lundi 31 décembre 2012

குறளரங்க வாழ்த்து



திருமிகு சு. மதிவாணன் கீதா

இணையரின் இல்லத்தில் நடைபெற்ற

குறளரங்க வாழ்த்து மலர்



நதிவாணான்! ஞான நிதிவாணன்! அன்பின்
துதிவாணன்! தூயநெறி வாணன்! - உதிக்கும்
மதிவாணன்! நன்றே மணக்கும் பணியின்
கதிவாணன் என்றே கருது!

கம்பன் கழக அன்பெரெலாம்
    காதல் கொண்ட குறளரங்கம்!
நம்மின் இராமன் திருவருளால்
    நலமே நல்கும் நட்பரங்கம்!
செம்பொன் தமிழின் சீரேந்திச்
    சிந்தை மயக்கும் கவியரங்கம்!
இம்மண் போற்ற மதிவாணன்
    இல்லம் இன்று சிறந்ததுவே!

இரண்டே அடிகள்! அரும்வாழ்வில்
    ஏற்றும் படிகள்! செல்வமெலாம்
திரண்டே வந்து நமைக்கூடும்!
    திசைகள் நான்கும் புகழ்பாடும்!
விருந்தே யாகும்! மண்காக்கும்
    மருந்தே யாகும்! குறள்வழியில்
இருந்தே வாழ்க மதிவாணன்!
    இனிதே வாழ்க மதிவாணன்!

அன்பிற் கனிந்து நெஞ்சொளிர!
    அமுதைப் பொழிந்து சொல்லொளிர!
இன்பிற் கலந்து செயலொளிர!
    இதயம் இணைந்து குறளொளிர!
என்புள் நுழைந்து தமிழொளிர!
    என்றும் ஓங்கிக் குடியொளிர!
பொன்னின் கீதா மதிவாணன்
    பொலிக! பொலிக! பல்லாண்டு!

குறளைத் தந்த வள்ளுவனார்!
    கொழிக்கும் வாழ்வைச் சூட்டுகவே!
உறவைத் தேனின் கூட்டாக்கி
    உயர்ந்த கண்ணன் ஊட்டுகவே!
பறவை போன்றே தொண்டுலகில்
    பறக்க ஈசன் காட்டுகவே!
அறிவை! அன்பை! மதிவாணன்
    ஆண்டு வாழ்க பல்லாண்டு!

29.12.2012

4 commentaires:

  1. புத்தாண்டு வாழ்த்துக்கள் அய்யா

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      புத்தாண்டு வாழ்த்தில் புலவன்என் நெஞ்சத்துள்
      முத்தாண்ட வெண்மை முகிழ்த்து!

      Supprimer
  2. தமிழ் வளர்க்கும் பணிகள் தொடர்க! புத்தாண்டு வாழ்த்துக்கள்

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      நல்ல தமிழ்ப்பணியை நன்குயர வாழ்த்துகின்றீா்!
      வெல்லச் சுவையை விளைத்து!

      Supprimer