Affichage des articles dont le libellé est குறள் வெண் செந்துறை. Afficher tous les articles
Affichage des articles dont le libellé est குறள் வெண் செந்துறை. Afficher tous les articles

jeudi 5 novembre 2015

குறள் வெண்செந்துறை!



குறள் வெண்செந்துறை!

1.
பன்மொழி கற்றுப் பயனறும் வாழ்வு
தன்மொழி இலையேல் துன்னிழி வெய்தும்!

2.
ஊழ்வகை என்றே உட்கார்ந் திருந்தால்
வாழ்வகை யாவும் வற்றிப் போகும்!

3.
என்னிறை ஒன்றே ஏற்றம் என்று
வன்னிறை கொண்டால் மண்ணிறை மாயும்!

4.
அன்பின் சிறந்த அரும்பொருள் உலகில்
என்றும் இலையென நன்றே உணர்க!

5.
தாய்மை உலகைத் தாங்கும் சக்தி!
வாய்மை உயிருள் ஓங்கும் சக்தி!

6.
ஆல்போல் தழைக்கும்! அறுகாய்ச் செழிக்கும்!
பால்போல் தூய்மை படைத்த மனமே!

7.
உன்னுள் அறங்கள் ஓங்கி ஒளிர்ந்தால்
பொன்னுள் மணியாய்ப் பொலியும் வாழ்வே!

8.
ஊக்கம் உன்றன் உறவெனக் கொண்டால்
ஆக்கம் உன்றன் அடிதொழும் என்பேன்!

9.
ஒழுக்கம் உன்றன் உயிரெனக் கொண்டால்
அழுத்தும் துயரம் அடியோ டோடும்!  

10.
விண்ணொளி போன்று விரிநிலை யுற்றுப்
பண்ணொளி மின்னும் பைந்தமிழ் மொழியே!

இலக்கண விளக்கம்!

ஓரடியில் நான்கு சீர்கள் முதல் எத்தனைச் சீர்கள் வேண்டுமானாலும் வரலாம்.

மற்றோர் அடியும் அதே அளவு அமைந்திருக்க வேண்டும்.

இரண்டடியும் ஓரெதுகை பெற்றிருக்க வேண்டும்

நாற்சீரடியாயின் 1, 3 ஆம் சீர்களில் மோனை அமைய வேண்டும்.

சீர்களுக்கள் எந்தத் தளையும், எவ்வகைச் சீரும் வரலாம்.

குறள் வெண் செந்துறை விழுமிய பொருளும் ஒழுகிய ஓசையும் பெற்றிருக்க வேண்டம். இவ்வாறு இரண்டடியாய்த் தம்முள் அளவொத்து வருவதை வெண்செந்துறை என்று கூறுவர். இதற்கு வெள்ளைச் செந்துறை என்றும் பெயருண்டு.

03.11.2015