jeudi 30 août 2018

வெண்பா மேடை - 119


வெண்பா மேடை - 119
  
முதலும் ஈறும் ஒன்றும் வெண்பா!
  
வெண்பாவின் தொடக்கமும் முடிவும் ஒன்றாக வரும் வண்ணம் பாடப்படுவது முதலீறு ஒன்றும் வெண்பாவாகும். இது நான்கு வகையாகும். 1. எழுத்தொன்றிப் பொருளும் ஒன்றாக வருவது. 2. எழுத்தொன்றிப் பொருள் வேறு வேறாய் வருவது. 3. சொல்லொன்றிப் பொருளும் ஒன்றாக வருவது, 4. சொல்லொன்றிப் பொருள் வேறு வேறாய் வருவது.
  
1.
முதலீறு எழுத்தும் பொருளும் ஒன்றிய வெண்பா.
  
வாவென்[று] அழைத்தவுடன் வந்தவளின் பேழரகை
மாவென்றும், மின்னும் மணியென்றும், - காவென்றும்,
எண்ணமுறும் இன்பென்றும் ஏந்திக் கவிபாட
வண்ணமுறும் வண்டமிழே வா!
  
2.
முதலீறு எழுத்து ஒன்றிப் பொருள் மாறி வந்த வெண்பா!
  
வாரணிந்த பேரழகே! வண்டுவிழிச் செண்டழகே!
காரணிந்த கூந்தல் கமழழகே! - சீரணிந்த
தேனழகே! வண்ணச் சிரிப்பழகே! எல்லையிலா
வானழகே! என்னருகே வா!

புத்தமுதே! பொன்னழகே! போற்றும் புலவனென்
சத்தமுதே! தண்டமிழ் சாற்றமுதே! - முத்தே!
கொழித்தோங்கச் செய்வாய்! குலமோங்கும் வண்ணம்
செழித்தோங்கச் செய்வாய் சிறப்பு!
  
3.
முதலீறு சொல்லும் பொருளும் ஒன்றிய வெண்பா.
  
வண்டு மலராடும்! வாசப் பொழிற்சுற்றும்!
செண்டு தருகின்ற தேனுண்ணும்! - பெண்ணழகே!
துாயமொழி கொண்டவளே! தொல்லை புரிவதுமேன்?
மாயவிழி வாழ்ந்திடும் வண்டு!
  
4.
முதலீறு சொல்லொன்றிப் பொருள் மாறி வந்த வெண்பா!
    
அடியழகு பெண்ணே! அமுதுாறும் கண்ணே!
கொடியழகு மாதே! குயிலே! - பிடித்தே
துடியழகு வாட்டுமடி! துாயதமிழ் பூத்தே
அடியழகு கூட்டு[ம்] அடி!
  
முதலும் ஈறும் ஒன்றும் வெண்பாவை மேற்காட்டிய நான்கு வகையில், நான்கு வெண்பாக்களை விரும்பிய பொருளில் பாடுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.
  
"பாவலர் பயிலரங்கம்" என்ற குழுவில் இணைந்து முதலும் ஈறும் ஒன்றும் வெண்பாவைத் தனிப்பதிவாகப் பதிவிட வேண்டுகிறேன்!
  
அன்புடன்
  
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்:
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்
30.08.2018

mercredi 29 août 2018

வெண்பா மேடை - 118



வெண்பா
மேடை - 118
  
ஒரூஉ வெண்பா
  
கூத்தாள் விழிக[ள்]நெடுங் கூர்வேலாம்! கூத்தாள்தன்
மூத்தாள் விழிகள் முழுநீலம்! - மூத்தாள்தன்
ஆத்தாள் விழிகள் அரவிந்தம்! ஆத்தள்தன்
ஆத்தாள் விழிகளிரண்[டு] அம்பு!
  
[காளமேகம்]
  
இவ்வெண்பா நான்கடிகளும் ஓரெதுகையைப் பெற்று முதல் மூன்றடிகள் ஒரூஉ எதுகை கொண்டுள்ளன. [முதல் சீரும் நான்காம் சீரும் எதுகை பெறுவது ஒரூஉ எதுகையாகும்] மேற்கண்ட வெண்பாவில் எல்லா அடிகளிலும் இரண்டாம் சீரும் ஒரே எதுகையில் அமைந்துள்ளது.
  
சின்னவள் என்பேன்! சிரிக்கின்ற சின்னவள்பேர்
பொன்னவள் என்பேன்! பொழிலென்பேன்! - பொன்னவள்..சீர்த்
தென்னவள் என்பேன்! செழிப்பென்பேன்! தென்னவள்இங்[கு]
என்னவள் என்பேன் இனித்து!
  
பாடுதடி நெஞ்சம்! பகலிரவாய்ப் பாடியே
ஆடுதடி நெஞ்சம்! அருங்கனவில் - ஆடியே
கூடுதடி நெஞ்சம்! குழைந்தழகாய்க் கூடியே
சூடுதடி நெஞ்சம் சுவை!
  
அன்பூட்டும் செல்லமே! ஆசையுற என்நெஞ்சுள்
இன்பூட்டும் செல்லமே! இன்றேனே! - பொன்விழியால்
பண்மீட்டும் செல்லமே! பாட்டரசன் வண்ணமுறப்
பண்பூட்டும் செல்லமே! பார்!
  
[பாட்டரசர் கி. பாரதிதாசன்]
  
இவ்வாறு அமைந்த ஒரூஉ வெண்பா ஒன்றை விரும்பிய பொருளில் பாடுமாறு அன்புடன் வேண்டுகிறேன்
  
"பாவலர் பயிலரங்கம்" என்ற குழுவில் இணைந்து அடி மறி இன்னிசைப் பஃறொடை வெண்பாவைத் தனிப்பதிவாகப் பதிவிட வேண்டுகிறேன்!
  
அன்புடன்
  
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்:
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்
29.08.2018

அன்னைத் தமிழே!



அன்னைத்
தமிழே!
  
1.
அன்னிய சொற்கள் அமுதன்று! பண்பூறும்
அன்னையின் சொற்கள் அமுது!
  
2.
பன்மொழி காத்தல் தகையன்று! பாங்குடன்
தன்மொழி காத்தல் தகை!
  
3.
புயல்மொழி போற்றல் அறிவன்று! யாப்பில்
அயல்மொழி நீக்கல் அறிவு!
  
4.
கற்ற அயல்மொழி காக்கும் உறவன்று!
உற்ற தமிழே உறவு!
  
5.
விண்வேண்டிக் காத்தல் கடனன்று! தாய்மொழியைக்
கண்போன்று காத்தல் கடன்!
  
6.
பொன்னும் பொருளும் அழகன்று! சேய்..காக்கும்
அன்னை மொழியே அழகு!
  
7.
வன்மை படையும் அரணன்று! நம்மொழி
அன்னையே வாழ்வின் அரண்!
  
8.
வண்ண வளமும் வளமன்று! குன்றாத
வண்டமிழே வாழ்வின் வளம்!
  
9.
ஓங்கி இருத்தல் உயர்வன்று! தண்டமிழைத்
தாங்கித் தழைத்தல் உயர்வு!
  
10.
பொற்புடன் போற்றல் பயனன்று! தாய்மொழியைப்
பற்றுடன் போற்றல் பயன்!
  
அன்புடன்
  
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்:
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்
29.08.2018

mardi 28 août 2018

வெண்மேடை - 117


வெண்மேடை - 117
  
இருசீர் ஒன்றும் வெண்பா!
  
மீனோடிப் பாயுதடி! வேல்வந்து தாக்குதடி!
மானோடிப் பாயுதடி! மாயவளே! - நானருந்தத்
தேனோடி பாயுதடி! தென்னவளே! கற்பனைகள்
வானோடிப் பாயுதடி வாய்த்து!
  
மேற்கண்ட வெண்பாவில் நான்கடிகளிலும் முதல் இரண்டு சீர்கள் முதலெழுத்தைத் தவிர மற்ற எழுத்துகள் ஒன்றி வருகின்றன. இவ்வாறு இருசீர் ஒன்றும் வெண்பா ஒன்றை விரும்பிய பொருளில் பாடுமாறு அன்புடன் வேண்டுகிறேன்
  
"பாவலர் பயிலரங்கம்" என்ற குழுவில் இணைந்து அடி மறி இன்னிசைப் பஃறொடை வெண்பாவைத் தனிப்பதிவாகப் பதிவிட வேண்டுகிறேன்!
  
அன்புடன்
  
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்:
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்
28.08.2018

வெண்மேடை - 116

வெண்பா மேடை - 116
    
நான்மணி வெண்பா!
    
கொல்லாமை சாற்றிடுவாய்! கோல நெறிமாறிச்
செல்லாமை போற்றிடுவாய்! செந்தமிழே! - அல்லலுறும்
கல்லாமை நீக்கிடுவாய்! கையூட்டும் ஆட்சியினை
இல்லாமை ஆக்கிடுவாய் இங்கு!
  
[பாட்டரசர் கி. பாரதிதாசன்]
  
ஒரே பாடலில் நான்கு மணியான கருத்துகளை் அமைந்திருக்கும் இந்த வெண்பாவைப்போல் விரும்பிய பொருளில் வெண்பா ஒன்று பாடுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.
  
"பாவலர் பயிலரங்கம்" என்ற குழுவில் இணைந்து வெண்பாவை தனிப்பதிவாகப் பதிவிட வேண்டுகிறேன்!
  
அன்புடன்

பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்:
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்
26.08.2018

samedi 25 août 2018

வெண்பா மேடை - 115


வெண்பா மேடை - 115
  
இரட்டைத் தொடை வெண்பா!
  
நாற்சீரடியால் ஓரடி முடியும் அளவும் ஒரேசீரே நடப்பது இரட்டைத் தொடையாகும். அச்சீர் ஒரே பொருளிலும் வரும். வேறு வேறு பொருளிலும் வரும். ஈற்றுச்சீர் ஒன்று ஓர் எழுத்துக் குறைந்து வரினும் ஒக்கும்.
  
எங்குமே! எங்குமே! எங்குமே! எங்குமே!
பொங்குமே கண்ணன் புகழோசை! - தங்குமே
நெஞ்சுள் நெடுமால் நிறையழகு! பாடுகவே
கொஞ்சும் தமிழைக் குவித்து!
  
'எங்குமே' என்ற சொல் ஒரே பொருளில் அடி ஈற்றுவரை வந்துள்ளது.
  
பஞ்சியே உன்மேனி! பால்சுவையே உன்பார்வை!
பிஞ்சியே மென்விரல்! பித்தேறிக் - கெஞ்சுகிறேன்
வஞ்சியே! வஞ்சியே! வஞ்சியே! வஞ்சியே!
விஞ்சியே ஈவாய் விருந்து!
  
'வஞ்சியே' என்ற சொல் வேறு வேறு பொருளில் வந்தது [பெண், கொடி, பாட்டு, நகர்]
  
கூடுமே மேகம்! குளிருமே நெஞ்சகம்!
ஆடுமே! ஆடுமே! ஆடுமே! - ஆடும்!
மயிலாடும்! காற்றில் மரமாடும்! என்றன்
உயிராடும் பாக்கள் உரைத்து!
  
'ஆடும்' என ஈற்றில் ஓரெழுத்து மாறி வந்தது.
  
ஓரடி, ஒரு முற்றெதுகையாய் மற்றையடி மற்றொரு முற்றெதுகையாய் வரின், அத்தொடையினை, இருமுற்றிரட்டை என்ப. ஒரு சாராரால் நிரல்நிறையும் இரட்டைத் தொடைப்பாற் படுத்து வழங்கப்படும்.
  
கூடுமே இன்பம் குறள்வழியால்! முன்வினை
ஓடுமே! ஓடுமே! ஓடுமே! - ஓடுமே!
உண்மையே! உண்மையே! உண்மையே! உண்மையே!
திண்மையே ஊட்டும் தெளிந்து!
  
இஃது, இருமுற்றிரட்டைத் தொடையால் அமைந்த வெண்பாவாகும்.
  
விரும்பிய பொருளில் 'இரட்டைத் தொடை வெண்பா ' ஒன்றைப் பாடுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.
  
"பாவலர் பயிலரங்கம்" என்ற குழுவில் இணைந்து இரட்டைத் தொடை வெண்பாவைத் தனிப்பதிவாகப் பதிவிட வேண்டுகிறேன்!
  
அன்புடன்
  
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்:
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்ற

vendredi 24 août 2018

வெண்பா மேடை - 112


வெண்பா மேடை - 112
  
வல்லின வெண்பா!
  
கற்புறு காப்புறு! கற்றிடு காத்திடு!
பற்றறு! பொற்புறப் பாடிடு! - பெற்றிடு
சிற்சபை சக்தி! சிறப்புறச் சாற்றிடு
சொற்சபை சக்தி தொகுத்து!
  
[பாட்டரசர் கி. பாரதிதாசன்]
  
இவ்வெண்பா வல்லின எழுத்துக்களை மட்டுமே பெற்றுவரும்.
  
வெண்பா மேடை - 113
  
மெல்லின வெண்பா!
  
மன்னன் மணிநாமம் மாமணம் மன்னுமே!
நன்னன் நனிமேன்மை நண்ணுமே! - மின்னுமே
நுண்மை முனிஞானம்! மண்மானம்! முன்னுமே
நன்மை மனமே! நம!
  
[பாட்டரசர் கி. பாரதிதாசன்]
  
இவ்வெண்பா மெல்லின எழுத்துக்களை மட்டுமே பெற்றுவரும்.
  
வெண்பா மேடை - 114
  
இடையின வெண்பா!
  
வல்லவா! யாழெழில் வாயவா! வேல்விழியை
வெல்ல..வா! வல்லியை யள்ள..வா! - வில்லவா!
வீரா..வா! வாழ்வே..வா! வேலா..வா! வீரிய
வைரா..வா! வேள்வியே வா!
  
[பாட்டரசர் கி. பாரதிதாசன்]
  
இவ்வெண்பா இடையின எழுத்துக்களை மட்டுமே பெற்றுவரும்.
  
விரும்பிய பொருளில் மேற்கண்ட வல்லின வெண்பா ஒன்றும், மெல்லின வெண்பா ஒன்றும் இடையின வெண்பா ஒன்றும் பாடுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.
  
"பாவலர் பயிலரங்கம்" என்ற குழுவில் இணைந்து வெண்பாக்களைத தனிப்பதிவாகப் பதிவிட வேண்டுகிறேன்!
  
அன்புடன்
  
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்:
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்
23.08.2018

வெண்பா மேடை - 111


வெண்பா மேடை - 111
  
ஏழு மண்டிலக் குறள்!
இவ்வகை என்னுடைய உருவாக்கம்
  
1.
மின்றமிழே! வன்றமிழே! மென்றமிழே! என்னுயிரே!
இன்றமிழே இன்பம் இடு!
  
2.
வன்றமிழே! மென்றமிழே! மின்றமிழே! இன்றமிழே!
என்னுயிரே! இன்பம் இடு!
  
3.
மென்றமிழே!என்னுயிரே! இன்றமிழே! வன்றமிழே!
மின்றமிழே! இன்பம் இடு!
  
4.
என்னுயிரே! மென்றமிழே! இன்றமிழே! மின்றமிழே!
வன்றமிழே! இன்பம் இடு!
  
5.
இன்றமிழே! மின்றமிழே! என்னுயிரே! வன்றமிழே!
மென்றமிழே! இன்பம் இடு!
  
6.
இன்பமிடு மின்றமிழே! வன்றமிழே! மென்றமிழே!
இன்றமிழே! என்னுயி ரே!
  
7
மின்றமிழே! வன்றமிழே! இன்றமிழே! என்னுயிரே!
இன்பமிடு மென்றமி ழே!
  
ஏழு மண்டிலம் என்பது ஒரு குறட்பாவில் வந்த ஏழு சீர்களும் இடம் மாறி ஏழு குறட்பாக்களைப் பெறுவதாகும். குறளில் முன்னின்ற ஆறு சீர்களும் முதலடியின் முதற்சீராக வந்தமைய ஆறு குறள்களைப் பெறலாம். குறளின் ஆறாம் சீரும் ஏழாம் சீரும் சேர்ந்து இரண்டாம் அடியின் முதல் சீராக அமைய ஏழாம் குறளைப் பெறலாம்.
  
வல்லினம் மிகும் சொற்கள் இம்மண்டிலத்தில் வாரா! ஏழு மண்டிலக் குறள் வழி எதுகையில் மட்மே அமையும். [வழி எதுகை என்பது அனைத்துச் சீர்களும் ஓரெதுகை பெறுவது] [அனைத்துச் சீர்களிலும் எதுகை அமைவதால் மோனை வரவேண்டி கட்டாயம் இல்லை]
  
விரும்பிய பொருளில் 'ஏழு மண்டிலக் குறள் ' ஒன்றைப் பாடுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.
  
"பாவலர் பயிலரங்கம்" என்ற குழுவில் இணைந்து ஏழு மண்டிலக் குறளைத் தனிப்பதிவாகப் பதிவிட வேண்டுகிறேன்!
  
அன்புடன்
  
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்:
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்
22.08.2018

mardi 21 août 2018

வெண்பா மேடை - 110


வெண்பா மேடை - 110
  
ஐந்து மண்டில வெண்பா
இவ்வகை வெண்பா என்னுடை உருவாக்கம்
  
1.
துாயவனே! சுந்தரனே! தொன்மையனே! தாயவனே!
மாயவனே! வந்தியனே! வன்மையனே! - நேயவனே!
வாமனனே! நீண்டவனே! மாமணியே! சூழ்நலமே!
வாமனமே வாழ்புகழே வார்த்து!
  
2.
சுந்தரனே! தொன்மையனே! தாயவனே! துாயவனே!
வந்தியனே! மாயவனே! நேயவனே! - வன்மையனே!
வாமனனே! நீண்டவனே! மாமணியே! வாழ்புகழே!
வாமனமே சூழ்நலமே வார்த்து!
  
3.
தொன்மையனே! மாமணியே! சுந்தரனே! தாயவனே!
வன்மையனே! நேயவனே! மாயவனே! - வந்தியனே!
சூழ்நலமே! வாமனனே! துாயவனே நீண்டவனே!
வாழ்புகழே வாமனமே வார்த்து!
  
4.
தாயவனே! துாயவனே! சுந்தரனே! தொன்மையனே!
நேயவனே! வந்தியனே! நீண்டவனே! - மாயவனே!
வாமனனே! வன்மையனே! வாமனமே சூழ்நலமே!
மாமணியே! வாழ்புகழ் வார்த்து!
  
5.
மாமணியே! தாயவனே! வந்தியனே! நேயவனே!
வாமனனே! நீண்டவனே! வன்மையனே! - வாமனமே
துாயவனே! தொன்மையனே! சுந்தரனே! சூழ்நலமே!
மாயவனே! வாழ்புகழே வார்த்து!
  
ஐந்து மண்டில வெண்பா என்பது ஒரு வெண்பாவில் வந்த சீர்கள் இடம்பெயர்ந்து ஐந்து வெண்பாவாக அமைதல். ஓரடியில் அமைந்த சொல்லமைப்பு ஒரு முறை மட்டுமே வரவேண்டும். ஐந்து வெண்பாவிலும் சீர்கள் மாறுபட்டு இருக்க வேண்டும். ஒப்புமையாக ஓரடியும் அமையாது. [துாயவனே! சுந்தரனே! தொன்மையனே! தாயவனே!] இது முதல் வெண்பாவின் முதல் அடி. இதே சீரமைப்பில் இவ்வடி வேறு எங்கும் வரவல்லை.
  
ஐந்து வெண்பாக்களிலும் எதுகை, மோனை, அமைதல் வேண்டும். மோனை அமையா அடிகளில் எதுகை அமைந்து மோனையின் இடத்தைச் சரி செய்யும்.
  
விரும்பிய பொருளில் 'ஐந்து மண்டில வெண்பா' ஒன்றைப் பாடுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.
  
"பாவலர் பயிலரங்கம்" என்ற குழுவில் இணைந்து ஐந்து மண்டில வெண்பாவைத் தனிப்பதிவாகப் பதிவிட வேண்டுகிறேன்!
  
இவ்வெண்பா ஐந்துக்கு மேற்பட்ட மண்டிலமாக அமையவும் வாய்ப்புண்டு.
  
6.
மாயவனே! வாமனனே! வந்தியனே! மாமணியே!
துாயவனே சூழ்நலமே! தாயவனே! - நேயவனே!
தொன்மையனே! நீண்டவனே! சுந்தரனே! வாமனமே!
வன்மையனே! வாழ்புகழே வார்த்து!
  
அன்புடன்

பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்:
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்
22.08.2018

வெண்பா மேடை - 109


வெண்பா மேடை - 109
  
நான்கு மண்டில வெண்பா
இவ்வகை வெண்பா என்னுடைய உருவாக்கம்
  
பாடவரும் பண்குயிலே! பார்பெறுமே கோடிநலம்!
தேடிவரும் பண்பமுதே! தேர்வடிவே! - பாடுநலம்
மின்மொழியே சேர்த்திடுவாய்! தேடுபுகழ் திண்மையுறப்
பொன்னாகப் பார்வை பொழி!
  
பண்குயிலே! பார்பெறுமே கோடிநலம்! தேடிவரும்
பண்பமுதே! தேர்வடிவே! பாடுநலம் - மின்மொழியே!
சேர்த்திடுவாய்! தேடுபுகழ் திண்மையுறப் பொன்காகப்
பார்வைபொழி பாட வரும்!
  
பார்பெறுமே கோடிநலம்! தேடிவரும் பண்பமுதே!
தேர்வடிவே! பாடுநலம் மின்மொழியே - சேர்த்திடுவாய்!
தேடுபுகழ் திண்மையுறப் பொன்னாகப் பார்வைபொழி
பாடவரும்! பண்குயி லே!
  
கோடிநலம் தேடிவரும் பண்பமுதே! தேர்வடிவே!
வீடுநலம் மின்மொழியே சேர்த்திடுவாய்! - தேடுபுகழ்
திண்மையுறப் பொன்னாகப் பார்வைபொழி பாடவரும்!
பண்குயிலே! பார்பெறு மே!
  
[பாட்டரசர் கி. பாரதிதாசன்]
  
நான்கு மண்டிலம் என்பது முதல் வெண்பாவின் முதல் சீர், இரண்டாம் வெண்பாவில் இறுதியாக வரும். இரண்டாம் சீர் முதல் சீராக வரும். இரண்டாம் வெண்பாவின் முதல் சீர் மூன்றாம் வெண்பாவில் இறுதியாக வரும். மூன்றாம் வெண்பாவின் முதல் சீர் நான்காம் வெண்பாவில் இறுதியாக வரும். முதல் வெண்பாவில் உள்ள சீர்களைப் போன்றே, எழுத்துகளும் அனைத்து வெண்பாவில் வரவேண்டும். நான்கு வெண்பாக்களிலும் எதுகை, மோனை, அமைதல் வேண்டும். மோனை அமையா அடிகளில் எதுகை வரலாம்.
  
விரும்பிய பொருளில் 'நான்கு மண்டில வெண்பா' ஒன்றைப் பாடுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.
  
"பாவலர் பயிலரங்கம்" என்ற குழுவில் இணைந்து நான்கு மண்டில வெண்பாவைத் தனிப்பதிவாகப் பதிவிட வேண்டுகிறேன்!
  
அன்புடன்
  
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்:
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்
21.08.2018

lundi 20 août 2018

வெண்பா மேடை - 108


வெண்பா மேடை - 108
  
பதினைந்து மண்டில வெண்பா
  
1.
குருவே மருள்தீர் மருந்து! மரபு
தருமே விருந்து! பெருமை - வருமே
திரண்டு! திருவாம் வரமே சுரந்து!
தெருளே பெருக்கும் பரிந்து!
    
2.
மருள்தீர் மருந்து மரபு! தருமே
விருந்து! பெருமை வருமே - திரண்டு!
திருவாம் வரமே சுரந்து! தெருளே
பெருக்கும் பரிந்துகுரு வே!
  
3.
மருந்து மரபு! தருமே விருந்து!
பெருமை வருமே திரண்டு! - திருவாம்
வரமே சுரந்து! தெருளே பெருக்கும்
பரிந்துகுரு வே!மருள் தீர்!
  
4.
மரபு தருமே விருந்து! பெருமை
வருமே திரண்டு! திருவாம் - வரமே
சுரந்து! தெருளே பெருக்கும் பரிந்து!
குருவே மருள்தீர் மருந்து!
  
5.
தருமே விருந்து! பெருமை வருமே
திரண்டு! திருவாம் வரமே - சுரந்து!
தெருளே பெருக்கும் பரிந்து! குருவே
மருள்தீர் மருந்து! மரபு!
  
6.
விருந்து பெருமை வருமே திரண்டு!
திருவாம் வரமே சுரந்து! - தெருளே
பெருக்கும் பரிந்து! குருவே மருள்தீர்
மருந்து! மரபுதரு மே!
  
7.
பெருமை வருமே திரண்டு! திருவாம்
வரமே சுரந்து! தெருளே பெருக்கும்
பரிந்து! குருவே மருள்தீர் மருந்து!
மரபு தருமே விருந்து!
  
8.
வருமே திரண்டு! திருவாம் வரமே
சுரந்து! தெருளே பெருக்கும் - பரிந்து!
குருவே மருள்தீர் மருந்து! மரபு
தருமே விருந்துபெரு மை!
  
9.
திரண்டு திருவாம் வரமே சுரந்து!
தெருளே பெருக்கும் பரிந்து! - குருவே
மருள்தீர் மருந்து! மரபு தருமே
விருந்து பெருமைவரு மே!
  
10.
திருவாம் வரமே சுரந்து! தெருளே
பெருக்கும் பரிந்து! குருவே - மருள்தீர்
மருந்து! மரபு தருமே விருந்து!
பெருமை வருமே திரண்டு!
  
11.
வரமே சுரந்து! தெருளே பெருக்கும்
பரிந்து! குருவே மருள்தீர் - மருந்து!
மரபு தருமே விருந்து! பெருமை
வருமே திரண்டுதிரு வாம்!
  
12.
சுரந்து! தெருளே பெருக்கும் பரிந்து!
குருவே மருள்தீர் மருந்து! - மரபு
தருமே விருந்து! பெருமை வருமே
திரண்டுதிரு வாம்வர மே!
  
13.
தெருளே பெருக்கும் பரிந்து! குருவே
மருள்தீர் மருந்து! மரபு - தருமே
விருந்து! பெருமை வருமே திரண்டு
திருவாம் வரமே சுரந்து!
  
14.
பெருக்கும் பரிந்து குருவே மருள்தீர்
மருந்து! மரபு தருமே - விருந்து!
பெருமை வருமே திரண்டு! திருவாம்
வரமே சுரந்து!தெரு ளே!
  
15.
பரிந்து குருவே மருள்தீர் மருந்து!
மரபு தருமே விருந்து! - பெருமை
வருமே திரண்டு! திருவாம் வரமே
சுரந்துதெரு ளேபெருக் கும்!
  
பதினைந்து மண்டிலம் என்பது முதல் வெண்பாவின் முதல் சீர், இரண்டாம் வெண்பாவில் இறுதியாக வரும். இரண்டாம் சீர் முதல் சீராக வரும். இப்படியாகப் பதினைந்து சீர்களும் முதல் சீராக வந்தமையப் பாடுவது. முதல் வெண்பாவில் உள்ள சீர்களைப் போன்றே, எழுத்துகளும் அனைத்து வெண்பாவில் வரவேண்டும். உயிரெழுத்துகளும், வல்லினம் மிகும் சொற்களும் இம்மண்டிலத்தில் வாரா! பதினைந்து மண்டில வெண்பா வழி எதுகையில் மட்மே அமையும். [வழி எதுகை என்பது அனைத்துச் சீர்களும் ஓரெதுகை பெறுவது] [ அனைத்துச்சீர்களிலும் எதுகை அமைவதால் மோனை வரவேண்டி கட்டாயம் இல்லை]
  
[உயிரெழுத்துகள் வந்தால் புணர்ச்சியில் எழுத்தின் வடிவம் மாறும், வல்லினம் மிகுந்து வந்தால் ஈற்றுச் சீராக வரும் போது வல்லினம் இல்லாமல் போகும்] [முதல் வெண்பாவில் வந்த அனைத்து எழுத்துகளும் மாறாமல் மண்டிலம் அமைதல் வேண்டும்]
  
பதினான்கு மண்டிலமும், பதினைந்து மண்டிலமும் என்னுடைய உருவாக்கம்.
  
விரும்பிய பொருளில் 'பதினைந்து மண்டில வெண்பா' ஒன்றைப் பாடுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.
  
"பாவலர் பயிலரங்கம்" என்ற குழுவில் இணைந்து பதினைந்து மண்டில வெண்பாவைத் தனிப்பதிவாகப் பதிவிட வேண்டுகிறேன்!
  
அன்புடன்
  
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்:
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்
20.08.2018

dimanche 19 août 2018

வெண்பா மேடை - 107


வெண்பா மேடை - 107
  
பதினான்கு மண்டில வெண்பா
  
1.
என்னவனே! இன்னகனே! மன்னவனே! என்மனத்து
நின்றவனே! என்னழகு தின்றவனே! - வென்றவனே!
பொன்னவனே! மென்னகனே! மின்னகனே! வன்னகனே!
தென்னவனே இன்பருள் இன்று!
  
2.
இன்னகனே! மன்னவனே! என்மனத்து நின்றவனே!
என்னழகு தின்றவனே! வென்றவனே! - பொன்னவனே!
மென்னகனே! மின்னகனே! வன்னகனே! தென்னவனே
இன்பருள்இன்(று) என்னவ னே!
  
3.
மன்னவனே! என்மனத்து நின்றவனே! என்னழகு
தின்றவனே! வென்றவனே! பொன்னவனே! - மென்னகனே!
மின்னகனே! வன்னகனே! தென்னவனே இன்பருள்இன்(று)
என்னவனே! இன்னக னே!
  
4.
என்மனத்து நின்றவனே! என்னழகு தின்றவனே!
வென்றவனே! பொன்னவனே! மென்னகனே! - மின்னகனே!
வன்னகனே! தென்னவனே இன்பருள்இன்(று) என்னவனே!
இன்னகனே! மன்னவ னே!
  
5.
நின்றவனே! என்னழகு தின்றவனே! வென்றவனே!
பொன்னவனே! மென்னகனே! மின்னகனே! - வன்னகனே!
தென்னவனே இன்பருள்இன்(று) என்னவனே! இன்னகனே!
மன்னவ னே!என் மனத்து!
  
6.
என்னழகு தின்றவனே! வென்றவனே! பொன்னவனே!
மென்னகனே! மின்னகனே! வன்னகனே! - தென்னவனே
இன்பருள்இன்(று) என்னவனே! இன்னகனே! மன்னவனே!
என்மனத்து நின்றவ னே!
  
7.
தின்றவனே! வென்றவனே! பொன்னவனே! மென்னகனே!
மின்னகனே! வன்னகனே! தென்னவனே - இன்பருள்இன்(று)
என்னவனே! இன்னகனே! மன்னவனே! என்மனத்து
நின்றவ னே!என் னழகு!
  
8.
வென்றவனே! பொன்னவனே! மென்னகனே! மின்னகனே!
வன்னகனே! தென்னவனே இன்பருள்இன்(று) - என்னவனே!
இன்னகனே! மன்னவனே! என்மனத்து நின்றவனே!
என்னழகு தின்றவ னே!
  
9.
பொன்னவனே! மென்னகனே! மின்னகனே! வன்னகனே!
தென்னவனே இன்பருள்இன்(று) என்னவனே! - இன்னகனே!
மன்னவனே! என்மனத்து நின்றவனே! என்னழகு
தின்றவனே! வென்றவ னே!
  
10.
மென்னகனே! மின்னகனே! வன்னகனே! தென்னவனே!
இன்பருள்இன்(று) என்னவனே! இன்னகனே! - மன்னவனே!
என்மனத்து நின்றவனே! என்னழகு தின்றவனே!
வென்றவனே! பொன்னவ னே!
  
11.
மின்னகனே! வன்னகனே! தென்னவனே இன்பருள்இன்(று)
என்னவனே! இன்னகனே! மன்னவனே! - என்மனத்து
நின்றவனே! என்னழகு தின்றவனே! வென்றவனே!
பொன்னவனே! மென்னக னே!
  
13.
வன்னகனே! தென்னவனே இன்பருள்இன்(று) என்னவனே!
இன்னகனே! மன்னவனே! என்மனத்து - நின்றவனே!
என்னழகு தின்றவனே! வென்றவனே! பொன்னவனே!
மென்னகனே! மின்னக னே!
  
13.
தென்னவனே இன்பருள்இன்(று) என்னவனே! இன்னகனே!
மன்னவனே! என்மனத்து நின்றவனே! - என்னழகு
தின்றவனே! வென்றவனே! பொன்னவனே! மென்னகனே!
மின்னகனே! வன்னக னே!
  
14.
இன்பருள்இன்(று) என்னவனே! இன்னகனே! மன்னவனே!
என்மனத்து நின்றவனே! என்னழகு - தின்றவனே!
வென்றவனே! பொன்னவனே! மென்னகனே! மின்னகனே!
வன்னகனே! தென்னவ னே!
  
பதினான்கு மண்டிலம் என்பது முதல் வெண்பாவின் முதல் சீர், இரண்டாம் வெண்பாவில் இறுதியாக வரும். இரண்டாம் சீர் முதல் சீராக வரும். இப்படியாகப் பதினான்கு சீர்களும் முதல் சீராக வந்தமையப் பாடுவது. முதல் வெண்பாவில் உள்ள சீர்களைப் போன்றே, எழுத்துகளும் அனைத்து வெண்பாவில் வரவேண்டும். வல்லினம் மிகும் சொற்கள் இம்மண்டிலத்தில் வாரா! பதினான்கு மண்டில வெண்பா வழி எதுகையில் மட்மே அமையும். [வழி எதுகை என்பது அனைத்துச் சீர்களும் ஓரெதுகை பெறுவது]
  
விரும்பிய பொருளில் 'பதினான்கு மண்டில வெண்பா' ஒன்றைப் பாடுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.
  
"பாவலர் பயிலரங்கம்" என்ற குழுவில் இணைந்து பதினான்கு மண்டில வெண்பாவைத் தனிப்பதிவாகப் பதிவிட வேண்டுகிறேன்!
  
அன்புடன்
  
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்:
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்
19.08.2018

samedi 18 août 2018

மரபின் மைந்தர்


மரபின் மைந்தர் பொன்விழாப் பொலியட்டும்!
    
வண்ணத் தமிழ்மரபை வன்மையுடன் காத்திடுவார்!
எண்ணம் இனிக்க இசைத்திடுவார்! - தண்மழைபோல்
பண்மழை பெய்திடுவார்! பண்பொளிரும் முத்தையர்
கண்ணிமை காட்டும் கவி!
    
மேடை மணக்க வியன்தமிழைத் தந்திடுவார்!
கூடைக் கனிகளைக் கூட்டிடுவார்! - ஓடையிலே
பூத்த மலர்மனத்தர்! பொற்பொளிரும் முத்தையர்
யாத்த இதழ்க்கிணை ஏது?
    
இன்மரபு மைந்தரென ஈடில் புகழ்பெற்றார்!
பொன்னுறவு பாக்கள் புனைகின்றார்! - மின்னுறவு
நன்னுால் வடிக்கின்றார்! நட்பொளிரும் முத்தையர்
பன்னுால் பயின்றார் பரிந்து!
    
கம்பன் தமிழ்கற்றார்! கண்ணன் அருள்பெற்றார்!
நம்பன் இராமன் நடையுற்றார்! - செம்மனத்தால்
நற்பணிகள் செய்திட்டார்! நன்பொளிரும் முத்தையர்
கற்பனைகள் கன்னல் கனி!
    
நற்கவிப் பேரரசின் நன்மதிப்பை ஏற்றவராம்!
இப்புவி போற்றும்..பா ஈந்தவராம்! - எப்பொழுதும்
அன்பில் திளைப்பவராம்! ஆய்வொளிரும் முத்தையர்
மன்றில் பொழிவார் மழை!
    
சீர்பாடும் பொன்விழாப் பேரொங்கக் காணட்டும்!
தார்சூடும் பன்விழாச் சாரட்டும்! - நேர்கமழும்
நெஞ்சர் குலம்வாழி! நேயமொளிர் முத்தையர்
கொஞ்சும் தமிழ்வாழி கோத்து!
    
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்

vendredi 17 août 2018

நட்பால் விளைந்த நறுந்தமிழ்


பிரான்சு கம்பன் விழாவில் வெளிவரும்
  
நட்பால் விளைந்த நறுந்தமிழ்
  
[நான் எழுதிய மடல்களின் தொகுப்பு]
  
என்னுரை
  
அன்னை அருளால் அளித்த மடற்றொகுப்[பு]
என்னை உலகறிய இங்குதவும்! - முன்னைத்
தமிழ்மரபைக் காக்கும்! தவநெறியைப் பூக்கும்!
தமிழுறவைச் சேர்க்கும் தழைத்து!
  
விற்போர்போன்று சொற்போர் உண்டு. விற்போர் நிலங்காக்கப் புரிவாதாகும்! சொற்போர் துாயதமிழின் நலங்காக்கத் தொடர்வதாகும்!
  
நெல்லேர் உழவர்போன்று சொல்லோ் உழவர் உழைக்கின்றார். செந்தமிழை விளைக்கின்றார். வாழ்ந்த நிலையை, வாழும் கலையை வருகின்ற தலைமுறைக்கு அளிக்கின்றார். நெல்வயலைக் காப்பதுபோல் சொல்வயலைக் காத்துக் களிக்கின்றார்.
  
சொற்கலை கற்றவரின் பேச்சும் எழுத்தும், இவ்வுலகின் கல்களையும், முள்களையும் நீக்கும்! பகைவரைத் தாக்கும்! பயன்வழி யாக்கும்! பண்புற ஊக்கும்! தாய்மொழியையும் இனத்தையும் காக்கும்!
  
கணிப்பொறியின் வழியாக நான் எழுதிய மடல்களின் தொகுப்பே இந்நுால். ஒவ்வொரு மடலின் ஈற்றிலும் மரபுக்கவிதை இடம்பெற்றிருக்கும். அக்கவிதை அம்மடலுக்கு அணியாக அழகு சேர்க்கும்.
  
இத்தொகுப்பில், அன்பால் விளைந்த அருமை மடல்களும் உள்ளன. வம்பால் வளர்ந்த வன்மை மடல்களும் உள்ளன.
  
இவ்வேட்டில், நட்பால் மலர்ந்த நன்மடல்களும் உள்ளன. நற்றமிழ்ப் பற்றால் படர்ந்த இன்மடல்களும் உள்ளன.
  
மின்வலையிலும், முகநுாலிலும் 'கேட்டலும் கிளத்தலும்' என்ற பகுதியில், என் மாணவர்களும், தமிழன்பர்களும் தொடுத்த வினாவிற்கு நான் விடுத்த விடையாகிய மடல்களும் இச்சுவடியில் உள்ளன.
  
நண்பர்களுக்கும் உறவுகளுக்கும் தமிழ்ச் சான்றோர்தமக்கும் தீட்டிய மடல்கள் பிரான்சு நாட்டில் நான் வாழ்ந்த வாழ்வைப் படம் பிடித்துக் காட்டும். தமிழர்களின் போக்கை எடுத்தியம்பும். நடைபெற்ற விழாக்களின் நிலையை உணர்த்தும்.
  
இலக்கண இலக்கிய விடை மடல்கள், வளரும் பாவலர்களுக்கு நற்றுணையாகும். தமிழ்நதியை இரு பக்கமும் காக்கும் பனையாகும். இம்மடல்கள் மிக விரிவாகவும் தெளிவாகவும் நீண்டும் இருப்பன. கற்போர் மனத்தைக் கவர்ந்து பிடிப்பன.
  
முகநுாலில் சிலர் தமிழ் யாப்பைத் தவறாகக் கற்பிக்கும் நிலையைக் கண்டு, அவர்தம் தவற்றைச் சுட்டி எழுதிய என் மடல்களும், அவர்கள் தலைக்கனம் கொண்டு எழுதிய மடல்களும் இத்தொகுப்பில் உள்ளன.
  
என் இனிய நண்பர், 'ஊமைக்கனவுகள்' என்ற மின்வலையின் இயக்குநர், இலக்கணச் செல்வர், பேராசிரியர் சோசப் விசீ அவர்கள் எழுதிய மடல்களும், அம்மடல்களுக்கு நான் எழுதிய மறுமடல்களும் இத்தொகுப்பில் உள்ளன. இலக்கணச் செல்வர் எழுதிய மடல்கள் வைர ஆரமாய் இந்நுாலுக்குப் புகழ் அளிப்பன. இலக்கணத் தெளிவும் இலக்கிய எழிலும் அளித்த பேராசிரியர் அவர்களுக்கு என் மனக்குளத்தில் பூத்த தாமரைமலர்களைச் சாற்றி இன்புறுகிறேன்.
  
நறுந்தமிழுக்குச் சாற்றுகவி வழங்கிய எந்தை, கலைமாமணி, சந்தக்கவிஞர் தே. சனார்த்தனன் என்ற கிருட்டினசாமி அவர்களுக்குச் சொன்மாலையைச் சூட்டி மகிழ்கின்றேன்.
  
எண்ணும் கருத்தை மின்னும் வண்ணம் முகப்பட்டையை வடிவமைத்த தமிழ்நெஞ்சம் அமின் அவர்களுக்கு இன்மாலையை அணிந்து களிக்கிறேன்.
  
அன்பால் விளைந்த நறுந்தமிழைத் தான்பால் சுமந்து பதிப்பித்த மணிமேகலை பிரசுரத்தின் இயக்குநர், முனைவர் லேனா தமிழ்வாணன் அவர்களுக்குப் பொன்மாலையைப் போட்டு உவக்கின்றேன். அங்குப் பணியாற்றும் அன்பர்களுக்கு நன்மாலையை நல்கி நலங்கொண்டேன்.
  
விளைந்த நறுந்தமிழை உண்டு நடமிடுவீர்! தமிழ்த்தேருக்கு வடமிடுவீர். இனமோங்க உரமிடுவீர்!
  
தீட்டிய ஓலைகளைச் சேர்த்துள்ளேன்! செந்தமிழ்த்தாய்
ஊட்டிய சீரால் உயர்ந்துள்ளேன்! - நாட்டில்
மொழிகாக்க வேண்டி முகிழ்த்த..இந் நுால்
விழிகாக்கச் செய்வீர் விழைந்து!
  
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்:
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்
17.08.2018