Affichage des articles dont le libellé est கவியரங்கம். Afficher tous les articles
Affichage des articles dont le libellé est கவியரங்கம். Afficher tous les articles

dimanche 12 octobre 2025

கம்பன் விழா 2025

 

இருபத்து நான்காம் ஆண்டு
பிரான்சு கம்பன் விழாப் பாட்டரங்கம்


தமிழ் வணக்கம்

 

மனமோங்கு தமிழே..உன் இனமோங்கு கவிபாட

          மலர்ஊறும் தேனள்ளி யூட்டு - உன்

          மடியேந்தி மகனைத்தா லாட்டு!

மதியோங்கு தமிழே..உன் நதியோங்கு கவிபாட

          மத்தாப்பு வண்ணங்கள் காட்டு! - பொன்

          மகரத்து யாழ்கொண்டு மீட்டு!

 

தினமோங்கு தமிழே..உன் திணையோங்கு கவிபாடச்

          தித்திக்கும் வித்தள்ளிக் கூட்டு! - மின்னும்

          சிங்கார அணியள்ளிச் சூட்டு!

சீரோங்கு தமிழே..உன் பேரோங்கு கவிபாடச்

          சிந்தைக்குள் சந்தத்தைக் கூட்டு! - தான

          தந்தான தாளங்கள் போட்டு!

 

வனமோங்கு தமிழே..உன் வளமோங்கு கவிபாட

          மானாக மயிலாகத் தீட்டு! - இந்த

          மன்றத்துள் இன்பத்தை மூட்டு!

மகிழ்வோங்கு தமிழே..உன் அகமோங்கு கவிபாட

          வார்த்தைக்குள் இன்பத்தை நீட்டு! - பெரு

          மலையாகப் புகழள்ளி நாட்டு!

 

பனியோங்கு தமிழே..உன் கனியோங்கு கவிபாடப்

          படர்கின்ற வண்ணத்தைத் தீட்டு! - வருக

          பறந்தோடி என்சொல்லைக் கேட்டு!

பாட்டுக்கே அரசாக்கி நாட்டுக்கே உரமாக்கிப்

          பாசத்தால் என்னைச்பா ராட்டு! -  தாயே

          பணிகின்றேன் உன்னைச்..சீ ராட்டு!

 

பாட்டரசர் கி. பாரதிதாசன்

28.10.2025

lundi 1 août 2022

கம்பன் புகழ்

 

கம்பன் புகழ்

தாளம்: நான்மையின ஏகம்

நடை : நான்மை

 

தமிழ்வந்து மனஞ்சேர்ந்து

தாளம் போடுது00

அமுதென்று கவியுள்ளம்

அருந்தி யாடுது000

 

கவி.கம்பன் புகழ்பாடும்

கழகம் வாழ்கவே00

புவியெங்கும் பூந்தமிழின்

பொதுமை சூழ்கவே00

 

ஒளியூட்டும் தமிழ்ப்பாட்டை

உலகம் கேட்குது00

களியூட்டும் அருங்கம்பன்  

கருத்தை ஏற்குது00

 

என்றுமுள தெந்தமிழை

இதயம் பதிப்போம்00

இன்றுவரை தமிழ்வளர்த்த

இடத்தைத் துதிப்போம்00

 

பேரழகு திருராமன்

பெருமை பாடுவோம்00

தாரழகு தமிழேந்திச்

தாவி யாடுவோம்00

 

மானழகு சீதையினை

வணங்கிப் போற்றுவோம்00

தேனழகு தமிழோங்கச்

செயல்கள் ஆற்றுவோம்00

 

அண்ணனிடம் தம்பிகொண்ட

அன்பை யெண்ணுவோம்00

வண்ணமுடன் தமிழ்நெறியில்

வாழ்வைப் பின்னுவோம்00

 

மன்னனுயிர் மக்களென

வாழ்ந்து காட்டினார்00

தன்னிகரே இலையென்று

தமிழைச் சூட்டினார்00

 

படகோட்டும் வன்குகனின்

பாதம் தொழுகிறேன்00

இடரோட்டும் தமிழாலே

என்னை உழுகிறேன்00

 

காலடியைத் தலைசூடிக்

காத்தான் பரதனே00

மேலுலகில் இணையில்லை

வீரன் ஒருவனே00

 

பின்தொடர்ந்து பணிசெய்து

பேறு பெற்றவன்00

பொன்படர்ந்து மனமின்னப்

புகழை யுற்றவள்00

 

வாலுடைய சுக்கிரீவன்

வந்து வணங்கினான்00

மாலுடைய நல்லணியர்

வாழ்த்த இயங்கினான்00

 

ஈழதேச வீடணனை

ஏற்றே அருளினான்00

ஆழமாகச் சிந்தனையில்

அறத்தைச் சொருகினான்00

 

கையழகு காலழகு

காட்டும் விருத்தங்கள்00

மையழகு மேனியனை

மனத்துள் பொறுத்துங்கள்00

 

துகள்பட்டே பெண்ணெழுகை

துாய திருத்தாளே00

அகமுற்றே ஒளிமின்னும்

அருளின் திருநாளே00

 

வாலியெனும் பெரும்வீரன்

வாழ்வை யிழந்ததேன்00

கேலியுறும் செயல்புரிந்து

கீழே விழுந்ததேன்00

 

கலைவல்லி சூர்ப்பணகை

கண்கள் கவிபேசும்00

மலைநெல்லிக் கனியள்ளி

வாரித் தினம்வீசும்00

 

உறவுக்கே உயிர்தந்தே

உயர்ந்தான் கும்பனே00

சிறப்புக்கே சீர்தந்தே

செழித்தான் கம்பனே00

 

வேரடர்ந்து படர்ந்தாலே

விளைச்சல் வளருமே00

போரகன்று நின்றாலே

புகழ்தான் மலருமே00

 

தலைபத்துக் கொண்டிருந்த

தலைவன் வரவேண்டும்00

கொலையெட்டுத் திசைநீக்கிக்

கோலந் தரவேண்டும்00

 

இவ்வுலகின் பேரரசன்

எங்கள் இராவணனே00

எவ்வுலகும் இணையில்லை

ஏத்துத் தமிழினமே00

 

பாட்டரசர் கி. பாரதிதாசன்

கம்பன் கழகம் பிரான்சு

தொல்காப்பியர் கழகம் பிரான்சு

30.07.2022

dimanche 6 octobre 2019

கம்பன் காட்டும் அழகியல்


கம்பன் விழாக் கவியரங்கம்
தலைமைக் கவிதை
  
பகுதி - 2
  
கம்பன் காட்டும் அழகியல்
  
நடையழகு ஓங்கிவரும்!
குடையழகு தாங்கிவரும்!
தொடையழகுக் கம்பனவன் பாட்டு - அது
கொழித்தகனி தேனமுதக் கூட்டு!
  
படையழகு துள்ளிவரும்!
பணியழகு அள்ளியிடும்!
உடையழகு உத்தமனைப் போற்றும் - கம்பன்
உரைத்தகவி சால்புகளைச் சாற்றும்!
  
இடையழகு மின்னிவரும்!
இசையழகு பின்னிவரும்!
அடையழகு ஏந்துசுவை நிற்கும் - அதை
அறிஞரினம் ஆழ்ந்துமனம் கற்கும்!
  
ஊரழகு கண்மேவும்!
உறவழகு பண்மேவும்!
தேரழகு கொண்டதமிழ்க் கூத்து! - நுாலில்
திருராமன் சீர்மணக்கும் பூத்து!
  
நாட்டழகு நற்காட்சி!
நறுந்தமிழின் பொன்மாட்சி!
பாட்டழகு நெஞ்சத்தை அள்ளும்! - சந்தக்
கூட்டழகு மானாகத் துள்ளும்!
  
தோளழகை வில்..காட்டும்!
தொண்டழகைச் சொல்..காட்டும்!
தாளழகைத் தாமரையே ஏற்கும்! - விருத்தத்
தமிழழகை நம்கண்கள் ஈர்க்கும்!
  
வேலழகு... கண்ணழகு!
பாலழகு... பெண்ணழகு!
காலழகுச் சீதையினைக் கண்டு - அன்னம்
கால்..அழகு என்றேங்கும் நின்று!
  
மரகதமோ? மாகடலோ?
மழைமுகிலோ? மாலழகு!
அருளொளியோ? அன்பமுதோ? பாடல் - கம்பன்
அளித்ததமிழ் இன்பத்தின் கூடல்!
  
மூக்கழகுச் சூர்ப்பணகை!
முன்னின்று செய்த..பகை!
நாக்கழகு கம்பனையே தாக்கும்! - அவள்
நடையழகு பாக்கோடி யாக்கும்!
  
அலையழகு நல்லீழம்!
ஆணழகு வல்வீரம்!
கலையழகு மாமன்னன் ஆட்சி! - புகழ்க்
கம்பனவன் காவியமே சாட்சி!
  
காலணியும் ஆண்ட..கதை!
காலத்தை வென்ற..கதை!
மாலணியும் வாலணியும் கூறும்! - இதை
மார்பணியும் மாந்தர்நலம் ஏறும்!
  
ஆழியெனக் கருத்தழகு!
அரங்கனவன் கருத்தழகு!
வாழியெனப் வாழ்த்தியுளம் பூக்கும்! - கம்பன்
வடித்தகவி வண்டமிழைக் காக்கும்!
  
தொடரும்
  
பாட்டரசர் கி. பாரதிதாசன்
நிறுவுநர்
கம்பன் கழகம் பிரான்சு
தலைவர்
தொல்காப்பியர் கழகம் பிரான்சு

mercredi 2 octobre 2019

கவியரங்கம் 2019 பகுதி 1


கம்பன் விழாக் கவியரங்கம்
தலைமைக் கவிதை
  
பகுதி - 1
  
திருமால் வாழ்த்து!
    
கடல்மீது பாலுாறும்! கண்மீது அருளுாறும்!
காக்கின்ற திருமாலே வாராய்!
கரைமீது நண்டூரும்! கனிமீது வண்டூரும்!
கவிமீது நீ..யூர வாராய்!
  
மடல்மீது மணமூறும்! மலர்மீது மதுவூறும்!
மனமீது நீ..யூற வாராய்!
வான்மீது கோலுாரும்! தேன்மீது தமிழூறும்!
மாமாயா ஒருபார்வை பாராய்!
  
சுடர்மீது ஒளியூரும்! தொடர்மீது வாழ்வூறும்!
சொன்மீது நீ..யூற வாராய்!
தொகைமது புவியூரும்! நகைமீது நெஞ்சூறும்!
தகைமீது நான்..ஊறச் சேராய்!
  
திடல்மீது மறமூரும்! படம்மீது காலுாரும்!
திறமூறும் அரங்கா..நீ வாராய்!
தித்திக்கத் தித்திக்கச் சித்திக்கச் சித்திக்க
முத்தாகத் தமிழள்ளித் தாராய்!
  
தமிழ் வாழ்த்து!
    
நீரோங்கும் மண்மீதே ஏரோங்கும் வளமாகச்
சீரோங்கும் தமிழே..நீ வாராய்!
தேரோங்கும் நெறிகொண்டு நிறையோங்கும் செயற்கொண்டு
நெஞ்சோங்கும் கவியே..நீ தாராய்!
  
சீரோங்கும் தொடைகொண்டு பேரோங்கும் நடைகொண்டு
சிங்காரத் தமிழே..நீ வாராய்!
தேரோங்கும் எழிற்கொண்டு தேனோங்கும் பழங்கொண்டு
தெம்மாங்குச் சந்தங்கள் தாராய்!
  
ஊரேங்கும் அருள்கொண்டு பாரோங்கும் பொருள்கொண்டு
உயர்வோங்கும் தமிழே..நீ வாராய்!
உயிரோங்கும் அறங்கொண்டு பயிரோங்கும் உரங்கொண்டு
உணர்வோங்கும் உள்ளத்தைத் தாராய்!
  
கூரோங்கும் வேல்கொண்டு தாருாங்கும் படைகொண்டு
கொழித்தோங்கும் தமிழே..நீ வாராய்!
போரோங்கும் களங்கொண்டு வேரோங்கும் புகழ்கொண்டு
புவியோங்கும் பொன்வாழ்வைத் தாராய்!
  
அவையோர் வாழ்த்து!
  
இன்போதைத் தமிழ்நாடி, மென்போதைக் கவிநாடி
எழுந்துள்ள அவையோரே வணக்கம்!
இளையோரே! இனியோரே! இணையில்லாச் சான்றோரே!
என்பாட்டுச் செவிமேவி மணக்கும்!
  
பொன்போதைப் பெண்டீரே! கண்போதை கொண்டீரே!
பண்போதை நெஞ்சத்தின் வணக்கம்!
பொருள்போதை பெற்றோரே! அருள்போதை யுற்றோரே!
புதுப்போதை என்பாட்டுக் கொடுக்கும்!
  
வன்போதை மதுவாக, மென்போதை மாதாக
மயக்கத்தை என்பாட்டுப் படைக்கும்!
துன்போதைத் தீயோரைத் தொடர்போதைப் பகையோரைத்
துாள்துாளாய் என்பாட்டு உடைக்கும்!
  
நன்போதை நடையேந்தி நறும்போதை தொடையேந்தி
நலமேந்தி என்பாட்டு நடக்கும்!
நற்போதைத் தமிழ்காக்கும் கற்றோரின் முன்னாலே
பற்றோடே என்னெஞ்சம் அடங்கும்!
  
தொடரும்
  
பாட்டரசர் கி. பாரதிதாசன்
நிறுவுநர்
கம்பன் கழகம் பிரான்சு
தலைவர்
தொல்காப்பியர் கழகம் பிரான்சு
22.09.2019

samedi 21 avril 2018

கவியரசர் கவியரங்கம் - 3


கவியரசு கண்ணதாசன் விழாப் பாட்டரங்கம்
[
தலைமைக் கவிதை]
  
தொடர்ச்சி
  
தெய்வம் இருப்பது எங்கே
என்ற தலைப்பில் பாட வருமாறு
பாவலர் மலர்வாணியை அழைத்தல்
  
இறைவன் இருக்கும் இடம்பாட
இனிய வாணி வந்திடுக!
நிறைவாய்த் தமிழின் சீர்பின்னி
நெஞ்சம் நிறையத் தந்திடுக!
  
வாணி தாசன் பரம்பரையில்
வந்த பெண்ணே பாடுகவே!
ஏணி கொண்டு தமிழ்நெறியை
ஏற்றிப் புகழைச் சூடுகவே!
  
யாப்புக் கலையை நன்றாக
இசைக்க இங்கே அழைக்கின்றேன்!
தோப்புக் கனிகள் கொடுத்திடவே
தொடக்கக் கவியாய் நுழைக்கின்றேன்!
  
அருமைக் கவியே! மலர்வாணி!
அழகாய் விடுக கவித்தோணி!
பெருமை யோடு தமிழ்க்காணி
பேணிக் காக்க வா..வா..நீ!
  
கவியேறு பேத்தி எழுகவே! - தமிழைப்
புவியேரு போன்றே உழுகவே!
  
--------------------------------------------------------------------------------------
    
செந்தமிழ்த் தேன்மொழியாள்
என்ற தலைப்பில் பாட வருமாறு
பாவலர் அன்பரசியை அழைத்தல்
  
தேன்மொழியாள் சீர்பாடத்
தென்றல் வருகவே!
வான்மழையாய்த் தமிழ்மழையை
மன்றில் தருகவே!
  
அன்பரசி! அருளரசி!
அவையில் எழுகவே!
இன்பரசி தமிழணங்கை
ஏத்தித் தொழுகவே!
  
சிரிப்பேந்தும் முகத்தாலே
சிந்து பாடுக!
பறித்தேந்தும் மலராகப்
பண்கள் சூடுக!
  
கலைமகளின் அருள்கொண்டு
கவிதை பொங்குக!
அலைமகளின் செல்வமென
அகத்துள் தங்குக!
  
அன்பின் அரசி அவையேறு! - இங்கு
அருமைத் தமிழின் சுவைகூறு!
--------------------------------------------------------------------------------------
  
கலங்காதிரு மனமே
என்ற தலைப்பில் பாட வருமாறு
பாவலர் மணியன் செல்வியை அழைத்தல்
  
கலஞ்கா திருப்பாய் மனமே என்று
கவிதை தீட்டிடவே - என்றும்
நலங்கா திருப்பாய்! நாடி உழைப்பாய்!
நன்மை காட்டிடவே!
  
மணியன் செல்வி! மலரின் செல்வி!
மன்றம் காணுகவே! - பொன்
அணிகள் மின்னம் அடிகள் பின்னி
அழகைப் பூணுகவே!
  
வீரம் விளையும் ஈழப் பெண்ணே
வெற்றிக் கவிபாடு! - தே
வாரம் போன்றே அமுதத் தமிழை
ஆக்கிப் புகழ்சூடு!
  
என்றன் இடத்தில் யாப்பைக் கற்றே
எழுதும் பெண்மணியே! - என்றும்
உன்றன் இடத்தில் ஒளிர்வாள் அன்னை
ஓங்கும் தமிழ்ப்பணியே!
  
மணியன் செல்வி மன்றம் வருகவே! - நீ
அணிவாய் கவிகள் நெஞ்சம் உருகவே!
--------------------------------------------------------------------------------------
  
காவிரித் தாயே பூவிரித்தாயே
என்ற தலைப்பில் பாட வருமாறு
பாவலர் கவிப்பாவையை அழைத்தல்
  
காவிரித் தாயைப் பூவிரித் திங்குக்
கவிதை படைத்திடுவார்! - நம்மின்
செவியை அழைத்திடுவார்!
நாவிரி தமிழால் நரிகள் முகத்தை
நாடி உடைத்திடுவார்! - நன்றே
ஓடி உழைத்திடுவார்!
  
தண்ணீரை மறுத்தல் தரணியில் உண்டோ?
தாவிக் குதித்திடுவார்! - சீரை
மேவிப் பதித்திடுவார்!
புண்னுடை நெஞ்சர் புதைந்திடும் வண்ணம்
போட்டு மதித்திடுவார்! - தீதை
ஓட்டி எதிர்த்திடுவார்!
  
அன்பொளிர் வள்ளல் அடிகளைத் தொழுதே
ஆக்கம் அளித்திடுவார்! - மன
ஊக்கம் விளைத்திடுவார்!
இன்பொளிர் தமிழைத் தன்னுயிர் என்றே
ஏந்திக் களித்திடுவார்! - கவியுள்
நீந்திக் குளித்திடுவார்!
  
கண்ணனின் தாசன் காவிரி ஆற்றைக்
காட்ட அழைக்கின்றேன்! - கவி
சூட்ட அழைக்கின்றேன்!
தண்டமிழ்ப் பாவை வெண்கதிர் ஒளியை
நாட்ட அழைக்கின்றேன்! - புகழ்
ஈட்ட அழைக்கின்றேன்!
  
இனிய கவிப்பாவை வருகவே! - தமிழைக்
கனியக் கனியத் தருகவே!
  
--------------------------------------------------------------------------------------
  
அன்று ஊமைப் பெண்ணல்லோ
என்ற தலைப்பில் பாட வருமாறு
பாவலர் சிரீதரனை அழைத்தல்
  
ஊமைப் பெண்ணின் உள்ளம் பாட
உள்ஊர் கவி..வருக! - நல்
ஆமை யாக அகமே அடங்க
அருமைக் கவி..தருக!
  
பெண்ணில் ஊறிப் பண்ணில் ஊறிப்
பிரண்ட கவியரசை - உன்
கண்ணில் ஊறும் கன்னல் கருத்தில்
காட்டு கவிமுரசை!
  
புதுவை வாணி புகழை காக்கப்
புலமை சேருகவே! தமிழ்
மதுவை நல்கும் மங்கை மாண்பை
மன்றில் கூறுகவே!
  
உங்கள் கவியை உவந்து அழைத்தேன்
ஓங்கித் தட்டுகவே - கைகள்
ஓங்கித் தட்டுகவே!
சங்கத் தமிழின் சால்பைக் கேட்டுச்
சந்தம் கொட்டுகவே! - பனிபோல்
கந்தம் கொட்டுகவே!
  
பாவலர் சிரீதரன் பாடுக! - கேட்டுப்
பாவையர் நடனம் ஆடுக!
  
--------------------------------------------------------------------------------------
  
நெஞ்சம் மறப்பதில்லை
என்ற தலைப்பில் பாட வருமாறு
பாவலர் ஆடலரசனை அழைத்தல்
  
திருத்தில்லைக் கூத்தனவன் பேரைச் - சூடிச்
செலுத்துகிறார் செந்தமிழின் தேரை!
பெருங்கொல்லை மலர்ந்தாடும் பூக்கள் - போன்று
பெருமையுடன் படைத்திடுவார் பாக்கள்!
  
ஆடுவதில் வல்லமையும் உற்றார்! - இவர்
அருந்தமிழை என்னிடமே கற்றார்!
பாடுவதில் நெஞ்சுருகி நின்றார்! - கையால்
பறையொளியைத் தந்துசபை வென்றார்!
  
பற்றுடனே பாடுகின்ற பாட்டு! - அது
பழுத்தபலாத் தேன்கலந்த கூட்டு!
பொற்புடனே ஆற்றுகின்ற தொண்டு! - அது
பொலிந்திடுமே நன்மைகளைக் கொண்டு!
  
மெலிந்துள்ள உருவுடையான் இங்கு - நன்றே
மீட்டுகவி ஊதுகின்ற சங்கு!
மலிந்ததுயர் நீங்கப்..பாப் பொங்கு! - உன்
மனமுழுதும் காய்த்தகுளிர் நுங்கு!
  
ஆடல் அரசே! பெருந்தகையே! - இங்கு
அளிப்பாய் தமிழின் அருங்கொடையே!
  
தொடரும்.....
  
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்