Affichage des articles dont le libellé est எழுசீர் விருத்தம். Afficher tous les articles
Affichage des articles dont le libellé est எழுசீர் விருத்தம். Afficher tous les articles

dimanche 13 septembre 2020

விருத்த மேடை

 

 
எழுசீர் விருத்தம் - 7
  
நெடிலீற்று மா + நேரசையில் தொடங்கும் சீர் + மற்றச் சீர்கள் வெண்டளையில் அமையும்.
  
தேனே, கரும்பே இவ்விரு சொற்களும் நெடிலெழுத்தை ஈற்றாக உடைய மாச்சீர்கள். இவை நெடிலீற்று மா எனப்படும். [மின்னேர் என்ற சொல்லில் ஈற்றில் வரும் நெடிலொற்றும் நெடிலீற்று மாவாகக் கொள்ளவேண்டும்]
  
தன்னே ராயிரம் பிள்ளைக ளோடு
   தளர்நடை யிட்டு வருவான்,
பொன்னேய் நெய்யொடு பாலமு துண்டொரு
   புள்ளுவன் பொய்யே தவழும்
மின்னேர் நுண்ணிடை வஞ்ச மகள்கொங்கை
   துஞ்சவாய் வைத்த பிரானே!
அன்னே! உன்னை யறிந்துகொண் டேன்உனக்
   கஞ்சுவன் அம்மம் தரவே!
  
[பெரியாழ்வார் திருமொழி மூன்றாம் பத்து -1]
  
இவ்விருத்தம் நேரசையில் தொடங்கினால் 19 எழுத்துக்களைப் பெறும். நிரையசையில் தொடங்கினால் 20 எழுத்துக்களைப் பெறும்.
  
முதல் சீர் நெடிலீற்று மா வரவேண்டும். இரண்டாம் சீர் நேரசையில் தொடங்க வேண்டும் [நேரொன்றிய ஆசிரியத்தளை அங்கு அமைய வேண்டும்] அதை அடுத்து ஏழாம் சீர்வரை வெண்டளை பயின்று வரவேண்டும் [கூவிளங்காய், கருவிளங்காய் ஆகிய இருசீர்கள் இவ்விருத்தத்தில் வருவதில்லை] ஏழாம் சீர் மாச்சீராக அமையும்.
  
மெல்லத் தெரிந்துசொல் [பாரதியின் புதிய ஆத்திசூடி]
  
நன்றே சொல்க! நயமுறும் வண்ணம்
   நலமுறும் வண்ணம் தெளிந்து!
இன்றே சொல்க! இனமொழி ஓங்கும்
   எழில்வகை பற்றுடன் ஆய்ந்து!
வென்றே சொல்க! வியன்றமிழ் மேன்மையை
   மேதினி கேட்க மகிழ்ந்து!
சென்றே சொல்க! செழும்புகழ் மேடையில்
   சீர்களை மெல்ல அளந்து!
  
[பாட்டரரசர் கி. பாரதிதாசன்]
    
ஆத்திசூடி நுாலில் உள்ள ஓரடியைத் தலைப்பாகக் கொண்டு இவ்வகை எழுசீர் விருத்தம் ஒன்று இயற்றுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.
   
ஆய்வுரை
  
இவ்விருத்தம் அடியின் முதலிரு சீர்கள் நேரொன்றிய ஆசிரியத்தளையைப் பெற்றாலும், நெடிலை ஈற்றாக உடைய முதல்சீர் அளபெடுத்துக் காய்ச்சீராக ஒலிக்கும். முதல்சீர் அளபெடுப்பதால் அடி முழுமையும் வெண்டளை அமையும்.
  
நன்றேஎ சொல்க! நயமுறும் வண்ணம்
   நலமுறும் வண்ணம் தெளிந்து!
இன்றேஎ சொல்க! இனமொழி ஓங்கும்
   எழில்வகை பற்றுடன் ஆய்ந்து!
வென்றேஎ சொல்க! வியன்றமிழ் மேன்மையை
   மேதினி கேட்க மகிழ்ந்து!
சென்றேஎ சொல்க! செழும்புகழ் மேடையில்
   சீர்களை மெல்ல அளந்து!
           
அன்புடன்
பாட்டரசர் கி. பாரதிதாசன்
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்
13.08.2020

samedi 29 août 2020

விருத்த மேடை - 41 

விருத்த மேடை - 41
  
எழுசீர் விருத்தம் - 4
வெண்டளையால் அமைந்து
  
மன்னு பெரும்புகழ் மாதவன் மாமணி
   வண்ணன் மணிமுடி மைந்தன்
தன்னை, உகந்தது காரண மாகஎன்
   சங்கிழக் கும்வழக் குண்டே,
புன்னை குருக்கத்தி ஞாழல் செருந்திப்
   பொதும்பினில் வாழும் குயிலே!
பன்னியெப் போது மிருந்து விரைந்தென்
   பவளவா யன்வரக் கூவாய்!
  
[ஆண்டாள், நாச்சியார் திருமொழி - 51]
    
மிடிமையில் அழிந்திடேல் [பாரதியின் புதிய ஆத்திசூடி]
  
வறுமை வளர்ந்து வதைத்த பொழுதும்
   வழியை மதியால் வடிப்பாய்!
சிறுமை மனத்தோர் சிரித்த பொழுதும்
   செயல்களை நன்றே முடிப்பாய்!
பொறுமைக் குணமும் புதுமை மனமும்
   புனைந்து புகழைப் படைப்பாய்!
வெறுமை யகற்றி நறுமை புதுக்கி
   வினைகளை வென்று நடப்பாய்!
  
[பாட்டரசர் கி. பாரதிதாசன்]
  
இந்த எழுசீர் விருத்தம் இயற்சீர் வெண்டளையால் அமைந்துள்ளது. தேமாங்காயும் புளிமாங்காயும் அருகி வரும். ஆண்டாள் பாடலில் [குருக்கத்தி - புளிமாங்காய் வந்துள்ளது] நான்கடிகளும் ஓரெதுகை பெறவேண்டும். ஒன்று, ஐந்தாம் சீர்களில் மோனை அமைய வேண்டும். ஒவ்வோர் அடியின் ஈற்றுச்சீர் மாச்சீராக அமையும். அடியின் ஈற்றிலிருந்து அடுத்த அடியின் தொடக்கத்திற்கு வெண்டளை பார்க்க வேண்டியதில்லை. நேரசையில் தொடங்கினால் 20 எழுத்துக்களும் நிரையசையில் தொடங்கினால் 21 எழுத்துக்களும் பெற்றுவரும்.
  
ஆத்திசூடி நுாலில் உள்ள ஓரடியைத் தலைப்பாகக் கொண்டு இவ்வகை எழுசீர் விருத்தம் ஒன்று இயற்றுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.
           
அன்புடன்
பாட்டரசர் கி. பாரதிதாசன்
கம்பன் கழகம் பிரான்சு
தொல்காப்பியர் கழகம் பிரான்சு
22.08.2020

விருத்த மேடை - 40   



விருத்த மேடை - 40
  
எழுசீர் விருத்தம் - 3
  
மா + மா + மா + மா
மா + மா + மா
  
கள்ளுந் தேனும் மொழுகுங் குவளைக்
   கமழ்பூ நெரித்து வாங்கிக்
கிள்ளை வளைவா யுகிரிற் கிள்ளித்
   திலகந் திகழப் பொறித்துத்
தெள்ளும் மணிசெய் சுண்ணம் மிலங்கத்
   திருநீர் நுதலின் னப்பி
உள்ளம் பருகி மதா்த்த வாட்கண்
   உருவம் மையிற் புனைந்தாள்
  
[சீவக சிந்தாமணி, இலக்கணையாரிலம்பகம் - 62]
  
மானம் போற்று! [பாரதியின் புதிய ஆத்திசூடி]
  
உண்ணும் உணவும் உடுத்தும் உடையும்
   உடலைக் காக்கும்! நம்மின்
கண்ணும் கையும் கருணை கமழக்
   கவலை போக்கும்! சிந்தை
எண்ணும் எண்ணம் ஏந்தும் மானம்
   இன்பம் பூக்கும்! அமுதப்
பண்ணும் பாட்டும் பகரும் தமிழே
   பண்பைச் சேர்க்கும்! தோழா!
  
[பாட்டரசர் கி. பாரதிதாசன்]
  
மேற்கண்ட பாடலில் ஒவ்வோரடியிலும் ஏழுமாச்சீர்கள் அமைந்துள்ளன. இவ்வாறு நான்கடிகளும் அமைய வேண்டும். நான்கடிகளும் ஓரெதுகை பெறவேண்டும். ஒன்று, ஐந்தாம் சீர்களில் மோனை அமைய வேண்டும்.
  
ஆத்திசூடி நுாலில் உள்ள ஓரடியைத் தலைப்பாகக் கொண்டு இவ்வகை எழுசீர் விருத்தம் ஒன்று இயற்றுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.
           
அன்புடன்
பாட்டரசர் கி. பாரதிதாசன்
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்
15.08.2020

vendredi 28 août 2020

விருத்த மேடை - 39

விருத்த மேடை - 39
  
எழுசீர் விருத்தம் - 2
  
விளம் + விளம்+ விளம் + மா
விளம் + விளம் + மா
  
சீரணி திகழ்திரு மார்பில்வெண் ணுாலர்
   திரிபுரம் எரிசெய்த செல்வர்!
வாரணி வனமுலை மங்கையோர் பங்கர்!
   மான்மறி ஏந்திய மைந்தர்!
காரணி மணிதிகழ் மிடறுடை அண்ணல்
   கண்ணுதல் விண்ணவர் ஏத்தும்
பாரணி திகழ்தரு நான்மறை யாளர்
   பாம்புர நன்னக ராரே!
  
[திருஞான சம்பந்தர் தேவாரம் - 437]
  
போர்த்தொழில் பழகு! [பாரதியின் புதிய ஆத்திசூடி]
  
பாரெழில் காத்திடப் படையெழில் போற்று!
   பாரதி பாக்களைச் சாற்று!
பேரெழில் நம்மொழி! பிறப்பெழில் ஓது!
   பெருந்தமிழ் மொழிக்கிணை யேது?
காரெழில் பொழிலெனக் கவியெழில் ஓங்கும்!
   கல்வியே கண்ணெழில் தாங்கும்!
சீரெழில் பூத்திடும் போர்த்தொழில் காப்பு!
   திண்ணுரம் செழித்திடும் தோப்பு!
  
[பாட்டரசர் கி. பாரதிதாசன்]
  
மேற்கண்ட பாடலில் ஒவ்வோரடியிலும் ஏழுசீர்கள் உள்ளன. விளம் + விளம் + விளம் + மா + விளம் + விளம் + மா என்ற வாய்பாட்டில் அமைந்துள்ளன. இவ்வாறு நான்கடிகளும் அமைய வேண்டும். நான்கடிகளும் ஓரெதுகை பெறவேண்டும். ஒன்று, ஐந்தாம் சீர்களில் மோனை அமைய வேண்டும். விளச்சீர் வருமிடங்களில் அருகி மாங்காய்ச்சீர் வருவதுண்டு. [மேலுள்ள விருத்தத்தில் மார்பில்வெண், எரிசெய்த என மாங்காய்ச்சீர்கள் வந்தன]
  
ஆத்திசூடி நுாலில் உள்ள ஓரடியைத் தலைப்பாகக் கொண்டு இவ்வகை எழுசீர் விருத்தம் ஒன்று இயற்றுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.
          
அன்புடன்
பாட்டரசர் கி. பாரதிதாசன்
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்
08.08.2020

விருத்த மேடை - 38

விருத்த மேடை - 38
  
எழுசீர் விருத்தம் - 1
  
விளம் + மா + விளம் + மா
விளம் + விளம் + மா
  
அன்னமும் மீனும் ஆமையும் அரியும்
   ஆயஎம் மாயனே அருளாய்
என்னுமின் தொண்டர்க் கின்னருள் புரியும்
   இடவெந்தை யெந்தை பிரானை
மன்னுமா மாட மங்கையர் தலைவன்
   மானவேல் கலியன்வா யொலிகள்
பன்னிய பனுவல் பாடுவார் நாளும்
   பழவினை பற்றறுப் பாரே!
  
[பெரிய திருமொழி 2-8-10. திருமங்கையாழ்வார்]
  
பெரிதினும் பெரிதுகேள் [பாரதியின் புதிய ஆத்திசூடி]
  
ஓங்கிய வண்ணம் உயர்வுறும் எண்ணம்
   உனக்கிணை யிலையெனும் வாழ்வு!
தாங்கிய கொள்கை தரணியை யாளத்
   தனிப்பெரும் புகழொளிர் மாட்சி!
வீங்கிய மறமும் விரிகதிர் அறமும்
   விளைந்திட வெற்றிமேல் வெற்றி!
ஏங்கிய நிலையேன்? என்னுயிர்த் தோழா!
   ஏறிடும் படிநிலை காண்க!
  
[பாட்டரசர் கி. பாரதிதாசன்]
  
மேற்கண்ட பாடலில் ஒவ்வோரடியிலும் ஏழுசீர்கள் உள்ளன. விளம் + மா + விளம் + மா + விளம் + விளம் + மா என்ற வாய்பாட்டில் அமைந்துள்ளன. இவ்வாறு நான்கடிகளும் அமைய வேண்டும். நான்கடிகளும் ஓரெதுகை பெறவேண்டும். ஒன்று, ஐந்தாம் சீர்களில் மோனை அமைய வேண்டும். விளச்சீர் வருமிடங்களில் அருகி மாங்காய்ச்சீர் வருவதுண்டு.
  
ஆத்திசூடி நுாலில் உள்ள ஓரடியைத் தலைப்பாகக் கொண்டு இவ்வகை எழுசீர் விருத்தம் ஒன்று இயற்றுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.
           
அன்புடன்
பாட்டரசர் கி. பாரதிதாசன்
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்
24.07.2020