சிலேடை வெண்பா
நாட்டுக்கொடியும் வெற்றிலைக்கொடியும்
கோல்பற்றும்! கூட்டமுறும்! கோல வணக்கமுறும்!
தோள்பற்றும்! காற்றில் துணிந்தாடும்! - சூல்காணும்!
செம்மையுறும் சீர்காட்டும்! நம்நாட்டு நற்கொடியும்
அம்மையுறும் வெற்றிலையும் ஆம்!
நாட்டுக்கொடி
கோலில் ஏற்றப்படும். மேல் ஏற்றும்பொழுது மக்கள் கூடி நின்று நாட்டுப்பண் பாடி வணங்குவர். நம் தோள்களில் ஏந்திச் செல்வோம். காற்றில் அழகாய் அசைந்து பறக்கும். மலை உச்சியில் பறந்து சூல்கொண்ட மேகத்தைத் தழுவும். [மழையில் நனையும்]. அதன் வண்ணம், சின்னம் நாட்டின் சிறப்பை உணர்த்தும்.
வெற்றிலைக்கொடி
கோலைச் சுற்றி வளரும். நிகழ்வுகளில் கூடி அமர்ந்து வெற்றிலை போடுவார். இறைவனுக்குப் படைக்கப்படும். அடிக்கிக் கட்டப்பட்டுத் தோள்களில் துாக்கி வருவார். காற்றில் அசைந்து ஆடும். பெண்ணுக்கு நடக்கும் சூல் நிகழ்வில் இடம்பெறும். வெற்றிலை போட்டவர் நாக்குச் சிவப்பு நிறத்தை ஏற்கும்.
எனவே, நாட்டின் கொடியும், அன்னையர் விரும்பும் வெற்றிலையும் நிகராகும்.
பாட்டரசர் கி. பாரதிதாசன்
30.05.2019






























