Affichage des articles dont le libellé est இறையியல் கவிதை. Afficher tous les articles
Affichage des articles dont le libellé est இறையியல் கவிதை. Afficher tous les articles

mardi 28 avril 2015

அருண்மிகு சீனிவாசப் பதிகம்



முதலியார்பேட்டைச் 
சீனிவாசப் பெருமாள் பதிகம்

1.
சீர்மேவும் வன்னியரின் செல்வத் திருமாலே!
கார்மேனி வண்ணனே! கண்ணனே! - பார்மேவும்
திங்கள் திகழொளியே! செம்பொருளே! வாழ்வினில்
தங்கும் நலங்களைத் தா!

2.
தாமோ தரனே! தனிப்புகழ் பெற்றிலங்கும்
மாமோ கனனே! மலர்முகனே! - காமோதும்
தென்றல் தருஞ்சுகமே! தென்னவனே! என்றெனுக்கு
உன்றன் உறவே உறவு!

3.
உறவானாய்! கொண்ட உயிரானாய்! என்றும்
அறமானாய்! அன்பானாய்! ஆக்கும் - திறமானாய்!
தீட்டும் தமிழானாய்! தேடிவரும் நீரானாய்!
சூட்டுமணி யானாய்ச் சுடர்ந்து!

4.
சுடராழி கண்டேன்! திருச்சங்கம் கண்டேன்!
இடராழி நீக்குமெழில் கண்டேன்! - தொடராழி
என்னும் பிறப்பகலக் கண்டேன்! இன்மையெலாம்
ஒன்னும் நிலைகண்டேன் ஓர்ந்து!

5.
ஓது மறையே! உலகளந்த பெம்மானே!
மாதுறை மார்பனே! மாயவனே! - சூதுமனம்
ஏன்எனக்குச் சொல்லரசே! எந்நாளும் துாயமனத்
தேன்எனக்கு ஈவாய்த் தெளிந்து!

6.
தெளிந்த இசையோடு தேன்தமிழில் பாட!
விளைந்த பசுமைவளம் மேவ! - வளைந்தாடும்
வேய்க்குழல் மாமணியே! வெல்லும் திறனுடைய
தாய்த்தமிழ் ஊட்டும் தழைத்து!

7.
ஊட்டும் குவிமுலைபோல் ஊறும் அருளாளா!
வாட்டும் துயர்போக்கும் மாண்பாளா! - காட்டு
மலர்மணமாய் வீசும் மணவாளா! என்றன்
உளம்நிறைந்த சொல்லாய் ஒளிர்!

8.
சொற்சிறக்க என்றும் சுடர்பனுவல் சீர்நுாலைக்
கற்றுக் களித்திடக் கண்காட்டு! - நற்றவனே!
நாரா யணனே! நறுஞ்சீனி வாசனே!
தீராய் வினைகளைத் தீய்த்து!

9.
வினைகளைத் தீய்த்து விழைந்தெனைக் காத்து
நினைவினை மேலுயர்த்தி நிற்பாய்! - பினைந்துள்ள
பொல்லாப் பிணிநீங்கப் பொன்னொளிர் தாள்காட்டும்!
எல்லாமும் ஆனாய் எனக்கு!

10.
எல்லா உயிர்க்கும் இனிமை தருகின்ற
வெல்லும் திருமாலே வேண்டுகிறேன்! - நல்லுயா்
அப்பனும் அம்மையும் ஆனவனே! உன்புகழைச்
செப்பச் சிறக்குமாம் சீர்!

30.01.2015

vendredi 7 novembre 2014

ஓம்மென்னும் உருவம்




ஓம்மென்னும் உருவம்

1.
யானை முகத்தவனே! பானை வயிற்றவனே!
வானை புவியை வடித்தவனே! - ஊனிலென்
கூனை நிமிர்த்திக் குறையகற்றி என்..கையால்
தேனை நிகர்த்தகவி தீட்டு!

2.
செம்மைத் தமிழ்ஊட்டி! சிந்தனைச் சீரூட்டி!
எம்மை இனிதே இயக்கிடுக! - இம்மண்ணின்
நம்பிக்கை நாதனே! நல்ல கணபதியே!
தும்பிக்கை யால்எனைத் தூக்கு!

3.
பொன்னூல் படைத்தவனே! ஓங்கு தமிழ்மணக்க
பன்னூல் படைத்தவனே! பண்பருளும் - இன்ஓளவை
தன்னுள் இருந்து தழைத்தவனே! எந்நாளும்
என்னுள் இருந்தே எழுது!

4.
வங்கக் கடலருகே வாழும் மணத்தவனே!
எங்கள் புதுவைக் கினியவனே! - பொங்குமொளி
தங்க மனத்தவனே! தந்த முகத்தவனே!
சங்கத் தமிழ்மூன்றும் சாற்று!

5.
முன்னவனே! முத்தமிழை முக்கனியாய்த் தந்தவனே!
பொன்னவனே! என்னுள் புகுந்தவனே! - என்னவனே!
மின்னவனே! இன்பம் விளைப்பவனே! இவ்வுலகின்
மன்னவனே! வந்தெனை வாழ்த்து!

6.
வலிமேல் வலிவந்து வாடுகிறேன்! நீயோ
எலிமேல் அமர்ந்தே எழுவாய் - புலிபோல்
வளிபோல் புறப்பட்டு வந்தே..நீ வன்மை
உளிபோல் துயரை ஒதுக்கு!

7.
தாமரை தந்தேன்! கனிகள் பலதந்தேன்!
மாமறை மன்னா! தருகதமிழ்ப் - பூமழையை!
நாமரை நாயகியின் நற்கருணைக்(கு) ஆளாக்கிப்
பாமறை யாவும் பயிற்று!

8.
சின்ன எலியுன்னைச் சீராய்ச் சுமர்ந்திடுமோ?
என்ன பொருளென்றே எண்ணுகிறேன்! - என்றென்றும்
அன்பிருந்தால் ஆண்டவன் நல்லடியைக் கண்டிடலாம்!
என்றுணரச் செய்யும் எலி!

9.
நாமென்னும் எண்ணம் நகர்ந்திட்டால் நெஞ்சத்துள்
ஓமென்னும் எண்ணம் ஒளிர்ந்திடுமே! - காம்பொன்றைக்
பாம்பென்று பார்த்துப் பயந்தோடும் பொய்யோட்டும்
ஓம்மென்னும் முன்னோன் உரு!

10.
சவ்வாதும் நற்சாம் பிராணியும் தாமரையும்
அவ்வாறு நீரும் அளித்திடுவேன்! - அவ்வைபோல்
செவ்வாழை செங்கரும்பு செங்கனிகள் சோ்த்தளிப்பேன்!
இவ்வேழை வாழவழி எண்ணு!

01.09.2000

dimanche 13 juillet 2014

பெருந்தேவி நாயகனே போற்றி


பெருந்தேவி நாயகனே போற்றி!

ஊரென்ன பேசிடுமோ? சுற்றி யுள்ள
     உறவென்ன செப்பிடுமோ? முன்னோர் வைத்த
சீரென்ன ஆகிடுமோ? வளமார் உள்ளம்
     சிதைந்தென்று குன்றிடுமோ? வாழ்க்கை யென்னும்
தேரென்று நின்றிடுமோ? என்றன் மேனி
     தீயென்று கண்டிடுமோ? தெரியேன் உன்றன்
பேரொன்றோ உண்மையென நம்பி நின்றேன்
     பெருந்தேவி நாயகனே போற்றி! போற்றி!!
                         
25-05-2001

samedi 28 décembre 2013

விண்ணின் மைந்தன்



விண்ணின் மைந்தன்

ஓலைக் குடிலில் அருட்கர்த்தர்
     உலகைக் காக்கப் பிறந்துள்ளார்!
காலைக் கதிர்போல் எவ்விடத்தும்
     கருணை கமழ நிறைந்துள்ளார்!
மாலை ஏந்தி மன்றாடு!
     மனமே ஒன்றிப் புகழ்பாடு!
சாலை யாவும் பூத்தாடும்
     சோலை யாக மணந்திடுமே!

பாவச் சுமையைச் சுமந்திடவே
     பரமர் யேசு பிறந்துள்ளார்!
ஆவல் கொண்டே உலகுயிர்மேல்
     அன்பை அருளைத் தந்துள்ளார்!
தாவல் இன்றி ஓர்நிலையில்
     தேவர் உருவை எண்ணிடுக!
நாவால் நாளும் சீர்பாடி
     மூவா இனிமை கண்டிடுக!

விண்ணின் செல்வர்! மரி..வயிற்றில்
     விளைந்த செல்வர்! அவர்உதித்த
பெண்ணின் பெருமை பேசுகையில்
     பெருகிப் பாயும் பேரின்பம்!
மண்ணின் மாசைத் துடைத்திடவே
     மழைபோல் வந்த திருக்கர்த்தர்!
கண்ணின் காட்சி அவரானால்
     கருத்தின் மாட்சி ஒளிர்ந்திடுமே!

பொய்யுள் புரளும் இப்புவியை
     மெய்யுள் புரட்டிப் போட்டவரை
மெய்யுள் நாமும் தரித்திட்டால்
     மேன்மை யாவும் அடைந்திடலாம்!
வெய்யில் கூடக் குளிராகும்!
     விரிநீர் கூட வழியாகும்!
செய்யும் செயல்கள் செம்மையுறத்
     தேவர் பெயரைச் செப்புகவே!

விண்மீன் தோன்றி வழிகாட்டும்
     விடிவை நல்கும் இடத்திற்கு!
தண்மீன் நீந்திக் களிப்பதுபோல்
     சார்ந்து நின்றோர் மகிழ்ந்தனரே!
கண்ஏன்? வாய்ஏன்? நம்செவிஏன்?
     கர்த்தர் உருவைக் கண்டிடவும்!
பண்தேன் பாடிக் கேட்டிடவும்!
     பரம பிதாவே அருளுகவே!

சிலுவை சுமந்து நம்கர்த்தர்
     உலகைச் சுமந்து நின்றாரே!
மலரை நிகர்த்த திருவடியில்
     வன்மை ஆணியைக் கொண்டாரே!
நிலவைப் பிடித்துச் சிறையிலிட
     நினைத்தல் சரியோ? மீண்டுமவர்
நலனை நல்க உயிர்பெற்றார்!
     நாதர் மாண்பைப் போற்றுகவே!

தலையில் முள்ளால் அணிதாங்கித்
     தரையைத் தாங்கும் அருட்தந்தை!
கலையில் முழ்கும், கனித்தமிழின்
     கவியில் முழ்கும் உளத்தைப்போல்
சிலையில் மின்னும் அவர்உருமுன்
     சிந்தை செலுத்திச் செபித்திடுக!
மலையில் தோன்றும் நீராக
     மனத்துள் தோன்றும் மகிழ்வூற்றே!

அந்த இறுதி நாள்களிலே
     அடைந்த துயருக்(கு) அளவுண்டோ?
எந்தப் பொழுதும் அவருள்ளம்
     இந்த உலகை எண்ணியதே!
தந்த உரைகள் நமக்குள்ளே
     தங்கச் செய்தால் தவமேனோ?
சொந்த மாகத் தூயவரைச்
     சூடும் வாழ்வு சுடர்ந்திடுமே!

இறையின் ஆட்சி உலகெங்கும்
     எண்ணில் அடங்காச் செயலாற்றும்!
குறையும் போக்கில் சிந்தித்தால்
     கொள்ளை அழகைக் காண்பாரோ?
நிறையும் இனிமை நிலைத்திடவே
     நினையும் புனிதர் திருச்செயலை!
மறையின் தலைவர் நம்கர்த்தர்
     மாண்பை வாழ்த்திப் பாடுகவே!

அன்பே அவரின் வழியென்பேன்!
     அருளே அவரின் விழியென்பேன்!
இன்பே நல்கி நலஞ்சேர்த்தே
     இனிக்கும் அவரின் மொழியென்பேன்!
குன்றே உருகும் அருட்பொழிவில்
     குளித்தால் நீங்கும் பழியென்பேன்!
இன்றே அவரின் பிறந்ததினம்
     இயங்கும் புவியே கொண்டாடு!

25.12.2013

jeudi 26 décembre 2013

யேசு பிறந்தார்!



கிருத்துப் பிறந்தநாள் வாழ்த்துக்கள்!


எடுப்பு

யேசு பிறந்தார் - எங்கள்
யேசு பிறந்தார்!
                                 (யேசு)

தொடுப்பு

வீசும் காற்றாக!
விரிநீர் ஊற்றாக!
விண்ணின் ஒளியாக!
மண்ணின் மகிழ்வாக!
                                 (யேசு)

முடிப்பு

கட்டில் தொட்டில் இல்லாமல் - தழைக் 
கொட்டில் உள்ளே நற்றேவன்!
கொட்டும் பனியின் காலத்தில் - சிறு
குழந்தை யாக விண்தூதன்!
                                                                  (யேசு)

உலகை மாற்றிப் போட்டிடவும் - உயர்
உண்மை நெறியை ஊட்டிடவும்!
பலகைத் தொழிலில் ஈட்டிடவும் - புவி 
பாவம் அனைத்தும் ஓட்டிடவும!
                                                                  (யேசு)

பாரின் சுமையைத் தரித்திடவும் - நற்
பண்பை அன்பை வடித்திடவும்!
வேரின் கனிபோல் இனித்திடவும் - ஒண்
சீரின் மறையை அளித்திடவும்!
                                                                  (யேசு)

காற்றில் நீந்திப் பாடுகவே - தேன்
ஆற்றில் நீந்தி ஆடுகவே!
போற்றி கவிதை சூடுகவே - தொண்டு
ஆற்றி அருளைக் கூடுகவே!
                                                                  (யேசு)

25.12.2013

jeudi 12 décembre 2013

உலக சைவ மாநாடு




உலகச் சைவ மாநாட்டு வாழ்த்துப்பா

சுவிச்சர்லாந்து

வானில் நந்திக் கொடியாட,
     வண்ணத் தேரும் அசைந்தாட,
தேனின் மிக்க செந்தமிழைப்
     செப்பும் பாட்டில் உளமாட,
மானின் விழியாள் என்னம்மை
     வழங்கும் கருணை மொழியாட
ஊனில் உயிரில் உமைப்பாகன்
     உருவம் பதித்தோர் ஆடினரே!

அருளார் அன்பர் சிவநந்தி
     அடிகள் புரிந்த அரும்பணியால்
பொருளார் தமிழும் புவியெங்கும்
     பூத்துப் பொலியக் காண்கின்றேன்!
இருளார் உலகு விழிப்படைய
     இன்பம் நிலைத்து மகிழ்ந்தாட
திருவார் சைவம் பரப்புகிற
     திறத்தை வணங்கி வாழ்த்துகிறேன்!

நொடியும் அவன்தாள் மறவாமல்
     நோக்கம்! செய்கை! திருத்தொண்டே!
படியும் வண்ணம் திருமுறையைப்
     பாடும் யோகா னந்தரடி!
விடியும் காலைப் பொழுதாக,
     விளையும் சோலை அழகாக,
தொடரும் பாதை மிளிர்கிறது!
     தூயோர் பணியை வாழ்த்துகிறேன்!

குலவும் சைவ நெறிசூடி,
     கொஞ்சும் தமிழின் புகழ்சூடி,
நிலவின் வெள்ளை மனஞ்சூடி,
     நினைவில் நாதன் தாள்சூடி,
உலகச் சைவப் பேரவையை
     உயிராய்க் காக்கும் சான்றோர்தம்
அலகில் சீரைக் கவிபாடி
     அடியேன் வணங்கி வாழ்த்துகிறேன்!

சீவன் தன்னைச் சிவனாக்கும்
     செம்மை நெறியைக் கேட்டுய்ய
ஆவல் கொண்டு வந்தவர்க்கும்
     அருளார் உரைகள் அளிப்பவர்க்கும்
ஏவல் புரிந்தே இந்நிகழ்வை
     ஏந்திச் சுமக்கும் அடியவர்க்கும்
காவல் அரணாய் இருப்பவர்க்கும்
     கவிஞன் வணங்கி வாழ்த்துகிறேன்!

அன்பே தெய்வம் என்றுரைக்கும்
     அருமை சைவம்! இவ்வுலகை
நன்றே ஆக்கும்! நலஞ்சேர்க்கும்!
     நற்றேன் மழையைப் பொழிந்தருளும்!
ஒன்றே இறைவன்! அவனடியை
     ஒன்றும் வழியே பலவாகும்!
வென்றே களிக்க! வினைமுடிய
     வேண்டி வணங்கி வாழ்த்துகிறேன்!

சந்தம் சிந்தும் திருமுறைகள்
     தமிழர் சொத்து! வருகின்ற
நந்தம் பிள்ளை அவைகற்று
     நடந்தால் ஒளிரும் அருள்முத்து!
சொந்த மாக இவ்வுலகைச்
     சூடிப் பழகு! உயிரோங்கும்!
அந்தம் இல்லா அவனழகில்
     ஆழ்ந்து களிப்போர் வாழியவே!

இருண்டக் காலம் முடிவெய்த,
     இன்பத் தமிழாள் மீண்டுமெழ,
திரண்ட அமுதின் தீஞ்சுவையாய்ப்
     பிறந்த பக்தி இலக்கியங்கள்
சுரந்த இனிமை! தமிழ்ப்பெருமை!
     தொடர்ந்த வாழ்வே நம்சீர்மை!
பரந்து மணக்கும் சைவத்தைப்
     பரப்பும் அன்பர் வாழியவே!

சைவம் என்றால் அன்பாகும்!
     சைவம் என்றால் அருளாகும்!
சைவம் என்றால் அறமாகும்!
     சைவம் என்றால் அறிவாகும்!
சைவம் என்றால் துயர்போக்கிச்
     சால்பை ஊட்டும் பணியாகும்!
சைவம் என்றால் தமிழாகும்!
     சார்ந்து வாழ்வோர் வாழியவே!

மதங்கள் கொண்ட வேற்றுமையால்
     மனிதம் குலைதல் இனிவேண்டாம்!
வதங்கள் ஏனோ? இறையென்னும்
     வள்ளல் ஒருவன்! உணர்ந்திடுவீர்!
பதங்கள் சேர அடிபிறக்கும்!
     பகையை மறப்பீர்! வளம்பிறக்கும்!
இதங்கள் சேர ஒற்றுமையை
     இயம்பும் அடியார் வாழியவே!

தொண்டர் பெருமை என்கவியில்
     சொல்லால் எளிதோ? தமிழின்மேல்
கொண்ட பற்றின் மிகுதியினால்
     கோலக் கவிதை மொழிந்திட்டேன்!
கண்டன் கழலில் கட்டுண்டு
     காதல் புரியும் அன்பரெலாம்
என்றன் கவியைப் பொறுத்திடுவீர்!
     நன்றி இயம்பி அமர்கின்றேன்!

25-05-2007