mercredi 24 décembre 2014

கர்த்தர் வெண்பா மாலை



கர்த்தர் வெண்பா மாலை

1.
கன்னி மரிபெற்ற கற்பகமே! காதலினால்
பின்னித் தொழுதேன் பிதாமகனே! - மின்னிவரும்
விண்மீன் வழிகாட்டும் விந்தைச் செயற்படித்துக்
கண்ணீர் கசியும் கமழ்ந்து!

2.
விண்ணின் ஒளியே! விரிகடலே! மென்காற்றே!
பண்ணின் சுவையே! படர்தீயே! - புண்ணியனே!
கண்ணின் மணிபோல் கருத்துள் கலந்தெனக்கு
மண்ணின் மகிழ்வை வழங்கு!

3.
நற்கருணை நாதனின் நன்மலர்த் தாள்பிடித்தால்
பொற்கருணை பூத்துப் புவியோங்கும்! - சொற்கருணை
மேவிச் சுடர்ந்தோங்கும்! மேய்ப்பவனின் சீர்பாடிச்
கூவித் தொழுவோம் குளிர்ந்து!

4.
மாட்டுத் தொழுவத்தில் வந்துதித்தான்! இங்குள்ள
நாட்டு நரிகளை ஓட்டிடவே! - காட்டுமலர்
போல்மணக்கும் புண்ணியன்நற் போதனையை நெஞ்சத்துள்
பால்மணக்கும் வண்ணம் படி!

5.
அன்பென்னும் ஆரமுதை அள்ளி அளித்துலகை
இன்புறச் செய்த இறைத்துாதன்! - என்றென்றும்
வான மழையாகி வண்ண வளமாகி
ஞானம் அளிப்பான் நமக்கு!

6.
தொல்லை அகன்றோடத் துாய மனமேவ
எல்லை இலாத எழில்காண - வல்லமைசேர்
சத்திய தேவனின் தங்கத் திருமொழியைப்
புத்தியில் நித்தம் பொறி!

7.
சிலுவைச் சுமைகண்டு சிந்திய செங்குருதி
உலகைப் புரட்டி உலுக்கும்! - பலகையென
ஆணி அடித்தார்! அருட்பூ விளைகின்ற
காணி அழித்தார் கருத்து!

8.
கல்லடி பட்டதும் கள்ளர் பலர்கூடி
முள்ளணி இட்டதும் முன்கண்டாய்! - சொல்லணி
கட்டி அணிவித்தேன் கா்த்தரே! என்வினையை
வெட்டி எடுப்பாய் விரைந்து!

9.
தாலாட்டுப் பாடுகிறேன் தங்கமே! தண்டமிழின்
பாலுாட்டிப் பாடுகிறேன் பார்த்தருள்வாய்! - வாலாட்டிப்
பொல்லா வினைதுள்ளும் பொய்யன் எனக்குள்ளே
எல்லாம் எரிப்பாய் எடுத்து!

10.
தேவன் பிறந்த திருநாளின் வாழ்த்தளித்தேன்!
மேவும் நலமோங்கி மின்னுகவே! - துாவும்
பனியெனத் துாய்மை படருகவே! கன்னல்
கனியெனத் தந்தேன் கவி!

25.12.2014

jeudi 4 décembre 2014

ஈடும் உண்டோ?


ஈடும் உண்டோ?

காட்டுக்குள் மலர்ந்தாடும் மலர்கள் தம்மைக்
     கண்ணுக்குள் கமழ்ந்தாட வைத்தாள்! தேனீக்
கூட்டுக்குள் நிறைந்துள்ள மதுவை அள்ளிக்
     குரலுக்குள் வழிந்தோடத் தந்தாள்! முன்னோர்
பாட்டுக்குள் ஒளிர்கின்ற அணிகள் யாவும்
     படைப்புக்குள் வந்தாடச் செய்தாள்! நெஞ்சக்
வீட்டுக்குள் விளக்கேற்றி வாழ்வைக் காக்கும்
     வியன்தமிழாள்! என்னுயிராள்! ஈடும் உண்டோ?

ஏட்டுக்குள் என்னிதயம் ஆழும் காலம்
     இனிப்புக்குள் தள்ளிடுவாள்! பகைவர் போடும்
வேட்டுக்குள் அஞ்சாமல் பாய்ந்து செல்ல
     வெற்றிப்பண் பாடிடுவாள்! உடலில் உள்ள
மூட்டுக்குள் சுழல்கின்ற தன்மைப் போன்று
     மூளையிலே சுழன்றிடுவாள்! வாழும் எந்த
நாட்டுக்குள் என்புகழைப் பதியச் செய்யும்
     நற்றமிழாள்! என்னுயிராள்! ஈடும் உண்டோ?

மாட்டுக்குள் ஆட்டுக்குள் கீழாய் எம்மை
     வதைத்திட்ட வஞ்சகரை மடியச் செய்தாள்!
சீட்டுக்குள் பாமரரை அடிமை யாக்கிச்
     சிறையிட்ட கொடியவரை ஒழியச் செய்தாள்!
வீட்டுக்குள் பெண்ணினத்தை அடக்கி வைத்து
     விலங்கிட்ட தீயவரை அழியச் செய்தாள்!
பூட்டுக்குள் வாடுவதோ? தூள்தூள் ஆக்கும்
     பூந்தமிழாள்! பொற்கொடியாள்! ஈடும் உண்டோ?

தீட்டென்று சொல்லுவதும்! யாகம் செய்தால்
     தீர்வென்று துள்ளுவதும்! சாதிப் பற்றை
மூட்டென்று கூடுவதும்! மாயம் காட்டி
     முடிவென்று பாடுவதும்! இருட்டுப் பேய்கள்
ஓட்டென்று சாற்றுவதும்! இறைவன் வந்த
     உருவென்று காட்டுவதும்! உலகை ஏய்க்கும்
கூட்டென்று நன்குணர்த்தி ஒளியைத் தந்த
     குளிர்தமிழாள்! கொடைத்தமிழாள்! ஈடும் உண்டோ?

மீட்டுகின்ற இசையானாள்! சான்றோர் நெஞ்சுள்
     மின்னுகின்ற அறமானாள்! புலவர் போற்றித்
தீட்டுகின்ற கவியானாள்! திகட்டா இன்பத்
     தேனானாள்! தினையானாள்! மண்ணைச் சாய்த்து
வாட்டுகின்ற பொய்ம்மைகளை முற்றும் அள்ளி
     ஓட்டுகின்ற மறமானாள்! அன்பாம் பாலை
ஊட்டுகின்ற தாயானாள்! வாழ்வும் ஆனாள்!
     உயர்தமிழாள்! ஒண்டமிழாள்! ஈடும் உண்டோ?

தொடரும்