Affichage des articles dont le libellé est பாரதியார். Afficher tous les articles
Affichage des articles dont le libellé est பாரதியார். Afficher tous les articles

mercredi 12 décembre 2012

மகாகவி பாரதியார் [பகுதி - 2]



பாட்டுக்கோர் புலவன் பாரதி


போதிமரத் தத்துவங்கள் வெறுமை யாமோ?
            புகழ்மிக்க ஏசுவழி சிறுமை யாமோ?
காதிதனைக் கண்டமகான் கொள்கை யாவும்
            காற்றினிலே பறக்கின்ற பட்ட மாமோ?
சாதிமத சமயமெலாம் நமைப்பி ரிக்கத்
            தந்நலத்தார் செய்தசதி வேலை யாகும்!
ஆதியிலே இல்லாத கொடுமை தன்னை
            அழிக்கின்ற வெடிமருந்தாம் உன்றன் பாட்டே!

கலப்படங்கள் உன்கண்ணில் பட்ட துண்டோ?
            கடைகளிலே விலைப்பட்டி இருந்த துண்டோ?
புலப்படாக் கொலைகொள்ளை நடந்த துண்டோ?
            பொய்சூது கொடிகட்டிப் பறந்த துண்டோ?
நிலத்திற்கும், நீருக்கும், மின்னொ ளிக்கும்
            நெடிதுயரு கின்றவரி போட்ட துண்டோ?
வலுத்தார்க்கு வரிபோட்டு, வகையற் றார்க்கு
            வரிவிலக்குச் செயமீண்டும் வரமாட் டாயா?

கண்ணொத்த செந்தமிழில் கவிகள் தந்த
            கவிக்கோவே! நீவடித்த வைரப் பாட்டால்
'பெண்ணடிமை செய்யாதீர்! மாதர் தம்மைப்
            பேரிழிவு பண்ணாதீர்!' என்று சொன்னாய்!
புண்ணுற்ற நெஞ்சத்தார் கேட்டா ரில்லை
            புவியிலவர் திருந்தும்நாள் எந்த நாளோ?
விண்ணொத்த விiடுதலையை வேண்டி நின்ற
            வீரமிகு பாரதியே மீண்டும் வா!வா!

ஆரோடும் அச்சமின்றிப் பேச வேண்டும்!
            அருளோடும் அன்புமழை வீச வேண்டும்!
ஏரோடும் மேதினியில் இன்பம் பொங்கும்!
            இணையில்லாச் செல்வங்கள் அங்கே தங்கும்!
சீரோடும் உழவினது பெருமை சொன்னாய்!
            தெருவெல்லாம் தொழில்பெருக முழக்கம் செய்தாய்!
போராடும் சிங்கமென வீரம் கொண்ட
            புரட்சிமிகு பாரதியே வெற்றி கண்டாய்!

முற்போக்குக் கொள்கைதனை வாழ்வில் கொண்ட
            முத்தமிழின் பாவலனே! உன்னைக் கண்டு
பிற்போக்கு மனத்தார்கள் வெட்கிப் போனார்!
            பிரிவினையார் பேசுதலை மறந்தே விட்டார்!
தற்போது பாரதந்தான் தலைநி மிர்ந்து
            தன்னிறைவு பெற்றதுன்றன் ஆசி யாலே!
பொற்புடைய செந்தமிழை உயிராய்க் காத்த
            புரட்சிப்பா மணியேஉன் நற்பேர் வாழ்க!

மகாகவி பாரதியார் [பகுதி - 1]



பாட்டுக்கோர் புலவன் பாரதி

வானூரும் நிலவிற்குத் தடையும் உண்டோ? 
            மண்ணூரும் புழுவினிலே அடிமை உண்டோ?
தேனூறும் சொல்லெடுத்தே உரிமைத் தீயைத்
            திக்கெட்டும் பாரதியே ஏற்றி வைத்தாய்!
பாநூறு படைத்தாலும் உன்பாப் போன்று
            பழுதின்றிப் பாவலர்கள் படைக்கப் போமோ?
நானூறி உன்பாட்டில் திளைத்த தாலே
            நயமூறப் பாடுதற்குக் கற்றுக் கொண்டேன்!

பூட்டுத்தான் போட்டுநமைப் பூட்டி னாற்போல்
            புகுந்திட்ட அன்னியர்கள் அடைத்தே ஆண்டார்!
நாட்டின்மேல் பற்றுனக்கே இருந்த தாலே
            நரிமனத்துப் பரங்கியரை எதிர்த்து நின்றாய்!
ஏட்டினிலே விடுதலையை எழுதி வைத்தே
            ஏற்றமிகு சுதந்திரத்தை அறியச் செய்தாய்!
பாட்டுக்கோர் புலவனெனப் பட்டம் பெற்ற
            பாரதியே உனைஎன்றும் மறக்கி லேனே!

'ஆசைக்கே அளவில்லை' அதுபோல் உன்னை
            ஆட்கொண்ட புகழுக்கோ எல்லை யில்லை!
மீசைக்கே அழகூட்டி நின்ற வேந்தே!
            விடுதலைக்குச் சொல்லெண்ணாத் துன்பம் ஏற்றாய்!
தாசிக்கே கொடுப்பதற்கும், தண்ணீர் போலத்
            தாம்குடிக்கும் மதுவிற்கும் செலவ ழிப்பார்!
காசுக்கே விலைபோகும் கயவ ராலே
            கற்கண்டாம் சுதந்திரமும் கசக்கு தய்யா!

'எல்லாரும் எல்லாமே பெறுதல்' என்னும்
            இனிதான கருத்துக்குச் சொந்த மானாய்!
இல்லாரே இல்லாத நாடாய் மாற
            எழிற்பாக்கள் வடித்துப்பா வேந்த னானாய்!
கல்லாமை அடியோடு மறைந்து போகக்
            கல்விதனை வளர்த்திடவே கனவு கண்டாய்!
பொல்லாத தீண்டாமை வேறு பாட்டைப்
            புவியெங்கும் தடைசெய்த புலவன் நீயே!

காட்டினிலே வாழுகின்ற மிருகம் கூடக்
            கண்டவுடன் பகைதனையே எதிர்க்கும்! சின்ன
கூட்டினிலே வதிகின்ற பறவை கூடக்
            குஞ்சுகளை நன்முறையில் வளர்க்கும்! ஆனால்
நாட்டினிலே வசிக்கின்ற தமிழன் மட்டும்
            நற்றமிழைக் காத்திடவே மறந்த தேனோ?
பாட்டினிலே மொழிப்பற்றை ஊட்டி வைத்த
            பாரதத்தாய் பெற்றெடுத்த அறிஞன் நீயே!

dimanche 18 novembre 2012

பாரதி இன்று வந்தால்




பாரதி இன்று வந்தால்...

கொளுத்தும் விழிகள்! கவியமுதைக்
     கொடுக்கும் திருவாய்! புவியழுக்கை
வெளுக்கும் சிந்தை! புரட்சியினை
     விளைக்கும் சொற்கள்! தமிழ்த்தேரைச்
செலுத்தும் கைகள்! சிந்துப்பா
     செழிக்கும் உள்ளம்! பாரதியே
மளுக்கு மளுக்(கு) என்றெதிரிகளை
     ஒடிக்கும் வன்மை பெற்றவனே!

திம்திம் என்று ஒலிக்கிறது!
     திசைகள் நான்கும் தமிழ்வாசம்!
நம்..நம்.. என்றே என்னரம்பு
     நன்றே ஊறிப் புடைக்கிறது!
கும்..கும்.. இருட்டு அகன்றோட
     குதித்தே ஆடும் பாரதியே
பும்..பும்.. மாட்டு மாந்தர்களைப்
     பொசுக்க மீண்டும் வந்தனையோ!

அடியேன் வணக்கம்! அனுப்பிய,மின்
     அஞ்சல் படித்து மகிழ்ந்தாயா?
விடியேன் என்று விழுந்துள்ள
     வினையை அறிந்து துடித்தாயா?
கொடிஏன்? கொள்கை ஏன்?என்று
     குனியும் வாழ்வு! கொதித்தாயா?
முடியேன் என்று மூலையிலே
     முடங்கும் நெஞ்சம் உயா்ந்திடுமோ?

எல்லோ ரும்இந் நாட்டுடைய
     மன்னர் என்று மொழிந்திட்டாய்!
எல்லோ ரும்பேர் தலைவரானார்!
     எங்கும் சங்கம்! தொண்டனில்லை!
அல்லா! கிருத்து! சிவாவென்றே
     அழகாய்த் தமிழர் பிரிந்தள்ளார்!
உள்ளம் கொதிக்கும் பாரதியே
     உலகில் தமிழன் உயர்வானோ?

அச்சம் இல்லை! இல்லையென
     அதிரும் வண்ணம் அரைந்திட்டாய்!
மெச்சும் வாழ்க்கை அடிவருடி
     விழுந்து கிடந்தால் கிடைத்திடுமோ?
பச்சைத் தமிழன் பதவிபெறப்
     பணிந்து உரிமை இழப்பதுவோ?
எச்சம் இவனைத் துச்சமென
     எரிப்பாய் மீண்டும் பாரதியே!

ஒன்று பட்டால் வாழ்வுண்டு!
     என்று தமிழர் உணர்வாரோ?
அன்று தொடங்கி இன்றுவரை
     அடிமை வாழ்வு! தமிழினத்தை
நின்று காக்க நம்பெரியார்
     நெடிது உழைத்தார்! விழித்தோமா?
நன்று! தீது பிரித்துணரும்
     ஞானம் அளிப்பாய் பாரதியே!

பாப்பா பாட்டில் சாதியெலாம்
     இல்லை! இல்லை! எனப்பகர்ந்தாய்!
பூப்பா பாடி நெறிசொன்னாய்!
     புவியில் நீதி கற்றோர்கள்
தாட்..பூட போட்டுத் தம்சாதி
     தகவாய் வளர்க்கக் காண்கின்றேன்!
கேட்பார் இல்லை! பிறப்பொக்கும்
     கீர்த்தி உரைப்பாய் பாரதியே!

பட்டம் சூட்டி, நலந்தரும்
     சட்டம் தீட்டிப் பெண்ணுயரத்
திட்டம் போட்டு வழிவகுத்தாய்!
     தீராக் கொல்நோய் ஒழிந்ததுபோல்
வட்டம் உடைத்தே உயர்வாழ்வை
     வகுத்தார் பெண்கள்! தமிழ்ப்பண்பை
முற்றும் மறந்த நிலையேனோ?
     சற்றே சாற்றித் திருத்துகவே!

தன்னின் நலமே எண்ணுபவர்
     தமிழின் நலத்தை நினைப்பாரோ?
கண்ணின் பார்வை, தெளிந்தொளிரும்
     கருத்தின் பார்வை செலும்வரையில்
எண்ணிப் பார்த்தேன்! இன்றமிழை
     ஏந்திக் காப்பார் உள்ளாரோ?
என்னின் உயிரே! பாரதியே!
     ஏனோ உனைப்போல் எனைச்செய்தாய்!

இமய உச்சித் தலைப்பாகை!
     பரிதி எழும்பும் மலைப்புருவம்!
அமைந்த மீசை நம்பகையை
     அழிக்க எடுத்த இருவாள்கள்!
எமையிங் கிணைந்த பொய்யர்யார்?
     இன்பத் தமிழின் மெய்யர்யார்?
உமையின் மைந்தா! பாரதியே!
     உண்மை உரைத்த(து) உன்வரவே!

mardi 23 octobre 2012

பாரதியார் திருத்தசாங்கம்





 

மகாகவி பாரதியார் திருத்தசாங்கம்

பெயர்

கொஞ்சும் இளங்கிளியே கூறிடுவாய் அன்னியனும்
அஞ்சி நடுங்கிட்ட அன்னோன்பேர் - கொஞ்சுதமிழ்
விஞ்சுபுகழ் வித்தகனாம்! வீரமிகு பாரதியாம்!
நெஞ்சில் எழுந்த நிலவு!

நாடு

சின்ன எழில்நாராய்! சிந்தனைச் சிற்பியின்
இன்பத் திருநாட்டை இங்கேசொல்? - மன்பதையில்;
தன்னிகரே இல்லாத் தமிழகமாம்! நீஅதனைப்
பொன்னெனவே போற்றிப் புகழ்!

நகர்

பச்சைப் பசுங்குருகே! பாட்டால் பகைவர்மேல்
எச்சில் உமிழ்ந்தவன் எவ்வூரோ? - மெச்சுபுகழ்
கட்டபொம்மன் ஆண்ட களமதுவே! கீர்த்திமிகும்
எட்டபுரம் என்றே இயம்பு!

ஆறு

வண்ண மலரின்மேல் வாழும் வரிவண்டே,
அண்ணல் குளித்தநல் ஆறெதுவாம்? - கண்ணனைய
முத்தமிழ் ஆறென முன்மொழிவார், பாரதியின்
புத்தமுதப் பாக்களைப் போற்று!

மலை

மன்னன்தான் கொண்ட மலையென்ன? தாமரையில்
துன்னும் அனமேநீ சொல்லுகவே - இன்சுவை
கண்டின் கவிநயமும் கம்பன்போல் ஓவியச்சொல்
கொண்டான் மலையெனவே கூறு!

ஊர்தி

கூடும் மடமையைக் கொன்றவன் ஊர்தியை
ஆடும் மயிலே அறைந்திடுவாய் - பீடுதனைச்
சாடும் தலைவனின் தூயதமிழ்த் தேராகம்
பாடும் குயிலதுவாம் பார்!

படை

நாவலம் மிக்கநல் நங்கையீர் நம்முயிர்ப்
பாவலன் போர்ப்படையைப் பாடுகவே - காவலனாய்ச்
செந்தமிழின் சீர்காத்த பாவேந்தன் தன்வழி
வந்த படைஎனவே வாழ்த்து!

முரசு

கண்ணான காதலனைக் கண்டாய் கருங்குயிலே
பொன்னான மாமுரசைப் போற்றுகவே! - மண்ணிலுள்ள
சாதி ஒழியத் தகுந்தபா சாற்றியவன்
நீதி முரசாம் நிலத்து!

தார்

சீர்பாடும் தேன்சிட்டே, செந்தமிழ் வேந்தனின்
தார்பாட மாட்டாயோ தண்டமிழில், - பார்போற்றப்
பாமாலை ஆம்அதுவே, பாரில் பகுத்தறிவுப்
பூமாலை கொண்டான் புகழ்!

கொடி

பாட்டுக் கொருபுலவன் பாரதி கண்டகொடி
நாட்டில் எதுமுகிலே நன்கோது - கூட்டும்மூ
வண்ணக் கொடியதன் மத்தியில் சக்கரம்
நண்ணப் பொருத்தியது நாடு!