Affichage des articles dont le libellé est கட்டுரை. Afficher tous les articles
Affichage des articles dont le libellé est கட்டுரை. Afficher tous les articles

dimanche 3 août 2014

தமிழா..நீ எழுதுவது தமிழா?



தமிழா...நீ பேசுவது தமிழா
 
அன்னையைத் தமிழ்வாயால் "மம்மி" என்றழைத்தாய்...
அழகுக் குழந்தையை "பேபி" என்றழைத்தாய்...
என்னடா தந்தையை "டாடி" என்றழைத்தாய்...
இன்னுயிர்த் தமிழைக் கொன்றுதொலைத்தாய்...
                        - உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன்

எது தமிழ்ச்சொல்? எது அயற்சொல்? பாமரத் தமிழர்கள் பலர் தம் தாய்மொழியின் பெயர் என்ன என்று தெரியாமல் வாழ்வதைப் பார்த்திருக்கிறேன். அவர்களிடம் உங்கள் தாய்மொழியின் பெயர் என்ன என்று கேட்டால் "தோ.. பேசறமே இதான்.." என்று மண்மணத்தோடு பதில் கிடைக்கும். தமிழே உலகின் முதன்மொழி என்பதைக் குறித்தும், தமிழே திராவிட மொழிகளின் தாய் என்பதைக் குறித்தும், தமிழில் கலந்துள்ள அயற்சொற்களைக் குறித்தும் அவர்கள் அறிந்திலர்.

நன்கு கற்றவர்கள் வாழ்வில் தாய்மொழியாகிய தமிழ் காணாமல் போவதைப் பார்த்து வருகிறேன். இன்றைய ஊடகங்கள் தாய்க்கொலையை முன்னிருந்து நடத்துகின்றன. ஆங்கிலம் கற்றுக்கொள்ள விரும்பினால் இன்றைய தொலைக் காட்சிகளைத் தொடர்ந்து பார்த்துவந்தால் போதும், ஆங்கில மொழியைத் தானாக நாம் பேசக் கற்றுக்கொள்ளலாம்.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாகத் தமிழில் பிறமொழிச் சொற்கள் கலந்து தமிழ்போலவே உடையணிந்து கொண்டன. தமிழை அழிக்க வேண்டும் என்று செயற்பட்ட மொழி அழிந்து போனது என்று நான் எண்ணுவதுண்டு.

எந்த மொழியும் அழிந்துபோகக் கூடாது. இரசியாவைக் கட்டமைத்த இலெனின் அவர்கள் அந்நாட்டில் வாழ்ந்து வந்த மொழிகளைக் காக்கும் வண்ணம் சட்டங்கள் செய்தார். மக்களுடைய மொழியிலேயே நாம் (அரசு) பேச வேண்டும் என்ற பொன்மொழியை உலக்கு அளித்து அந்நாட்டு மொழிகளின் உரிமையைப் பாதுகாத்தார்.

"மெல்லத் தமிழினிச் சாகும்" என்ற அடியைப் படித்த நாம், மெல்லத் தமிழினி வாழும் என்று பாடியும் ஆடியும் வருகிறோம். மகாகவி பாரதியின் அடிகளை ஆராய்ந்து இன்றைய தமிழின் நிலையை எண்ணிப் பார்த்தோம் என்றால் அடுத்த தலைமுறைக்குத் தமிழ் இருக்குமா என்ற கேள்வியே எழுகிறது. தாய்மொழியைக் குறித்த விழிப்புணர்வு தமிழர்களிடம் இல்லவே இல்லை என்று சொல்லலாம். தமிழைச் சொல்லிச் சொல்லி ஆட்சிக்கு வந்தவர்கள் வாழ்ந்தார்கள், வாழ்கின்றார்கள், வாழ்வார்கள்.

"தாய் மொழி வளராத நாடு ஒரு நாளும் உரிமை பெறாது. தாய்மொழி நாட்டம் உரிமை நாட்டமாகும். உரிமைக்கு முதற்படி தாய் மொழி ஓம்பும் முயற்சி. தமிழ் நாட்டார் தாய்மொழி மீது கருத்தைச் செலுத்துவாராக" என்று தமிழ்த்தென்றல் திரு.வி. உரைக்கின்றார்.

"தாய் மொழியில் பற்றில்லாதவரையில் தமிழர்கள் முன்னேற்றம் அடைய மாட்டார்கள்" என்று  தந்தை பெரியார் அவர்கள் பகர்கின்றார்.

"தாய்மொழியையும் அதிலுள்ள இலக்கியங்களையும் மதிக்காமல் வேற்று மொழிக்குத் தங்களை அடிமையாக்கிக் கொண்டவர்கள் தமிழ் நாட்டில் இருக்கும் அளவிற்கு வேறு எந்த நாட்டிலும் இல்லை" என்று தாகூர் மொழிகின்றார்.

தமிழினத்தார் தன் தாய்மொழியைப் பேணுவதை விட அயல்மொழி மீது ஆசையும் மோகமும் உடையவர்கள். தாம் இன்பமாக வாழ வேண்டும் என்பதற்காகத் தாயை மறக்கக் கூடியவர்கள். ஒரு நாட்டை அழிக்க வேண்டும் என்றால் முதலில் அந்நாட்டின் மொழியை அழித்துவிடு. பின் அந்நாடு தானாகவே அழிந்துவிடும் என்பர். தமிழர்களே தமிழை அழிக்கும் பகைவராய் ஆகிவிட்டனர்.

தமிழர்களால், தமிழன்பர்களால், தமிழ்ப் புலவர்களால், தமிழ் அறிஞர்களால் நடத்தப்படும் மின்வலைப் பூக்களில் தமிழின் நிலை என்ன என்று ஆராய்ந்து பார்த்தால் 90 விழுக்காடுகள் அழிவிற்கான வழிகளைக் கண்டுணரலாம்.

என் அன்புக்கும் மதிப்புக்கும் உரிய வலைப்பூக்களில் பிறமொழிச் சொற்களின் ஆட்சி அதிகமாக இருப்பதைக் கண்டு அவர்களுக்கு அதை எடுத்துச் சொல்ல நான் தயங்கியதில்லை.

நண்பர் துளசி அவர்கள் நடத்தும் இதம் என்ற வலைப்பூவைக் கண்ணுற்றேன். இதம் என்பது வடசொல் என்பதால் கருத்துரையில் பின் வரும் குறளை எழுதி விளக்கம் அளித்தேன்.

இதம்எனும் சொல்லை இனிமையெனச் சொல்க
மதுரத் தமிழில் மகிழ்ந்து!

இதம் பிறமொழிச் சொல்

இதம் = இனிமை, இன்பம், நன்மை, இசைவு

நல்ல தமிழில் தலைப்பிட்டால் நான்மகிழ்வேன்
வல்ல கவிஞன்என் வாழ்த்து!

தமிழ்ப் பற்றுடைய நண்பர் துளசி அவர்கள், இதம் என்ற தன் வலையின் பெயரை "மயிலிறகு" என்று மாற்றி அமைத்துள்ளதை இன்று கண்டு துள்ளிக் குதித்து மகிழ்ந்தேன். அவருக்கு என் நன்றியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் களிக்கின்றேன்.

வலைப்பூக்களின் பெயர்களை ஆங்கிலத்தில் எழுதுவது, பதிவுகளில் கொச்சை மொழியில் எழுதுவது, தேவையின்றி அயற்சொற்களைக் கலந்து எழுதுவது (சந்தோஷப் புன்னகை, நல்ல ட்யூப் லைட் மாதிரி பிரகாசமாயிடுச்சு) இவையனைத்தும் தாய்க்கொலைக்கு ஒப்பாகும்.

கடல்பறித்துத் தின்றும்! கனல்பறித்துத் தின்றும்!
இடர்வகுத்துத் தீயோர் இருந்தும்! - சுடராக
மின்னும் தமிழின் வியன்வாழ்வை நம்தமிழர்
இன்னும் உணர்ந்தார் இலை!

மேல் படத்தில் எழுதியுள்ள சொல்விற்பனம் என்பது தமிழா?
நாளைய பதிவில் பார்ப்போம்.

samedi 13 avril 2013

ஆசைக்கு உண்டோ அளவு!



ஆசைக்கு உண்டோ அளவு!

     போதிமரத்துத் தத்துவ ஞானி புத்தர் ''ஆசையே அழிவுக்குக் காரணம்'' என்றுரைத்தார். நம் முன்னோர் ''பேராசையே பெரும் நட்டம்'' எனப்பகர்ந்தார். ஆசை இல்லாத மனிதன் உண்டா? ஆசை இல்லாமல் வாழ முடியுமா? பட்டம், பதவி, புகழ், பொன், பொருள் இவைமேல் நாம் கொண்டுள ஆசையை நீக்க முடியுமா? ஆசைதான் வாழ்க்கையைத் தொடங்குகிறது, இயக்குகிறது, முடிக்கிறது.

            மண்ணாசையால் நடந்த அழிவைக் காட்டுவது மகாபாரதம். பெண்ணாசையால் நடந்த விளைவைக் காட்டுவது இராமாயணம்.

            நாடுகளைப் பிடிப்பதிலே பேராசை பிடித்த ''இட்லர்'' எங்கே இறந்தான் என்பது உலகுக்குத் தெரியவில்லை. மதவாதிகளின் பேராசையால் உலகம் பலமுறை தலை குனிந்திருக்கிறது.

            பேராசை ஆட்சியைக் கலைத்திருக்கிறது. பெற்ற புகழைக் குலைத்திருக்கிறது. தவறுகளையும், கொடுமைகளையும், பாவங்களையும் செய்யப் பணித்திருக்கிறது. மனிதனை விலங்காய் மாற்றி இருக்கிறது.

            ஆசையின் எல்லை எது? ஆசையின் இலக்கணம் என்ன? ஒருவன் நடந்து செல்கிறான். நடந்து செல்லும் அவன் மிதிவண்டியில் செல்ல ஆசைப்படுவான். மிதிவண்டி கிடைத்ததும் சிறிய மோட்டார் வண்டியின் மீது ஆசைப்படுவான். மோட்டார் வண்டி கிடைத்ததும். பெரிய மோட்டார் வண்டியின் மீது ஆசைப்படுவான். பெரியது கிடைத்ததும் மகிழுந்திவின்(கார்) மீது ஆசைப்படுவான். அது கிடைத்ததும் வெளிநாட்டு மகிழுந்திவின் மீது ஆசைப்படுவான். இப்படி முற்றுப் பெறாமல் வளர்ந்து கொண்டே எல்லை இல்லாமல் செல்வதுதான் ஆசையின் இலக்கணம்.       

     மனிதப் பிறவியின் நோக்கம் ''பிறப்பில்லாப் பெரும் நிலையை அடைவதுதான்'' என்று மொழிகிறது இறையியல். இந்நிலையை அடையவிடாமல் எல்லா உயிர்களிடமும் எல்லா காலமும் தோன்றி முளைக்கும் விதையாகும் ஆசை!

     தீமை விளைக்கும் ஆசைகளை நீக்கி வாழ்வதற்கு ஈடாகச் செல்வம் வேறில்லை! தூய்மை என்பது பேராசையற்ற தன்மையாகும். ஆசையனைத்தும் விட்டவரே துறவி எனப்படுவர். முற்றும் துறவாதார் தூய துறவியாக மாட்டார். ஒருவரை வஞ்சித்துக் கெடுப்பதற்குப் காரணமாக இருப்பது ஆசையே! பேராசைக் குணத்தை முற்றிலும் ஒழித்தால் கெடாமல் வாழ்வதற்குறிய நிலை வாய்க்கும். ஆசை இல்லாதவனுக்குத் துன்பம் இல்லை. ஆசை உண்டானால் அதைத் தொடர்ந்து துன்பம் மேலும் மேலும் வந்து கொண்டே இருக்கும். இக்கருத்துக்களை வள்ளுவரின் பொதுமறை நமக்கு உணர்த்துகிறது.

     ஆசையற்றவன் தன் மனத்தைக் கட்டுப்படுத்தலாம். தன் உறவினர்களை மகிழ்விக்கலாம். ஊரை வாழ்விக்கலாம். எல்லா உலகத்தையும் தனக்கு அடிமை யாக்கிக் கொள்ளலாம் என்று நீதி வெண்பா கூறுகிறது.

                     ஆசைக்கு அடியான் அகில லோகத்தினுக்கும் 
                     ஆசற்ற நல்லடியான் ஆவானே - ஆசை
                     தனையடிமை கொண்டவனே தப்பாது உலகம்
                     தனையடிமை கொண்டவனே தான்
                                                                                                              நீதி வெண்பா- 12
ஆசைக்கு அடிமையானவன் எல்லா உலகங்களுக்கும் அடிமையாவான்.   ஆசையற்றவன் உலகத்தை வெல்வான்.

     ஆசையின் தூண்டுதலால் வரவுக்கு மீறிய செலவுகளைச் செய்து வருந்துகிறோம், ''வட்டிக்கு வாங்கி அட்டிகை செய்து அட்டிகையை விற்று வட்டியைக் கொடுத்தானாம்''. என்ற பழமொழியை உணராமல் வாழ்கின்றவர்கள் இன்றும் உண்டு. தன்னிலை அறியாமல் கடன் வாங்கி வீடு கட்டுவார், பின் கடனை அடைக்க முடியாமல் கடன் கொடுத்தவரிடம் வீட்டைக் கொடுத்துவிட்டுத் தெருவில் நின்றவர்களை நான் பார்த்திருக்கிறேன். 

மண்ணாசை

     குசராத்தில் நில நடுக்கம் ஏற்பட்டால் தமிழ்நாட்டில் காணிக்கல்கள் இடம் மாற்றம் என்று நகைச்சுவையாக எழுதும் அளவிற்கு மண்ணாசை மக்கள் மனத்தில் நிறைந்துள்ளது. வயல் வரப்புச் சண்டையிலும், வீட்டு வேலிச் சண்டையிலும் வெட்டிக் கொண்டு மாய்ந்தவர்கள் உண்டு. அடுத்தவர் மண்ணைத் தன் மண்ணாக ஆக்கிக்கொள்ள இழிச்செயல் புரிந்தவர்கள் உண்டு, கண் கவரும் கட்டடங்களைத் தன் சொத்தாக மாற்றிக்கொண்ட அரசியல்வாதிகள் உண்டு, பூட்டி இருக்கும் வீடுகளைக் கட்சி மன்றமாகவும், தன் சொத்தாகவும் மாற்றிக்கொண்ட கொடியவர்கள் உண்டு, கோயில் மண்ணை மறைத்துக்கொண்ட தீயவர்கள் உண்டு, அரசின் சொத்தை வளைத்துக்கொண்ட கன்னெஞ்சர்கள் உண்டு, ஏழைகளுக்கு வழங்கும் விலையில்லா மனைகளைத் தங்களுக்குள் பிரித்துக் கொண்ட பேராசை நரிகள் உண்டு. 

     நாட்டின் எல்லைப் பகுதிகளைப் பிடிப்பதிலும், நாட்டைப் பிடிப்பதிலும் இவ்வுலகில் ஏற்பட்ட இழப்புகள் சொல்லில் அடங்கா, அயலவர்களின் படையெடுப்பால் இந்தியா அடைந்த கொடுமைகள் எண்ணில் அடங்கா, இந்திய வரலாற்றில் அசோகரின் ஆட்சி பொற்காலமாகப் போற்றப்படுவதுபோல், அவருடைய படையெடுப்பால் விளைந்த இழப்புகளும் சொல்லப்படுகின்றன.

     மண்ணுக்காகத் தந்தையை எதிர்த்து நிற்கும் பிள்ளையையும், மண்ணுக்காக அண்ணனை எதிர்த்து நிற்கும் தம்பியையும், மண்ணுக்காக உடன்பிறந்தாரை எதிர்த்து நிற்கும் சகோதரிகளையும் எப்படித் திருத்துவதோ? தன் மனைக்குப் பக்கத்தில் உள்ள மனையின் உரிமையாளர் அயல் நாட்டில் இருக்கிறார் என்பதைத் தெரிந்து கொண்டு, அடுத்தவர் மனையிலும் வீட்டைக் கட்டிக் கொள்ளும் கயவர்களை எப்படித் திருத்துவதோ?

     நாட்டையும் வீட்டையும் ஏமாற்றி, ஊரையும் உறவையும் ஏமாற்றி, நண்பரையும் நம்பியவரையும் ஏமாற்றிச் சேர்த்திடுவார் சொத்து! ஏமாற்றிச் சேர்த்த சொத்துக்களை அவர்தம் பிள்ளைகள் ஆள முடியாமல் இருப்பதையும் வீணாக அழித்து அழிவதையும் காண்கின்றேன்.

     ஆடி அடங்கும் வாழ்க்கையடா! ஆறடி நிலமே சொந்தமடா! என்பதை உணர்ந்தால் மண்மீது உண்டாகும் பேராசை நீங்கும். மனிதநேயம் ஓங்கும்.       
                                              
பெண்ணாசை

                                                பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோhர்க்கு
                                                அறனொன்றோ ஆன்ற ஒழுக்கு

            மற்றவர் மனைவியை எண்ணாத ஆண்தகமை, சால்புடையார்க்கு அறனாகவும், நிரம்பிய ஒழுக்கமாகவும் திகழும். அறநூலையும் பொருள் நூலையும் ஆராய்ந்து அறிந்தவரிடத்தில் பிறர் மனையாளை விரும்புகின்ற அறியாமை இருக்காது.

            நம்பியவருடைய மனைவியிடத்தே விருப்பம் கொண்டு தீமையைச் செய்து நடப்பவர், உயிரோடு இருப்பினும் இறந்தவரே யாவர்.

            இச்செயல் எளியது என எண்ணிப் பிறனுடைய மனைவியிடம் நெறி தவறிச் செல்கின்றவன் எப்போதும் அழியாமல் நிலைத்து நிற்கும் பழியை அடைவான். பகை, பாவம், அச்சம், பழி என்னும் இந்நான்கு குற்றங்களும் அவனைவிட்டு நீங்காவாம்.

            காம மயக்கத்தால் நெறி தவறி வாழ்பவன் முன்னோர்தம் பெருமையை இழப்பான். புகழை இழப்பான். பொருளை இழப்பான். முடிவில் வாழ்க்கையே இழப்பான்.

            கல்லூரி மாணவன் தீய படங்களைப் பார்த்தும், வேண்டாத நூல்களைப் படித்தும் காமம் தலைக்கேறிப் பாதை மாறிச் சென்றதால் கல்வி இழந்து, உடல் மெலிந்து, உள்ளம் தளர்ந்து வாடுவதை என்னென்பேன்.

            நெறி தவறி இளம் வயதில் பெறுகின்ற இன்பத்தை, முதுமையில் அழுது கழிக்க வேண்டும். பெண்ணாசை கொண்டு இளமையில் செய்த பாவத்தால் முதுமையில் துன்புறுவதையும் அவரின் பிள்ளைகள் பாவத்தை அனுபவிப்பகதையும் யான் பார்த்திருக்கிறேன். பாவியாகிய அவன் பல பெண்களை நாடினான். அவளின் மகன் கட்டிய தன் மனைவிடம் வாழ முடியாமல் இருக்கின்றான். அவனின் இரண்டாவது மகனின் மனைவிக்கு நோய், அதனால் உறவின்றி வாழ்கின்றனர். அவனின் மகளோ மனமுடிவு பெற்று விட்டில் நிற்கின்றாள். முன் செய்த பாவம், பின்னே தன்னையும் தன் பிள்ளைகளையும் தாக்கும் என்பது உண்மை.

            தன்னை நம்பி வந்த மனைவிக்கும், பிள்ளைக்கும் தீங்கிழைக்கும் செயலாம் விலைமாதுவை நாடுதல், மனைவி துயர்க்கடலில் ஆழ, பிள்ளைகள் நடுத்தெருவில் நிற்க, தந்தை தாய் தலை குனிய, உறவினர் தூற்ற, ஊரார் இழிந்து பேச, மதிப்புக் குன்றி, மானம் போக வாழ்வது வாழ்வா?

            நெறி தவறிச் செய்யும் செயல்கள் இன்று சரியென்று தோன்றும், நாளை தவறு எனப் புரியும் பின்னே வருந்திப் பயனில்லை. எதைச் செய்யலாம் எதைச் செய்யக் கூடாது என்பதை உணர்ந்து வாழ்தல் வேண்டும்.

            தவறுகளைத் தட்டிக் கேட்பவர் யார்? கேட்பதற்கு அவருக்கு என்ன தகுதி இருக்கிறது? எனக் கூறித் தவறுகளைத் தொடர்ந்து செய்பவனின் செயல் ஒருநாள் அடங்கும். துயரம் தொடங்கும.; மனிதராய்ப் பிறத்தல் அரிது மனிதப் மாண்பை உணராமல் பாவத்தைச் செய்து உழலுவதோ? காம மயக்கத்தில் காலத்தைக் கழிப்பதோ? அறிவை இழந்து அழிவை நாடுவதே? 

            மனிதப் பிறவியின் நோக்கம் என்ன? எதற்காகப் பிறந்தோம் என்பதை உணர்ந்தால் வாழ்க்கை புரியும்! வாழும் வழிகள் தெரியும்.

கம்பன் இதழ் 15.11.2001

mardi 9 avril 2013

அடிமைத் தமிழன்



                
நெஞ்சு பொறுக்க திலையே - இந்த
நிலைகெட்ட மனிதரை நினைத்துவிட்டால்
அஞ்சி யஞ்சிச் சாவார் - இவர்
அஞ்சாத பொருளில்லை அவனியிலே

         தம்மக்களின் நிலை கண்டு மகாகவி பாரதியார் வடித்த கண்ணீர் அடிகள் இவை. தாய் நாட்டின் அடிமை விலங்கு உடைந்து அரை நூற்றாண்டுக்கு மேலாகியும், தமிழனின் அடிமைச் செயல்கள் ஒழியவே இல்லை. அயல்மொழி அடிமை, அயல் பண்பாட்டில் அடிமை, சொல்லடிமை, செயலடிமை, மத அடிமை, சாதி அடிமை, பொன்னடிமை, பொருளடிமை, பெண்ணடிமை, மண்ணடிமை என இவனின் அடிமைச் செயல்கள் தொடர்கின்றன.....

         உரிமை இழந்து வாழ்வதிலே சட்டையை உயர்த்திக் கொள்ளும் தமிழனைப் பார்க்கிறேன். மதம் என்னும் மதம் பிடித்துக் குலைகின்ற தமிழனைக் காண்கிறேன். அயல்மொழி மோகத்தில் தன்னிலை மறந்து தாழ்வுறும் தமிழனைப் பார்க்கிறேன். தான் யார்? தன் சீர் என்ன? என்பதை உணராமல் உறங்குகின்ற தமிழனைக் காண்கிறேன். நலங்கள் பலவற்றை தருகின்ற பிரான்சு நாட்டில் வாழ்கின்ற தமிழன் சுதந்தரமாக வாழாமல் அடிமையாய் வாழ்வதைப் பார்க்கிறேன்.

         ஒரு நிறுவனத்தில் வேலை செய்பவன் அந்த நிறுவனத்திற்குப் பற்றுடையவனாக இருப்பது வேறு, அடிமையாக இருப்பது வேறு, இவ்விரண்டு நிலைகளில் உள்ள வேறுபாட்டை உணருதல் வேண்டும். பற்றுடன் வேலை செய்யலாம், முதலாளிக்கு அடிமையாக வேலை செய்யக் கூடாது. அயலவர்களுக்கு அடிமையாக இருப்பதிலே பெருமை கொண்டு அடிமையிலும் அடிமையாகக் கிடக்கின்றான் தமிழன்.

         சட்டத்துக்கு மாறாகக் கடுமையான வேலை செய்தாலும் சரி, கொடுமையான வேலை செய்தாலும் சரி, செய்துவிட்டு எலும்புத் துண்டுகளுக்கு வால் ஆட்டுகிறான் தமிழன். அவனைப் பின்தொடர்ந்து வேலை செய்யும் அவன் இனத்தவர் அடிமை ஆக்கப்படுவார் என்பதை மறந்து தான் வாழ்ந்தால் போதும் எனத் தன்னலவாதியாக வாழ்கிறான். தான் வாழ அடுத்தவர் வாழ்வைக் கெடுப்பவனை மனிதனாக ஏற்க முடியாது. இங்கொன்றும் அங்கொன்றும் சொல்லித் தன் வாழ்வை உயர்த்திக் கொள்பவனை மனிதனாக ஏற்க முடியாது. உரிமை இழந்து அடிமையாய்  வாழ்வதில் மகிழ்கின்றவனை மனிதனாக ஏற்க முடியாது.

         அயன்மொழிகளைப் படித்துச் சிறப்புறுவது தவறன்று. எத்தனை மொழிகளை வேண்டுமானலும் ஒருவன் படிக்கலாம், தவறன்று. தாய்மொழியைக் கற்காமல் இருப்பது பெரும் தவறாகும். உலகிலேயே தாய்மொழியைக் கற்க விரும்பாமல் அயன் மொழியைக் கற்று மகிழும் இனமாகத் தமிழினம் இப்பொழுது தாழ்ந்து கிடக்கிறது. ஆங்கில மொழியின் அடிமையாக இருப்பதில் தமிழன் நெகிழ்கின்றான். தமிழகத்தில் தாய்மொழிக் கல்வியை எதிர்த்துத் தமிழனே நிற்கின்றான். அடுத்த தலைமுறையில் தமிழ்ப்பிள்ளைகள் தமிழைப் பேசுவார்களா? படிப்பார்களா? என்று ஐயுறும் அளவிற்குத் தமிழன் ஆங்கில அடிமையாய் வாழ்கின்றான். நாட்டு விடுதலை பெற்ற தமிழன், மொழி விடுதலை அடைதல் என்றோ? 

கம்பன் இதழ் 15.09.2002

மதம் ஓா் அபின்




மதமான பேய் பிடியாது இருக்க வேண்டும்

[கம்பன் இதழ் 17,09,2011]
 
     அமெரிக்க வல்லரசை அதிரச் செய்திருக்கிறது மதமென்னும் பயங்கரவாதம். பயணிகளின் விமானங்களைக் கடத்திச் சென்று அமெரிக்காவின் சர்வதேச வர்த்தக மையக் கட்டிடங்கள் மீதும் இராணுவத் தலைமையகமான பென்டகன் மீதும் மோதிப் பல்லாயிரம் மக்களைக் கொன்று குவித்திருக்கிறது மதமென்னும் பயங்கரவாதம். மூன்றாம் உலகப் போரை மூட்டும் வகையில் நஞ்சு விதைகளை விளைத்துள்ளது மதமென்னும் பயங்கரவாதம். நாகரிகம் அடைந்த மனிதனை மீண்டும் விலங்குகளாய் மாற்றி வருகிறது மதமென்னும் பயங்கரவாதம்.

     குழந்தைகளின் கையில் துப்பாக்கியும் கொலை கொள்ளை புரியும் சிந்தனையும் தந்து மதத்தலைவர்களால் உருவாக்கப்படும் உலகம் அழிவையே அடையும் அமைதி என்ற சொல்லே இல்லாமல் போகும்.

     மதவாதிகளின் தன்னலத்தால் உலகம் அடைந்த கொடுமைகள் கணக்கில் அடங்கா! இந்தியாவை ஆண்டு வந்த அயலவர்கள் தங்கள் மதத்தைத் திணிக்க மேற்கொண்ட கொடுமைகள் இந்திய வரலாற்றில் பதியப்பட்டுள்ளன. இந்துமதத் தன்னலவாதிகளால் தமிழினம் அடிமை இருளில் துயருற்றதும் தமிழ் மொழி குலைக்கப் பட்டதும் மறக்க முடியா! தந்தை பெரியாரால் தமிழினம் அடிமை இருள் நீங்கி ஒளி பெற்றதும் தமிழ்மொழி உயர்வுற்றதும் மறைக்க முடியா!

'மதம் மக்களுக்கு அபின்' என்றார் காரல் மாக்ச். 'மதமான பேய் பிடியாது இருக்க வேண்டும்' என்றார் வடலூர் வள்ளலார்.

             சாதியிலே மதங்களிலே சமய நெறிகளிலே
               சாத்திரச் சந்தடிகளிலே கோத்திரச் சண்டையிலே
             ஆதியிலே அபிமானித்து அலைகின்ற உலகீர்
               அலைந்தலைந்து வீணேநீர் அழிதல் அழகலவே
             நீதியிலே சன்மார்க்க நிலைதனிலே நிறுத்த
               நிருத்தமிடும் தனித்தலைவர் ஒருத்தர் அவர்தாமே
             வீதியிலே அருட்சோதி விளையாடல் புரிய
               மேவுகின்ற தருணம்இது கூவுகின்றேன் உமையே.
                                                     (திருவருட்பா. 5566)

இறைவன் ஒருவனே! அவ்விறைவனுக்கு ஒவ்வொரு மதமும் ஒவ்வொரு பெயரிட்டு வணங்குகிறது. உலகோர் இக்கருத்தை உணர்ந்து ஒற்றுமையாய் வாழ்தல் எந்நாளோ! ஒன்றே குலம்! ஒருவனே தேவன்! எனும் நெறியைப் பாரோர் ஏற்றல் எந்நாளோ!

                 'யாதும் ஊரே! யாவரும் கேளிர்'

     எவ்வூராயினும் எம் ஊரே! யாவராயினும் எம் உறவே! என்று உலகச் சமத்துவத்தை அன்றே பாடிய சங்கப் புலவர் கணியன் பூங்குன்றனாரின் உயர்வழியில் மக்கள் வாழ்தல் எந்நாளோ!

     மதங்கள் சொல்லும் நன்னெறியை மறந்து புன்னெறியை நாடினால் அழிவே பெருகும். மதமென்னும் மதம் பிடித்து அலையும் மனிதா! அன்பாம் அமுதைப் பருகுவாய்! அனைவரும் சமமென்னும் உண்மையை உணர்வாய்!

     அன்பே தெய்வம்! அன்பே உயிர்! அன்பே உலகம்!