mardi 30 octobre 2012

தேனூறும் தமிழே




தேனூறும் தமிழே

எடுப்பு

பூத்தாடும் பூஞ்சோலை பாரு - நெஞ்சைப்
புண்ணாக்கும் பொன்மாலை யோடு
                                    (பூத்தாடும்)

தொடுப்பு

நாத்தாடும் வயல்வெளியாம் மேட்டில் - நாளும்
நாமிருந்தோம் பேரின்ப வீட்டில்
                                   (பூத்தாடும்)
முடிப்புகள்

இரவோடும் மனத்தோடும் விளையாடும் முல்லை - செவ்
விதழோரம் வாய்வைத்தால் சுவைக்கேதாம் எல்லை
அருளோடும் அன்போடும் எனையாளும் நங்கை - நல்
அழகோடும் அறிவோடும் உறவாடும் மங்கை
                                   (பூத்தாடும்)

இனிதான மணம்வீசம் எழிலான மேனி - என்றும்
இயல்பான மொழிபேசும் கலைஞான வாணி
தணியாத மோகத்தைத் தந்தவளே வாநீ - எனைத்
தனியாக வாடவிட்டே ஏன்போனா யோநீ
                                   (பூத்தாடும்)

மலராகும் மதுவாகும் மாதேஉன் முகமே - பவள
மணியாகும் அணியாகும் அன்பேஉன் நகமே
நிலவாகும் ஒளியாகும் அமுதேஉன் அகமே - என்
நினைவாகும் வாழ்வாகும் அழகேஉன் சுகமே
                                   (பூத்தாடும்)

உடலானாய் உயிரானாய் தேனூறும் தமிழே - என்
உணவானாய் உறவானாய் அமுதூறும் அழகே
கடலானாய் நதியானாய் கற்பனையாம் காட்டில் - உயர்
கருவானாய் பொருளானாய் நான்பாடும் பாட்டில்
                                   (பூத்தாடும்)

lundi 29 octobre 2012

வெள்ளைப் புறா




வெள்ளைப் புறா

துணிவும் உண்டு! தூயவர்தம்
     பணிவும் உண்டு! நல்லழகாய்
அணியும் மணிபோல் ஒளிர்கின்ற
     அகமும் உண்டு! கனிவுண்டு!
பணியும் பண்பும் ஒன்றாகிப்
     படரும் பசுமைப் புகழுண்டு!
பிணியும் பிறவும் ஒழித்திங்குப்
     பெருமை தந்த இந்திராவே!

நீண்ட மூக்கு! நேர்பார்வை!
     நிலத்தைப் புரட்டும் நெஞ்சுறுதி!
ஆண்ட தென்ன? நல்லறிவும்!
     அன்பும்! ஆசை நிறைந்தினிது
பூண்ட தென்ன? நம்நாட்டின்
     புகழும் பொலிவும்! கைகளினால்
தீண்ட தென்ன? வானுச்சி!
     திண்மைச் செயலர் இந்திராவே!

தந்தை நேரு தந்தநெறி!
     தரணி போற்றும் தங்கநெறி!
சிந்தை தரித்து நம்நாட்டைச்
     செதுக்கி வடித்த அருஞ்சிற்பி!
பந்தைப் போன்று பகைவர்களைப்
     பறக்கச் செய்த மறச்செல்வி!
விந்தை! நம்மின் விடிவெள்ளி!
     விழிபோல் இருந்த இந்திராவே!

வன்மை அடைந்த நாடுபல
     வளரும் நாட்டைச் சுரண்டுகிற
தன்மை அறிந்து தடைபோட்டுத்
     தாய்போல் அணைத்துத் துயர்தீர்த்தார்!
நம்மை அடையும் வழிகளையே
     நன்றே நவின்று நலஞ்சேர்த்தார்!
இன்மை நீக்கி இருள்போக்கி
     இனிமை அளித்த இந்திராவே!

நாடே உயிராய்! மக்களுறும்;
     நலமே உணர்வாய்! அறமூட்டும்
ஏடே உணவாய்! குமரிவரை
     இனிதே செழிக்கும் வன்னுரமாய்!
வீடே மறந்து! எதிர்வந்த
     விதியே ஓட வினைபுரிந்து!
ஈடே இல்லாப் பெண்மணியாய்
     இருந்த எங்கள் இந்திராவே!

ஆட்சி செய்யும் நுட்பங்கள்
     அனைத்தும் அறிந்த பெண்மணியார்!
காட்சிக் கென்றும் இனியவராய்க்
     கண்ணில் கமழும் கண்மணியார்!
சாட்சி சொல்லும் இவ்வுலகம்!
     சற்றும் அஞ்சா வன்மதியார்!
மாட்சி மிக்க வரலாறாய்
     வாழும் எங்கள் இந்திராவே!

ஆளும் ஆட்சி போர்க்களமாய்
     ஆன பொழுதும்! காலமெனும்
நாளும் கோளும் சரியின்றி
     நடந்த பொழுதும்! ஓய்வின்றித்
தோளும் காலும் நற்பணியில்
     தொடந்த பொழுதும்! எதிர்வந்து
மூளும் சதியை முற்றறுத்து
     முழங்கும் வெற்றி இந்திராவே!

காந்தி நாடு! கர்மவீரர்
     காம ராசர் கருணைநாடு!
நீந்தி முழுகி முத்தெடுக்கும்
     நேய கவிஞர் நிறைந்தநாடு!
சாந்தி! சாந்தி! அமைதியினைச்
     சாற்றும் நாடு! தலைமீதே
ஏந்திக் காத்தே இரவுபகல்
     எண்ணா துழைத்த இந்திராவே!

உலகம் போற்றும் தலைவர்களில்
     ஒப்பில் நிலவாய்த் திகழ்கின்றார்!
திலக மாகப் பாரதத்தாய்
     தீட்டி அழகாய் மிளிர்கின்றாள்! 
குலவும் சீர்கள் நாடெய்தக்
     கொள்கை கொண்டார்! உயிரீந்தார்!
உலவும் நினைவில் எந்நாளும்
     ஒளிரும் எங்கள் இந்திராவே!

கொள்ளைப் புறத்து மலர்க்கூட்டம்
     கொஞ்சி மணக்கும் வடிவழகு!
பிள்ளை அமுதாய் நம்முயிரைப்
     பிடித்து மயக்கும் சொல்லழகு!
கள்ளை நிகர்த்த சுவைக்கவிகள்
     கட்டிக் கொடுக்கும் செயலாழகு!
வெள்ளைப் புறாஎன் றிவ்வுலகம்
     வியந்து போற்றும் இந்திராவே!


dimanche 28 octobre 2012

முல்லைக் காடே!





முல்லைக் காடே

பூந்தமிழ்ப் புகழைப் பாடு - அதற்குப்
புவியினில் ஏதிங்(கு) ஈடு!
பைந்தமிழ்த் தேனைப் பருகு - சந்தப்
பாவினில் உள்ளம் உருகு!

வண்டமிழ் வண்ணப் பாக்கள் - மனம்
மயக்கிடும் வைரப் பூக்கள்!
ஒண்டமிழ் அழகே அழகு - உலகில்
உயர்கவி எழுதப் பழகு!

முத்தமிழ் முல்லைக் காடே - அதில்
மொய்த்திடும் இன்பம் நீடே!
நித்தமும் என்றன் தாயே - என்
நினைவினில் இருப்பாய் நீயே!

நான் முதலமைச்சரானால் - 2



நான் முதலமைச்சரானால்...... [பகுதி - 2]

(26.10.2017 கம்பன் கட்சியின் தலைவர்
கவிஞர் கி. பாரதிதாசன் அவர்கள் 25551 வாக்குகள்
அதிகமாகப் பெற்று முதலமைச்சராகத்  
தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்)

முதலமைச்சர் பதிவியினைத் தந்த, என்றன்
     முதுகெலும்பு போன்றவரே வணக்கம்! நன்றே
அதற்கமைச்சா் என்றென்னைப் போற்றிப் பாடி
     ஆண்டவனாய் ஆக்காதீா்! ஆட்சி மன்ற
இதற்கமைச்சர் ஆனாலும் என்றும் உங்கள்
     இதயத்தின் தோழரென இருப்பேன்! இங்கே
எதற்கமைச்சர் ஆனாலும் ஆளும் வாய்ப்போ
     ஈரைந்தே ஆண்டுகளாம்! பிறகொன் றில்லை!

தொட்டாலே தீட்டென்று சொன்னால், நெற்றிப்
     பொட்டினிலே சுடுவென்பேன்! மரங்கள் எங்கும்
நட்டாலே மழைசிறக்கும்! மரமும் மண்ணும்
     நாட்டுரிமை! சாதிகளின் பெயரைச் சொல்லி
இட்டாலே பத்தாண்டுச் சிறையைக் காண்பார்!
     இனியதமிழ் மக்களிடம் சுரக்கும் அன்புக்
கட்டாலே ஆண்டிடுவேன்! இன் கரும்புக்
     கட்டாகக் கவிதருவேன்! ஓங்கும் வாழ்வே!

இமயத்தில் முக்கொடியை ஏற்றி வைத்த
     ஈடில்லா மன்னன்போல் வீரங் கொண்டு
நமைச்சுற்றி வருகின்ற நிலவின் மேலே
     நற்றமிழின் கொடிபறக்கச் செய்வேன் பாரீர்!
சமயத்தின் பெயரெல்லாம் நீக்கி விட்டுத்
     தமிழ்மார்க்கம் தந்திடுவேன்! குறளாம் நூலை
இமையொத்துக் காக்கின்ற உணர்வை ஊட்டி
     இன்குறளை நம்மறையாய் ஒலிக்கச் செய்வேன்!

தையூட்டும் நல்வளங்கள் தருவார் என்று
     தமிழுட்டும் புலவரெலாம் எண்ணி நிற்க!
கையூட்டும் நினைவினிலே காலை மாலை
     கனவுலகில் மகிழ்ந்திடுவார்! கொள்ளை கொண்ட
பையூட்டும் எண்ணங்கள் மக்கள் வாழ்வைப்
     பாழூட்டும்! நாடழியப் பஞ்ச மூட்டும்!
மையூட்டும் மதுவூட்டும் மனத்தார் தம்மை
     நெய்யூட்டும் அடுப்பிலிடச் சட்டம் செய்வேன்!

மனைபோட்டு விற்கின்ற கொள்ளை! நாட்டு
     வரலாற்றில் எள்ளளவும் இனிமேல் இல்லை!
சினைபோட்டுப் பொரிக்கின்ற செயலைப் போலச்
     சீர்திருத்தச் சிந்தனைகள் என்னுள் பூக்கும்!
எனைப்போட்டுத் தாக்கிடவே எத்தர் கூட்டம்
     எதிர்வந்து நின்றாலும் அஞ்ச மாட்டேன்!
பனைபோட்டு நீர்க்கரையைக் காத்தல் போன்று
     பசுந்தமிழின் குறள்நெறியில் ஆட்சி செய்வேன்!

அன்றைக்கும் தன்மகனை மன்னன் ஆக்கும்
     தன்னலத்து முடியாட்சி! தோழா இங்கே
இன்றைக்கும் தன்மகனைத் தலைவன் ஆக்கும்
     இழிநிலையில் குடியாட்சி! இந்தப் போக்கை
என்றைக்கும் இல்லாமல் ஒழிக்க வேண்டி
     என்னாட்சி அதற்கான சட்டம் தீட்டும்!
கொன்றைக்கும் கோடிக்கும் இடமே இல்லை!
     கொஞ்சுகின்ற குளிர்தமிழே என்றன் எல்லை!

அரசியலை நெறிபடுத்த முனைவர் பட்டம்
     அடைந்தவரே தேர்தலிலே நிற்க வேண்டும்!
மரச்செதிலை விற்கின்ற தொழிலைக் கூட
     மண்ணாள வருபவர்கள் செய்யக் கூடா!
வரும்பொருளைக் கணக்கிட்டுச் சொல்ல வேண்டும்!
     ஒருபைசா அதிகமெனில் பதவி இல்லை!
பெரும்பொருளைத் தலைமுறைக்குச் சேர்த்து வைக்கும்
     பெருசாளிக் குடன்தூக்கு! நீதி காப்பேன்!

ஒன்றுமுதல் இறுதிவரை தமிழாம் கல்வி
     ஒப்பின்றி அளித்திடுவேன்! தமிழைக் கற்றால்
இன்றுமுதல் வேலையுண்டு! நாட்டைத் தூற்றி
     இருநொடிகள் எண்ணுவதும் பொல்லாக் குற்றம்!
அன்றுமுதல் இருந்துவரும் மாய பொய்யை
     அடியோடு அழித்திடுவேன்! கம்பன் போன்றே
என்றுமுள செந்தமிழை உயிராய்ப் போற்றி
     எத்திசையும் பரப்பிடுவேன்! இனிக்கும் வாழ்வே!

பதினெட்டு வயதுவரை படிக்க வேண்டும்!
     படிப்பவரை பணிசெய்யப் பணித்தல் குற்றம்!
மதிப்பிட்டு அயல்நாட்டு வேலை தேட
     வழியில்லை! தாய்செழிக்கப் பணிகள் செய்வீர்!
சதியிட்டுத் தாய்த்தமிழைத் தடுப்போர் தம்மைத்
     தனிக்காட்டில் விட்டிடுவேன் புலிகள் உண்ண!
பதிப்பிட்டுத் தருகின்ற நூhல்கள் ஆய்ந்து
     பரிசளிப்பேன்! கொடைதருவேன்! மகிழ்ச்சி பொங்கும்!

விளையாட்டில் தமிழர்களின் திறமை ஓங்க
     விருதுபல வழங்கிடுவேன்! கொஞ்சும் வண்ண
கலையூற்றில் அறிவியலைப் புகுத்தி வைப்பேன்!
     கவியூற்றில் மணக்கின்ற நூல்கள் காப்பேன்!
வலையேட்டில் தமிழ்நூல்கள் யாவும் மின்ன
     வகைவகையாய் மொழிபெயர்ப்பேன்! விரைந்து பாயும்
மலையாற்றின் போக்கைப்போல் வளங்கள் சேர்த்து
     மண்ணுலகைப் பொன்னுலகாய் ஆட்சி செய்வேன்! 

26.10.2012