Affichage des articles dont le libellé est நடுவெழுத்தலங்காரம். Afficher tous les articles
Affichage des articles dont le libellé est நடுவெழுத்தலங்காரம். Afficher tous les articles

vendredi 21 décembre 2018

கேட்டலும் கிளத்தலும்


கேட்டலும் கிளத்தலும்
  
நடுவெழுத்தலங்காரம் என்றால் என்ன?
  
பாவலர் தென்றல், சென்னை.
-------------------------------------------------------------------------------------------------
  
வணக்கம்!
  
எழுத்துச் சுதகம், எழுத்து வருத்தனம், மாத்திரைச் சுதகம், மாத்திரை வருத்தனம், திரிபாகி, முதலெழுத்தலங்காரம், நடுவெழுத்தலங்காரம், கடையெழுத்தலங்காரம் ஆகியவை சொற்சித்திர கவிதையாகும்.
  
நடுவெழுத்தலங்கரத்தில் இரண்டு வகைகள் உள்ளன.
  
நடுவெழுத்தலங்காரம் - 1
  
பாடலில் குறிக்கப் பெறுகின்ற பொருட்களை மூன்றெழுத்துக் கொண்ட சொற்களில் தருவித்து, அவற்றின் நடுவெழுத்துகளை முறையே படிக்கப் பெயர் ஒன்று வரும்வண்ணம் பாடுவது நடுவெழுத்தலங்காரமாகும்.
  
கண்ணன் பெயராகும்! கன்னல் தமிழ்தரும்!
தண்ணீர் உறவாகும்! தண்மணிசேர் - பெண்ணணியாம்!
முற்றம்! சிறப்பு! மொழிந்த பதநடுவே
பற்றுடன் பண்ணரசைப் பார்!
  
கண்ணன் பெயராகும் - கோபால் - நடுவெழுத்து - பா
கன்னல் தமிழ்தரும் - பாட்டு - நடுவெழுத்து - ட்
தண்ணீர் உறவாகும் - ஓடம் - நடுவெழுத்து - ட
பெண்ணணியாம் - ஆரம் - நடுவெழுத்து - ர
முற்றம் - வாசல் - நடுவெழுத்து - ச
சிறப்பு - சீர்மை - நடுவெழுத்து - ர்
  
நடுவெழுத்துகளை இணைத்தால் 'பாட்டரசர்' என்ற பெயர் வருவதைக் காண்க.
  
பாட்டரசர் கி. பாரதிதாசன்
20.12.2018
  
நடுவெழுத்தலங்காரம் - 2
  
ஒரு பாடலில் வரும் சொல் ஒவ்வொன்றுக்கும் உரை மூன்றெழுத்தாக அமைத்து, நடுவெழுத்தெல்லாம் முறையாகச் சேர்ந்து ஒரு பாடலாக வரும்வண்ணம் பாடுவதும் நடுவெழுத்தலங்காரமாகும்.
  
நல்வினை மைந்தன்! நன்மை வேராம்!
நல்லொளி சேர்க்கை! பச்சை நாட்டியம்!
நெஞ்சக் கன்னி இன்னல் நல்கும்
சண்டை முறிதல்! சாரும் ஆசைத்
தொகுதி யனைத்தும் சூளை யிடமே!
இனிமை! மாட்சி! மேன்மை! ஆம்பல்!
கூத்தன் எண்ணம் பாவை கோன்றமிழ்
பூத்து நல்கும்! பொதுமை கண்ட
புண்ணியர் குறளும் பொழிலாய் மணக்கும்!
எண்ணும் நடுவெழுத் தெல்லாம் இணைந்தே!
  
நல்வினை - தவம்
மைந்தன் - பிள்ளை
நன்மை - வளம்
வேர் - மூலம்
சேர்க்கை - கூட்டு
பச்சை - பசுமை
நாட்டியம் - நடம்
நெஞ்சம் - மார்பு
கன்னி - குமரி
இன்னல் - துன்பு
நல்கும் - ஈனும்
சண்டை - அமர்
முறிதல் - முறிவு
சாரும் - மேவும்
ஆசை - காதல்
தொகுதி - பாரம்
அனைத்தும் - யாவும்
சூளை - சுள்ளை
இடமே - களமே
இனிமை - அமுது
மாட்சி - பெருமை
மேன்மை - தகுதி
ஆம்பல் - குமுது
கூத்தன் - சிவன்
எண்ணம் - சிந்தை
பாவை - பதுமை
  
பாடலில் வரும் ஒவ்வொரு சொல்லுக்கும், மூன்றெழுத்தில் பொருட்கண்டுணர்ந்த, சொற்களின் நடுவெழுத்துக்களை ஒன்றிணைத்தால் கீழுள்ள குறள் வெண்பா வரும்.
  
வள்ள லருட்சுடர் மன்னு மறிவுதர
வுள்ள முருகு முவந்து!
  
பாட்டரசர் கி. பாரதிதாசன்
20.12.2018
  
நடுவெழுத்தலங்காரம் - 3
  
இப்பாடலில் ஒவ்வொரு சீரும் ஒற்றைப்படை எண்ணிக்கையில் எழுத்துக்களைக் கொண்டிருக்க வேண்டும். [ 3, 5, 7,....] ஒவ்வொரு சீரின் நடுவெழுத்துகளைக் கூட்டிப் படித்தால் ஒரு பாடல் வரவேண்டும். இந்த வகை முன்னோர் இடத்தில் இல்லை. புதிய வகையாக ஏற்போம்.
  
அகவல்
  
புகழை வெல்க! புவியே யுயர
மகளே! அமுதே! வறுமை யகல
அகமே வண்ண அணியை ஏற்க!
முகமே இனிமை! மூவும் சிறுமை!
சுகமே தவமே! தொல்லை மூலம்
நகமே இலையே! ஞாயும் நறுமை
மிகவே வா!வா!வா! வாழ்வு மேவுமே!
  
சீா்களின் நடுவெழுத்துகளைச் சேர்த்துப் படித்தால் வரும் குறள்வெண்பா
  
கல்வி யகமுறுக! கண்ணிற் கனிவுறுக!
வல்ல கலையுறுக வாழ்வு!
  
பாட்டரசர் கி. பாரதிதாசன்
20.12.2018