Affichage des articles dont le libellé est அறுசீர் விருத்தம். Afficher tous les articles
Affichage des articles dont le libellé est அறுசீர் விருத்தம். Afficher tous les articles

samedi 4 avril 2026

விருத்த மேடை - 102

 

விருத்த மேடை  - 102

 

அறுசீர் விருத்தம்

[மா+மா+மா+மா+விளம்+கூவிளங்காய்]

 
பேரார் மதமா உரிவை போர்த்துப்

…… பொடியணி மேனியனாய்க்

காரார் கடலின் நஞ்சம் உண்ட

…… கண்ணுதல் விண்ணவனுார்

பாரார் வைகைப் புனல்வாய்ப் பரப்பிப்

…… பண்மணி பொன்கொழித்துச்

சீரார் வாரி சேர நின்ற

…… தென்திருப் பூவணமே

 

[திருஞானசம்பந்தர் தேவாரம் - 690]

 

நான் பிறந்த நகர்

 

நேராம் பாதை நெஞ்சைக் கவரும்

…… நிறையெழில் பூத்தொளிரும்!

சீராம் தமிழைச் சிந்தைக் கூட்டில்

…… சிறப்புறக் காத்தொளிரும்!

கூராம் அறிவால் கொள்ளை தீட்டிக்

…… குணநலங் கோத்தொளிரும்!

காராம் மழைபோல் கவிதை பொழியும்

…… கனித்தமிழ் நற்புதுவை!

 

[பாட்டரசர்] 04.04.2026

 

இந்த அறுசீர் விருத்தம் மா+மா+மா+மா+விளம்+கூவிளங்காய் என்ற சீரமைப்பை ஓரடியாகக் கொண்டது. இவ்வமைப்பிலேயே நான்கடிகள் அமைந்திருக்க வேண்டும். நான்கடிகளும் ஓரெதுகை பெற்றிருக்க வேண்டும். ஒன்று, ஐந்தாம் சீர்களில் மோனை அமைய வேண்டும்.

 

ஆறாம் சீர் கூவிளங்காய் வரும் இடத்தில் புளிமாங்காய்ச் சீரும், தேமாந்தண்பூச் சீரும் எங்கோ ஓரிடம் வருதலும் உண்டு. [எழுத்து எண்ணிக்கையில் கூவிளங்காய்போன்று ஒற்று நீக்கி நான்கு எழுத்துக்களைப் புளிமாங்காயும் தேமாந்தண்பூவும் பெற்றுள்ளன]

 

விரும்பிய தலைப்பில் இவ்வகை அறுசீர் விருத்தம் ஒன்று இயற்றுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.

 

பாட்டரசர் கி. பாரதிதாசன்

கம்பன் கழகம் பிரான்சு.
தொல்காப்பியர் கழகம், பிரான்சு

உலகத் தமிழ்ச் சிறகம்

04.04.2026

samedi 12 avril 2025

 

பாவலர் வில்லூர்ப் பாரதி

 

     ஆசான் மீதும் தமிழ்மீதும்

ஆழி யளவுப் பற்றுடையார்

பேசா துள்ள கருவாய்ந்து

பேணி யெழுதுந் திறனுடையார்!

வாசா.. பாசா.. பெயர்சூடி

வாழும் வில்லூர்ப் பாரதியார்!

ஈசா வுன்னை வேண்டுகிறேன்

இவர்க்கே யாவும் நல்குகவே!

 

அஞ்சா நெஞ்சும் அகத்தெளிவும்

அமைந்த கவிஞர்! வரும்பகையைப்

பஞ்சா பறக்க விடுகின்ற

பாட்டுக் கணையைச் செய்மறவர்!

மஞ்சா போட்ட வன்மையென

வாழும் வில்லூர்ப் பாரதியார்!

துஞ்சா துலகுக்[கு] உணர்வூட்டித்

தொடர்ந்து பாடி வெல்லுகவே!

 

வீட்டில் உள்ள அனைவர்க்கும்

வெற்றி வழியைக் காட்டிடுவார்!

நாட்டில் உள்ள அனைவர்க்கும்

நல்ல தமிழை யூட்டிடுவார்!

ஏட்டில் உள்ள அனைவர்க்கும்

இனியர் வில்லூர்ப் பாரதியார்!

காட்டில் உள்ள தேனடையாய்க்

கவிதை பாடி ஓங்குகவே!

 

 
அன்பும் பண்பும் நிறைந்தவராம்!

அருளும் அறனும் உடையவராம்!

இன்பும் துன்பும் ஒன்றென்ற

ஈடில் குறளை உரைப்பவராம்!

அன்றும் இன்றும் நன்னெறியை

ஆளும் வில்லூர்ப் பாரதியார்!

என்றும் வாழ்க புகழுடனே!

இளமைத் தமிழின் அழகுடனே!

 

அகநூல் புறநூல் கற்றவராம்!

அருணூல் பொருணூல் பெற்றவராம்!

புகழ்நூல் குறளின் வழியேற்றுப்

புதுநூல் புனைந்து களித்தவராம்!

முகநூல் வழியே முத்தமிழை

முழங்கும் வில்லூர்ப் பாரதியார்!

தொகைநூல் புலவர் திருமரபில்

தொடர்ந்து பாடி  வாழியவே!      

அன்புடன்

பாட்டரசர் கி. பாரதிதாசன்

தலைவர்

கம்பன் கழகம், பிரான்சு

தொல்காப்பியர் கழகம், பிரான்சு

உலகத் தமிழ்ச் சிறகம்

பாவலர் பயிலரங்கம், பிரான்சு

12.04.2025

vendredi 10 mai 2024

பாவலர் அன்பரசி

 

அமுதச் செல்வி அன்பரசி

பிறந்தநாள் வாழ்த்து

 

அமுதில் பிறந்த செல்வியென

       அகத்தில் சிறந்த அன்பரசி!

குமுதில் அமர்ந்த நங்கையெனக்

       குணத்தில் உயர்ந்த பண்பரசி!

சிமிழின் செம்மைப் பெண்ணரசி!

       சீர்சேர் புலமைப் பண்ணரசி!

தமிழில் சிறந்த பாட்டரசன்

       தந்தேன் கோடிப் பல்லாண்டு!

 

மொழியின் பற்றும், நன்னெறியை

       முழங்கும் பற்றும், நற்றவத்தார்

வழியின் பற்றும், யாப்பருளும்

       மரபின் பற்றும், இயற்கைதரும்

எழிலின் பற்றும், எந்நாளும்

       இறைவன் பற்றும், அன்பென்னும்

பொழிலின் பற்றும் அகமலர்ந்து

       பொலிந்து வாழ்க அன்பரசி!

 

தேடித் தேடி நுால்கற்றும்

       திறனுக் கென்றும் உரமிட்டும்

ஓடி யோடித் தொண்டாற்றி

       ஒளிரும் வண்ணம் உளமுற்றும்

ஆடி யாடிக் களிக்கின்ற

       அழகு குழந்தை பணியுற்றும்

பாடிப் பாடிப் புகழுற்றும்

       பாரில் வாழ்க அன்பரசி!

 

கம்பன் காதல் கமழ்ந்திடுமே!

       கவிதைக் காதல் கனிந்திடுமே!

இம்மண் வாழும் செடிமீதும்

       இனிய காதல் தொடர்ந்திடுமே!

அம்மன் அழகில் மனமுருகி

       அருளாங் காதல் மலர்ந்திடுமே!

செம்பொன் இதய அன்பரசி

       செழித்து வாழ்க பல்லாண்டு!

 

பாட்டின் அரசன் பயிலரங்கிற்

       பாடங் கற்றும் பண்கற்றும்

காட்டின் வளமாய் எழுத்தாக்கங்

       கணித்தே எழுதுங் கலைகற்றும்

வீட்டின் பெருமைச் சீர்கற்றும்

       வெற்றி சூடும் வழிகற்றும்

நாட்டின் மேன்மை நிலைகற்று்

       நன்றே வாழ்க அன்பரசி! [83]

 

23.03.2024

dimanche 5 mai 2024

தொழிலாளர் திருநாள்

 

தொழிலாளர் திருநாள் சிந்தனை?

 

காடும் மேடும் வயலாக்கிக்

       கடமை புரிந்த நல்லுழவர்

பாடு பட்டும் பசியேனோ?

       பஞ்சம் வாட்டும் நிலையேனோ?

வீடு காட்டும் மனையாக

       விளையும் வயலை யாக்குவதோ?

நாடும் நாளை உணவின்றி

       நலிந்து குன்றும் உணருகவே!

 

ஒருநாள் கூலிப் பணிசெய்ய

       ஊரில் இல்லை தொழிலாளர்!

வருநாள் தோறும் ஏமாற்றி

       வருவாய் ஈட்டிப் பொய்பேசித்

திருநாள் போலே வாழ்கின்றார்!

       திருடர் வெள்ளை உடைகொண்டார்!

தெருநாய் கூட உணவிற்குத்

       திரிந்து திரிந்து வந்திடுமே!

      

ஊரை நன்றே ஏமாற்றி

       உருவை வளர்க்கும் மனிதர்கள்!

யாரை நாடி நான்சொல்ல

       இனிய மே..நாள் வாழ்த்துக்கள்“!

பாரை மாற்ற யார்வருவார்?

       பசுமை வாழ்வை யார்தருவார்?

கூரை பிய்த்துக் கொட்டுவதாய்க்

       குந்தி வானம் பார்க்கின்றார்!

 

வேலை செய்ய ஆளில்லை!

       வேர்வை சிந்த மனமில்லை!

காலை யாட்டி வீட்டுக்குள்

       கனவு காணும் சோம்பேறி!

சாலை யெங்கும் தரகர்கள்

       சாயம் பூசி நடித்திடுவார்!

காலை யென்ன? இரவென்ன?
       காசே கடவுள் ஆனதடா!

 

காலம் முழுதும் உழைக்காமல்

       கள்ளர் நன்றே வாழ்கின்றார்!

ஞாலம் உழைப்பை மறுப்பதுமேன்?

       நல்லோர் நெறியை வெறுப்பதுமேன்?

பாலம் போடப் பத்தாண்டு!

       பாதை போடப் பத்தாண்டு!

சாலஞ் காட்டித் திரிகின்றார்!

       தமிழர் விழித்தல் எந்நாளோ?

 

ஈயும் உழைக்கும் பூமேலே!

       எறும்பும் உழைக்கும் மண்மேலே!

மேயுங் காளை நன்றாக

       விரைந்தே உழைக்கும் வயல்மேலே!

வாயும் பேசா வாற்குரங்கு

       வந்து வித்தை செய்கிறது!

நாயும் உழைக்கும் வீட்டுக்கு

       நாமேன் உழைக்க மறுக்கின்றோம்?

 

கைக்கண் மாற்றுங் தொழில்பெருகிக்

       காலங் கோல மாறியதே!

மைக்கண் உள்ள கருப்பாக

       மண்டை யிருண்டு போனதுவே!

பைக்கண் பணத்தைக் கண்டவுடன்

       பற்கள் இளித்து வாலாட்டும்!

தைக்கண் கண்ட பசுமையினைத்

       தரணி பெறுதல் எந்நாளோ?

 

கடனே வங்கி உண்ணுவதோ?

       கால்கை பிடித்து வாழுவதோ?

திடமே யின்றிக் கொழுப்பேறித்

       திருத்த மின்றிக் கிடப்பதுவோ?

முடமே யுள்ளம் அடைவதுவோ?

       முடங்கி முடங்கி இருப்பதுவோ?

புடமே போட்டால் பொன்னொளிரும்!

       புவியே உழைப்பால் பொலிவுபெறும்!

 

உழைப்பே யின்றி உயர்வடைய

       உறங்கிக் கிடக்கும் உலகம்..கேள்!

அழைப்பே யின்றிக் காற்றுவரும்!

       அழகாய் முளைத்து நாற்றுவரும்!

பிழைப்பே யின்றிக் கல்லாகப்

       பிறப்பைக் கழித்தல் பேரிழிவு!

விழைப்பே யின்றித் துாங்காதே!

       வீணே யாகி ஏங்காதே!

 

பணத்தை யீட்டும் தொழிலாகப்

       பாரில் ஆகும் அரசியலே!

மணத்தை வீசி வலையிடுவார்!

       வாக்குக் கேட்டுப் பொருள்தருவார்!

குணத்தை இழந்த மனிதர்கள்

       கொள்கை யின்றித் தாவிடுவார்!

பிணத்தை யெரிக்கும் சுடுகாட்டில்

       பெருகிச் சுழலும் கையூட்டே!

 

பாட்டரசர் கி. பாரதிதாசன்

தலைவர்

கம்பன் கழகம், பிரான்சு

உலகத் தமிழ்ச் சிறகம்

தொல்காப்பியர் கழகம், பிரான்சு.

பாவலர் பயிலரங்கம், பிரான்சு

01.5.2024

 

lundi 27 novembre 2023

ஆசைக் கடலில்

 


ஆசைக் கடலில்....

 

ஆசைக் கடலில் நீந்துகிற

       ஆட்டம் போதும்! செந்தமிழாம்

ஓசைக் கடலில் மனமுழுகி

       ஒளிரச் செய்வாய் திருமாலே!

மீசை முறுக்கி வீண்சண்டை

       வினைகள் போதும்! உள்ளொன்றிப்

பூசை அறையில் தவநெறியைப்

       புரியச் செய்வாய் திருமாலே!

 

அகத்தை யுடைத்தே எண்ணங்கள்

       அலைதல் போதும்! பற்றற்றுச்

சுகத்தைக் காணும் நல்லமைதி

       சூழச் செய்வாய் திருமாலே!

முகத்தைப் பார்த்தே உயிர்சொக்கி

       முணங்கல் போதும்! கவிபாடிச்

செகத்தை வெல்லும் உயர்புலமை

       செழிக்கச் செய்வாய் திருமாலே!

 

அதையும் இதையும் அடைந்திடவே

       ஆடல் போதும்! பழியான

எதையும் புரியா நெஞ்சத்தை

       எனக்குக் தருவாய் திருமாலே!

சதையும் எலும்பும் அழகென்று

       சாற்றல் போதும்! மண்ணுக்குள்

புதையும் முன்னே ஞானவொளி

       பொலியச் செய்வாய் திருமாலே!

 

மண்ணும் பொன்னும் பெரிதென்ற

       மயக்கம் போதும்! வண்டமிழின்

பண்ணும் பாட்டும் வாழ்வென்று

       பணியச் செய்வாய் திருமாலே!

பெண்ணும் கண்ணும் போதையெனப்

       பிதற்றல் போதும்! மேலுள்ள

விண்ணும் என்னுள் ஆட்பட்டு

       மின்னச் செய்வாய் திருமாலே!

 

நான்றான் நான்றான் என்றெண்ணி

       நவிலல் போதும்! தற்பெருமை

ஏன்றான் ஏன்றான் தெளிவுற்றே

       இயங்கச் செய்வாய் திருமாலே!

வான்றான் வான்றான் காதலென

       வாழ்தல் போதும்! இறையொளிதான்

தேன்றான் தேன்றான் சுவையூறித்

       திளைக்கச் செய்வாய் திருமாலே!

 

பொய்யே புழுத்துப் புரளுகிற

       புன்மை போதும்! எந்நாளும்

மெய்யே பூத்து மணக்கின்ற

       மேன்மை செய்வாய் திருமாலே!

அய்யே யென்று பிறர்சொல்லும்

       அல்லல் போதும்! விளைந்தோங்கும்

செய்யே போன்று நலமீயச்

       செம்மை செய்வாய் திருமாலே!

 

அறிவே யின்றி வினையாற்றி

       அழிதல் போதும்! நல்லோரின்

நெறியே உணர்ந்து கைப்பற்றி

       நிறைவைத் தருவாய் திருமாலே!

வெறியே கொண்டு தள்ளாடும்

       வேட்கை போதும்! உடலுற்ற

பொறியே யடங்கி தவமோங்கும்

       புத்தி தருவாய் திருமாலே!

 

கள்ளம் நிறைந்து வாழ்ந்திட்ட

       காலம் போதும்! மெய்ந்நெறியே

உள்ளம் நிறைந்து மிளிர்கின்ற

       உயர்வைத் தருவாய் திருமாலே!

துள்ளும் இளமைப் பருவத்தின்

       துன்பம் போதும்! சிந்தைனையுள்

பள்ளம் குள்ளம் இல்லாமல்

       பசுமை தருவாய் திருமாலே!

 

நம்பி வந்தோர்க் கின்னலிடும்

       நாசம் போதும்! எம்மக்கள்

தம்பி நீயே என்றோதும்

       தன்மை தருவாய் திருமாலே!

தும்பி வாலில் நுாலிட்ட

       துன்பம் போதும்! இனிவாழ்வில்

இம்மி பாவம் இல்லாமல்

       இயங்கச் செய்வாய் திருமாலே!

 

புறமே பேசித் திரிகின்ற

       போக்குப் போதும்! தமிழ்தந்த

அறமே பேசி யொளிர்கின்ற

       அழகே தருவாய் திருமாலே!

திறமே பேசி உழல்கின்ற

       செய்கை போதும்! வரிப்புலியின்

மறமே பேசி வெல்கின்ற

       வன்மை தருவாய் திருமாலே!

 

பாட்டரசர் கி. பாரதிதாசன்

தலைவர்

கம்பன் கழகம், பிரான்சு

தொல்காப்பியர் கழகம், பிரான்சு.

பாவலர் பயிலரங்கம், பிரான்சு

27.11.2023