Affichage des articles dont le libellé est பதினான்கு சொல் எழிலணி வெண்பா. Afficher tous les articles
Affichage des articles dont le libellé est பதினான்கு சொல் எழிலணி வெண்பா. Afficher tous les articles

dimanche 12 avril 2020

பதினான்கு சொல் எழிலணி வெண்பா!


வெண்பா மேடை - 167
  
பதினான்கு சொல் எழிலணி வெண்பா!
  
பதினான்கு வினாக்களுக்கு ஒரு விடை வரும்படியாகப் பாடுவது பதினான்கு சொல் எழிலணி வெண்பாவாகும்.
  
வாழூர்என்? வந்ததுமென்? வாங்குவதென்? விற்பதுமென்?
ஊழருள்என்? உன்பணியென்? ஒண்கலமென்? - சூழொலியென்?
வெண்ணுருள்என்? விண்ணிலையென்? வட்டமென்? கொள்மருந்தென்?
உண்சுவையென்?தாளென்? 'உறை'!
  
வெண்பாவில் உள்ள பதினான்கு வினாக்களுக்குக் 'உறை' என்ற ஒரு விடை வந்தது. ஊர், துன்பம், போர்வை, பொன், பெருமை, பாலிடுபிரை, வெங்கலம், சிறப்பு, ஆயுதவுறை, மழை, கிணற்றின் அடியில் வைக்கும் மரவளையம், மருந்து, காரம், மேலுறை... ஆகிய பொருள்களை மேலுள்ள வெண்பாவில் உறை என்ற சொல் பெற்றுள்ளது.
  
1. நீங்கள் வாழும் ஊர் எது? - உறையூர்.
2. இங்கு வந்ததும் ஏன்? - துன்பத்தால் வந்தேன்.
3. வாங்கும் பொருள் என்ன - போர்வை.
4. விற்கும் பொருள் என்ன - பொன்.
5. வாழ்ந்த ஊழ்நிலை எவ்வாறு - பெருமையாக வாழ்ந்தேன்.
6. உங்கள் தொழில் என்ன - பாலில் பிரையிட்டு விற்கும் தொழில்.
7. இந்தப் பாத்திரம் என்ன - வெங்கலம்.
8. பாத்திரம் நன்றாக உள்ளதா? - சிறப்பாக உள்ளது.
9. இந்த வெண்மையான குழாய் என்ன? - ஆயதவுறை.
10. காலநிலை என்ன - மழைக்காலம்.
11. வண்டியில் உள்ள வட்டம் என்ன? - கிணற்றின் அடியில் வைக்கும் மரவளையம்.
12. உனக்குத் தேவையான மருந்து என்ன? நீரினால் உண்டான நோயைத் தீர்க்கும் மருந்து
13. உண்ணும் சுவை என்ன? - காரம்.
14. இந்தத் தாள் என்ன - நுாலுக்கு மேலுறை போடும் தாள்.
  
இவ்வாறு பதினான்கு சொல் எழிலணி வெண்பா ஒன்று பாடுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.
  
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்
12.04.2020