samedi 29 octobre 2022

கலிவிருத்தம் - 13


 

விருத்த மேடை - 77

 

கலிவிருத்தம் - 13

மா + மா + மா + காய்   

 

கரையு லாவு கதிர்மா மணிமுத்தம்

திரையு லாவு வயல்சூழ் திருப்புன்கூர்

உரையி னல்ல பெருமான் அவர்போலும்

விரையி னல்ல மலர்ச்சே வடியாரே!

 

[திருஞான சம்பந்தர், தேவாரம் - 286]

 

பாலு நெய்யுந் தயிரும் பயின்றாடித்

தோலு நுாலுந் துதைந்த வரைமார்பர்

மாலுஞ் சோலை புடைசூழ் மடமஞ்ஞை

ஆலுஞ் சோற்றுத் துறைசென் றடைவோமே!

 

[திருஞான சம்பந்தர், தேவாரம் - 265]

 

புகழ் சேர்ப்போம்!

 

முன்னைத் தமிழர் மொழிந்த மறமேற்போம்!

அன்னை யள்ளி யளித்த அறமேற்றோம்!

பொன்னைப் போன்று பொலியும் அகமேற்போம்!

பின்னை யுலகம் பேணப் புகழ்சேர்ப்போம்!

 

[பாட்டரசர்] 21.06.2022

 

கலிவிருத்தம் ஓரடியில் நான்கு சீர்களைப் பெறும். நான்கடிகள் ஓரெதுகையில் அமையும். ஒன்று மூன்றாம் சீர்களில் மோனை வரும். காய் வரும் இடத்தில் அருகி விளம் வரும்.

 

மா + மா + மா + காய் என்ற வாய்பாட்டில் விரும்பிய தலைப்பில் கலிவிருத்தம் ஒன்று இயற்றுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.

 
அன்புடன்
பாட்டரசர் கி. பாரதிதாசன்
கம்பன் கழகம் பிரான்சு
தொல்காப்பியர் கழகம், பிரான்சு
29.10.2022

dimanche 23 octobre 2022

கலிவிருத்தம் - 12

விருத்த மேடை - 76

 

கலிவிருத்தம் - 12

 

மா + மா + மா + மா

 

தாந்தம் பெருமை யறியார் துாது

வேந்தர்க் காய வேந்த ரூர்போல்

காந்தள் விரல்மென் கலைநன் மடவார்

கூந்தல் கமழும் கூட லுாரே!

 

[திருமங்கையாழ்வார், பெரிய திருமொழி, திருக்கூடலுார் - 1]

 

கலைவாழ் பிணையோ டணையும், திருநீர்

மலைவாழ் எந்தை மருவு மூர்போல்

இலைதாழ் தெங்கின் மேல்நின்[று] இளநீர்க்

குலைதாழ் கிடங்கின் கூட லுாரே!

 

[திருமங்கையாழ்வார், பெரிய திருமொழி, திருக்கூடலுார் - 8]

 

தன்மேல் ஊடல் கொண்டான் தன்னை

இன்னும் தவிக்க விடுதல் இனிதா?

துன்பம் நாளும் தொடரு மானால்

அன்பன் வாழ்தல் அரிதாம் என்றாள்!

 

கலைமாமணி

கவிஞர் தே. சனார்த்தனனார், புதுவை - 4

 

கரும்பின் சுவையைக் கன்னல் கனியை

அரும்பின் மணத்தை அமுதின் குணத்தை

இரும்பின் உரத்தை இயற்கை வளத்தை

விருந்தின் மகிழ்வை விளைப்பாய் தமிழே!

 

[பாட்டரசர்]

 

கலிவிருத்தம் ஓரடியில் நான்கு சீர்களைப் பெறும். நான்கடிகள் ஓரெதுகையில் அமையும். ஒன்று மூன்றாம் சீர்களில் மோனை வரும்.

மா + மா + மா + மா என்ற வாய்பாட்டில் விரும்பிய தலைப்பில் கலிவிருத்தம் ஒன்று இயற்றுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.

 
அன்புடன்
பாட்டரசர் கி. பாரதிதாசன்
கம்பன் கழகம் பிரான்சு
தொல்காப்பியர் கழகம், பிரான்சு
15.06.2022

பஞ்சரத்தின மாலை


 

வணக்கம்!

 

கனடா நாட்டின் விழுத்தெழு பெண்ணே என்ற அமைப்பின்
உலகத் தமிழ்ப்பெண் ஆளுமை  விருது பெற்ற
பாவலர் கலைப்புட்பா அவர்களை வாழ்த்தும்

ஐந்து மணி வெண்பா!

 

வைரம்

 

கனிந்த மனமும் கமழ்கின்ற தொண்டும்

நனைந்த மழைமண் நலமும் - புனைந்தகவி

அத்தணையும் மின்வைரம்! அன்புக் கலைப்புட்பா

சித்தணையும் செந்தமிழ்ச் சீர்!

 

நீலம்

 

சீரோங்கி வாழ்க! சிறப்போங்கி வாழ்க!நற்

பேரோங்கி வாழ்க! பெருமையெலாம் - வேரோங்கித்

வாழ்க! எழில்நீல வண்ணக் கலைப்புட்பா

வாழ்க தமிழ்போல் மணந்து!

 

முத்து

 

மணமளிக்கும் தாழை!  வளமளிக்கும் வாழை!

குணமளிக்கும்  கூர்மதி கொள்கை -  உணர்வளிக்கும்

ஈழ அணிமுத்[து] எழுதும் கலைப்புட்பா

சோழ மரபெனச் சொல்லு!

 

பவளம்

 

சொல்லும் சுவையளிக்கும்! சொக்கும் மதுவளிக்கும்!

சொல்லும் இடத்தில் செயல்மணக்கும்! - வெல்லுமெழில்

நற்பவள வான்விடியல் நல்கும் கலைப்புட்பா

பொற்கவிதை பூக்கும் பொழில்!

 

மாணிக்கம்

 

பூத்த பொழிலழகும், பொங்கும் அலையழகும்,

மூத்த தமிழழகும் முன்னேந்திக் - காத்த

மலைப்பொற்பா கொண்டொளிரும் மாணிக்கம் மங்கை  

கலைப்புட்பா வாழ்க கனிந்து!

 

பாட்டரசர் கி. பாரதிதாசன்

தலைவர்
கம்பன் கழகம் பிரான்சு

தொல்காப்பியர் கழகம் பிரான்சு

13.10.2022

 

dimanche 16 octobre 2022

பாவலர் சரளா விமலராசா


 

பாவலர் சரளா விமலராசா
புகழ்ப் பதிற்றந்தாதி!

 

உலகு மகிழ்ந்தேத்த, ஓங்குநலஞ் சூழ,

அலகில் அகத்தன்பே ஆழக், - குலஞ்செழிக்க,

என்றைக்கும் பேர்நிலைக்க, இன்சரளா செந்தமிழாம்

அன்னைக்[கு] அரும்பணி ஆற்று!

 

ஆற்றல் தமிழ்ப்பெண்ணின் ஆளுமை நல்விருதை

ஏற்றுச் சிறந்த எழில்சரளா - போற்றுகிறேன்!

வண்ணக் கவியுலகில் மின்னும் மதியானாய்!

அண்ணல் அளித்த அருள்!

 

அருள்கமழும் உள்ளம், அறங்கமழுஞ் சிந்தை,

பொருள்கமழும் பாட்டின் புதையல், - உருள்திகழுந்

தேரழகு செய்கை, செழித்தோங்குந் தென்சரளா

பேரழகு பேணும் பிறப்பு!

 

பிறப்பின் பயனும் பெரியோர்தம் வாழ்த்தும்

சிறப்பின் தொடரும் செழிக்கும் - அறத்தினைக்

காக்குந் தமிழ்ச்செல்வி கன்னல் மொழிச்சரளா

பூக்கும் புதுமைப் பொழில்!

 

பொழின்மணக்கும் பாட்டும் புகழ்மணக்கும் தொண்டும்

எழின்மணக்கும் தோற்றமும் ஏந்தி - மொழிமணக்கும்
பற்றுப் படர்ந்தோங்கிப் பண்பார் பயன்சரளா!

கற்றுக் கமழுங் கவி!

 

கவியே உயிராகும்! கற்பே..வே ராகும்!

புவியே உறவாகும் பூத்துச் - செவியிரண்டும்

நல்ல தமிழ்கேட்டு நாளினிக்கும் நற்சரளா!

வல்ல மதியின் மகள்!

 

மதியின் மகளென்பார்! வாழ்வு கொழிக்கும்

நிதியின் மகளென்பார்! நெஞ்சம் - நதியென்பார்!

வள்ளல் மகளென்பார்! வண்ண மிகுசரளா

மள்ளல் மகளென்பார் வாழ்த்து!

 

வாழ்த்து மலையாகும்! வாழ்வு கலையாகும்!

காத்து மரபைக் கடனாற்றும்! - சாத்து

மணிச்சரமாய் மாண்பழகு வாய்த்த சரளா

அணிச்சரமாய் மின்னும் அறிவு!

 

மின்னும் அறிவொளியை மேவி நிலம்வாழப்

பின்னும் படைப்புகள் பேறருளும்! - என்றென்றும்

ஈசன் திருவடியை ஏத்தும் அருஞ்சரளா

பாசப் பொழிவெனப் பாடு!

 

பாடு நெறிசிறக்கும்! பண்பு வழிபழுக்கும்! 

தேடு பொருள்கொழிக்கும்! சீர்செழிக்கும்! - நீடுபுகழ்
நீதி நிறைகொடுக்கும் நெஞ்சச் சரளாவை
ஓதி மகிழும் உலகு!

 

பாட்டரசர் கி. பாரதிதாசன்
16.10.2022