dimanche 28 juin 2015

வாணிதாசன் - பகுதி 2



வாணிதாசன் பாடல்களில் 
(புரட்சி - எழுச்சி - மலர்ச்சி - மகிழ்ச்சி)

தலைமைக் கவிதை

வாணிதாசன் பாடல்களில் புரட்சி

அடிமையுறும் நாட்டின்கண் புரட்சி தோன்றும்
     அறிவோங்கும் அறிஞர்கண் புரட்சி ஓங்கும்!
குடிமையுறும் துன்பத்தைப் பார்த்துப் பார்த்துக்
     குமுறுகின்ற புலவன்கண் புரட்சி ஆடும்!
மிடிமையுறும் வாழ்வுதனை மீட்க வேண்டி
     வினையாற்றும் வீரன்கண் புரட்சி துள்ளும்!
விடிவைதரும் கவியேறு வாணி தாசர்
     விளைத்திட்ட நூல்களிலே புரட்சி மின்னும்!

சீர்திருத்தம் புரட்சியினால் செம்மை சேரும்!
     சிந்தனையின் புரட்சியினால் மடமை சாகும்!
பார்திருத்தம் பெற்றிடவே எதிர்த்து நின்று
     படைநடத்தும் புரட்சியினால் பசுமை பூக்கும்!
பேர்திருத்தம் வேண்டுமெனக் கொள்கை பூண்டு
     பெயர்திருத்தப் புரட்சியினால் தமிழே ஆளும்!
ஊர்திருத்தம் அடைந்திடவே வாணி தாசர்
     உரைத்ததமிழ் கவிநடையின் புரட்சி என்பேன்!

வாணிதாசன் பாடல்களில் எழுச்சி

அறிவுக்குள் எழவேண்டும் எழுச்சி! நம்மின்
     ஆன்மாவும் பெறவேண்டும் எழுச்சி! உண்மைச்
செறிவுக்குத் தடைபோட்டே அடிமை யாக்கும்
     செயலொழிக்க வரவேண்டும எழுச்சி! ஓங்கும்
அறத்திற்குத் திரைபோடும் சாதிப் பேயை
     அழித்திடவே உறவேண்டும் எழுச்சி! வாழ்வின்
திறத்திற்கும் செயலுக்கும் வாணி தாசர்
     எழுதிவைத்த எழுத்தெல்லாம் எழுச்சி யென்பேன்!

விடுதலைக்குப் பாடுவதும் எழுச்சி! பெண்ணின்
     விலங்குடைத்தே உயர்த்துவதும் எழுச்சி! பாவப்
படுகொலைக்கு நிகராக வினைகள் ஆற்றும்
     பதவியரை அகற்றுவதும் எழுச்சி! என்றும்
கெடுதலைக்கு வழிகாட்டும் பழமை மாய்க்கக்
     கிளர்ந்தோங்கும் போராட்டம் எழுச்சி! வன்மை
மடு..கரைக்கு வேண்டும்!நாம் தீட்டும் வண்ண
     மதுக்கவிக்கு வேண்டும்நல் எழுச்சி யென்பேன்!

வாணிதாசன் பாடல்களில் மலர்ச்சி

புல்வெளியும் பூங்கொடியும் மலர்ச்சி காட்டும்!
     புன்னகையும் புகழ்அணியும் மலர்ச்சி ஊட்டும்!
நல்லொளியும் நன்னடையும் நன்றே பெற்றால்
     நம்முயிரும் ஞானத்தின் மலர்ச்சி சூட்டும்!
சொல்லொளிரச் சுவையொளிரத் தீட்டும் பாடல்
     தொன்மைமிகு செந்தமிழின் மலர்ச்சி மீட்டும்!
மல்லொளிர மாண்பொளிர வாணி தாசர்
     வடித்திட்ட வண்டமிழோ மலர்ச்சி காடு!

பருவத்தின் மலர்ச்சியிலே அழகு கூடும்!
     படித்தோங்கும் மலர்ச்சியிலே அறிவு சேரும்!
உருவத்தின் வளர்ச்சியைப்போல் உள்ளத் துள்ளே
     உண்டாகும் வளர்ச்சியிலே வாழ்க்கை ஓங்கும்!
அருவத்தின் நிலையுணர்ந்து புத்தன் சொன்ன
     அறிநெறியின் மலர்ச்சியிலே அகிலம் வாழும்!
கருவத்தின் துகளின்றி வாணி தாசர்
     கவியாவும் தமிழ்காணும் மலர்ச்சி யாகும்!

வாணிதாசன் பாடல்களில் மகிழ்ச்சி!

ஒழுக்கமுடன் வாழுவதே மகிழ்ச்சி! என்றும்
     ஒற்றுமையாய்த் திகழுவதே மகிழ்ச்சி! வேண்டித்
தொழுவதுடன் நற்பணிகள் நன்றே செய்து
     நலிந்தோரை உயர்த்துவதே மகிழ்ச்சி! வன்மை
அழுத்தமுடன் இருக்காமல் அன்பைச் சூடி
     ஆனந்தம் பாடுவதே மகிழ்ச்சி! நன்றே
பழுத்தவுடன் கமழ்கின்ற கனிகள் போன்று
     பசுந்தமிழில் பா..படைத்தல் மகிழ்ச்சி யென்பேன்!

மயிலாட்டம் மகிழ்ச்சியாகும்! இனிமை கொஞ்சும்
     மழலைமொழி மகிழ்ச்சியாகும்! கூவும் சின்னக்
குயிற்கூட்டம் மகிழ்ச்சியாகும்! கண்ணன் கொண்ட
     குழலோசை மகிழ்ச்சியாகும்! ஓங்கும் வண்ணம்
உயிர்கூட்டம் ஊட்டுகின்ற குறளின் பாதை
     ஒப்பில்லா மகிழ்ச்சியாகும்! உழவன் காக்கும்
பயிர்காட்டும் பசுமையென வாணி தாசர்
     பாடிவைத்த நூல்யாவும் மகிழ்ச்சி யாகும்!

தொடரும்
 

jeudi 18 juin 2015

வாணிதாசன் - பகுதி 1



வாணிதாசன் பாடல்களில்
(புரட்சி - எழுச்சி - மலர்ச்சி - மகிழ்ச்சி)


தலைமைக் கவிதை

தமிழ் வணக்கம்


அருள்பொங்கும்! அறம்பொங்கும்! அன்பும் பொங்கும்!
     அடுப்பின்மேல் பால்பொங்கும்! அறிவும் பொங்கும்!
பொருள்பொங்கும்! புனல்பொங்கும்! காதல் வீசும்
     புன்னகையில் மனம்பொங்கும்! வஞ்சம் என்னும்
இருட்பொங்கும் இடத்தினிலே இழிவே பொங்கும்!
     இந்நாட்டில் மதுபொங்கும்! மகிழ்வு பொங்கும்!
பொருட்பொங்கும் வண்ணத்தில் புலமை பொங்கப்
     புகழ்பொங்கும் பூந்தமிழே விரைந்து வாராய்!

இறை வணக்கம்

சீர்பொங்கும் திருவரங்கா! இந்த மன்றில்
     பேர்பொங்கும் வண்ணத்தில் பெருமை சேர்ப்பாய்!
கார்பொங்கும் மழையாகக் கவிதை பொங்கிக்
     கரம்பொங்கும் பேரொளியை முழங்கச் செய்வாய்!
போர்பொங்கும் வேகமெனச் சொற்கள் வேண்டும்!
     போர்..அடிக்கச் செய்யாத புலமை வேண்டும்!
பார்பொங்கும் இனிமையினை என்றன் பாட்டில்
     படைத்திடவே பரம்பொருளே பறந்து வாராய்!

அவையடக்கம்

பெண்ணுக்கும் பொன்னுக்கும் அடங்குவார் உள்ளார்!
     பொருளுக்கும் புகழுக்கும் அடங்குவார் உள்ளார்!
எண்ணுக்கும் எழுத்துக்கும் அடங்குவார் உள்ளார்!
     ஏறுகின்ற முதுமைக்கே அடங்குவார் உள்ளார்!
மண்ணுக்கும் மாண்புக்கும் அடங்குவார் உள்ளார்!
     மதுவுக்கும் மகிழ்வுக்கும் அடங்குவார் உள்ளார்!
பண்ணுக்கும் பாட்டுக்கும் அடங்கி நிற்கும்
     பாட்டரங்க அவையோர்முன் அடங்கு கின்றேன்!

புலவர் . கலியபெருமாள்

கவியேறு மருமகனார்! கவிதை வாணர்!
     கால்தொட்டு வணங்குகிறேன்! தமிழால் இந்தப்
புவியேறும் வண்ணத்தில் பாக்கள் தீட்டும்
     புலமையினை வணங்குகிறேன்! புலவோர் தம்மின்
செவியேறும் வண்ணத்தில் சொற்போர் ஆற்றும்
     செம்மையினை வணங்குகிறேன்! இந்த மேடை
சுவையேறும் என்றெண்ணித் தலைமை தந்தார்
     சுரக்கின்ற அன்பேந்தி வணங்கு கின்றேன்!

இவ்வூரில் இனியதமிழ்ப் பணிகள் ஆற்றும்
     ஈடில்லா நெடுமாறன் வாழ்க! வாழ்வில்
எவ்வூரில் இருந்தாலும் தமிழை எண்ணி
     இயக்கமுறும் பிரபுராம் வாழ்க! செல்வச்
செவ்வூரில் வாழ்ந்தாலும் தமிழர் சீரைச்
     செப்புகின்ற இம்மன்ற அன்பர் வாழ்க!
சவ்வூறி என்கவியைக் கேட்டு நிற்கும்
     சான்றோர்கள் ஆன்றோர்கள் வாழ்க! வாழ்க!!

கவியேறு வாணிதாசனார்!

புதுவைக்குப் புகழ்கொடுத்த வாணி தாசர்!
     புதுமைக்குத் தோள்கொடுத்த வாணி தாசர்!
பொதுமைக்குக் குரல்கொடுத்த வாணி தாசர்!
     புரட்சிக்கு உளங்கொடுத்த வாணி தாசர்!
எதுகைக்கும் மோனைக்கும் எழிலைக் கோர்த்தே
     இணையில்லா நூல்கொடுத்த வாணி தாசர்!
மதுவுக்கும் போதைவரச் சந்தம் சிந்து
     வகைபடைத்து வளங்கொடுத்த வாணி தாசர்!

பாவேந்தர் உடனிருந்து பணிகள் செய்த
     பாட்டாளி! பண்பாளி! இனத்தைக் காக்க
நாவேந்தர் பலரோடு நட்பு கொண்டு
     நடைபோட்ட போராளி! சங்கம் காத்த
மூவேந்தர் அவையினிலே முன்னே நின்ற
     முதுநெறியார் போல்வாழ்ந்த நற்சீ ராளி!
பூவேந்திப் புகழேந்திப் போற்று கின்றேன்
     பொங்குதமிழ்க் கவியாழி வாணி தாசர்!

புன்னைமரம் பூத்திருக்கும்! புறாவின் கூட்டம்
     பொய்யின்றிக் கலந்திருக்கும்! கலத்து மேடு
தன்னைமறந்(து) இசைபடிக்கும்! வானம் பாடி
     தமிழறிந்து கவிவடிக்கும்! மீன்கள் துள்ளும்!
அன்னைமனம் தாலாட்டும்! அல்லி முல்லை
     அழகூட்டும்! அமுதூட்டும்! எந்த நாளும்
என்னைமறந்(து) இசைக்கின்றேன்! கவிஞ ரேறின்
     எழில்விருத்த நூலுக்கே இணையும் உண்டோ?

வயல்வரப்பை வான்வெளியைக் கவியில் தீட்டி
     வன்கம்பன் தமிழ்போன்றே இனிமை தந்தார்!
உயிர்ப்பரப்பை நன்றாக உற்று நோக்கி
     உவமையுடன் கவிபொழிந்தார்! மரபைக் காத்தார்!
குயிலழகை, மயிலழகைக் குழைத்துத் தந்து
     குடிப்புகுந்தார் நம்மனத்துள்! இயற்கை தந்த
உயர்விரிப்பை உளத்துடிப்பாய்ப் பாடி வைத்த
     ஒப்பில்லாக் கவியேறு வாணி தாசர்!

தென்னாட்டுத் தாகூர்என்று இயம்பு கின்றேன்!
     தேன்தமிழின் புதையலென மகிழு கின்றேன்!
என்..நாட்டுக் கவிஞர்களின் இதயக் கூட்டில்
     இனியதமிழ் இசைத்தவரை ஏத்து கின்றேன்!
பன்னாட்டுப் பாவலரும் வியந்து நிற்க
     படைப்பாற்றல் பெற்றவரைப் போற்று கின்றேன்!
பொன்னேட்டுக் கவியேறு வாணி தாசர்!
     புவியினிலே இயற்கையெழில் புனைந்த நேசர்!

[தொடரும்]