jeudi 31 janvier 2013

காதல் ஆயிரம் [பகுதி - 16]





காதல் ஆயிரம் [பகுதி - 16]

151.
சில்லென்று காதல் மழைபொழியும்! சிந்தனையை
வெல்லென்(று) அழைத்து விளையாடும்! – கள்ளூறும்
சொல்லொன்று சொல்லும்! உயிர்சொக்கும்! பூங்கணைகள்
கொல்லென்று பாயும் குவிந்து! 

152.
படுத்தால் உடன்படுப்பாள்! பாவையிடம் கேள்வி
தொடுத்தால் பதிலும் கொடுப்பாள்! – எடுத்தால்
தடுப்பாள்! இளமைத் துடிப்பால் பாக்கள்
விடுப்பாள்! அவையென் விருந்து!

153.
பொன்னகை என்னாம்? பொலியும் மணியென்னாம்?
புன்னகை முன்னே! புகழ்தமிழே! – என்னுயிர்க்
கன்னிகை காட்டிடும் கண்ணகைக்(கு) ஈடாக
மின்னகை உண்டோ விளம்பு?

154.
கொடிதவழும்! தையில் குளிர்தவழும்! மாயோன்
அடிதவழும் அன்பர்தம் ஆன்மா! – சுடரும்
குடிதவழும் மாண்பு! குவியழகே! உன்றன்
மடிதவழும் என்றன் மனம்!

155.
மெல்ல நடைநடந்து! வெல்லும் விழிமலர்ந்து!
வெல்லச் சுவைகலந்து விஞ்சுகிறாய்! – சொல்லவே
வல்ல புலமை வளர்ந்து மணக்கிறது!
இல்லை இனியோர் இடர்!

156.
பார்க்காத நாளெல்லாம் பட்டமரம் போலாகும்!
சேர்க்காத பாட்டெல்லாம் சீரிழக்கும்! - பேரெடுத்து
வார்க்காத வாழ்வென்ன? வஞ்சியுடன் என்னெஞ்சம்
கோர்க்காத வாழ்வென்ன கூறு?

157.
வீட்டுக்குள் உன்னினைவு! வேலை புரிகின்ற
காட்டுக்குள் உன்னினைவு! கண்மணியே! – பாட்டெழுதும்
ஏட்டுக்குள் உன்னினைவு! எந்நொடியும் என்னிதயக்
கூட்டுக்குள் உன்னினைவு கூத்து!

158.
நான்என்ன செய்யும் நறுந்தமிழே? உன்மொழிமுன்
தேன்என்ன செய்யும்? திகைகின்றேன்! – கான்வாழும்
மான்என்ன செய்யும்? மயில்என்ன செய்யும்?உயர் 
வான்என்ன செய்யும்? வடிவு!

159.
செல்லக் கவிதை! செழுந்தமிழ் நெஞ்சத்தை
அள்ளும் கவிதை! அளித்தனையே! - மல்லிகையே!
சொல்ல இனிக்கும் சுடர்தமிழ்ச் செம்மையென
உள்ளம் இனிக்கும் உவந்;து!

160.
சித்தத்தில் சிக்கிய சின்னவளே! செந்தமிழே!
மொத்தத்தில் மூழ்கினேன் மோகத்தில்! - வித்தகியே!
இத்திறத்தில் நானிருக்க, என்னாளும் நீயங்குப்
பத்திரமாய்ப் பாடுகிறாய் பாட்டு!

(தொடரும்)

mercredi 30 janvier 2013

காதல் ஆயிரம் [பகுதி - 15]





காதல் ஆயிரம் [பகுதி - 15]

141.
பார்க்கும் திசையில் பறந்து வருபவளே!
கோர்த்த மணியழகு கொண்டவளே! - கூர்விழியே!
வார்த்தெடுத்த பொற்சிலையே வந்துவிடு என்னருகில்!
மார்பணைத்து நிற்பேன் மகிழ்ந்து!

142.
கன்னல் கனிச்சாறே! கம்பன் கவியமுதே!
பின்னல் மலர்க்குழலே! பேரழகே! - என்னுயிரே!
சன்னல் வழியாகச் சாடை புரிந்திட்டால்
இன்னல் வருமோ எனக்கு!

143.
தோளுறுதி! நெஞ்சத் துணிவுறுதி! வன்மைமிகு
ஆலுறுதி போன்றே அகமுறுதி! – காலுறுதி
கையுறுதி எல்லாம் கரைந்ததே, என்னிதயப்
பையுறுதி குன்றுதே பார்த்து!

144.
பாத்திறம் ஊட்டிடும் பாவையே! உன்பார்வை
சூத்திரம் ஊட்டிடும் சூதறியேன்! – கோத்திரம்
சாத்திரம் நான்வெறுத்தேன்! உன்மடி சாய்ந்திடவே
கூத்திடும் நெஞ்சம் குளிர்ந்து!

145.
நடையளந்து செல்லும் நறுந்தமிழ் நங்கை
உடையளந்து வாடுதே என்னுள்ளம்! – கடைக்கண்
படைநடந்து பாய்ச்சுதே அம்புகளை! மார்பு
தடையுடைந்து போனதே தாழ்ந்து!

146.
வண்ணக் கிளியின் இனிய மொழியினிலே
எண்ணம் பதிக்க, எனதுடலில் - சின்ன
இறகுகள் வந்து முளைத்தனவே! சிட்டின்
உறவுகள் மின்னுதே ஊர்ந்து!

147.
பொய்யுருகும் பாடல் புலவர்தம் போக்கென்று
நொய்யுருகிப் பொங்குதல்போல் நோக்காதே? – செய்யவளே!
நெய்யுருகும் தீயினிலே! நின்குளிர் பார்வையில்என்
மெய்யுருகி நிற்கும் மெலிந்து!

148.
பார்க்கும் பொழுதெலாம் பற்றி இழுக்கின்றாய்
யார்க்கும் தெரியாமல் என்னுயிரை! – சேர்த்துனைக்
கோர்க்கும் இளமை கொடுக்கும் நினைவெல்லாம்
வார்க்கும் இனிமை வளர்ந்து!

149.
பா..தரும் பெண்ணே! பனிதரும் மார்கழியே!
பூ..தரும் தேனே! புகழ்நிலவே – மாதவத்
தேவரும் தேவியும் சேரின்பம்! எண்ணுமடி
நீ..வரும் நாளை நினைத்து!

150.
கலையே! கவியே! கமழும் கடலே!
அலையே! அமுதே! அழகே! – சிலையே!
மலையே உடைக்கும் மறவன் எனக்கு 
வலையே விரிக்கும் வரிந்து!


(தொடரும்) 
   

lundi 28 janvier 2013

காதல் ஆயிரம் [பகுதி - 14]





காதல் ஆயிரம் [பகுதி - 14]

131
திமிரென்று திட்டாதே! தீங்கனிப் பாவாய்! 
தமிழென்று கொண்டாடு! தண்வாய் - உமிழ்நீர்
அமுதென்று நாளும் அருந்திடுவோம்! வாழ்வை
நமதென்று நாட்டுவோம் நன்கு!

132
சித்திரப் பூம்பாவாய்! சிந்தும் சிரிப்பழகை
எத்திறம் கொண்டுநான் ஏத்துவதோ? - முத்தமிழே!
உத்திரம் போன்றஎன் உள்ளம் உடையாமல்
பத்திரம் செய்கவே பார்த்து!

133.
முத்தமிழ்ச் சொற்கள்! மலர்முல்லை பற்கள்!என்
நித்திரை நீக்கும் நிலவுமுகம்! - புத்தமுத
முத்திரை முத்தங்கள் மோகப் பயிர்விளைக்கும்!
சித்திரைப் பெண்ணாய்ச் சிரித்து!

134.
என்னடி செய்தாய்? எந்நொடியும் உன்னினைவே!
கண்ணடி மேவும் சுககனவே! – பொன்னடி!
என்னடி தொட்டதால் ஏறுதடி உச்சிவரை!
உன்னடி ஊட்டும் உணர்வு!

135.
ஏடெடுத்துப் பாட! இனியசொல் என்னிதய
வீடெடுத்து நன்றாய் வினைபுரியும்! - ஈடிலாப்
பீடெடுத்துப் பெண்ணழகில் பின்னிக் கிடந்திட
மூடெடுத்து நிற்கும் முனைந்து!

136
எண்ணத்தில் என்னடீ ஏக்கம்? எடுத்ததை
வண்ணத்தில் தொய்த்து வடிவாக்கு! – மின்னிடும்
கன்னத்தில் நீதந்த கற்கண்டாம் முத்தங்கள்
என்னகத்தில் ஏற்றும் எழில்!

137.
போற்றடி காமன் புரிசெயலை! நீ..இன்ப
ஊற்றடி! என்றன் உயிரடி! – காற்றடி
ஏற்(று)அடி பாடிட ஏறிடும் போதையினால்
ஈற்றடி இல்லை இனித்து!

138
போர்தொடுத்து நிற்குதே பொன்விழிகள்! நெஞ்சே..நீ
தேரெடுத்துச் செல்லாதே! காதலாம் - வேர்செழிக்க
நீரெடுத்து ஊற்று! நெடுந்தமிழாள் உள்மயங்கிச்
சீர்கொடுத்து வாழ்வாள் செழித்து!

139.
குழல்தழுவும் மல்லிகை! கோதை மலர்சேர்
கழல்தழுவும் நற்சிலம்பு! கன்னி – நிழலால்
எழில்தழுவும் பொன்னிலம்! இப்படியும் வாழக்
குழல்தழுவும் கண்ணா கொடு!

140.
நோய்என்ன செய்யும்! நுவன்று தடுக்கின்ற
தாய்என்ன தந்தையென்ன செய்யும்!சொல்? - மாய்க்கின்ற
காய்என்ன செய்யும்! உயிர்சுரக்கும் காதலை
வாய்என்ன செய்யும் வரண்டு

(தொடரும்)

காதல் ஆயிரம் [பகுதி - 13]




காதல் ஆயிரம் [பகுதி - 13]

121.
எங்கோ இருந்தே எனதுயிரை ஈர்த்தாளும்
செங்கோட்டி யாழின் சிறப்பிசையே! – செங்கரும்பே!
நுங்கும் குளிரிழக்கும்! நுண்மொழியோ தேன்சுரக்கும்!
இங்கு..நீ சொர்க்கம் எனககு!

122.
தேவி தரிசனம் கிட்டாதா? தேன்கவி
தூவித் தரிசனம் தோன்றாதா? – பாவியென்
ஆவி கடைசேர ஆசைகள் தீராதா?
கூவிக் குலையும் குரல்!

123.
தரிசனம் வேண்டுமடி! தண்டமிழே என்மேல்
கரிசனம் வேண்டுமடி! கண்மணியே! – அரிய
அரி..சனம் வேண்டுமடி ஆழ்ந்துருகி! உன்றன்
வரிமணம் வேண்டுமடி வாழ்வு!

124.
தூக்கம் இலாமல் துவளுதடி! வாழ்விலென்றும்
ஊக்கம் இலாமல் உளறுதடி! – தாக்குமொரு
ஏக்கம் இலாமல் எனதுயிரை ஆட்கொள்ள
ஆக்கம் அளிப்பாய் அனைத்து!

125
அன்பே! அமுதே! அருந்தமிழே! ஈடிலா
இன்பே! எழிலே இசைமழையே! - பொன்னாகும்
பண்பே! பசுமைப் படர்வளமே! உன்பார்வை
தண்பே(று) அளிக்கும் தழைத்து!

126
மாதுரைத்த செய்திகளை மாண்பாக மின்மடல்
தூதுரைத்துப் போனதடி! துன்கடலில் - மீதுரைந்து
நான்கிடக்கும் காட்சிகளை நன்றே உரைப்பதெனில்
வான்கடக்கும் சோகம் வரிந்து!

127.
ஏதென் இனிமை இளயவளே நீயின்றி!
சூதுன் விழிகள்! சுடும்!குளிரும்! – போதைதரும்!
மாதுன் நினைவுகளை மாமழையாய்ப் பெய்கின்ற
தூதேன் விடுத்தாய்த் துணிந்து

128.
பாட்டின்முன் வந்தாடும் பாவையைப் பார்த்திடவே
வீட்டின்முன் வந்தாடும் வேளையிலே! - மீட்டுமிசை
காட்டுமுன் கண்ணழகு! கன்னல் கனியழகு!
வாட்டும்என் னெஞ்சை வளைத்து!

129.
தூதொன்(று) உரைத்துத் துடிதுடிக்கச் செய்தனையே!
வாதொன்(று) உரைத்து வதைக்காதே! – மாதுனைச்
சாதென்(று) உரைத்துத் தமிழ்கொடுத்தான்! சாடுவதேன்
தீதென்(று) உரைத்து தினம்!

130.
நம்மொழி பாடி நடமிடும் பேரழகே!
செம்மொழி பாடிச் செழிப்பூட்டும்! – அம்மாடி
உன்மொழி பாடி உருகுதடி என்னெஞ்சம்!
இன்மொழி பாடி இளைத்து!

(தொடரும்)

dimanche 27 janvier 2013

காதல் ஆயிரம் [பகுதி - 12]





காதல் ஆயிரம் [பகுதி - 12]

111
பாடவா... பாடிக் களித்ததும் சொர்க்கத்தைச்
சூடவா... நெஞ்சம் துடிக்குதடி! – ஆடவா...
தேடவா... தேனிலவை! சின்ன விழிபாதி
மூடவா காதல் மொழிந்து!

112
என்னென்(று) உரைப்பேன்? இளையவள் பேரழகை!
பொன்னென்றும் பூவென்றும் போற்றிடுவேன் - இன்பத்தின்
கண்ணென்று காட்டுவதும் கால்அளவே! அப்பப்பா...
விண்ணென்று செல்லும் விரிந்து!

113
ஒவ்வொரு பாட்டும் உயிரோ(டு) இணைந்துவிடும்!
செவ்விதழ்ச் செல்வியின் சீர்தரும்! – கவ்விய
அவ்விரு கண்களோ ஆழ்கடல் ஒக்குமே!
தவ்விடும் நெஞ்சம் தவித்து!

114
பாடும் குயிலே! நடமாடும் பொன்மயிலே!
வாடும் மனத்தால் வதைகின்றேன்! – பீடுகளைச்
சூடும் சுடர்க்கொடியாள் தூர இருக்கின்றாள்!
ஏடும் எழுத்தும் எதற்கு?

115.
இருவிழி நல்கும்! இதயம் இலகும்!
வரும்வழி நல்கும் வசந்தம்! - பெரும்சீர்
தரும்மொழி நல்கும் தனிச்சுகம்! காதல்
திருமொழி நல்கும் சிறப்பு!

116
எண்ணும் பொழுதெலாம் இன்பம் சுரக்குதடி!
கண்ணும் சொருகிக் கமழுதடி! – பெண்ணழகே
மண்ணும் மணக்கும்! மலர்தாள் நடந்துவரப்
பண்ணும் மணக்கும் படர்ந்து!

117.
மீண்டும் வசந்தம் விளைந்து செழித்ததடி!
தூண்டும் துயரம் தொலைந்ததடி! - ஆண்டிட
வேண்டும் கரும்புவில் வேந்தனடி! என்னவளே!
யாண்டும் இணைந்தே இரு!

118.
காற்றில் கமழ்ந்துவரும் கற்பூர முல்லையே!
ஈற்றில் இனித்துவரும் வெண்பாவே! - ஊற்றமுதே!
ஆற்றில் நிறைந்துவரும் வெள்ளமென ஆசைபெருகும்!
போற்றிப் புனைந்தேன் புகழ்!

119.
பாவலன் பாட்டால் பவனிவரும் வெண்ணிலவு
நாவளம் கேட்டு நடனமிடும்! – கோ..வளம்போல்
பாவளம் பெற்றதும் பண்ணிசை கற்றதும்
மாவள மங்கை மனத்து!

120.
ஒருநாள் நகருமே ஓராண்டாய்! வாழ்வின்
உருநான்! உயிர்நீ! உணர்க! – கரும்பே!
வருநாள் அனைத்தும் வளர்முகம் காட்டு!
திருநாள் ஒளிரும் திரண்டு!

(தொடரும்)

samedi 26 janvier 2013

காதல் ஆயிரம் [பகுதி - 11]





காதல் ஆயிரம் [பகுதி - 11]

101.
என்றும் மணக்கும் எழிலே! இளையவளே!
இன்றுன் இனிக்கும் மடல்பெற்றேன்! – என்னுயிருள்
நின்று கமழும் நெடும்தமிழ்போல் உன்பார்வை
வென்று கமழும் விரைந்து!

102.
சித்தம் மயங்கச் சிலிர்த்தெழுந்து உள்ளினிக்கப்
புத்தம் புதுவுலகைப் போந்தாளத் - தித்திக்கும்
முத்தக் கடல்மூழ்கி முத்தெடுத்துக் காமனுடன்
யுத்தம் புரிவோம் இணைந்து!

103.
முத்துச் சரமே! முகிழ்த்த மலர்க்காடே!
பித்து கொடுக்கின்ற பேரழகே! – நித்தமும்
நெஞ்சம் பொதிந்தாட நீங்காத இன்பத்துள்
மஞ்சம் பொலிந்தாட வா!

104.
முத்திரை மோதிரம்! மோகத் திருவரசன்
சித்திரை தேர்வலம்! சின்னவளே - முத்தமிழின்
புத்துரை பொன்னலம் போந்து புனையும்..பா
நித்திரை நீக்கும் நிலைத்து!

105
அல்லிக் குளக்கரையில் அன்பாம் அமுதருந்த,
அள்ளி அணைத்(து)அரைக் கண்மூடச் - சொல்லரிய
வெள்ளிக் கிழமை விரைந்துவரும்! ஆசைமனம்
துள்ளிக் குதிக்கும் தொடர்ந்து!

106
ஞாயிற்றுக் கிழமையில் நங்கை தரிசனம்
ஆயிற்(று) எனில்பொங்கும் ஆனந்தம்! - சேயிழையின்
வாயிட்டு வண்ணங்கள் வந்தாட வில்லையெனில்
போயிற்று வீணாய்ப் பொழுது!

107.
எடுத்தெழுதும் பேரழகு! இன்னுதடு நாளும்
கொடுத்தெழுதும் கன்னத்தில் கோலம்! - எடுப்பாய்த்
தொடுத்தெழுதும் முல்லை! தொடர்ந்தெழுத வா..வா
அடுத்தெழுதும் ஆசை அளித்து!

108.
கிர்ரென்(று) அடித்துக் கிளம்பும் தொலைப்பேசி
உர்ரென்(று) உறங்குவதேன் ஓய்ந்தின்று? – சர்ரென்றும்
விர்ரென்றும் நெஞ்சோடு வேல்விழியாள் எண்ணங்கள்
குர்ரென்று குத்தும் குவிந்து!

109
பாட்டினிக்கும்! ஆனால் படம்இங்(கு) இனிக்குதடி!
கூட்டினிக்கும்! கோலம் இனிக்குதடி! - தீட்டுகின்ற
சீட்டினிக்கும்! சீர்பல சேர்ந்தினிக்கும்! உன்மொழியைக்
கேட்டினிக்கும் நெஞ்சம் கிடந்து!

110
திண்டாட வைத்தவளே! தேவி சரண்என்று
மன்றாட வைத்தவளே! மல்லிகையே! - இன்றமிழை
உண்டாட வைத்தவளே! ஊர்வசியே! காதலைக்
கொண்டாட வைத்தவளே! கொஞ்சு!

(தொடரும்)