Affichage des articles dont le libellé est வஞ்சிப்பா மேடை. Afficher tous les articles
Affichage des articles dont le libellé est வஞ்சிப்பா மேடை. Afficher tous les articles

samedi 10 mars 2018

வஞ்சித்துறை - 2




வஞ்சிப்பா மேடை - 2

வஞ்சித்துறை - 2
[மா + விளம்]

நீறு பூசினீர்
ஏற தேறினீர்!
கூறு மிழலையீர்
பேறும் அருளுமே!

[திருஞானசம்பந்தர் - 995]

தந்தையானவள்!

1.
அன்னை திருமொழி
என்னைக் காத்திடும்!
முன்னைப் பெரும்வினை
தன்னை நீக்கிடும்!

2.
அம்மா திருமுகம்
இம்மா நிலம்நிகர்!
சும்மா தொழுதிட
எம்மா நலமிடும்!

3.
காயும் மனமெழும்!
பாயும் துயரறும்!
தாயின் திருவடி!
மாயன் பொன்னடி!

4.
அன்பின் நிலமவள்!
இன்பின் விதையவள்!
பண்பின் மழையவள்!
நண்ணும் பயனவள்!

5.
மண்ணின் மணமவள்!
விண்ணின் கதிரவள்!
கண்ணின் ஒளியவள்!
பண்ணின் சுவையவள்!

6.
தந்தை யானவள்!
சிந்தை யானவள்!
விந்தை யானவள்!
முந்தை யானவள்!

7.
பணையாய் ஆர்த்தவள்!    
புணையாய்ப் பூத்தவள்!
அணையாய் நிற்பவள்!
துணையாய்க் காப்பவள்!

8.
உண்டைச் சோறினைத்
தொண்டை மறக்குமா?
தொண்டை நினைந்திடா
மண்டை சிறக்குமா?

9.
என்னை மனத்தினில்
என்றும் சுமப்பவள்!
பின்னை நலத்தினைப்
பின்னி அளிப்பவள்!

10.
அடுத்த பிறவியை
எடுத்துப் பிறந்துநான்
கொடுத்த நலங்களைத்
தொடுத்து மகிழுவேன்!

[பாட்டரசர் கி. பாரதிதாசன்]

மா + விளம் என்ற வாய்பாட்டில் ஓரடி அமைய வேண்டும். இவ்வாறு நான்கடிகள் ஓரெதுகை பெற்று வரவேண்டும். [ஓரடியில் இருசீர்கள் வருகின்ற காரணத்தால் மோனை கட்டாயமன்று]

ஆசான் சிறப்பினை உரைக்கும் வண்ணம் இவ்வகை வஞ்சித்துறை ஒன்றைப்   பாடுமாறு பாவலர்களை அன்புடன் வேண்டுகிறேன்.
    
"பாவலர் பயிலரங்கம்" என்ற முகநுால் குழுவில் இணைந்து தங்கள் விருத்தத்தைப் பதிவிட வேண்டுகிறேன்!
  
அன்புடன்
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்:
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்
08.03.2018

mercredi 7 mars 2018

வஞ்சித்துறை - 1


வஞ்சிப்பா மேடை - 1
  
வஞ்சித்துறை - 1
  
இருசீர் அடிகள் இரண்டு ஓரெதுகை பெற்று வந்தால் பரணித் தாழிசை என்பர். இருசீர் அடிகள் நான்கு ஓரெதுகை பெற்று வந்தால் வஞ்சித்துறை என்பர்.
  
பரணித் தாழிசை இரண்டு அடிகளைப் பெற்ற காரணத்தால் குறளின் இனமாக வைக்கப்பட்டது.
  
ஓரடியில் இரண்டு சீர்கள் பெற்று நான்கடிகள் பெற்ற காரணத்தால் வஞ்சித்துறை குறளடி வஞ்சிப்பாவின் இனமாக வைக்கப்பட்டது.
  
வஞ்சித்துறையின் சீர் வாய்பாடுகளை எந்நுாலும் வரையறுத்துக் கூறவில்லை. முன்னை இலக்கியங்களில் உள்ள சான்றுகளைப் பார்த்து எழுத வேண்டும்.
  
வஞ்சித்துறை - 1
[தேமா + விளம்]
  
ஓற்றி ஊரனைப்
பற்றி நெஞ்சமே!
நிற்றி நீஅருள்
பெற்றி சேரவே!
  
         [திருவருட்பா - 1350]
  
வானோர் வழிபடு
கோனே குமரவுன்
தேனார் திருவடி
தானே தனிநிலை
  
         [பாம்பன் சுவாமிகள்]
  
1.
கண்ணைக் கைகளால்
புண்ணாய்ச் செய்வரோ?
பெண்ணை அடிமையாய்
மண்ணில் கொள்வதோ?
  
2.
கங்கை வளமென
எங்கும் எழில்வரும்!
மங்கை கற்றிடப்
பொங்கும் புகழ்வரும்!
  
3.
இல்லம் எழிலுறும்!
உள்ளம் உயர்வுறும்!
அல்லல் அகன்றிடும்
வல்ல மாதினால்!
  
4.
வாடும் கன்னியர்
ஏடும் பயின்றிட
நாடும் ஓங்கிடும்!
வீடும் ஓங்கிடும்!
  
5.
இளமைக் கண்களால்
உளம்..தை காணுமே!
புலமைப் பெண்களால்
வளமை சேருமே!
  
6.
காடும் கமழ்ந்திட,
பீடு்ம் பிணைந்திட,
பாடும் பாவையை
நாடும் பணியுமே!
  
7.
கோதை குளிர்விழி
போதைக் களிதரும்!
சீதை தரும்மொழி
பாதை ஒளிபெறும்!
  
8.
அன்பின் ஊற்றென,
தென்றல் காற்றென,
இன்பின் கூட்டென
என்றும் தாய்மனம்!
  
9.
முன்னை முகிழ்தவம்
பொன்னைப் பொழியுமே!
அன்னை அருண்மொழி
உன்னை உயர்த்துமே!
  
10.
உண்மை சூடுக!
வண்மை கூடுக!
திண்மை பூணுக!
பெண்மை பேணுக!
  
         [பாட்டரசர் கி. பாரதிதாசன்]
    
தேமா + விளம் என்ற வாய்பாட்டில் ஓரடி அமைய வேண்டும். இவ்வாறு நான்கடிகள் ஓரெதுகை பெற்று வரவேண்டும். [ஓரடியில் இருசீர்கள் வருகின்ற காரணத்தால் மோனை கட்டாயமன்று]
  
தந்தையின் சிறப்பினை உரைக்கும் வண்ணம் இவ்வகை வஞ்சித்துறை ஒன்றைப் பாடுமாறு பாவலர்களை அன்புடன் வேண்டுகிறேன்.
      
"பாவலர் பயிலரங்கம்" என்ற முகநுால் குழுவில் இணைந்து தங்கள் விருத்தத்தைப் பதிவிட வேண்டுகிறேன்!
    
அன்புடன்
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்:
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்
07.03.2018

mercredi 5 avril 2017

வஞ்சிப்பா - 1

வஞ்சிப்பா மேடை - 1
  
வஞ்சிப்பாவின் பொதுவிலக்கணம்
  
வஞ்சிப்பா இரண்டு வகைப்படும். 1. குறளடி வஞ்சிப்பா 2. சிந்தடி வஞ்சிப்பா. இரண்டு சீர்களுடைய அடிகளால் வந்து தனிச்சொல்லும் ஆசிரியச் சுரிதகமும் பெற்று முடிவது குறளடி வஞ்சிப்பா. மூன்று சீர்களுடைய அடிகளால் வந்து தனிச்சொல்லும் ஆசிரியச் சுரிதகமும் பெற்று முடிவது சிந்தடி வஞ்சிப்பா.
  
வஞ்சியுரிச்சீர் எனப்படும் கனிச்சீர்களே இப்பாட்டில் பெரும்பாலும் வரும். நிரையீற்று நாலசைச் சீர்களும் அருகி வரும், சிறுபான்மை மற்றச் சீர்களும் வரும்.
  
வஞ்சிப்பா துாங்கலோசையைப் பெற்று வரும். கனி முன் நிரை வருவது ஒன்றிய வஞ்சித்தளையால் அமைந்த ஏந்திசைத் துாங்கலோசை யாகும். கனி முன் நேர் வருவது ஒன்றாத வஞ்சித் தளையால் அமைந்த அகவல் துாங்கலோசை யாகும். ஒன்றிய, ஒன்றாத வஞ்சித்தளைகள் கலந்து வருவதும், அவைகளுடன் மற்றத் தளைகள் கலந்து வருவதும் பிரிந்திசைத் துாங்கலோசையாகும். [பெரும்பான்மை ஒன்றிய வஞ்சித்தளையும், ஒன்றாத வஞ்சித்தளையும் வரும்] [அருகியே மற்றத் தளைகள் வரும்]
  
வஞ்சியடிகளுக்குச் சிற்றெல்லை மூன்று அடிகள். பேரெல்லை அளவில்லை. [பாடுவோர் எண்ணப்படி எத்தனை அடிகளையும் பெற்று வரும்]
  
வஞ்சியடிகள் இரண்டு இரண்டு அடிகளுக்கு எதுகை பெற்று வரும்.
  
குறளடி வஞ்சிப்பாவில் மோனை கட்டாயமில்லை. சிந்தடி வஞ்சிப்பாவில் மூன்றாம் சீரில் மோனை அமைதல் மேண்டும் [அல்லது இரண்டாம் சீரில் அமைதல் வேண்டும்]
  
தனிச்சொல், ஈரசையில் அமைவது சிறப்பாகும். [சிறுபான்மை குற்றியலுகரத்தைப் பெற்ற மூவசையும் வரும்]
  
ஆசிரியச் சுரிதகம் என்பது ஆசிரியப்பாவாகும். ஆசிரியப்பாவின் சிற்றெல்லை மூன்று அடிகளாகும். வஞ்சிப்பாவில் வரும் ஆசிரியச் சுரிதகம் இரண்டு அடிகளைப் பெறுவதும் உண்டு. பெரும்பான்மை நேரிசை ஆசிரியச் சுரிதகம் வரும் [ஈற்றயல் அடி மூன்று சீர்களைப் பெறுவது]. சிறுபான்மை இன்னிசை ஆசிரியச் சுரிதகம் வரும் [அனைத்து அடிகளும் நான்கு சீர்களைப் பெறுவது]. ஈற்றுச்சீர் ஏகாரத்தில் முடியும். [இப்பாவில் வெண்பாச் சுரிதகம் வராது]
  
ஒன்றிய வஞ்சித்தளையால் வந்த குறளடி வஞ்சிப்பா
  
கண்ணன்தரும் கவிதைப்பொழில்
எண்ணந்தனில் இடுமேநலம்!
கண்ணில்தினம் கனவேவரும்!
மண்ணின்மணம் வளமேதரும்!
அண்ணல்மொழி அருளின்மழை!
உண்ணுஞ்சுவை உறையும்நடை!
தமிழேஅவன்! தவமேஅவன்!
அமுதேஅவன்! அணியேஅவன்!
  
என்று [தனிச்சொல்]
  
நெஞ்சம் பாடும்! கொஞ்சி யாடும்!
வஞ்சிப் பாட்டின் வாசம் சூடும்!
மன்னன் தோளை மங்கை
பின்னும் நாளே பிறப்பின் பேறே!
  
மேலுள்ள வஞ்சிப்பா, கனி முன் நிரை வந்த ஒன்றிய வஞ்சித்தளையால் அமைந்தது. அனைத்து அடிகளிலும் மோனை வரும் வண்ணம் பாடியுள்ளேன். [மோனை கட்டாயமில்லை] [இவ்வஞ்சியடிகளில் இரண்டாம் சீர் கனிச்சீராகவே வந்துள்ளன, அவ்விடங்களில் புளிமாங்காயும், கருவிளங்காயும் வரலாம்] [ நிரையை முதலாக உடைய மற்றச் சீர்களும் அருகி வரலாம்] [அனைத்துச் சீர்களும் புளிமாங்கனியாகவும் கருவிளங்கனியாகவும் இருக்கும் வஞ்சியடிகளே சிறப்புடைய ஏந்திசைத் துாங்கலோலையை நல்கும்]
  
தனிச்சொல் [என்று] ஈரசையைப் பெற்றுள்ளது.
இப்பாடல் நான்கடிகளைக் கொண்ட நேரிசை ஆசிரியச் சுரிதகத்தால் முடிந்துள்ளது.
  
கண்ணே!
[சிறப்புடைய ஒன்றிய வஞ்சித்தளையால் வந்த குறளடி வஞ்சிப்பா]
  
குழலுறும்எழில் குளிர்தருமடி!
ஒழுகிடும்நடை உயிர்புகுமடி!
கயலுறுவிழி கவிதருமடி!
மயலுறுமொழி மதுதருமடி!
தினமொருவுடை திகைதருமடி!
வனமெனவுடல் மணந்தருமடி!
கனிதருஞ்சுவை கரம்தருமடி!
நனிபுகழ்பணி நலந்தருமடி!
மலருறுபதம் மகிழ்தருமடி!
கலையொளிர்உருக் கனவுறுமடி!
நாளும்
உன்னை எண்ணி உருகும்
என்னை அணைத்தே இன்பம் தருகவே!
  
விரும்பிய பொருளில் குறளடி வஞ்சிப்பா ஒன்று பாடுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.
[வஞ்சியடிகள் ஆறு அமையவேண்டும்] [நேரிசைச் சுரிதகம் மூன்றடியில் இருக்க வேண்டும்]
  
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்:
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்