Affichage des articles dont le libellé est கையறுநிலை. Afficher tous les articles
Affichage des articles dont le libellé est கையறுநிலை. Afficher tous les articles

mardi 10 juillet 2018

கோனேரிக் கூத்தா!


கோனேரிக் கூத்தா!
வானேறி ஏன் சென்றாய்?

  
கோத்த மணியாகக் கோலக் கவிதைகளை
யாத்த இசைக்கவியே எங்குற்றாய்? - கூத்தின்
இருப்பாய் இருந்தனையே! உன்பிரிவைக் கேட்டு
நெருப்பாய்க் கொதிக்கிறது நெஞ்சு!
  
கோனேரிக் கூத்தா! கொடுமுலகின் துன்பத்தால்
வானேறிச் சென்றாயோ? வாடுகிறேன்! - ஊனேறி
என்றன் உயிரேறி நீ..இருந்தாய்! சொல்லாமல்
இன்றேன் பிரிந்தாய் இயம்பு?
  
ஓங்கி ஒலித்த குரலெங்கே? ஒண்டமிழைத்
தாங்கித் தழைத்த தலையெங்கே? - வீங்கிப்
புகழ்கொண்ட தோளெங்கே? பொங்கியழும் எம்மூர்
அகங்கொண்ட அன்பால் அதிர்ந்து!
  
ஒப்பனை வண்ணங்கள் உன்நினைவால் இங்குருகும்!
இப்பனை மார்பனை ஏன்பிரிந்தோம்? - அப்பப்பா
கூத்திடம் குன்றும்!நம் கோனேரி பாட்டின்றிப்
பாத்திரம் காணும் பழி!
  
பேச நினைத்தேன் பெருங்கவியே உன்னோடு!
பாசக் குயிலே! பறந்தனையே! - மோசத்
துயரில் முழுகுகிறேன்! தோழா!உன் பேரை
உயிரும் முனங்கும் உடைந்து!
  
பாட்டரசர் கி. பாரதிதாசன்
10.07.2018

lundi 10 avril 2017

கையறுநிலை

முனைவர் அ. அறிவுநம்பி கையறுநிலை
  
ஏனோ பிரிந்தனையோ? இங்குப் பிறந்ததும்
வீணோ எனமனம் வெந்தனையோ? - வானோரும்
அந்தமிழை நாடினரோ? அ.அறிவு நம்பியே!

எந்தமுளம் தேடுமுனை இங்கு!
  
ஆழ்ந்த உரையெங்கே? அன்பு மனமேங்கே?
சூழ்ந்த புகழெங்கே? துாய்மையுடன் - வாழ்ந்தவுன்
ஆற்றலறம் எங்கே? அருமறிவு நம்பியே!
கூற்றுவனைக் கொண்டதேன் கூறு
  
கம்பன் கவியாய்ந்தாய்! கன்னல் குறளாய்ந்தாய்!
இம்மண் உவக்க எழுத்தீந்தாய்! - நம்மொழி
ஆள அகங்கொண்டாய்! அ.அறிவு நம்பியே!
மீளாப் பிரிவேன் விரைந்து?
  
இளங்கோ இசையுணர்ந்[து] ஈந்த அரும்நுால்
வளங்கோ வகுத்தவழி வார்க்கும்! - விளக்கமினி
யாரிடம் யாம்பெறுவோம்? அ.அறிவு நம்பியே!
ஓரிடம் உன்னிணை ஓது?
  
எழுத இதழூண்டாம்! ஏற்றபணி யுண்டாம்!
தொழுத கலையுண்டாம்! தொன்மை - மொழிண்டாம்!
எல்லாம் உனைத்தேட, இன்னறிவு நம்பியே!
சொல்லாமல் சென்றாய் துணிந்து!

  
ஆழ்ந்த துயருடன்
  
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்:
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்