samedi 17 février 2024

பாவலர் உடுவிலுார்க் கலா

 பாவலர் பயிலரங்க உறவுகள் அனைவருக்கும் வணக்கம்!

.

பாவலர் பயிலரங்கம் நடத்தும் விருத்தமாயிரம் எழுதும் கவிவளப் பயிற்சியில் ஐந்நுாறு விருத்தங்கள் பாடித் தொடர்கின்ற திருமிகு உடுவிலுார்க் கலா அவர்களுக்குப் பாவலர் பட்டம் வழங்கிச் சிறப்பிக்கிறோம்.

.

பற்றுடன் பைந்தமிழைக் கற்றுப் பயிலரங்கில்

பொற்புடன் பாடிப் புகழுற்று, - நற்றவத்தால்

பாவலர் ஆகிப் பசும்உடுவி லுார்க்கலா

மாவளம் காண்க மகிழ்ந்து!

.

பாவலர் பட்டம் பெற்ற திருமிகு உடுவிலுார்க் கலா அவர்களுக்குப் பாவலர் பயிலரங்க உறவுகள் விருத்தப்பாவில் ஒரு பக்க வாழ்த்து கவிதை  பாடுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.

.

திருவள்ளுவர் ஆண்டு 2055/கும்பம் [மாசி] 02

14.02.2024

.

பாட்டரசர் கி. பாரதிதாசன்

கம்பன் கழகம் பிரான்சு

தொல்காப்பியர் கழகம் பிரான்சு

பாலவர் பயிலரங்கம் பிரான்சு

யாப்பிலக்கண வகுப்பு - 3


 

யாப்பிலக்கண வகுப்பு - 2

 


யாப்பிலக்கண வகுப்பு - 1



நன்னுால் வகுப்பு - 1


 

samedi 10 février 2024

கலித்துறை மேடை - 9


 


        

கட்டளைக் கலித்துறை - 6

குறிலீற்றுமா + கூவிளம் + கூவிளம் + கூவிளம் + கூவிளம்

 

எற்று தெண்டிரை யேறிய சங்கினொ டிப்பிகள்

பொற்றி கழ்கம லம்பழ னம்புகு பூந்தராய்ச்

சுற்றி நல்லிமை யோர்தொழு பொற்கழ லீர்சொலீர்

பெற்ற மேறுதல் பெற்றிமை யோபெரு மானிரே!

[திருஞான சம்பந்தர் தேவாரம் - 1471]

 

நேரசையில் தொடங்கிய இக்கட்டளைக் கலித்துறையில் ஓரடியில் எழுத்தெண்ணிக்கை ஒற்று நீக்கி 14  இருக்கும்.

 

வருக்க மார்தரு வான்கடு வன்னொடு மந்திகள்

தருக்கொள் சோலைத ருங்கனி மாந்திய பூந்தராய்த்

துரக்க மால்விடை மேல்வரு வீரடி கேள்செல்லீர்

அரக்க னாற்றல ழித்தரு ளாக்கிய ஆக்கமே!

[திருஞான சம்பந்தர் தேவாரம் - 1476]

 

உண்மை வென்றிடும்! ஊழகம் துன்புறும்! ஊர்புகழ்

வண்மை வாழ்வுறும்! வஞ்சகம் தாழ்வுறும்! வண்டமிழ்த்

தண்மை தேன்றரும்! தாயகம் காப்பிடும்! தங்கமாம்

பெண்மை இன்பிடும்! பேரகம் நற்பணி பேணுமே!

[பாட்டரசர்] 10.02.2024

 

நரியின் நெஞ்சினில் நல்லருள் என்பதும், நாறிய

கரியின் நெஞ்சினில் காப்பருள் என்பதும், காட்டுடை

அரியின் நெஞ்சினில் அன்பருள் என்பதும், ஆசையால்

விரியும் நெஞ்சினில் விண்ணருள் என்பதும் விந்தையே!

[பாட்டரசர்] 10.01.2024

 

இக்கட்டளைக் கலித்துறையில் விளம் வருமிடங்களில் தேமாங்காய் அருகிவரும். 

 

ஓரடியில் ஐந்து சீர்கள் இருக்கும். நான்கு அடிகளைப் பெற்று வரும். நான்கடிகளும் ஓரெதுகை பெறும். 1.5 ஆம் சீர்களில் மோனை யமையும்.

மேற்கண்ட கட்டளைக் கலித்துறை ஒன்றே ஒன்று விரும்பிய தலைப்பில் இயற்றுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.

 

பாட்டரசர் கி. பாரதிதாசன்

கம்பன் கழகம், பிரான்சு.
தொல்காப்பியர் கழகம், பிரான்சு.

பாவலர் பயிலரங்கம், பிரான்சு

10.02.2024

 


dimanche 4 février 2024

கலித்துறை மேடை - 8

 


கலித்துறை மேடை - 8

      

கலிநிலைத்துறை - 3

குறிலீற்றுமா + கூவிளம் + விளம் + விளம் + விளம்

 

கிண்ண வண்ணம லருங்கிளர் தாமரை தாதளாய்

வண்ண நுண்மணல் மேலனம் வைகும்வ லஞ்சுழி

சுண்ண வெண்பொடிக் கொண்டுமெய் பூசவ லீர்சொலீர்

விண்ண  வர்தொழ வெண்டலை யிற்பலி கொண்டதே!

 

[திருஞான சம்பந்தர் தேவாரம் - 1482]

 

கள்ளல் இன்றியே கவிதைகள் பாடுவோம்! வேற்றுமை

எள்ளல் இன்றியே இணைந்துநாம் ஆடுவோம்! நாவினால்

கிள்ளல் இன்றியே கீர்த்தியை நாடுவோம்! வந்துபின்

தள்ளல் இன்றியே தார்பல சூடுவோம் தோழியே!

 

[பாட்டரசர்] 28.01.2024

 

நகலில் பாடுதல் நற்றிறம் ஆகுமோ? கண்டவர்

நகலில் பாடுதல் நன்மதி யாகுமோ? அயன்மொழி

மிகலில் பாடுதல் மேன்மைதான் ஆகுமோ? தன்னிலை

புகழில் பாடுதல் போற்றுதல் ஆகுமோ? தோழனே! 

 

[பாட்டரசர்] 28.01.2024

 

இக்கலிநிலைத்துறையில் விளம் வருமிடங்களில் தேமாங்காயும் புளிமாவும் அருகிவரும்.  மேலுள்ள  தேவாரப்பாடலில் 'வைகும்வ' தேமாங்காய் வந்தது.

 

ஓரடியில் ஐந்து சீர்கள் இருக்கும். நான்கு அடிகளைப் பெற்று வரும். நான்கடிகளும் ஓரெதுகை பெறும். 1.3 ஆம் சீர்களில் மோனை யமையும்.

மேற்கண்ட கலிநிலைத்துறை ஒன்றே ஒன்று விரும்பிய தலைப்பில் இயற்றுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.

 

பாட்டரசர் கி. பாரதிதாசன்

கம்பன் கழகம், பிரான்சு.
தொல்காப்பியர் கழகம், பிரான்சு.

பாவலர் பயிலரங்கம், பிரான்சு

04.02.2024        

 

கலித்துறை மேடை - 7

 


கலித்துறை மேடை - 7

      

கட்டளைக் கலித்துறை - 5

 

முதல் இருசீர் மா அல்லது விளம் + மா + கூவிளம் + கூவிளம்

முதல் 3 சீர்கள் வெண்டளையைப் பெற்றிருக்கும்

 

மாசறு சோதியென் செய்ய வாய்மணிக் குன்றத்தை

ஆசறு சீலனை யாதி மூர்த்தியை நாடியே

பாசற வெய்தி யறிவி ழந்தெனை நாளையும்

ஏசறு மூரவர் கவ்வை தோழீயென் செய்யுமே?

 

[பெரியாழ்வார். திருவாய்மொழி. மாசறு -1]

 

நேரசையில் தொடங்கிய இக்கட்டளைக் கலித்துறையில் ஓரடியில் எழுத்தெண்ணிக்கை ஒற்று நீக்கி 14  இருக்கும்.

 

கடியன் கொடியன் நெடிய மாலுல கங்கொண்ட

அடியன் அறிவரு மேனி மாயத்தன் ஆகிலும்

கொடியவென் னெஞ்சம் அவனென் றேகிடக் கும்மெல்லே

துடிகொ ளிடைமடத் தோழீ! அன்னையென் செய்யுமோ?

 

[பெரியாழ்வார். திருவாய்மொழி. மாசறு - 5]

 

நிரையசையில் தொடங்கிய இக்கட்டளைக் கலித்துறையில் ஓரடியில் எழுத்தெண்ணிக்கை ஒற்று நீக்கி 15  இருக்கும்.

 

கன்னல் கவிகள் படைக்கக் கண்ணெழில் காட்டுவாள்!

பின்னல் மலர்ச்சடை போட்டுப் பித்துற வாட்டுவாள்!

மின்னல் ஒளியினை வீசி வெற்றியை யீட்டுவாள்!

இன்னல் இனியிலை என்றே இன்னிதழ் ஊட்டுவாள்!

 

[பாட்டரசர்] 07.01.2024

 

அரும்புச் சரஞ்சூடி என்றன் ஆசையை மூட்டுவாள்!

கரும்புக் கவிபாடி நெஞ்சக் காதலைக் கூட்டுவாள்!

விருந்து சுவையாடி நாளும் மெல்லிசை மீட்டுவாள்!

பருந்து விழிக்காரி பார்வை யால்துயர் ஓட்டுவாள்!

 

[பாட்டரசர்] 07.01.2024

 

மேலுள்ள பாடல்களில் கங்கொண்ட, மாயத்தன் என்பன கூவிளம் வருமிடங்களில் தேமாங்காய் வந்தன.

 

என்செய்யு மூரவர் கவ்வை தோழீ இனிநம்மை

என்செய்ய தாமரைக் கண்ணன் என்னை நிறைகொண்டான்

முன்செய்ய மாமை யிழந்து மேனி மெலிவெய்தி

என்செய்ய வாயும் கருங்கண் ணும்பயப் பூர்ந்தவே!

 

[பெரியாழ்வார். திருவாய்மொழி. மாசறு - 2]

 

மேலுள்ள பாடலில் 4 சீர் கூவிளம் வர வேண்டி இடத்தில் தேமா வந்துள்ளது [தோழீ, என்னை, மேனி] அவ்வாறு தேமா வந்தால் 5ஆம் சீர் கூவிளமாக வராமல் கருவிளமாக வரும்.

 

ஓரடியில் ஐந்து சீர்கள் இருக்கும். நான்கு அடிகளைப் பெற்று வரும். நான்கடிகளும் ஓரெதுகை பெறும். 1.4 ஆம் சீர்களில் மோனை யமையும்.

முதல் மூன்று சீர்கள் வெண்டளையைப் பெற்றிருக்கும். மூன்றாம் சீர் மாவாக அமையும். நான்காம் ஐந்தாம் சீர்கள் கூவிளமாகும்.

 

மேற்கண்ட கட்டளைக் கலித்துறை ஒன்றே ஒன்று விரும்பிய தலைப்பில் இயற்றுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.

 

பாட்டரசர் கி. பாரதிதாசன்

கம்பன் கழகம், பிரான்சு.
தொல்காப்பியர் கழகம், பிரான்சு.

பாவலர் பயிலரங்கம், பிரான்சு

21.01.2024