Affichage des articles dont le libellé est வழிநடைச்சிந்து. Afficher tous les articles
Affichage des articles dont le libellé est வழிநடைச்சிந்து. Afficher tous les articles

mercredi 31 mars 2021

வழிநடைச்சிந்து

 வழிநடைச்சிந்து

 

ஆண்

 

கைத்தறிச் சேலைகட்டி வாடி - கண்ணே

கார்குழலில் வாசமலா்க் கட்டுப்பல சூடி!

பைத்தியம் ஆக்குமாசை கூடி - உன்றன்

பார்வையினால் பாடுகவே பாடல்பல கோடி

 

பெண்

 

கம்பனை விஞ்சுகின்ற கண்ணா - உன்றன்

காதல்மொழி கேட்டுக்கரை யாதவளும் பெண்ணா

நம்..பனைத் தோளுடைய மன்னா - என்றன்

நாடிநரம் புருகிடும் நல்லகவி சொன்னா

 

ஆண்

 

ஏரிகரைப் பாதைவழி செல்ல - அன்பே
என்னுடன் வந்திடுவாய் அன்னமென மெல்ல
வாரியுனை நானணைத்துக் கொள்ள - அங்கே
வண்ணமலர்ச் சோலையுண்டு மன்மதனை வெல்ல

பெண்

 

ஆழ்கிணறு பாயும்வயல் காடு - அங்கே

அல்லிமலர் வண்டுடனே ஆடும்உற வோடு

யாழ்வளைவு மங்கையுட லோடு - கொஞ்சி

ஈந்தஇசை கேட்டிடவே ஏங்கும்உயிர்க் கூடு

 

ஆண்

 

கத்தரிக்காய்க் கொல்லைதனில் அன்று - உன்றன்

கட்டழகில் காளையிவன் கண்மயங்கி நின்று

சத்தியமாய்ச் சொல்லுகிறேன் ஒன்று -  உன்றன்

தங்கவுடல் மின்னியதே  தண்ணிலவை வென்று!

பெண்

 

தென்னைமரச் சாலைதனை முந்து - பாடும்

சிந்தைதனில் பொங்கிவரும் சந்தமொலிர் சிந்து!

முன்னேவரும் ஐயன்கோவில் சந்து - மச்சான்

முக்கழகு முட்டுமெனை மோகநிலை தந்து

 

ஆண்

 

வந்தது..பார்  வாழைமரத் தோப்பு - வீசும்

வாடையென வாட்டுதடி வஞ்சியுன்..மா ராப்பு!

தந்தது..பார்  தாழைமனங் காப்பு - நீ..தான்

தாவிவந்து தாளமிடும் தங்கத்தமிழ் யாப்பு


பெண்

 

முட்டுவழிச் சாலையினைத் தாண்டி -  வாழ்வில்
மோதுவினை நீங்கிடவே முன்னவனை வேண்டி

எட்டுவழிச் சந்தையிலே தோண்டி - வாங்கி

ஏற்றிடுவாய் தலைமீதே என்னழகைத் தீண்டி

 

ஆண்

 

முத்துமாரி அம்மன்அரு ளாலே - வண்டு

முத்தமிட்டு மொய்க்குதடி முல்லைமலர் மேலே

பித்துமேறி வாடுமனத் தாலே -  உன்றன்

பின்னழகு தாக்குதடி மின்னலொளி போலே!

பெண்

 

நீர்பாயும் நெல்வயலைப் பாரு - வாய்க்கால்

நீந்திவரும் மீன்மகிழ நீயிடுவாய் சோறு

மார்பாயும் காதலெனும் ஆறு - மச்சான்

மதுபாயும் வண்டமிழை வாய்மணக்கக் கூறு

 

பாட்டரசர் கி பாரதிதாசன், 31.03.2021

வழிநடைச்சிந்து

 


சிந்துப்பா மேடை - 17

 

வழிநடைச்சிந்து

 

போக்குவரத்து ஊர்திகள் இல்லாத பண்டைக்காலத்தில்  மக்கள் பெரும்பாலும் நடந்தே பயணம் செய்தனர். பயணக் களைப்புத் தெரிய வண்ணம் பாடிக் கொண்டு வழி நடந்தனர். அவ்வகைப் பாடல்கள் வழிநடைச்சிந்து  எனப்பெயர் பெறும்.

 

சென்றடையும் இடத்தின் சிறப்புகளையும், காணச்சொல்லும் இறைவன், இறைவி, தலைவன், தலைவி மேன்மைகளையும், செல்லும் வழியிடையில் உள்ள அழகு காட்சிகளையும் தன்னுடன் நடந்து வரும் மகளிர்க்கு எடுத்துத் தெரிவிக்கும் வண்ணம் இப்பாடல் அமையும். சபரிமலை செல்பவர்கள் சரணங்களைச் சொல்லிக்கொண்டு செல்லும் செயலுக்கு ஒப்பாகக் கொள்ளலாம்.

 

வழிநடைச் சிந்துகள் பலவகைச் சந்தமுடையனவாகவும், பலவகை அடிகளையுடையன வாகவும், பலவகை  நடைகளையுடையனவாகவும்  பாடப்பட்டுள்ளன.

 

வழிநடைச்சிந்தின் இலக்கணம்

 

வழிநடைச் செல்லும் வருத்தம் மறைய

ஆற்றிடைக் காட்சிகள் அணங்குக் குணர்த்திப்

பாடும் சிந்துகள் பல்வகைச் சந்தமும்

அடியும் நடையும் அமைவுறப் பெற்று

வழிநடைச் சிந்தென வகுக்ககப் படுமே

 

[முனைவர் இரா. திருமுருகனார், சிந்துப்பாவியல் - 48 ஆம் நுாற்பா]

 

வழிநடைச்சிந்து - 1

 

முட்டுவழிச் சாலையினைத் தாண்டி -  வாழ்வில்
மோதுவினை நீங்கிடவே முன்னவனை வேண்டி

எட்டுவழிச் சந்தையிலே தோண்டி - வாங்கி

ஏற்றிடுவாய் தலைமீதே என்னழகைத் தீண்டி

 

[பாட்டரசர் கி. பாரதிதாசன்]

 

அடி : ஆதிதாளம் [ஓரடிக்கு எட்டுச் சீர்கள்]

சீர் : நான்மை நடை [ஒரு சீரில் நான்கு சிந்தசைகள்,  ஓரடியில் மொத்தம் 4x8=32 அசைகள்]

 

மேலுள்ள கண்ணியில் 'முட்டுவழி ' முதல் 'வேண்டி' வரை ஓரடியாகும். 'எட்டுவழி'  முதல் 'தீண்டி' வரை மற்றோர் அடியாகும். முட்டு - எட்டு என ஓரெதுகையால் இருவடிகளும் இணைந்து ஒரு கண்ணியானது.

ஒவ்வோர் அடியிலும் 1, 5,7ஆம் சீர்களில் மோனை அமையும்.

[முட்டு, மோது, முன்னவனே] [எட்டு, ஏற்றிடுவாய், என்னழகை]

 

ஒவ்வோர் அரையடியிலும் இயைபு வந்துள்ளது [தாண்டி, வேண்டி, தோண்டி, தீண்டி,]

 

நான்கு அரையடிகளிலும் 1, 2 ஆம் சீர்கள் ஒவ்வொன்றும் நான்கு சிந்தசையைப் பெறும். 3, 4, சீர்கள் ஒவ்வொன்றும் இரண்டு சிந்தசையைப் பெறும்

 

தனிச்சொல் ஈரசையாக வரும்.  தனிச்சொல் முன் உள்ள சீர் அவ்வரையடிக்குத் தேவையான அசைகளை நீண்டொலிக்கும். அடியின் இறுதி தேவையான அசைகளை நீண்டொலிக்கும்.

 

அசை பிரித்தல்

 

முட்/டு/வ/ழிச்  சா/லை/யி/னைத்  தாண்/டி/o/o  -  o/o/வாழ்/வில்
மோ/து/வி/னை  நீங்/கி/ட/வே  முன்/ன/வ/னை  வேண்/டி/o/o

எட்/டு/வ/ழிச்  சந்/தை/யி/லே  தோண்/டி/o/o -  o/o/வாங்/கி

ஏற்/றி/டு/வாய்  த/லை/மீ/தே  என்/ன/ழ/கைத்  தீண்/டி/o/o

 

மேலும் விளக்கம் பெறக் காணொளியைக் காணவும்
Paavalar Payilarangam - [you Tube]

 

விரும்பிய பொருளில் ,இவ்வகை வழிநடைச்சிந்து  ஒன்று பாடுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.

 

பாட்டரசர் கி. பாரதிதாசன்,

கம்பன் கழகம், பிரான்சு,

தொல்காப்பியர் கழகம், பிரான்சு.

31.03.2021.