jeudi 13 septembre 2018

தாயகப் பயணம்


தாயகப் பயணம்
  
வணக்கம்!
  
17.09.2018 திங்கள் கிழமை இந்தியாவிற்கு வருகிறேன். ஒரு வாரம் புதுவையில் என் தாய் தந்தையுடன் மகிழ்வுடன் இருப்பேன்.
  
22.09.2018 சனிக்கிழமை என் இல்லத்தில் மரபுக் கவிதைப் பயிற்சி வகுப்பு நடத்துகிறேன். விருப்பமுடையோர் வருகை தந்து பயனுறவும்.
    
24.09.2018 திங்கள் கிழமை பிரான்சுக்கு திரும்புவேன்.
  
வகுப்பு நடைபெறும் இடம்
  
கலைமாமணி
கவிஞர் தே. சனார்த்தனன்
37, கருமாரத் தெரு
முதலியார்பேட்டை
புதுவை - 4
00413 2358909
  
செல்லும் இடமெல்லாம் செந்தமிழ்ச் சீர்மையைச்
சொல்லும் திறன்தருக! துாயவனே! - வில்லழகா!
கம்பன் உளமிருந்து காத்ததுபோல் என்னையும்
செம்பொன் சிறப்பேந்தச் செய்!
    
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்
13.09.2018

கம்பன் விழா


mercredi 12 septembre 2018

வெண்பா மேடை - 122



வெண்பா மேடை - 122
  
செய்யுள் சீரந்தாதி வெண்பா!
  
அந்தாதி - அந்தத்தை ஆதியாக உடையது என்பது இதன் பொருள். இறுதி முதல் என்பது இதன் தமிழாக்கம்.
  
அந்தாதி என்பது தமிழில் வழங்கும் 96 வகைச் சிற்றிலக்கியங்களில் ஒன்றாகும்.
    
அந்தாதி என்பது தொடை இலக்கணத்துள் ஒன்று.
  
ஈறு முதலாத் தொடுப்பது அந்தாதி என்று
ஓதினர் மாதோ உணர்ந்திசினோரே
[யாப்பருங்கலம் 52]
  
அந்தம் முதலாத் தொடுப்பது அந்தாதி
[யாப்பருங்கலக் காரிகை 17]
  
அடியும், சீரும், அசையும், எழுத்தும்
முடிவு முதலாச் செய்யுள் மொழியின் அஃது
அந்தாதி தொடையென்று அறைதல் வேண்டும்
[நத்தத்தனார்]
  
ஒரு செய்யுளின் ஈற்றில் உள்ள எழுத்தோ, அசையோ, சீரே, அடியோ அடுத்த செய்யுளின் முதலாக வருவது அந்தாதியாகும். இஃது ஒரு செய்யுளுக்குள்ளும் அடிதோறும் வருவதும் உண்டு. இந்த நான்கின் வழியாகத்தோன்றும் அந்தாதி எழுத்தந்தாதி, அசையந்தாதி, சீரந்தாதி, அடியந்தாதி என நான்கு வகையாகும்.
  
இரண்டு செய்யுட்களுள் நிகழும் அந்தாதிக்குச் செய்யுள் அந்தாதி என்று பெயர்.
  
பத்துப் பாடல்களைக் கொண்டது பதிற்றந்தாதியாகும். நுாறு பாடல்களைக் கொண்டது நுாற்றந்தாதி யாகும். இங்கு இரண்டு பாடல்களை மட்டும் அந்தாதியாக எழுதிவோம்.
  
வண்டு விழியழகே! வட்ட நிலவழகே!
குண்டு மலரின் கொழிப்பழகே! - நண்டு
பிடிபோட்[டு] உருண்டுவப்போம்! பேரழகுப் பெண்ணே!
கொடி..நாட்டு நெஞ்சைக் குடித்து!
  
குடித்து மயங்குகிறேன் கோதையே உன்னை!
துடித்து மயங்குகிறேன் தோழி! - மடித்தென்னைப்
பந்தாடும் பாவையே! பார்க்கும் பொழுதெல்லாம்
வந்தாடும் கற்பனை வண்டு!
  
[பாட்டரசர் கி. பாரதிதாசன்]
  
முதல் வெண்பா 'குடித்து' என்று நிறைவுற்று, அடுத்த வெண்பா குடித்து எனத் தொடங்கி அந்தாதி தெடையைப் பெற்றது. மேலும் முதல் வெண்பாவின் முதல் சீர் 'வண்டு' என்பது இரண்டாம் வெண்பாவின் முடிவாக வந்து அந்தாதி இலக்கணத்தைப் பெற்றது. முதல் வெண்பாவின் ஈற்றுச்சீர் அடுத்த வெண்பாவுக்கு முதலாக வருதல் சீரந்தாதி யாகும்.
  
அந்தாதி வகைகள்
  
செய்யுள் உறுப்பின் அடிப்படையில் அந்தாதியின் வகைகள்
  
1. எழுத்தந்தாதி, 2. அசையந்தாதி, 3. சீரந்தாதி, 4. அடியந்தாதி, 5. மயக்கந்தாதி, 6. மோனை அந்தாதி, 7. எதுகை அந்தாதி, 8. முரண் அந்தாதி, 9. இயைபந்தாதி, 10. அளபெடை அந்தாதி என வந்த வகையால் பெயர் பெறுகிறது.
  
எண்ணிக்கை அடிப்படையில் அந்தாதியின் வகைகள்
  
1. ஒரு பாடலுக்குள் வரும் தொடை அந்தாதி, 2. செய்யுள் அந்தாதி, 3. பதிற்றந்தாதி, 4. நுாற்றந்தாதி 5. பதிற்றுப் பத்தந்தாதி, 6. ஒலியந்தாதி.
  
பாக்களின் அடிப்படையில் அந்தாதியின் வகைகள்
  
1. வெண்பா அந்தாதி, 2. கலித்துறை அந்தாதி, 3. அகவல் அந்தாதி, 4. வஞ்சித்துறை அந்தாதி [அல்லது] இருசீர் அந்தாதி, 5. வஞ்சிவிருத்த அந்தாதி [அல்லது] முச்சீர் அந்தாதி, 6. கலிவிருத்த அந்தாதி [அல்லது] நாற்சீர் அந்தாதி, 8. திரிபு அந்தாதி, 9. திரிபு வெண்பா அந்தாதி, 10. கொம்பிலா வெண்பா அந்தாதி, 11. யமக அந்தாதி [அல்லது] மடக்கு அந்தாதி, 12. நிரோட்டக அந்தாதி, 13. நிரோட்டக யமக அந்தாதி, 14. ஏகபாத நுாற்றந்தாதி, 15. ஏகத்தாள் இதழகல் அந்தாதி, 16. சிலேடை அந்தாதி, 17. கலியந்தாதி 18. பல்சந்த அந்தாதி, 19. மும்மாலை அந்தாதி, 20. அந்தாதியில் சித்திரக் கவிகள்.
  
விரும்பிய பொருளில் செய்யுள் சீரந்தாதி வெண்பா பாடுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.
  
"பாவலர் பயிலரங்கம்" என்ற குழுவில் இணைந்து உயிர் வருக்கை வெண்பாக்களை தனிப்பதிவாகப் பதிவிட வேண்டுகிறேன்!
  
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்:
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்
12.09.2018

வெண்பா மேடை - 121



வெண்பா
மேடை - 121
  
மெய் வருக்கை வெண்பா!
  
ஊக்கம[து] ஓங்கிடவும், உச்சமது விஞ்சிடவும்,
மாட்சியது நண்ணிடவும், மத்தாப்புச் சிந்துவகை
செப்பமுறச் செம்மொழியில் செய்திடவும், சீர்பொங்கி
வல்லமை எவ்விடத்தும் வாழ்ந்திடவும், வெள்ளமென
நற்றிறனை என்கண்ணா நல்கு!
  
இந்த இன்னிசைப் பஃறொடை வெண்பாவில் மெய்யெழுத்துகள் பதினெட்டும் முறையே சீர்களின் இரண்டாம் எழுத்தாக வந்தன.
  
காக்கின்ற வேங்கடவா! காட்சிதர வேள்வியில்..வா!
வார்க்கின்ற யாப்பழகில் வாழ்ந்திட..வா! - வாய்க்கின்ற
பூந்தமிழாய் மூத்தவனே! போற்றுகிறேன்! மாச்சிறப்பை
வாஞ்சையுடன் தான்தர..வா! மால்வீடு - நான்காண
மீண்டும்..வா! தேவ்..நீ..வா ஈங்கு!
  
இந்த நேரிசைப் பஃறொடை வெண்பாவின் சீர்களின் இரண்டாம் எழுத்தாகப் பதினெட்டு மெய்யெழுத்துகளும் வந்தன. [இப்பாடல் கடையாகு எதுகையைப் பெற்றுள்ளது]
  
விரும்பிய பொருளில் மெய் வருக்கை இன்னிசை வெண்பா ஒன்றும், மெய் வருக்கை நேரிசை வெண்பா ஒன்றும் பாடுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.
  
"பாவலர் பயிலரங்கம்" என்ற குழுவில் இணைந்து உயிர் வருக்கை வெண்பாக்களை தனிப்பதிவாகப் பதிவிட வேண்டுகிறேன்!
  
அன்புடன்
  
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்:
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்
10.09.2018

mardi 4 septembre 2018

ஈரெழுத்து வெண்பா


ஈரெழுத்து வெண்பா
  
கண்ணிக் கிணைகாண்! கணைக்கிணைகாண்! கிண்கிணிகாண்!
கிண்ணிக் கிணைகாண்! கெக்கலிகாண்! - கண்ணிகாண்!
கண்ணுக் கணிகிணைகாண்! காணிகாண்! கேணிகாண்!
கண்ணே!கொக் கிக்கிணைக் காண்!
  
இதன்கண் ககரமும் ணகரமும் ஆகிய இரண்டு எழுத்துகளே வந்துள்ளன.
  
கண்ணி - பூங்கொத்து, பாட்டு
கணை - அம்பு
கிண்கிணி - காற்சதங்கை
கிண்ணி - கிண்ணம்
கெக்கலி
கிணை - உடுக்கை
காணி - வயல்
கேணி - கிணறு
  
வெண்பா விளக்கம்
  
மலருக்கும் அம்புக்கும் இணையான கண்கள். சலங்கை அணிந்த கால்கள். மின்னும் கிண்ணத்துக்கு இணையான கன்னங்கள். இவைகள் எனக்கு மகிழ்ச்சியை அளிக்கின்றன. பாடல்களை அளிக்கின்றன! கண்ணுக்கு அழகுட்டும் துடியிடையும், காணிபோல் விரிந்த கண்ணும், கேணிபோல் ஆழமான கண்ணும் கொக்கிபோல் என்னைக் கோத்து இழுப்பதைக் காண்க.
  
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்
04.09.2018