samedi 22 février 2014

சொல்லோவியம் - பகுதி 2




சொல்லோவியம்

11.
கிணற்றுக்குள் குளிக்குமெனைக்
கீரியெனப் பார்த்தவனே!
கணத்துக்குள் பலவகையாய்க்
கற்பனையைச் சேர்த்தவனே!

12.
நீர்பாயும் தொட்டிக்குள்
சீர்பாயச் செய்தவனே!
கார்பாயும் கூந்தலுக்குள்
கவிதைபல நெய்தவனே!

13.
செங்கரும்புத் தோட்டத்தில்
தேன்விருந்து உண்டவனே!
இங்கரும்பு மலர்ந்தாட
இசைபாடி நின்றவனே!

14.
கள்ளிறக்கும் காலையிலே
கண்மயங்க வைத்தவனே!
உள்ளிருக்கும் உணர்வுகளை
உடையாகத் தைத்தவனே!

15.
செவ்வாழைத் தோப்புக்குள்
சிரித்தாடி நின்றவனே!
சவ்வாது மங்கையெனைத்
தந்திரமாய் வென்றவனே!

16.
சவுக்கமரத் தோப்புக்குள்
சவுரியமாய் இடமிருக்கு!
செவத்தநிறக் காளையெனச்
சீறிவந்த நினைவிருக்கு!

17.
பூவரசம் பூத்திருக்கு!
புதுச்சேவல் கூத்திருக்கு!
பாவரசே உனையெண்ணிப்
பாவைமனம் காத்திருக்கு!

18.
தூக்கணாம் கூடாகத்
தொங்குதடா என்னாசை!
தாக்குகின்ற கனவுகளைத்
தருகுதடா உன்மீசை!

19.
கண்ணான கட்டழகா!
காவிரியின் சிட்டழகா!
பெண்ணான என்னுயிரைப்
பிழிகின்ற பேரழகா!

20.
பொன்னான என்வாழ்வு
பொலிகின்ற நிலைவேண்டும்!
என்னாளும் நீ..வேண்டும்!
இனிக்கின்ற தமிழ்வேண்டும்!

(தொடரும்)

vendredi 21 février 2014

சொல்லோவியம் - பகுதி 1




சொல்லோவியம்

1.
தேனூறும் சோலைக்குள்
தென்றலென வந்தவனே!
மீனூரும் விழிகளுடன்
விளையாடி நின்றவனே!

2.
மானூரும் காட்டுக்குள்
மகிழ்ந்துாற வந்தவனே!
நானூறும் வண்ணத்தில்
நல்லகவி தந்தவனே!

3.
மயிலாடும் தோப்புக்குள்
மனமாட வந்தவனே!
உயிராடும் வண்ணத்தில்
உணர்வுகளைத் தந்தவனே!

4.
நாற்றாடும் வயல்வரப்பில்
நங்கையெனைத் தொட்டவனே!
காற்றாடும் பட்டானாய்க்
கூத்தாடக் கற்றவனே!

5.
மாப்பறிக்கும் தோப்பினிலே
வண்டாக வந்தவனே!
பூப்பறிக்கும் பொழிலினிலே
பொன்மழையைத் தந்தவனே!

6.
மல்லிகையின் பந்தலுக்குள்
மணந்தாட வந்தவனே!
சொல்லிக்..கை பிடித்தழகாய்ச்
சொர்க்கத்தைத் தந்தவனே!

7.
பந்தாடும் பூங்காவில்
சிந்தாட வந்தவனே!
அந்தாடு கொட்டிட்குள்
அணைத்தென்னை உண்டவனே!

8.
நெல்லறுக்கும் காலையிலே
நெடுமுத்தம் இட்டவனே!
புல்லறுக்கும் மாலையிலே
புடவையினைத் தொட்டவனே!

9.
கருத்துமழை பொழிவதுபோல்
கருத்து..மழை பொழிபவனே!
குருத்தழகாய் விரிந்ததுபோல்
பெருத்தழகாய்ச் சிரிப்பவனே!

10.
குளத்துக்கு மேல்கரையில்
கொக்காக நிற்பவனே!
நிலத்துக்கு உரமாக
நெஞ்சுக்குள் நிறைபவனே!

(தொடரும்)

dimanche 16 février 2014

முப்பதாம் ஆண்டு வாழ்த்து





திருவாளர்
வேணுகோபால் ஆதிலட்சுமி இணையரின்
முப்பதாம் ஆண்டுத் திருமண வாழ்த்து

எங்கள் வேணு கோபாலும்
     எழிலார் ஆதி லட்சுமியும்
பொங்கல் சுவைசேர் வண்ணத்தில்
     போற்றும் வாழ்வைப் புனைந்தனரே!
திங்கள் நல்கும் தண்ணொளியாய்,
     தென்றல் நல்கும் மென்மணமாய்,
தங்கும் இன்பம் தழைக்கின்ற
     தமிழ்போல் வாழ்க பல்லாண்டே!

நெடிய வேணு கோபாலும்
     நிலவாம் ஆதி லட்சுமியும்
விடியத் தோன்றும் பொன்னொளியாய்
     விளைத்த முப்ப(து) ஆண்டுயர்க!
படியச் செய்து மனத்துள்ளே
     படரச் செய்த சீர்தொடர்க!
அடியேன் படைத்த கவியழகாய்
     அமைந்து வாழ்க பல்லாண்டே!

நம்பி வேணு கோபாலும்
     நங்கை ஆதி லட்சுமியும்
தும்பிக் கையான் தாள்பற்றித்
     தூய வாழ்வைச் சமைத்தனரே!
நம்பி வந்த நபர்காத்து,
     நல்லோர் நவின்ற நடைகாத்து,
தம்பி மார்கள் படைசூழத்
     தமிழ்போல் வாழ்க பல்லாண்டே!

நண்பர் வேணு கோபாலும்
     நலஞ்சேர் ஆதி லட்சுமியும்
தொண்டர் ஆகப் பணியாற்றும்
     தொன்மைத் தமிழின் படைவீரர்!
கொண்ட கொள்கை நன்குயர,
     கொடிபோல் கோலக் குடி..படர,
கண்டன் கருணை மழைபொழிய,
     காதல் கமழ்க பல்லாண்டே!

நல்ல வேணு கோபாலும்
     நறுஞ்சீர் ஆதி லட்சுமியும்
சொல்ல இனிக்கும் மொழியுடையார்!
     சொந்தம் மணக்கும் பொழிலுடையார்!
வல்ல கம்பன் கழகத்தை
     வளமாய்க் காக்கும் நெறியுடையார்!
வெல்லப் பாகின் சுவையடையாய்
     விளைந்து வாழ்க பல்லாண்டே!

நீண்ட வேணு கோபாலும்
     நேய ஆதி லட்சுமியும்
பூண்ட வாழ்வின் முப்பத்தைப்
     பொலியச் செய்து மகிழ்ந்தனரே!
ஆண்ட செல்வம் அன்பாகும்!
     அருமைச் செல்வம் பண்பாகும்!
தோண்ட சுரக்கும் நீரூற்றாய்த்
     தொடர்க இன்பம் பல்லாண்டே!

ஒப்பில் வேணு கோபாலும்
     உயர்ந்த ஆதி லட்சுமியும்
முப்ப(து) ஆண்டைத் தொடர்கின்றார்
     முன்னோர் மொழிந்த மாண்பேந்தி!
இப்பார் போற்றும் குறள்வாழ்வை
     இசைக்கும் இணையர் வாழியவே!
அப்பா! அரங்கா! பேரழகா!
     அருள்க! அருள்க! பல்லாண்டே!

அக்கா ஆதி லட்சுமியும்
     மாமா வேணு கோபாலும்
கொக்கா நின்று பணியாவும்
     கொழிக்கச் செய்யும் திறனுடையார்!
சொக்கா மின்னும் சுந்தரனாய்,
     சொக்கச் செய்யும் சுந்தரியாய்,
எக்கா லத்தும் வாழியவே!
     இனிய தமிழ்போல் பல்லாண்டே!

12.02.2014

jeudi 13 février 2014

தையே தமிழர் புத்தாண்டு!




தையே தமிழர் புத்தாண்டு!

பேரன்பு உடைய பெரியோரே!
     பெருமை நிறைந்த பெண்டீரே!
பாரன்பு உடைய பாவலரே!
     பசுமைத் தமிழின் காவலரே!
சீரன்பு உடைய சான்ரோரே!
     சிறப்பை மேவும் இளைஞர்காள்!
மாரன் புடைய தமிழ்மறவன்
     வணக்கம் கூறித் தொடர்கின்றேன்!

கூர்அம்பு புடைய நுண்கவிதை!
     கொள்கைப் பிடிப்பு! மொழிப்பற்று!
போர்அம்பு உடைய செயல்வேகம்!
     பொலியும் மனித நன்நேயம்!
கார்அம்பு உடைய குளிர்நெஞ்சம்!
     கடமை! கருணை! இனமேன்மை!
ஓர்அன்பு உடைய மலர்ப்பார்வை
     உதித்தாய் தமிழே! நான்வளர்ந்தேன்!

--------------------------------------------------------------------------------------------

பொங்கல் திருநாள் கொண்டாடு!
     பொய்யை எரித்து நின்றாடு!
எங்கள் தாயின் பண்பாடு!
     இந்த உலகின் பூக்காடு!
திங்கள் போற்றும் வழிபாடு!
     செம்பும் தமிழோ தேன்கூடு!
சங்கம் சமைத்த பொன்னேடு!
     தழைத்தால் சிறக்கும் நம்வீடு!

தையே தமிழர் புத்தாண்டு!
     தாயாம் தமிழை நீ..வேண்டு!
கையோ காலோ பிடிக்காமல்
     காற்றாய் எழுக மறம்பூண்டு!
மையோ என்று மனமுற்றால்
     வாழ்வோ அடைத்த சிறைக்கூண்டு!
வையம் வாழ்த்த செயற்படுவாய்
     வன்மைத் தமிழா சீர்ஆண்டு!

-------------------------------------------------------------------------------------------- 

வாணி தாசன் கழகத்தை
     வளர்க்கும் இனிய நண்பர்களே!
ஏணி யாக நின்றிங்கே
     தமிழை ஏற்றும் அன்பர்களே!
தோணி யாகத் தமிழ்ச்சீரைத்
     சுமர்ந்து செல்லும் தொண்டர்களே!
காணி கொழிக்கும்! நான்பாடும்
     கவிதை கொழிக்கும்! வணங்குகிறேன்!

கலிய பெருமாள் வழிகாட்டக்
     கடமை யாற்றும் மறவர்களே!
வலிய வந்து சிலபொய்யர்
     வதைக்கக் கூடும்! அஞ்சாதீர்!
மலர வேண்டும் தமிழாட்சி!
     மணக்க வேண்டும் குறள்மாட்சி!
புலர வேண்டிக் கருத்தரங்கைப்
     பூந்தேன் கவியால் திறக்கின்றேன்!

25.01.2014

jeudi 6 février 2014

சிவனருட்செல்வா்



சிவனருட்செல்வர்
சுகுமார முருகையனார்
எழுபத்தைந்தாம் ஆண்டுப் பிறந்தநாள் குறளமுதம்


முதுமொழிச் செல்வர் முருகையனார் எங்கள்
புதுவையின் செல்வரெனப் போற்று!

பெரும்புகழ்ச் செல்வர் முருகையனார் பேசித்
தரும்புகழ் சைவத் தமிழ்!

அருட்பணிச் செல்வர் முருகையனார் அன்பால்
திருப்பணி செய்தார் தினம்!

தமிழ்ப்பணிச் செல்வர் முருகையனார் தந்தார்
நமதினம் ஓங்கும் நலம்!

சிவனருட் செல்வர் முருகையனார் வாழ்க
தவமருள் வாழ்வைத் தரித்து!

அறநெறிச் செல்வர் முருகையனார் ஆழ்ந்தே
உறுநெறி ஓங்கும் ஒளிர்ந்து!

அன்பொளிர் செல்வர் முருகையனார் ஆன்றோரின்
இன்பொளிர வாழ்க இசைந்து!

பண்பொளிர் செல்வர் முருகையனார் பைந்தமிழின்
பண்ணொலிர வாழ்க படர்ந்து!

நற்பணிச் செல்வர் முருகையனார் நல்கிடும்
சொற்கனி  ஊட்டும் சுவை!

கருணையொளிர் செல்வர் முருகையனார் உற்றார்
அருணையொளி மின்னும் அகம்!

கலையொளிர் செல்வர் முருகையனார் காத்தார்
சிலையொளிர் மின்னும் சிரிப்பு!

அறிவொளிர் செல்வர் முருகையனார் ஆண்டார்
செறிவொளிர் வண்ணம் செயல்

தயவொளிர் செல்வர் முருகையனார் சான்றோர்
நயமொளிர் வாழ்வின் நடை!

உயர்குடிச் செல்வர் முருகையனார் உள்ளம்
இயலிசை வாழும் இடம்!

அருமனச் செல்வர் முருகையனார் ஆள்க
பெருமணப் பேறுகளைப் பெற்று!

எம்மினிய செல்வர் முருகையனார் எய்துகவே
செம்மொழி போன்றே செழிப்பு!

08.02.2014