mardi 30 avril 2013

மதி நாணுமோ?




மதி நாணுமே?

எடுப்பு

நெஞ்சம் துடிக்குதடி - உன்
நினைவு சிறக்குதடி !
                      (நெஞ்சம்)
தொடுப்பு

மஞ்சம் மணக்குதடி - என்
மனத்தை மயக்குதடி
                      (நெஞ்சம்)
முடிப்பு

கற்கண்டு கனிச்சாறே - உன்
கயல்விழி எனைக்கொல்லுமே!
நற்றமிழ் மதுக்குடமே - உன்
நன்மொழி எனைவெல்லுமே!
                      (நெஞ்சம்)

கற்பனைக் காவியமே - உன்
காதலே நிதியாகுமே!
அற்புத ஓவியமே - உன்
அழகினில் மதிநாணுமே!
                      (நெஞ்சம்)

02.05.1985

lundi 29 avril 2013

பாவாணா் வாழ்க்கைக் குறிப்பு




பாவாணர் வாழ்க்கைக் குறிப்புகள்
07.02.1902 - 16.01.1981

திருநெல்வேலி மாவட்டத்துச் சங்கரன்கோயிலில் திரு. ஞானமுத்தனார் - பரிபூரணம் அம்மையார் ஆகிய வாழ்விணை யர்க்குப் பத்தாவாதாகிய கடைக்குட்டிப் பிள்ளையாகவும் நான்காம் மகனாகவும் திரு. தேவநேயப் பாவாணர் பிறந்தார் (07-02-1902)

தேவநேயப் பாவாணரின் ஐந்தாம் அகவையில் அவர்தம் தந்தை ஞானமுத்தனார் இயற்கை யெய்தினார். பின்னர் அன்னை பரிபூரண அம்மையாரும் பெரும்பிறிதுற்றார்.

பெற்றோரை இழந்த தேவநேயப் பாவாணர், அவர் தம் மூத்த உடன்பிறப்பினர் அரவணைப்பில் வளர்ந்தார். சோழபுரம் விடையூழியப் பள்ளி மாணவர் விடுதியில் சேர்க்கப் பெற்றுத் தொடக்கக் கல்வி பயின்ற அவர், தம் மூத்த அக்கையாருடன் ஆம்பூருக்குச் சென்று அங்கிருந்த மிசௌரி நல்லஞ்சல் உலுத்திரன் விடையூழிய நடுநிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்புவரை பயின்று தேர்ச்சி பெற்றார்.

சீயோன்மலை எனப்படும் முறம்பில் விடை யூழியராக இருந்து கல்விப்பணி யாற்றி வந்த 'எங்கு' என்னும் துரைமகனாரிடம் கடனுதவி பெற்றுப் பாளையங்கோட்டைத் திருச்சபை விடையூழியக் கழக உயர்நிலைப் பள்ளியில் ஆறாம் படிவம் (பதினோராம் வகுப்பு) வரை பயின்று தேறினார்.

(கி. பி. 1919)

பள்ளியிறுதி தேறிய தேவநேயனார் தாம், கடன்பட்டிருந்த துரைமகனாரின் (எங்கு) ஆளுகைக்குட்பட்ட சீயோன் மலை நடுநிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பு ஆசிரியராகத் தமது பதினேழாம் அகவையில் பணி மேற்கொண்டார். முறையான ஆசிரியப் பயிற்சியும் பெற்றார்.

(கி. பி. 1922)

ஆம்பூருக்குச் சென்று பாவாணர் தாம் பயின்ற மிசௌரி நல்லஞ்சல் உலுத்திரன் நடுநிலைப் பள்ளியிலேயே ஆசிரியப் பணி யேற்று மாணாக்கர்க்குத் தமிழ் பயிற்றினார்.

தேவநேயனார் மாணாக்கர்க்குத் தமிழ் பயிற்றும் ஆற்றலுடையவர் என்பதற்குச் சான்றிதழ் வழங்கிய பாளையங்கோட்டைத் திருச்சபை விடையூழிய உயர்நிலைப் பள்ளித் தமிழாசிரியர் பண்டித மாசிலாமணியார், தேவநேயனாரின் பாடல் புனையும் ஆர்வத்தையும் ஆற்றலையும் அறிந்திருந்தமையால் அவர் பெயரைத் தேவநேசக் கவிவாணன் என்று சிறப்புறக் குறிப்பிட்டிருந்தார். தேவநேயனார்க்குப் பெற்றோர் இட்ட பெயர் தேவநேசன் என்பதே. இக் கவிவாணன் என்னும் சிறப்புப் பெயரே பின்னாளில் பாவாணன் என்று தமிழாக்கமுற்றுப் பாவாணர் எனும் புகழார்ந்த பெரும் பெயராகி வழங்கப் பெற்று வருகின்றது.

(கி. பி. 1924)

மதுரைத் தமிழ்ச் சங்கப் பண்டிதத் தேர்வு எழுதி வெற்றி பெற்றார் பாவாணர். மிகச் செறிவான பாடத் திட்டங் கொண்ட அத் தேர்வில்; நுழைவு, இளநிலை என்னும் கீழ்நிலைத் தேர்வுகள் எழுதாமலே நேரடியாக இறுதி நிலைத் தேர்வு எழுதிய பாவாணர்  அதில் இரண்டாம் வகுப்பில் தேர்ச்சியுற்றார். அவ்வாண்டு அத் தேர்வெழுதியவர்களுள் பாவாணர் ஒருவரே வெற்றி பெற்றார்; என்பது குறிப்பிடத் தக்கது. சென்னை, திருவலிக்கேணிக் கெல்லற்று உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராகப் பணியாற்றினார்.

(கி. பி. 1925)

சென்னைக் கிறித்தவக் கல்லூரி உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியப் பணிபுரிந்தார். 'சிறுவர் பாடல் திரட்டு' நூல் வெளிவந்தது. வெளியீடு: இந்தியக் கிறித்தவ இலக்கியக் கழகம்.

(கி. பி. 1926)

திருநெல்வேலித்  தென்னிந்தியத் தமிழ்ச் சங்கம் நடத்திய தனித்தமிழ்ப் புலவர் தேர்வு எழுதி வெற்றி பெற்றார் பாவாணர். அவ்வாண்டு அத்தேர்வு எழுதியவர்களுள் இவர் ஒருவரே வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத் தக்கது. சென்னை - பெரம்பூர்க் கலவல கண்ணனார் உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியப் பணி மேற்கொண்டார். இப்பணி ஈராண்டு தொடர்ந்தது.

(கி. பி. 1928)

மன்னார்குடிப் 'பின்லே' கல்லூரி உயர்நிலைப் பள்ளியில் தலைமைத் தமிழாசிரியராகப் பணியேற்றார். இப் பணி ஐந்தாண்டு தொடர்ந்தது.

பாவாணரின் முதல் மனைவி எசுத்தர் அம்மையார், 'மணவாளதாசன்' என்னும் கைக் குழந்தையை விட்டுவிட்டு இயற்கை யெய்தினார்.

(கி. பி. 1929)

'துவாரகை மன்னன் அல்லது பூபாரம் தீர்த்த புண்ணியன்' என்னும் நூல் வெளிவந்தது, வெளியீடு: சண்முகா பதிப்பகம், மன்னார்குடி.

(கி. பி. 1930)

பாவாணர் தேவநேயனார் தம் அக்கை மகள் நேசமணி அம்மையாரை மணந்தார்.

(கி. பி. 1931)

செந்தமிழ்ச் செல்வியில் பாவாணரின் 'மொழியாராய்ச்சி' என்னும் கட்டுரை வெளிவந்தது. செல்வியில் வெளிவந்த பாவாணரின் முதற் கட்டுரை இதுவே. (செ. செ. 9 : 275)

நேசமணி யம்மையார் ஆண்மகவு ஈன்றார். தம் மகனுக்குப் பாவாணர் சூட்டிய பெயர் நச்சினார்கினிய நம்பி.

(கி. பி. 1932)

'கிறித்தவக் கீர்த்தனைகள்' நூல் வெளிவந்தது.

(கி. பி. 1934)

திருச்சிப் புத்தூர் ஈபர் கண்காணியார் உயர்நிலைப் பள்ளியில் தலைமைத் தமிழாசிரியராகப் பொறுப்பேற்றார். இப்பணி ஒன்பதாண்டுக் காலம் தொடர்ந்தது.

(கி. பி. 1936)

'கட்டுரை வரைவியல்' என்னும் நூல் வெளிவந்தது. ஆசிரியரின் சொந்த வெளியீடு.

(கி. பி. 1937)

கட்டாய இந்திக் கல்விக் கண்டனம் - 'செந்தமிழ்க் காஞ்சி' என்னும் இசைப்பா நூல் வெளி வந்தது. காந்தியடிகளின் படம் பொறித்த அட்டை தாங்கிய இந்நூலின் ஆசிரியர் 'தேசாபிமானத் தமிழ்த் தொண்டன்' (இது பாவாணர் புனைந்து கொண்ட பெயர்). ஆசிரியரின் சொந்த வெளியீடு.

(கி. பி. 1939)

'பைந்தமிழ் வளர்த்த பாண்டியன்' என்று பெயர் சூட்டப் பெற்ற பாவாணரின் குழமகன் மறைவு. (2-12-39)

(கி. பி. 1940)

'ஒப்பியன் மொழிநூல்' வெளிவந்தது. ஆசிரியரின் சொந்த வெளியீடு. இந்நூலைப் பேராயக் கட்சிப் பெருமகனும் பெயர் பெற்ற அறுவையருமான பண்டகர் மல்லையா அவர்களுக்குப் படையலாக்கியுள்ள பாவாணர், தமக்கு உற்றிடத் துதவிய நன்றிக் குறியாக அப்புத்தகம் அவர்க்குப் படைக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். 'இயற்றமிழ் இலக்கணம்' சைவ சித்தாந்த நூற் பதிப்புப் கழக வாயிலாக வெளியிடப்பட்டது.

1972 (கி. பி. 1941)

'தமிழர் சரித்திரச் சுருக்கம்' என்னும் நூல் வெளிவந்தது. வெளியீடு: இளைஞர் மன்றம்.

(கி. பி. 1943)

சென்னை-மண்ணடி முத்தியாலுப்பேட்டை உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராகப் பொறுப்பேற்றார். இப்பள்ளியில் பாவாணரோடு உடன் பணியாற்றியவர் முனைவர் மா. அரசமாணிக்கனார். சென்னையில் சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகச் சார்பில் பண்டிதமணி கதிரேசனார் தலைமையில் நடைபெற்ற முதலாம் தமிழுணர்ச்சி மாநாட்டில் பாவாணர் பங்கேற்று உரை நிகழ்த்தினார்.

'சுட்டு விளக்கம் அல்லது அடிப்படை வேர்ச் சொல் ஐந்து' என்னும் நூல் வெளிவந்தது. ஆசிரியரின் சொந்த வெளியீடு.

(கி. பி. 1944)

சேலம் நகராண்மைக் கல்லூரியில் தலைமைத் தமிழாசிரியராக அமர்த்தம் பெற்று அப் பணியை யேற்றார். பின்னர்ப் பேராசிரியரானார். (சேலங் கல்லூரிப் பணி பன்னீராண்டுக் காலம் தொடர்ந்தது). 'திராவிடத் தாய்' நூல் வெளி வந்தது. ஆசிரியரின் சொந்த வெளியீடு.

(கி. பி. 1949)

சேலங் கல்லூரியில் திரு. துரை. மாணிக்கம் (பாவலரேறு பெருஞ்சித்திரனார்) பயின்றார். ஈராண்டுகள் (1949-50, மற்றும் 50-51) அவர் பாவாணருக்கு மாணவராக விளங்கினார்.

பாவாணரின் 'சொல்லாராய்ச்சிக் கட்டுரைகள்' என்னும் நூல் வெளிவந்தது. சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழக வெளியீடு.

பாவாணர்க்குத் தவத்திரு மறைமலையடிகளார் சான்றிதழ் வழங்கினார். சொல்லாராய்ச்சித் துறையில் பாவாணர் மிகவும் உழைப்பெடுத்து ஆராய்ந்து எழுதியிருப்பவற்றைத் தமிழறிஞர்கள் நன்றாக நம்பலாம் எனவும், அத்துறையில் அவர் ஒப்பற்ற தனித் திறமையுடையவர் என்றும் அவருக்கு ஒப்பாக இருப்பவர் அருமையாகு மென்றும் தாம் உண்மையாகவே கருதுவதாகவும் அச் சான்றிதழில் அடிகளார் குறிப்பிட்டிருப்பது மனங் கொள்ளத் தக்கது.
(கி. பி. 1951)

'உயர்தரக் கட்டுரை இலக்கணம்' (முதற் பாகம்) வெளிவந்தது. வெளியீடு: சை. சி. நூ. பதிப்புக் கழகம்.

(கி. பி. 1952)

கலைத் தலைவன் (M.A) தேர்வெழுதிப் பட்டம் பெற்றார். 'பழந்தமிழாட்சி' நூல் வெளிவந்தது. சை. சி. நூ. பதிப்புக் கழகம்.

(கி. பி. 1953)

'முதல் தாய் மொழி அல்லது தமிழாக்க விளக்கம்' என்னும் நூல் வெளிவந்தது. வெளியீடு: சை. சி. நூ. பதிப்புக் கழகம்.

(கி. பி. 1954)

'தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்' என்னும் நூல் வெளிவந்தது. வெளியீடு: சைவ சித்தாந்த நூற் பதிப்புக் கழகம்.

(கி. பி. 1955)

சேலம் தமிழ்ப் பேரவை பாவாணருக்குக் 'திராவிட மொழி நூல் ஞாயிறு' என்னும் பட்டத்தை வழங்கிச் சிறப்பித்தது. விழாத் தலைவர் பெரியார் .வே.இரா.

"A Critical Survey of Madras Univercity Lexion" என்னும் ஆங்கில நூல் வெளியிடப் பெற்றது. ஆசிரியரின் சொந்த வெளியீடு. (17-06-55)

(கி. பி. 1956)

அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் 'திராவிட மொழி யாராய்ச்சித் துறை' வாசகராக அமர்த்தம் பெற்று, அப் பணியை ஏற்றார். (12-07-56) 'தமிழர் திருமணம்' நூல் வெளிவந்தது. வெளியீடு: நச்சினார்க்கினிய நம்பி.

தி. பி. 1988 (கி. பி. 1957)

அண்ணாமலைப் பல்கலைக் கழகத் திரவிட மொழியியல் துறைத் தொடக்கக் கூட்டம் திரு. சுநீதிகுமார்(சட்டர்சி) தலைமையில் நடைபெற்றது. பாவாணர்க்கும் அவர்க்கும் கருத்து மோதல் நிகழ்ந்தது. (8-04-57)

தேராதூனில் ஒன்றரை மாதம் நடைபெற்ற கோடைக் கால மொழியியல் வகுப்பில் பங்கேற்றார். (மே, சூன். 57)

பாவாணர் மகன் நச்சினார்க்கினிய நம்பியின் திருமணம்.(19-08-57)

தில்லியில் முன்று நாள்கள் நடைபெற்ற அனைத்திந்தியக் கீழைக் கலை மாநாட்டில் பாவாணர் பங்கேற்றுச் சிறப்பித்தார்.
(27, 28, 29,-12-57)

(கி. பி. 1959)

மொழிஞாயிறு பாவாணர் அவர்களால் பெயர் சூட்டப்பட்ட 'தென்மொழி' இதழ் பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்களால் தொடங்கப் பெற்றது. அரை மாதிகையான அதன் முதல் இதழ் (இயல்: 1, இசை: 1) நெல்லிக் குப்பத்தினின்றும் 1959 ஆகத்தில் வெளிவந்தது. இதழின் சிறப்பாசிரியராக இருக்குமாறு பாவாணரை வேண்டிக் கொண்டதாகவும்  அவரும் இசைந்திருப்பதாகவும் அப்போது அவர் பணியாற்றிய அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தினின்றும் முறையான இசைவை எதிர் நோக்கி இருப்பதாகவும் தென்மொழியின் முதல் இதழிலேயே ஆசிரியர் குறிப்பாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

(கி. பி. 1960)

பாவாணர் தம் ஆட்சித் துறைக் கலைச் சொல்லாக்கங் குறித்துப் பாராட்டித் தமிழ் நாட்டரசுச் சார்பில் அவருக்குச் செப்புப் பட்டயம் வழங்கப்பட்டது. வழங்கிச் சிறப்புற்றவர் அற்றைத் தமிழ்நாட்டு ஆளுநர்.

தி. பி. 1992 (கி. பி. 1961)

அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் பணி தொடர முடியாத நிலையில், தன்மானத்துடன் அங்கிருந்து வெளியேறினார்.(21- 09-61)

"A Critical Survey of Madras Univercity Lexion" என்னும் நூலின் தமிழாக்கமான 'சென்னைப் பல்கலைக் கழக அகர முதலியின் சீர்கேடு' வெளியாயிற்று, ஆசிரியரின் சொந்த வெளியீடு.

(கி. பி. 1963)

சிறப்பாசிரியராகப் பாவாணர் பெயர் தாங்கித் 'தென்மொழி' இதழ் (சுவடி: 1, ஓலை: 1) முன்னை இடையீடுக்குப் பின் மாதிகை யாகவும் புதிய பொலிவோடு 63 பிப்பிரவரி முதல் மீண்டும் தன் வீறார்ந்த நடையைத் தொடர்ந்தது.

பாவாணரின் ஆருயிர்த் துணைவியாரான நேசமணி அம்மையார் நோய்வாய்ப்பட்டு இயற்கை யெய்தினார். (27-10-1963) வருவாய் குன்றியும் களைகண் இன்றியும் பாவாணர் பெரிதும் அலக்கணுற்றார். இந்நிலையில் அவருக்கு உதவும் பொருட்டுப் பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்கள் 'பாவாணர் பொருட் கொடைத் திட்டம்' என்னும் திட்டத்தைச் செயற்படுத்தத் தொடங்கினார். அது பற்றிய அறிவிப்புத் தென்மொழியில் (சுவடி: 1, ஓலை: 11) வெளிவந்தது.

(கி. பி. 1964)

முனைவர் சி. இலக்குவனார் தலைமையிலான மதுரைத் தமிழ்க் காப்புக் கழகம் பாவாணரின் பணிகளைப் பாராட்டி அவர்க்குத் 'தமிழ்ப் பெருங்காவலர்' என்னும்  பட்டம் வழங்கிச் சிறப்பித்தது.
(12-01-64)

தென்மொழியின் 'பாவாணர் பெரும்கொடைத் திட்டம்' (பாவாணர் விரும்பியாங்கு) முற்றுப்பெற்றது. (06-07-64)

'என் அண்ணாமலை நகர் வாழ்க்கை' என்னும் கட்டுரைத் தொடர் தென்மொழியில் (சுவடி: 2, ஓலை: 6 முதல் 12 முடிய) வெளிவந்தது.

(கி. பி. 1965)

பாவாணரின் புதல்வி மங்கையர்க்கரசி திருமணம். மணவாளப் பிள்ளை இராபின்சன். இவர் பெயரை அறவாழி என்று மாற்றக் கருதியிருந்தார் பாவாணர். (19-04-65)

தென்மொழியில் அதன் பொறுப்பாசிரியர் பாவலரேறு பெருஞ்சித்திரனார் இந்தி வல்லாண்மையை எதிர்த்துக் கடுமையாகச் சாடி எழுதியமையால், தென்மொழி ஆசிரியர் குழுவின் மீது, தமிழ்நாட்டரசு இந்தியப் பாதுகாப்புச் சட்டப்படி வழக்குத் தொடர்ந்தது. அவ்வழக்கில் குற்றஞ்சாட்டப் பெற்றோர் பட்டியலில் பாவாணர் பெயர் முதலில் இடம் பெற்றிருந்தது. பாவாணர் சிறப்பாசிரியரே என்பதாலும், கட்டுரைக்குப் பாவலரேறு அவர்களே பெறுப்பேற்றுக் கொண்டமையாலும் பாவாணர் அவர்கள் வழக்கினின்றும் விடுவிக்கப் பெற்றார். அதன் பின் பாவாணர் விருப்பப்படி தென்மொழி (சுவடி: 3, ஓலை: முதல்) சிறப்பாசிரியர் என்னும் நிலையில் பாவாணர் பெயர் இடம் பெறவில்லை.

(கி. பி. 1966)

பாவாணரின் "The Primary Classical Langage of the World" என்னும் ஆங்கில நூல் வெளியீட்டு விழா திருநெல்வேலி மாவட்டம் முக்கூடலில் முனைவர் சி. இலக்குவனார் தலைமையில் நடைபெற்றது. பேராசிரியர் .கி. பரந்தாமனார், முனைவர் மெ. அழகனார் முதலானோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். (09-04-66) (இந் நிகழ்வு நாள் அந்நூல் வெளியீட்டுக்குப் பொருளுதவி செய்த முக்கூடல் சொக்கலால்ராம் (சேட்டு) என்பாரின் 34 ஆவது பிறந்த நாளாகும்.)

துறையூரில் செங்காட்டுப்பட்டிப் பாவாணர் நூல் வெளியீட்டுக் குழுவின் சார்பில், தவத்திரு. குன்றக்குடி அடிகளார் தலைமையில் பாவாணர்க்குப் பாராட்டு விழா. பொன்னாடை போர்த்திப் பொற்கிழி (உரு. 4001) வழங்கினார். அத் தொகை தமிழ் வரலாறு, வடமொழி வரலாறு நூல்களின் வெளியீட்டுக்குப் பயன்படுத்தப்படும் என்றார் பாவாணர் (06-10-66).

'பண்டைத் தமிழ் நாகரிகமும் பண்பாடும்' 'இசைத்தமிழ்க் கலம்பகம்' என்னும் பாவாணர் நூல்கள் நேசமணியம்மையார் நினைவு வெளியீடாக வெளிவந்தன. ஆசிரியரின் சொந்த வெளியீடு.
தி. பி. 1998 (கி. பி. 1967)

மதுரைத் தமிழ் எழுத்தாளர் மன்றம்' பாவாணர் மணிவிழாவைக் கொண்டாடியது: பாவாணர்க்கு 'மொழிநூன் மூதறிஞர்' என்னும் பட்டம் வழங்கியும் பொற்கிழி (உரு. 7352;) அளித்தும் சிறப்பித்தது (08-09-67). அழைப்பிதழ் காலங்கடந்தே கைவரப் பெற்றமையால் இவ்விழாவில் பாவாணர் கலந்து கொள்ள இயலவில்லை. பட்டமும் பணமும் விழாத் தலைவர் முத்தமிழ்க் காவலர் கி..பெ. விசுவநாதம் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுப் பின்னர்ப் பாவாணர்க்குச் சேர்ப்பிக்கப் பெற்றன. The Language Problem of Tamilnad and its Logical Solution என்னும் நூல் வெளிவந்தது. ஆசிரியரின் சொந்த வெளியீடு. 

'தமிழ் வரலாறு', 'வடமொழி வரலாறு' - என்னும் நூல்கள் வெளி வந்தன. வெளியீடு: நேசமணி பதிப்பகம்.

(கி. பி. 1968)

திருச்சியில் நடைபெற்ற மாநாட்டில் உலகக் தமிழ்க் கழகம் தொடங்கப்பட்டது. பாவாணர் தலைமைப் பொறுப்பேற்றார்(10-06-68)
பர்.மே. அழகனார் துணைத்தலைவராகவும் பாவலரேறு பெருஞ் சித்திரனார் பொதுச் செயலாளராகவும், புலவர் இறைக்குருவனார் துணைப் பொதுச் செயலாளராகவும் திரு. செங்கை செந்தமிழ்க் கிழார் (நா. செல்வராசன்) பொருளாளராகவும் தெரிந்தெடுக்கப் பெற்றனர்.

திருச்சி மாவட்டம் புத்தனாம் பட்டியில் பாராட்டு விழா. பாவாணர்க்குப் பொன்னாடை போர்த்திப் பொற்கிழி வழங்கப்பெற்றது.

'இந்தியால் தமிழ் எவ்வாறு கெடும்?' 'வண்ணனை மொழிநூலார் வழுவியல்' என்னும் நூல்கள் வெளிவந்தன. ஆசிரியரின் சொந்த வெளியீடு.

(கி. பி. 1969)

பெரியார் தென்மொழிக் கல்லூரி என்னும் பெயரில், தமிழையும் பதினெண் திராவிட மொழிகளையும் தமிழ் வாயிலாகவும் ஆங்கில வாயிலாகவும் கற்பிக்கும் கல்லூரி ஒன்றைச் சென்னையில் நிறுவும்படி பெரியார் .வே.இரா. அவர்கட்கு வேண்டுகோள் விடுத்தார் பாவாணர் (25-06-69). இக் கடிதத்தை வேலூருக்கு வந்த பெரியாரிடம் பாவாணர் நேரிற்கொடுத்தார். இறுதிவரை அதற்கு மறுமொழி கிட்டவில்லை.

நீலமலை-பெரும் பகல்லாவில் ஏறத்தாழ ஒரு மாதம் தங்கி மொழிஞாயிறு பாவணர் அவர்கள் மலைவாணர் வழக்காற்றுத் தமிழ்ச் சொற்கள் திரட்டினார்;. தமிழன்பர்களோடு இலக்கண வகுப்பு நடத்தினார். பாவாணர், தங்கல் ஏற்பாடு: தென்மொழி நா. இளமாறன்.

பாவாணர் தலைமையில் உலகத் தமிழ்க் கழகத்தின் முதல் மாநாடு பறம்புக்குடியில் நடைபெற்றது. தவத்திரு குன்றக்குடி அடிகளார், முனைவர் சி. இலக்குவனார், .சுப. மாணிக்கம், புலவர் குழந்தை முதலானோர் இம் மாநாட்டிற் பங்கேற்றனர் (28, 29-12-69)

பாவாணரின் திருக்குறள் தமிழ் மரபுரை வெளியிடப்பட்டது. வெளியீடு: நேசமணிப் பதிப்பகம். 'இசையரங்கு இன்னிசைக் கோவை' 'தமிழ் கடன்கொண்டு தழைக்குமா' -என்னும் நூல்கள் வெளிவந்தன. வெளியீடு : முகவை மாவட்ட . . .

(கி. பி. 1970)

கருநாடகத் தமிழர்க்குப் பாதுகாப்பு அளிக்கக் கோரி, அம் மாநில முதல்வர் வீரேந்திர பாட்டீலுக்குப் பாவாணர் ஒரு வெளிப்படைக் கடிதம் எழுதினார் (08-05-70). தமிழ்நாட்டுத் தாளவாடியைக் கருநாடகத்தோடு இணைக்க வேண்டிக் கிளர்ச்சி செய்த வாத்தல் நாகராசனைத் தமிழ்நாட்டரசுச் சிறைப் படுத்தவே வன்முறைக் கும்பல் கருநாடகத் தமிழர் மீது கடுந்தாக்குதல் நடத்தியமையால் அவர்கட்குப் பாதுகாப்பு அளிக்கக் கோரிப் பாவாணர் எழுதிய வெளிப்படைக் கடிதம் ஆங்கில வடிவிலேயே தென்மொழியில் வெளியாகியுள்ளது (தென்மொழி சுவடி: 7 ஓலை: 12).

நெய்வேலியில் 'பாவாணர் தமிழ்க் குடும்பம்' என்னும் அமைப்புத் தொடங்கப் பட்டது (02-08-1970) 'துணைவன் கொண்ட கொள்கையைத் துணைவி ஏற்கவும், துணைவியின்  உணர்வைத் துணைவன் மதிக்கவும் அவற்றை மக்கள் கடைப்பிடிக்கவுமாகத் தனி நிலையிலும்   குடும்ப நிலையிலும் ஒவ்வொருவரும் மொழி இன நாட்டு வளர்ச்சிக்கு உண்மையில் பயன்படச்  செய்யும் பண்பாட்டு அமைப்பே பாவாணர் தமிழ்க் குடும்பம்.' அமைப்பின் நிறுவநர்: தா. அன்புவாணன் வெற்றிச் செல்வி. பாவாணரின் சொல்லாய்வு நலம் பாராட்டிச் சைவ சித்தாந்த நூற் பதிப்புக் கழகம் அவர்க்கு வெள்ளித் தட்டம் வழங்கியும் பட்டுப் போர்த்தியும் சிறப்பித்தது.

சிறப்பாசிரியராகப் பாவாணர் பெயர் தாங்கி உலகத் தமிழ்க் கழக மாதிகையாக 'முதன்மொழி' வெளிவந்தது.

(கி. பி. 1971)

பாவாணர் தலைமையில் உலகத் தமிழ்க் கழகத்தின் இரண்டாவது பொது மாநாடு மதுரையில் இருநாள் நடைப்பெற்றது. தவத்திரு. குன்றக்குடி அடிகளார், பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரையார், பேரா. கோ. நிலவழகனார், பேரா. வி.மு. வில்லவதரையனார், முனைவர் .. அறவாணன் முதலானோர் இம் மாநாட்டிற் கலந்து கொண்டனர் (9,10-01-71)

பறம்பு மலையில் தவத்திரு. குன்றக்குடி அடிகளார் தலைமையில் நடைபெற்ற பாரி விழாவில், பாவாணர் 'செந்தமிழ் ஞாயிறு' என்று பாராட்டிச் சிறப்பிக்கப் பெற்றார். அன்றைய முதலமைச்சர் கலைஞர் அருட்செல்வனார் விழாவில் கலந்துகொண்டு பாவாணர்க்குப் பொன்னாடை போர்த்திச் சிறப்பித்தார் (05-05-71)

தென்மொழியில் 'செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகர முதலித் திட்டம்' வகுக்கப் பெற்று அறிவிக்கப்பட்டது. திட்ட உறுப்பினர் இருநூறு பேர், ஒவ்வொருவரும் மாதந்தோறும் உரு. 20 பாவாணர்க்கு அனுப்பி வைப்பதென்றும் அதில் ஒரு பாதித் தொகை அகரமுதலி உருவாக்கத்திற்கும் மறுபாதித் தொகை அதன் வெளியீட்டுக்கும் செலவிடப்படும் என்றும் செம்மையான திட்டம் வகுக்கப்பட்டு முறையாகச் செயல்படத் தொடங்கியது. அன்பர்கள் ஆர்வத்தொடு உறுப்பினராகிப் பாவாணர்க்குத் தொகை விடுத்து வரலாயினர்.

மொழிஞாயிறு பாவாணர் அவர்கள் வால்பாறையில் பத்து நாட்கள் தங்கி மலைவாணர் வழக்காற்றுச் சொற்கள் திரட்டும் பணியில் ஈடுபட்டார். பாவலரேறு அவர்களும் உடன் சென்றிருந்தார். தங்கல் ஏற்பாடு: வால்பாறைக் குறிஞ்சிப் பேரவை சார்பில் திரு. மாரி. விசுவநாதன்.

(கி. பி. 1972)

உலகத் தமிழ்க் கழகத்தின் சார்பில், தமிழன் பிறந்தகத் தீர்மானிப்புக் கருத்தரங்க அறைகூவல் மாநாடு தஞ்சை அரண்மனை இசை மண்டபத்தில் பெரும் புலவர் நீ. கந்தசாமி அவர்கள் தலைமையில் நடைபெற்றது. பாவாணர் பேருரையாற்றினார். இம் மாநாட்டில் அறிவியலறிஞர், கோவை. கோ. துரைசாமி, பாவலரேறு பெருஞ்சித்திரனார், வீ..கா. சொல்லழகனார், குடந்தை சுந்தரேசனார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

'தமிழர் வரலாறு', 'தமிழர் மதம்'-என்னும் நூல்கள் வெளிவந்தன. வெளியீடு: நேசமணி பதிப்பகம்.

(கி. பி. 1973)

'வேர்ச் சொல் கட்டுரைகள்' நூல் வெளிவந்தது. வெளியீடு: சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம்.

(கி. பி. 1974)

தமிழ் நாட்டரசு வகுத்த 'செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகர முதலித் திட்ட இயக்கத்தின் இயக்குநராகப் பாவாணர் அவர்கள் முதலமைச்சர் கலைஞர் அருட்செல்வனார் அவர்களால் அமர்த்தப் பட்டார் (08-05-74).

(கி. பி. 1975)

நெய்வேலிப் பாவாணர் தமிழ்க் குடும்பத்தினர் சுற்றுலாவாகச் சென்னை வந்து பாவலரேறு பெருஞ்சித்திரனார் உடனிருக்க பாவாணருடன் அளவளாவி மகிழ்ந்தனர் (16-10-75)

சென்னை மருத்துவக் கல்லூரி மாணவர்கள் திரு. .எல். சீனிவாசன் தலைமையில் நடத்திய முத்தமிழ் மாநாட்டில் பாவாணர் அவர்கள் முதலமைச்சர் கலைஞர் அருட்செல்வனார் அவர்களால் பொன்னாடை போர்த்திச் சிறப்பிக்கப் பெற்றார்.

(கி. பி. 1976)

சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் நடத்திய மறைமலை யடிகளார் நூற்றாண்டு விழாவில் பாவாணர் பொன்னாடை போர்த்திச் சிறப்பிக்கப் பெற்றார். பாராட்டுப் பெற்ற ஏனையோர் தவத்திரு அழகரடிகள், திரு. .இரா. முருகவேள், திரு. சிறுவை. நச்சினார்க்கினியன் ஆகியோராவர்.

(கி. பி. 1978)

'மண்ணில் விண் அல்லது வள்ளுவர் கூட்டுமை' என்னும் நூல் வெளிவந்தது. வெளியீடு: நேசமணி பதிப்பகம்.

(கி. பி. 1979)

தமிழ்நாட்டரசு பாவாணர்க்குச் 'செந்தமிழ்ச் செல்வர்' என்னும் விருது வழங்கிச் சிறப்பித்தது. வள்ளுவர் கோட்டத்தில் நிகழ்ந்த விழாவில் முதலமைச்சர் . கோ. அழகுமதியர்(M.G.R.) பாவாணர்க்குப் பொன்னாடை போர்த்தியும் நினைவுத் தட்டமும் விருதும் வழங்கியும் சிறப்பித்தார் (15-01-79). இவ்விழாவில் பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரையார், தாமரைச் செல்வர் . சுப்பையா, தி.சு. அவிநாசிலிங்கனார், .. பெரியசாமித் (தூரன்) ஆகியோரும் சிறப்பிக்கப் பெற்றனர்.

'தமிழிலக்கிய வரலாறு' வெளிவந்தது. வெளியீடு: நேசமணி பதிப்பகம்.

சென்னையில் உலகத் தமிழ்க் கழக நான்காவது மாநாடு பாவாணர் முன்னிலையில் நடைபெற்றது. மாநாட்டிற்குப் புலவர் . நக்கீரனார் தலைமை தாங்கினார்.

(கி. பி. 1980)

'Lemurian Languge and its Ramifications – An Epitome' பக்க அளவில் விரித்தெழுதத் திட்டமிடப் பட்டிருந்த இவ்வாங்கில நூலின் சுருக்க வடிவம், ஐந்தாம் உலகத் தமிழ் மாநாட்டு அயல்நாட்டுப் பேராளர்க்கெனத் தட்டச்சில் 52 பக்க அளவினதாக உருவாக்கப்பட்டது. சுவடி உருவாக்கம்: நெய்வேலி . . . (திச 80).

(கி. பி. 1981)

மதுரையில் நடைபெற்ற ஐந்தாம் உலகத் தமிழ் மாநாட்டில் பங்கேற்று, பந்தயத் திடலில் நிகழ்ந்த பொதுநிலைக் கருத்தரங்கில் 'மாந்தன் தோற்றமும் தமிழர் மரபும்' என்னும் தலைப்பில் ஒன்றேகால் மணி நேரம் சொற்பொழிவாற்றினார் (15- 01-81).

உடல் நலங் கெட்டு அன்று (15. 01. 81) இரவு 10.20 மணிக்கு மதுரை அரசினர் இராசாசி மருத்துவமனையில் சேர்க்கப் பெற்றார்.

(கி. பி. 16. 01. 1981)

தி. பி. 2012 சுறவம் 3-ஆம் பக்கல் வைகரை 00-30 க்கு மொழிஞாயிறு பாவாணர் இயற்கை யெய்தினார்.