mardi 21 février 2023

பாவலர் நிலவழகி

 


பாவலர் நிலவழகி பார்போற்ற வாழியவே!

 

பிள்ளை யுள்ளம் பெற்றே திகழும்

         பெருமை மிக்க நிலவழகி!

கொள்ளை கொள்ளும் கோலத் தமிழைக்

         கோயில் கட்டித் தொழுகின்றார்!

கிள்ளை மொழியும் கெண்டை விழியும்

         கீர்த்தி மிக்க அழகூட்டும்!

வெள்ளை மனமோ வேண்டி வேண்டி

         விந்தைத் தமிழின் அணிபூட்டும்!

 

முகநுால் வழியே முன்னைத் தமிழாம்

         மொழியைப் பாடும் நிலவழகி!

அகநுால் கற்றும் புறநுால் கற்றும்

         அகிலப் புகழைச் சூடுகவே!

மிகுநுால் புலவர் வியக்கும் வண்ணம்

         மேன்மைப் பாக்கள் பாடுகவே!

புகுநுால் தன்னில் புத்தி பதித்துப்

         புகழ்நுால் தீட்ட வாழ்த்துகிறேன்!

 

காலை மாலை கவிதைக் கலையைக்

         காதல் செய்யும் நிலவழகி!

சோலைக் குள்ளே சுற்றும் வண்டாய்த்

         துாய தமிழின் மதுவுண்டார்!

பாலை நிகர்த்த மனத்தின் அழகும்

         பாகை நிகர்த்த குணத்தழகும்

சாலை யளித்த அறத்தின் அழகும்

         தழைத்தே யோங்க வாழ்த்துகிறேன்!

 

அல்லும் பகலும் அருமைத் தமிழின்

         அமுதைப் பருகும் நிலவழகி!

சொல்லும் செயலும் ஒன்றே யாகும்!

         துணிவே வாழ்வின் துணையாகும்!

செல்லும் வழிகள் செழித்தே பூக்கும்!

         சிந்தை தமிழர் சீர்காக்கும்!

வெல்லும் வன்மை! விஞ்சும் நன்மை!

         விந்தைக் கண்ணன் அருளுகவே!

 

பொருத்த மாக விருத்தம் பாடிப்

         புகழைப் புனைந்த நிலவழகி!

அருத்தம் மின்ன அணிகள் பின்ன

         அடிமேல் அடிகள் பதித்திட்டார்!

கருத்த மேகக் கனத்த பொழிவாய்க்

         கருத்தைப் பேசும் திறனுற்றார்!

நிருத்த ஈசன் பெருத்த புலமை

         நிலைக்கச் செய்ய வேண்டுகிறேன்!

 

பாட்டரசர் கி. பாரதிதாசன்

தலைவர்
கம்பன் கழகம் பிரான்சு

தொல்காப்பியர் கழகம் பிரான்சு

பாவலர் பயிரங்க முகநுால் குழுமம்

21.02.2023

lundi 20 février 2023

பாவலர் வெற்றிச்செல்வி


 

பாவலர் வெற்றிச்செல்விக்குப் பல்லாண்டு!

 

நல்ல நல்ல கவிதைகளை

         நாளும் பாடிக் களிக்கின்ற

வல்ல வெற்றிச் செல்விக்கு

         வடித்தேன் கோடி பல்லாண்டு!

சொல்லச் சொல்ல மனமொன்றித்

         தொன்மை யாப்பைக் கற்பதனால்

எல்லாத் திசையும் புகழ்பாடும்

         எழுதி வைத்தேன் திருவாக்கு!

 

இனமே காக்கும் பொற்போங்கும்!

         ஈழத் தாயின் பற்றோங்கும்!

மனமே வெற்றிச் செல்விக்கு

         வழங்கும் கோடி பல்லாண்டு!

வனமே மலர்ந்த எழிலாக,

         வளமே நிறைந்த தமிழாகச்

சனமே வாழ்த்த வாழியவே!

         சாற்றி வைத்தேன் திருவாக்கு!

 

அயலார் நாட்டில் வாழ்ந்தாலும்

         அன்னைத் தமிழைத் தன்னுடைய

உயிரார் வெற்றிச் செல்விக்கே

         உரைத்தேன் கோடி பல்லாண்டு!

இயலார் திண்மை பெற்றிடவும்

         இல்லார் நன்மை உற்றிடவும்

வயலார் பசுமைப் பணியாற்ற

         வரைந்து வைத்தேன் திருவாக்கு!

 

கற்கும் வன்மை! உளமென்மை!

         கவிதை பாடும் உயர்புலமை

முற்றும் வெற்றிச் செல்விக்கு

         மொழிந்தேன் கோடி பல்லாண்டு!

பற்றுங் கொடிபோல் செழித்திடவும்

         பண்பும் அன்பும் கொழித்திடவும்

சுற்றும் பூமி மகிழ்ந்திடவும்

         தொகுத்து வைத்தேன் திருவாக்கு!

 

பாட்டின் அரசன் கோட்டையிலே

         பாடிப் பாடித் தமிழ்த்தேனை

ஊட்டும் வெற்றிச் செல்விக்கே

         உவந்தேன் கோடி பல்லாண்டு!

நாட்டின் நிலையைத் தினந்தீட்டி

         நல்லார் நெறியை மனமேற்றி

ஏட்டின் ஆற்றல் ஓங்குகவே!

         இசைத்து வைத்தேன் திருவாக்கு!

 

பாட்டரசர் கி. பாரதிதாசன்

தலைவர்
கம்பன் கழகம் பிரான்சு

தொல்காப்பியர் கழகம் பிரான்சு

பாவலர் பயிரங்க முகநுால் குழுமம்

19.02.2023

dimanche 19 février 2023

பாவலர்மணி நெய்தல் நாடன்


 

பாவலர்மணி நெய்தல் நாடன் வாழியவே!

 

ஆயிரம் விருத்தம் தந்த

         அரும்புகழ் நெய்தல் நாடா! 

பாயிர மாக உன்னுால்

         பாவலர் அரங்கைச் சொல்லும்!

தாயிடம் குடித்த நற்பால்

         தமிழெனத் தழைக்கக் கண்டேன்!

வாயிடம் போட்டி போட்டு

         வாழ்த்திடச் சொற்கள் முந்தும்!

 

பாவலர் மணியாய் மின்னும்

         பார்புகழ் நெய்தல் நாடா! 

காவல ராக நாளும்

         கனித்தமிழ் மொழியைக் காத்தாய்!

நாவலர் ஆற்றல் பெற்றாய்!

         நல்லவர் உறவை யுற்றாய்!

நீ..வளர் தமிழின் செல்வன்!

         நிலமெலாம் போற்ற வாழ்க!

 

ஈழமண் காத்த வீரர்

         எழிற்குடி நெய்தல் நாடா! 

வாழமண் மீட்க வேண்டும்!

         வடித்துள பாக்கள் துாண்டும்!

ஆழமண் உழுதல் போன்றே

         அழகுமண் சொழித்தல் போன்றே

சூழமண் ணன்மை செய்தாய்!

         கூடருமண் உன்னால் என்பேன்!

 

சீருடை ஓளவை மாண்பைத்

         தீட்டிய நெய்தல் நாடா! 

போருடை யாற்றல் கண்டாய்!

         புயலுடை வேகங் கொண்டாய்!

பாருடை யறத்தைப் பாடிப்

         பாரதி நெறியில் நின்றாய்!

தேருடைப் பாட்டின் வேந்தன்

         திண்படை மறவா வாழி!

 

பாட்டொளிர் அரசன் மன்றில்

         பயின்றொளிர் நெய்தல் நாடா! 

நாட்டொளிர் கொடியின் பாட்டில்

         நடையொளிர் அழகைக் கண்டேன்!

வீட்டொளிர் மாட்சி யூட்டி

         விழியொளிர் காட்சி காட்டி

மீட்டொலிர் புலமை வாழி!

         மிகுத்தொளிர் பெருமை வாழி! [96]

 

17.02.2023

பாவலர் சரளா விமலராசா


 

பாவலர் சரளா விமலராசா வாழியவே!

 

வண்ணம் மின்னும் எண்ணங் கொண்டு

         மரபைப் பாடும் கவி.சரளா!

மண்ணின் வளமும் மக்கள் நலமும்

         மனத்தில் கமழும் கலைச்சரளா! 

பண்ணின் மீதும் பண்பின் மீதும்

         பற்றே படரும் பனிச்சரளா!

கண்ணன் அருளால் கவிதைப் பொருளால்

         கற்றோர் போற்ற வாழியவே!

 

அறத்தைப் போற்றி மறத்தைச் சாற்றி

         ஆளும் இனிய கவி.சரளா!

முறத்தைக் கொண்டு புலியை மோதும்

         மூத்த குடியில் வருஞ்சரளா!

சிறப்பை நாடிச் செழிப்பைச் சூடிச்

         செயல்கள் ஆற்றும் அருஞ்சரளா!

திறத்தைக் கண்டு திகைக்கும் உலகம்!

         செம்மைத் தமிழ்போல் வாழியவே!

 

பாரி வள்ளல் காரி வள்ளல்

         பணியைத் தொடரும் கவி.சரளா!

மாரி யாக வளத்தை நல்கி

         வாழ வைக்கும் தமிழ்ச்சரளா!

ஏரி நீர்போல் சூரி தேர்போல்

         ஏற்றம் கொடுக்கும் எழிற்சரளா!

வாரி வழங்கும் வண்மை வாழ்வு

         மக்கள் வாழ்த்த வாழியவே!

 

ஆடும் மயில்சேர் பாடுங் குயில்சேர்

         ஆக்கம் அளிக்கும் கவி.சரளா!

ஓடும்  நதியாய் ஒளிரும் மதியாய்

         உள்ளம் படைத்த உயர்சரளா!

நாடும் வீடும் நன்றே திகழ

         நாளும் உழைக்கும் நறுஞ்சரளா!

ஈடும் இல்லை என்றே சொல்ல

         எழுதிக் குவித்து வாழியவே!

 

மரபு யாப்பை வரமாய்ப் பெற்று

         மணக்கும் வண்ணக் கவி.சரளா!

இரவும் பகலும் இன்பத் தமிழை

         எண்ணிப் படிக்கும் தண்சரளா!

வரவும் செலவும் வகையைத் தெரிந்து

         வாழும் வல்ல செயற்சரளா!

தரவும் இசையும் தழைத்த தமிழ்போல்

         சரளா குலத்தோர் வாழியவே!

 

பாட்டரசர் கி. பாரதிதாசன்

தலைவர்
கம்பன் கழகம் பிரான்சு

தொல்காப்பியர் கழகம் பிரான்சு

பாவலர் பயிரங்க முகநுால் குழுமம்

19.02.2023