Affichage des articles dont le libellé est பல்லவி. Afficher tous les articles
Affichage des articles dont le libellé est பல்லவி. Afficher tous les articles

samedi 29 août 2020

சிந்துப்பா மேடை - 13

சிந்துப்பா மேடை - 13
  
பல்லவி - 2
  
திரையிசையில் மலர்ந்த சிறப்புடைய பல்லவியை எடுத்துக்காட்டாகக் கொண்டு பல்லவியைப் பாடுவோம்.
  
சிலையெடுத் தான்ஒரு சின்ன பெண்ணுக்கு!
கலைகொடுத் தான்அவள் வண்ணக் கண்ணுக்கு!
    
[கவியரசர் கண்ணதாசன், சர்வர் சுந்தரம்]
  
சிலையெடுத்தான், கலைகொடுத்தான் என்று தலையாகு எதுகையைப் பெற்றுள்ளது.
  
தான்ஒரு, தான்அவள் இரண்டாம் சீரும் எதுகை பெற்றது.
  
சின்ன, வண்ண என முன்றாம் சீரும் எதுகை பெற்று ஓசை ஒன்றி வந்தது.
  
பெண்ணுக்கு, கண்ணுக்கு என இயைபு அமைந்தது.
  
[சிலை - சின்ன] [கலை - கண்ணுக்கு] மோனை பெற்றது.
  
பண்கொடி மின்னிடப் பாடிப் படைத்தேன்!
தண்கொடி பின்னிடத் தாடி அடைத்..தேன்!
  
[பாட்டரசர்]
  
விரும்பிய பொருளில் இவ்வாறு ஒரு பல்லவி பாடுக.
  
பாட்டரசர் கி. பாரதிதாசன்
கம்பன் கழகம் பிரான்சு
தொல்காப்பியர் கழகம் பிரான்சு
பாலவர் பயிலரங்கம் பிரான்சு
28.08.2020

சிந்துப்பா மேடை - 12

சிந்துப்பா மேடை - 12
  
பல்லவி
  
திரையிசையில் மலர்ந்த சிறப்புடைய பல்லவியை எடுத்துக்காட்டாகக் கொண்டு பல்லவியைப் பாடுவோம்.
  
தரைமேல் பிறக்க வைத்தான். - எங்களைத்
தண்ணீரில் பிழைக்க வைத்தான் ...
கரைமேல் இருக்க வைத்தான். - பெண்களைக்
கண்ணீரில் குளிக்க வைத்தான் ...
  
[கவிஞர் வாலி, படகோட்டி]
  
மேலுள்ள பல்லவிபோல் திரையிசையில் மிக மிக அரிதாகவே பல்லவிகள் மலர்ந்துள்ளன.
  
தரைமேல் முதல் பிழைக்க வைத்தான் வரை ஓரடி. கரைமேல் முதல் குளிக்க வைத்தான் வரை மற்றோரடி. தரைமேல் கரைமேல் எனத் தலையாகு எதுகை பெற்று வந்தது.
  
ஒவ்வோர் அடியும் ஐந்தாம் சீர் மேனை பெற்றுள்ளது [தரை, தண்ணீர்] - [கரை,கண்ணீர்]
  
ஒவ்வோர் அரையடியும் வைத்தான் என்று இயைபு பெற்றது.
  
இரண்டடியிலும் ஐந்தாம் சீர்கள் தலையாகு எதுகையைப் பெற்றுள்ளன. [தண்ணீரில் கண்ணீரில்]
  
நான்கு அரையடிகளிலும் இரண்டாம் சீர்கள் ஓசையால் இயைபுபோல் ஒன்றுகின்றன.[ பிறக்க, பிழைக்க, இருக்க, குளிக்க]
    
தனிச்சொல்கள் ஐகாரம் பெற்று ஓசையால் ஒன்றிவந்தன [எங்களை, பெண்களை]  
  
கண்களைக் காட்டு கின்றாள் - மோதல்
கத்தியைத் தீட்டு கின்றாள்!
பண்களை மீட்டு கின்றாள் - காதல்
பக்தியைக் கூட்டு கின்றாள்!
  
வாட்டிடும் அன்ன நடையாள் - இன்பம்
வடித்திடும் சின்ன இடையாள்!
மூட்டிடும் பின்ன லுடையாள் - துன்பம்
முடித்திடும் கன்ன லடையாள்!
  
[பாட்டரசர்]
  
விரும்பிய பொருளில் இவ்வாறு ஒரு பல்லவி பாடுக.
  
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்
கம்பன் கழகம் பிரான்சு
தொல்காப்பியர் கழகம் பிரான்சு
20.08.2020