dimanche 29 décembre 2019

காலை வெண்பா


இனிய வணக்கம்!
  
திருவள்ளுவர் ஆண்டு 2049 மார்கழி 13
29.12.2019
  
தைம்மகளே! தங்கத் தமிழ்மகளே! கண்ணழகு
மைம்மகளே! வண்ண மலர்மகளே! - கைம்மணக்கும்
பாட்டளிப்பாய்! பார்மணக்கும் பண்பளிப்பாய்! பாவலரின்
கூட்டளிப்பாய் மேன்மை குவித்து!
  
தொண்டுளம் தந்திடுவாய்! துாய குறணெறியின்
பண்டுளம் தந்திடுவாய்! பண்ணமுதைக் - கண்டுளம்
ஓங்கவே தந்திடுவாய்! ஒப்பில் உயர்தமிழே!
தாங்கவே தந்திடுவாய் சால்பு!
  
தோன்றும் கதிர்நீயே! துாய மழைநீயே!
ஊன்றும் புகழ்நீயே! ஒண்டமிழே! - ஆன்ற
நிலம்நீயே! தீநீயே! நற்காற்றும் நீயே!
வளம்நீயே! வாழ்வே வழங்கு!
  
பாட்டரசர் கி. பாரதிதாசன்
நிறுவுநர்
கம்பன் கழகம் பிரான்சு
தொல்காப்பியர் கழகம் பிரான்சு

samedi 28 décembre 2019

காலை வெண்பா


இனிய வணக்கம்!
  
திருவள்ளுவர் ஆண்டு 2049 மார்கழி 12
28.12.2019
  
தென்மொழியே! செம்மொழியே! தேவர்மகிழ் தொன்மொழியே!
பொன்மொழியே! பொங்கும் புகழ்மொழியே! - மென்மொழியே!
வன்மொழியே! வாழ்வின் வளமொழியே! வண்டமிழே!
நன்வழியே நானோங்க நல்கு!
  
தேன்மொழியே! என்னெஞ்சத் தேற்றொளியே! ஆண்டபுகழ்க்
கோன்மொழியே! கோலக் குலமொழியே! - கான்மொழியே!
வான்மொழியே! நுண்ணறிவு மாண்மொழியே! வண்டமிழே!
நோன்வழியே நானுற நோக்கு!
  
பாட்டரசர் கி. பாரதிதாசன்
நிறுவுநர்
கம்பன் கழகம் பிரான்சு
தொல்காப்பியர் கழகம் பிரான்சு

jeudi 26 décembre 2019

காலை வெண்பா

இனிய வணக்கம்!
  
திருவள்ளுவர் ஆண்டு 2049 மார்கழி 11
27.12.2019
  
துணையானாய்! நெஞ்சச் சுடரானாய்! காக்கும்
அணையானாய்! அன்பாம்..தே னானாய்! - பிணையானாய்
பாடும் படைப்பினிலே! பைந்தமிழே! பண்ணமுதே!
கூடும் புகழே கொழித்து!
  
துாயவளே! தொன்மைத் தொகையவளே! பல்சந்த
மாயவளே! காக்கும் மரைமகளே! - நேயவளே!
சேயவளே! சீரொளிரும் தென்னவளே! என்னுயிர்த்
தாயவளே தாராய் தகை!
  
பாட்டரசர் கி. பாரதிதாசன்
நிறுவுநர்
கம்பன் கழகம் பிரான்சு
தொல்காப்பியர் கழகம் பிரான்சு

mercredi 25 décembre 2019

திருக்கர்த்தர் திருநாள்


திருக்கர்த்தர் திருநாள் வாழ்த்து!
  
மண்ணின் சுமையைச் சுமந்திட்ட
   விண்ணின் வேந்தன் திருநாளைக்
கண்ணின் மணியே! கட்டழகே!
   காதல் கொண்டே போற்றிடுவோம்!
பெண்ணின் பெருமை காட்டியவர்!
   பேற்றை யள்ளி யூட்டியவர்!
பண்ணின் இனிமை நம்கா்த்தர்!
   பாடி யாடிப் பணிந்திடுவோம்!
  
ஒன்றே இறைவன் 'உண்மையொளி'
   உலகம் எங்கும் ஒளிரட்டும்!
நன்றே வாழ 'அன்பினொளி'
   நலமாய் எங்கும் பரவட்டும்!
குன்றே உருகத் திருமகனார்
   கொண்ட காட்சி! அருளாட்சி!
இன்றே வாழ்த்தி வணங்கிடுவோம்!
   இதயம் ஒன்றி மகிழ்ந்திடுவோம்!
  
பாட்டரசர் கி. பாரதிதாசன்
நிறுவுநர்
கம்பன் கழகம் பிரான்சு
தொல்காப்பியர் கழகம் பிரான்சு
25.12.2019

lundi 23 décembre 2019

காலை வெண்பா


இனிய வணக்கம்!
  
திருவள்ளுவர் ஆண்டு 2049 மார்கழி 8
24.12.2019
  
தாயே! தவச்சுடரே! உன்னழகைச் சாற்றுமென்
வாயே மணக்கும் வளத்துடனே! - சேயே..நான்
ஓங்கக்கண் காட்டு! உயர்தமிழே! நற்புகழைத்
தாங்கப்பண் கூட்டு தழைத்து!
  
தித்திக்கும் செம்மொழியே! சித்திக்கும் தென்மொழியே!
எத்திக்கும் உன்போல் இனிப்பில்லை! - புத்திக்குள்
சூழும் சுடர்த்தமிழே! தொன்மொழியே! உன்னடியில்
ஆழும் அடியேன் அகம்!
  
தீட்டும் கவியாவும் மூட்டும் எழுச்சியை!
நாட்டும் இனத்தின் நலக்கொடியை! - காட்டும்
கமிழ்நெறியை! கன்னல் கனித்தமிழே! காப்பேன்
சமநெறியை அன்பே தழைத்து!
  
பாட்டரசர் கி. பாரதிதாசன்
நிறுவுநர்
கம்பன் கழகம் பிரான்சு
தொல்காப்பியர் கழகம் பிரான்சு

dimanche 22 décembre 2019

பிரிந்தெதிர் செய்யுள்


பிரிந்தெதிர் செய்யுள்
  
பிரிந்து எதிர்வனவே பிரிந்து எதிர்செய்யுள்
[மாறன் அலங்காரம் - 290]
  
நிறைவுற்ற ஒரு செய்யுளின் ஈற்றெழுத்துத் தொடங்கி எதிரேறாக நடந்து வேறொரு செய்யுளாக நிகழ்தல் பிரிந்து எதிர்செய்யுளாம்.
  
மேகமே வா..வா!
வேகமா வா!கா!
வாகனே வா..மா
வேகனே வா..வா!
  
இச்செய்யுளின் ஈற்றெழுத்தில் தொடங்கி முதல் எழுத்தில் நிறைவுறும் செய்யுளைக் கீழ்க்காண்க.
  
வா..வா னேகவே
மா..வா னேகவா!
காவா மாகவே
வா..வா மேகமே!
  
கா - காத்தல்
வாகன் - அழகன்
ஏகன் - ஒருவன்
வான் - நன்மை, வானம்
காவு - காவாம் - சோலை
  
முதல் செய்யுளின் பொருள்
  
மழைதரும் மேகமாய் வாராய்.. வாராய். வேகமாய் வந்து எம்மைக் காப்பாய். அழகனே வாராய்! பெருமை நிறைந்த ஒருவனே வாராய்.. வாராய்.
  
எதிரேற்றின் பொருள்
  
வாராய் நன்மையை நடத்தவே, அழகிய வானுலகை ஆளுகின்ற ஒருவனே. மண்ணுலகம் பூஞ்சோலையாய் ஆகவே, மேகமாய் வாராய்.. வாராய்.
  
பாட்டரசர் கி. பாரதிதாசன்
22.12.2019

samedi 21 décembre 2019

மார்கழிப் பெண்ணே


மார்கழிப் பெண்ணே
[மார்கழியைக் காதலியாக எண்ணிப் பாடிய வெண்பா மாலை]
  
1.
மார்கழிப் பெண்ணே! மதுமலர்க் கண்ணே!உன்
சீர்பொழி பேரழகில் சிக்குண்டேன்! - ஊர்பொழில்
ஆடை தரிக்கும்! அமுதே..உன் பார்வையால்..பா
வோடை சுரக்கும் உளத்து!
  
2.
வையத்துப் பேரழகே! வாழ்கவி என்னெஞ்ச
மையத்துப் பேரொளியே! மாங்குயிலே! - ஐயத்[து]
இடமின்றிச் சொல்வேன் இசைத்தேன்..நீ! பொன்னார்
குடமொன்றிக் கொள்வேன் குளிர்!
  
3.
ஓங்கி யொளிர்பவளே! ஒண்டமிழை உள்ளத்துள்
தாங்கித் தழைப்பவளே! தண்கொடியே! - ஏங்கி..நான்
நிற்கின்றேன்! நீள்விழி நேரிழையே! நின்னுருவில்
கற்கின்றேன் காதல் கவி!
  
4.
ஆழிபோல் சுற்றுதடி அன்பே நினைவலைகள்!
மேழிபோல் பற்றுதடி மேனியை! - ஊழிபோல்
என்னை யுருட்டாதே! ஏற்றருள்வாய்! உன்னுறவு
முன்னைத் தவத்தின் முளைப்பு!
  
5.
மாயனைச் சேர்ந்த திருமகள்போல், பாட்டரசு
நேயனைச் சேர்ந்த நிறைமதியே! - தாயனைந்த
பொன்மகளே! பொங்கும் புகழ்மகளே! நன்மணிகள்
மின்மகளே தாராய் விருந்து!
  
[தொடரும்]
  
பாட்டரசர் கி. பாரதிதாசன்

dimanche 15 décembre 2019

மூவின வெண்பா - 3

படத்தைப் பற்றிய குறிப்பு இல்லை.

வெண்பா மேடை - 152
  
மூவின வெண்பா - 3
  
கனியகமே! வாகணியே! கண்வேத மாயா!
பனியகமே! யாகமுரை,பா ணா..வா! - தனியா!
கனவே கணியகமே! வாகைனர் தேனார்
கனிவே! தமிழே கமழ்!
    
பண்வகைநல் கும்..வா! பணிவகை நல்கும்..வா!
கண்வகைநல் கும்..வா! கமழ்தமிழ் - தண்வகை
நல்கும்..வா! தேனே..வா! பாநாவு பொன்வகை
மல்கும்..வா! காநல்கும் வா!
      
கண் - அறிவு
கா - சோலை
    
இவ்வெண்பாவில் வல்லினவெழுத்தைத் தொடர்ந்து மெல்லினவெழுத்தும், அதைத்தொடந்து இடையினவெழுத்தும் என மாறி மாறி வெண்பாவின் தொடக்கத்திலிருந்து ஈற்றுவரை அமையவேண்டும்.
    
விரும்பிய பொருளில் 'மூவின வெண்பா' ஒன்றைப் பாடுமாறு அன்புடன் வேண்டுகிறேன். "பாவலர் பயிலரங்கம்" என்ற குழுவில் இணைந்து வெண்பாவைத் தனிப்பதிவாகப் பதிவிடுக.
    
அன்புடன்
பாட்டரசர் கி. பாரதிதாசன்
நிறுவுநர்
கம்பன் கழகம் பிரான்சு
தொல்காப்பியர் கழகம் பிரான்சு
14.12.2019

vendredi 13 décembre 2019

மூவின வெண்பா - 2


வெண்பா மேடை - 151   
மூவின வெண்பா - 2
  
காதல் நலங்கூட்டும்! யாழின் களிப்பூட்டும்!
நாத வகைநாட்டும்! கண்கமழும் - மாதவமாய்
விந்தைச் சுவையூட்டும்! நற்கவிதை வாழ்வோங்கச்
சிந்தை மரபூட்டும் வார்த்து!
  
வெண்பாவின் முதல் சீர் தொடக்கம் வல்லினத்திலும், இரண்டாம் சீர் தொடக்கம் மெல்லினத்திலும், மூன்றாம் சீர் தொடக்கம் இடையினத்திலும், இவ்வாறே மாறி மாறி ஈற்றுச்சீர்வரை அமையவேண்டும்.
  
விரும்பிய பொருளில் 'மூவின வெண்பா' ஒன்றைப் பாடுமாறு அன்புடன் வேண்டுகிறேன். "பாவலர் பயிலரங்கம்" என்ற குழுவில் இணைந்து வெண்பாவைத் தனிப்பதிவாகப் பதிவிடுக.
  
அன்புடன்
பாட்டரசர் கி. பாரதிதாசன்
நிறுவுநர்
கம்பன் கழகம் பிரான்சு
தொல்காப்பியர் கழகம் பிரான்சு
13.12.2019


mercredi 11 décembre 2019

மூவின வெண்பா - 1




வெண்பா மேடை - 150
  
மூவின வெண்பா - 1
  
தண்பொழில் பூத்தொளிரும்! தங்குசுவைத் தேன்கனிகள்
கண்ணெழில் கோத்தொளிரும்! காப்பொளிரும்! - பண்ணெழில்
சந்தமொழிக் கூத்தொளிரும்! தண்டமிழே! பார்மணக்க
வந்தவழி மூத்தொளிரும் வாழ்ந்து!
  
வெண்பாவின் அனைத்துச் சீர்களிலும் தமிழின் மூவினம் பயின்று வரவேண்டும் [வல்லினம், மெல்லினம், இடையினம்]
  
விரும்பிய பொருளில் 'மூவின வெண்பா' ஒன்றைப் பாடுமாறு அன்புடன் வேண்டுகிறேன். "பாவலர் பயிலரங்கம்" என்ற குழுவில் இணைந்து வெண்பாவைத் தனிப்பதிவாகப் பதிவிடுக.
  
அன்புடன்
பாட்டரசர் கி. பாரதிதாசன்
நிறுவுநர்
கம்பன் கழகம் பிரான்சு
தொல்காப்பியர் கழகம் பிரான்சு
11.12.2019

dimanche 8 décembre 2019

ஈற்று விடைக் குறள்


வெண்பா மேடை - 149
    
ஈற்று விடைக் குறள்
  
தொடுக்கும் கேள்வியின் ஈற்றில் பதில் அமையும் வண்ணம் பாடப்படும் குறள்.
  
1.
நன்றே தரும்தாய்பால் என்னென்று நற்சபையில்
முன்னே உரைத்தாய் மொழி?
  
மொழிதல் - சொற்களைத் தெளிவாகச் சொல்லுதல்
  
விடை: தாய்மொழி
  
2.
தண்மலரே! சான்றநுால் காக்கும்! தகைகூறும்!
ஒண்மலரே என்ன உரை?
  
உரைத்தல் - பொருளுடன் சொல்லுதல்
  
விடை : நுாலைக் காப்பது - மேலுரை
தகைகூறுவது - விளக்கவுரை
  
3.
மாரனே! நாமாடும் மாண்பு விளையாட்டு
வீரனே! சொல்வாய் விடை?
  
விடை: காளைமாடு [ஏறுதழுவும் விளையாட்டு]
  
4.
கலையேற்கும்! மின்னும் கணியேற்கும்! கோவில்
சிலையேற்கும் தேர்ந்ததைச் செப்பு?
  
செப்புதல் - வினாவிற்கு விடை சொல்லுதல்
  
விடை: செப்புக்கம்பி
  
5.
ஆற்றுக் குளதாம்! அழகே! அணிமொழியாய்!
காற்றுக் கிலையாம் கரை?
  
கரைதல் - அழைத்துச் சொல்லுதல்
  
கரை: நீர்க்கரை, எல்லை
ஆற்றுக்கு கரையுண்டு,
காற்றுக்குக் கரையில்லை
  
6.
ஆட்டுக் கடைக்கே அதிகாலை செல்கின்றேன்
கூட்டிப் பொருள்களைக் கூறு?
  
கூறுதல் - கூறுபடுத்திச் சொல்லுதல்
  
விடை: ஆட்டுக்கறி ஒரு கூறு வேண்டும்
  
7.
உன்னுடை ஏற்கும்! உறங்க இடமிருக்கும்
அன்புடை நண்பா அறை!
  
அறைதல் - வன்மையைாய் மறுத்துச் சொல்லுதல்
  
விடை: வீட்டின் அறை
  
8.
போரேந்தும் அண்ணல் புகழேந்தும்! பேரழகாய்ச்
சீரேந்தும் வார்த்த சிலை!
  
விடை: சிலை - வில்
அண்ணல் இராமனின் புகழேந்தும் வில்லுடையவன்.
  
9.
வெண்மதி காண்பிறையைத் தாங்கும் முகத்தழகை
நுண்மதி யாளே நுதல்
  
நுதலுதல் - ஒன்றைச் சொல்லித் தொடங்குதல்
  
விடை: நுதல் [பெண்ணின் நெற்றி]
  
10.
தேருணர முன்னொளிக்கும்! ஈற்றொளிக்கும்! தேவியே
பாருணரப் பாடிப் பறை
  
பறைதல் - அனைவரும் அறிய வெளிப்படுத்துதல்
  
விடை: பறைமேளம்
  
அன்புடன்
பாட்டரசர் கி. பாரதிதாசன்
நிறுவுநர்
கம்பன் கழகம் பிரான்சு
தொல்காப்பியர் கழகம் பிரான்சு
08.12.2019

jeudi 5 décembre 2019

குறில் நெடில் வெண்பா


வெண்பா மேடை - 148
  
குறில் நெடில் வெண்பா
  
பொன்மேவு பூஞ்சிட்டே! மின்மேவு சீர்ப்பட்டே!
இன்மேவு தேன்கட்டே! எந்நாளும் மோகமே
உள்ளூற, ஆசையால் சொல்லுாற, தேவியே!
கள்ளூறக் காட்டுவாய் கண்!
    
நெடில் குறில் வெண்பா
    
பாடவே கண்காட்டு! பாவையே பண்மாலை
சூடவே இன்பூட்டு! தோழியே எந்நாளும்
ஆடியே அன்பூட்டு! ஆசையே! என்மார்பில்
கூடியே நன்காடும் கூத்து!
  
கட்டளைக் கலித்துறைபோல் ஒற்றுகளை நீக்கி இவ்வெண்பாவைக் கணக்கிடவேண்டும். குறில் பின்னே நெடில் வரவேண்டும். நெடில் பின்னே குறில் வரவேண்டும் [இடையில் ஒற்று வரலாம். வராமலும் இருக்கலாம்] வெண்பா குற்றெழுத்தில் தொடங்கினால் குறில் நெடில்.. குறில் நெடில் என வரவேண்டும். நெட்டெழுத்தில் தொடங்கினால் நெடில் குறில்.. நெடில் குறில் என வரவேண்டும்.
  
விரும்பிய பொருளில் 'குறில் நெடில் வெண்பா' அல்லது 'நெடில் குறில் வெண்பா' ஒன்றைப் பாடுமாறு அன்புடன் வேண்டுகிறேன். "பாவலர் பயிலரங்கம்" என்ற குழுவில் இணைந்து வெண்பாவைத் தனிப்பதிவாகப் பதிவிடுக.
  
அன்புடன்
பாட்டரசர் கி. பாரதிதாசன்
நிறுவுநர்
கம்பன் கழகம் பிரான்சு
தொல்காப்பியர் கழகம் பிரான்சு
05.12.2019

mardi 3 décembre 2019

முதற்சீர் பிறழடி வெண்பா


வெண்பா மேடை - 147
  
முதற்சீர் பிறழடி வெண்பா
  
வானே யெனப்புகழ் வார்க்கின்ற வண்டமிழே!
மானே யெனத்துள்ளும் என்மனமே! - கானே..நீ
வேய்நீந்தி மேவும் வியனிசையாய், என்னுடைய
வாய்நீந்திச் செந்தேனே வா!
  
கான் - மணம்
வேய் - புல்லாங்குழல்
  
தாதுருவி வாசமிகு சாந்திழைத்து, தேன்கலந்து
வா..துருவிச் சீரேந்தி! வண்டமிழே! - மாதுருவில்
கொண்ட இறைவன் குணமொழியே! நான்மகிழத்
தண்டமிழே பாவிருது தா!
  
தாது - பூவிதழ்
உருவி - உருவுதல்
துருவி - ஆராய்தல்
மாதுருவில் - மாதை உருவில் கொண்ட
  
பிறழ்தல் - மாறுதல்
  
வெண்பாவின் முதற்சீரில் உள்ள எழுத்துக்கள் தலைகீழாய், வெண்பாவின் ஈற்றில் அமையவேண்டும். மேலுள்ள முதல் வெண்பாவில் 'வானே' என்று வந்த முதல் சீர் ஈற்றில் 'னே..வா' என்று வந்தது. இரண்டாம் வெண்பாவில் 'தாதுருவி' என்று வந்த முதல்சீர் 'விருது..தா' என்று வந்தது.
  
விரும்பிய பொருளில் முதற்சீர் பிறழடி வெண்பா ஒன்றைப் பாடுமாறு அன்புடன் வேண்டுகிறேன். "பாவலர் பயிலரங்கம்" என்ற குழுவில் இணைந்து வெண்பாவைத் தனிப்பதிவாகப் பதிவிடுக.
  
அன்புடன்
பாட்டரசர் கி. பாரதிதாசன்
நிறுவுநர்
கம்பன் கழகம் பிரான்சு
தொல்காப்பியர் கழகம் பிரான்சு
12.12.2019

dimanche 1 décembre 2019

சித்திரப்பா

சித்திரப்பா - 2
  
நான்கு கூடினவெல்லாம் பத்தாகவும், மூன்று கூடினவெல்லாம் பதினைந்தாகவும், பிறவாற்றானும் எண் வழுவாமல் பாடுவது சித்திரப்பா. யாப்பருங்கலம் இதனைச் சித்திரக்கா என்றே கூறும்.
  

பத்தாகிய சித்திரப்பா
  
முக்கண் முதல்வனை வேண்டு!
[ஆசிரியப்பா]
  
ஓரிறை! முக்கண்! ஈருடல்! நான்மறைச்
சீரிசை யான்!இரு வினைதீர் நாற்பா
வுடையான்! ஒன்றுள் மூன்றுடை மொழியான்!
சுடரான்! முத்தொழில் முதலான்! நாற்பயன்
ஈவான்! இருமை காப்பான்! நற்றேன்
ஆவான்! நால்வர் அருந்தமிழ் உண்டான்!
இருசபை கொண்டான்! ஈசனைக் கூத்தனை
அருளனை வேண்டு! முப்பொறி ஒன்றுமே!
  
இதனைப் பதினாறு அறையாகக் சீறி, வந்த எண்களின் முறைப்படி அறைக்கோர் எண்ணாக முதல் அறையில் தொடங்கி ஈற்றறையுள் நிறைவுறும். இடப்பக்கம், வலப்பக்கம், மேல், கீழ்ப்பக்கங்கள், மூலைப்பக்கங்கள் என எப்பக்கம் கூட்டினாலும் பத்தாக வருகதைக் காண்க.
  
கருத்துரை
  
இறைவன் ஒருவன். முக்கண் உடையவன். மங்கையோர் பாகத்தால் ஈருடல் கொண்டவன். நான்கு மறைகளின் சீரினை உடையவன். நம்முடைய இருவினையைத் தீர்க்கும் நான்குவகைப் பாக்களை யுற்றவன். தமிழென்னும் மொழியுள் இயற்றமிழ், இசைத்தமிழ், நாடகத்தமிழ் என்னும் முத்தமிழ் பெற்றான். காலைக்கதிராய் எழுகின்றவன். படைத்தல், காத்தல், அழித்தல் என்னும் முத்தொழில் முதல்வன். அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நான்பயனையும் தருபவன். இம்மையும் மறுமையும் காப்பவன். தேன்போல் இனிப்பவன். சமய குரவர் நால்வர் அருளிய தமிழை உண்டவன். சிற்சபை, பொற்சபை கொண்டான். ஈசனை, தில்லைக் கூத்தனை, அருளனை வேண்டித் தொழுகவே. அவனருளால் மனம், வாக்கு, காயம் ஒன்றாகுமே.
  
பாட்டரசர் கி. பாரதிதாசன்
01.12.2019

சித்திரப்பா

சித்திர கவி மேடை - 8
  
சித்திரப்பா
  
நான்கு கூடினவெல்லாம் பத்தாகவும், மூன்று கூடினவெல்லாம் பதினைந்தாகவும், பிறவாற்றானும் எண் வழுவாமல் பாடுவது சித்திரப்பா.
  
பதினைந்தாக வரும் சித்திரப்பா
  
ஐங்கரனே அருள்வாய்
[நேரிசை வெண்பா]
  
ஈரடியால் என்றன் எழுகுற்றம் நீக்கிடுக!
சீரடியால் ஆறிடுக! ஓரகத்துள் - பேரார்எண்
நாட்டிடுக! முத்தமிழ் நாற்பா நவமணியாய்க்
கூட்டிடுக ஐங்கரனே கோத்து!
  
ஏழு குற்றங்கள் - அகங்காரம், கருமித்தனம், சிற்றின்ப வேட்கை, பேருணவில் ஆசை, முன்கோபம், பகை, சோம்பல்.
ஆறு - வழி
எண் - அறிவு
நாற்பா - அகவற்பா, வெண்பா, கலிப்பா, வஞ்சிப்பா
  
இதனை ஒன்பது அறையாகக் சீறி, வந்த எண்களின் முறைப்படி அறைக்கோர் எண்ணாக முதல் அறையில் தொடங்கிச் சுற்றிவந்து மையத்தில் நிறைவுறும். இடப்பக்கம், வலப்பக்கம், மேல்,கீழ்ப்பக்கங்கள், மூலைப்பக்கங்கள் என எப்பக்கம் கூட்டினாலும் பதினைந்தாக வருகதைக் காண்க.
  
கருத்துரை
  
ஐந்து கைகளை உடைய ஆனைமுகத்தானே, உன்றன் இரண்டு திருவடிகளால் என்றன் ஏழு குற்றங்களை நீக்கிடுவாய். உன்றள் சீரடியால் வாழும் வழியைக் காட்டிடுவாய். வேறு நினைவின்றி உள்ள என்னுடைய ஒருமையுளத்துள் அறிவை நாட்டிடுவாய். முத்தமிழின் நான்கு பாக்களை நவமணிபோல் ஒளிருகின்ற வண்ணம் கோத்து அளித்திடுவாய்.  

பாட்டரசர் கி. பாரதிதாசன்
30.11.2019