசைகொடுத்தால் பாடிவரும் வண்ணம் கோடி!
நீடெழுத்தால் தேடிவரும் மேன்மை கோடி!
           நிறையெழுத்தால் நாடிவரும் இன்பம் கோடி!
ஓடெடுத்தால் ஒளிர்ந்துவரும் ஞானம் கோடி!
           உயிர்செழிக்க அணிந்திட்ட சீர்கள் கோடி!
ஈடெடுத்தால் இத்தரையில் யாரும் இன்றி
           இருப்பவரே கவியரசர் கண்ண தாசர்!

13.
மண்போனால் போகட்டும்! இன்பம் தந்த
           பெண்போனால் போகட்டும்! கல்வி கற்கும்
கண்போனால் போகட்டும்! காத்த செல்வம்
           கரைந்துருகிப் போகட்டும்! உடலை விட்டு
விண்போனால் புரிந்துவிடும்! வாழ்வில் செய்த
           வினையிரண்டும் தொடர்ந்துவரும்! செவிக்குள் இந்தப்
பண்போனால் படைத்தவனும் சொக்கிப் போவான்!
           பார்போற்றும் கவியரசர் கண்ண தாசர்!

14.
கவிக்கலையை நமக்கூட்டும் பாடச் சாலை!
           கற்பனையின் எல்லைகளை நெய்யும் ஆலை!
புவிக்கலையைக் கற்றவரும், பொன்னாய் மின்னும்
           புகழ்க்கலையைப் பெற்றவரும் உலவும் சோலை!
சுவைக்கலையைச் சுகக்கலையை ஆண்ட மன்னர்
           சுடர்க்கவியைச் சூடிடுமே சான்றோர் மூளை!
தவக்கலையை உற்றவரும் வணங்கிப் போற்றும்
           தமிழ்க்கலையே கவியரசர் கண்ண தாசர்!

15.
கந்தையென ஆனதுணிக் கதையைச் சொல்லும்
           கமழ்கும்மிக் கவிதந்தார்! தென்னை கொண்ட
மொந்தையெனச் சொல்லெல்லாம் மதுவை ஏந்தி
           முப்பொழுதும் போதைதரும் பாக்கள் தந்தார்!
விந்தையெனச் சீர்சூடும்! சிந்தைக் குள்ளே
           வெல்லுதமிழ்த் தேர்ஓடும்! சிந்துக் கிங்குத்
தந்தையெனப் பாரதியைக் கொண்டோம்! ஈடில்
           தலைமகனார் கவியரசர் கண்ண தாசர்!

தொடரும்