mercredi 5 août 2026

கொள்கைநிறை பார்வதி தனகாந்தராசர்

 

கொள்கைநிறை பார்வதி தனகாந்தராசர்

குவலயம் போற்ற வாழியவே!

 

கலையோங்கும் திருநாடு வளமை பூக்கும்!

         கவியோங்கும் திருநாடு புலமை காக்கும்!

அலையோங்கும் திருநாடு செல்வஞ் சேர்க்கும்!

         அறயோங்கும் திருநாடு மகிழ்ச்சி கொள்ளும்!

மலையோங்கும் திருநாடு மாட்சி ஏற்கும்!

         மதியோங்கும் திருநாடு காட்சி யோங்கும்!

குலையோங்கும் திருநாடு கல்வி யாகும்!

         குணமோங்கும் பார்வதியார் வாழ்க! வாழ்க!

 

துணிவுடனே பணிபுரிந்தால் மேன்மை கிட்டும்!

         சுவையுடனே பணிபுரிந்தால் சீர்..கை தட்டும்!

பணிவுடனே பணிபுரிந்தால் புகழே ஓங்கும்!

         பண்புடனே பணிபுரிந்தால் அழகே தோன்றும்!

அணியுடனே பணிபுரிந்தால் அகிலம் போற்றும்!

         அருளுடனே பணிபுரிந்தால் அமைதி சூழும்!

திணிவுடனே பணிபுரிந்தால் திசைகள் ஓதும்!

         தீர்ப்புரைக்கும் பார்வதியார் வாழ்க! வாழ்க!

 

பெற்றோரின் சோலையிலே மகிழ்ந்தே யாடிப்

         பெரியோரின் சோலையிலே பிணைந்தே பாடிக்

கற்றோரின் சோலையிலே அறமே நாடிக்

         கவியோரின் சோலையிலே புகழே தேடி

உற்றோரின் சோலையிலே உயர்வே சூடி

         உறவோரின் சோலையிலே ஒன்றே கூடி

மற்றோரின் சோலையிலே மதிப்பே கோடி

         வாழ்கின்ற பார்வதியார் வாழ்க! வாழ்க!

 

நாட்டினிலே நன்னெறிகள் வளர வேண்டும்!

         நாவினிலே நன்னெறிகள் மலர வேண்டும்!

ஏட்டினிலே நன்னெறிகள் இனிக்க வேண்டும்!

         இளமையிலே நன்னெறிகள் தழைக்க வேண்டும்!

பாட்டினிலே நன்னெறிகள் பரவ வேண்டும்!

         பண்பினிலே நன்னெறிகள் குலவ வேண்டும்!

வேட்பினிலே நன்னெறிகள் விளைய வேண்டும்!

         விளம்புகின்ற பார்வதியார் வாழ்க! வாழ்க!

 

05.08.2026

lundi 3 août 2026

முனைவர் ஆ. அச்முதீனார்

 


முனைவர் ஆ. அச்முதீனார் எழுதிய

பிரான்சு தமிழர்களின் உலகம் போற்றும்

தமிழ்ப்பணி நுாலுக்குச் சாற்றுகவி

 

உலக மெங்கும் தமிழ்மக்கள்

      உயர்ந்து வாழும் வரலாற்றைக்

குலவும் தமிழில் கொடுக்கின்ற

      கோல மிக்க இந்நுாலைப்

பலவும் கற்ற நுண்ணறிவால்

      படைத்த முனைவர் அச்முதீனார்

நலமும் வளமும் தாம்பெற்று

      நன்றே வாழ்க பல்லாண்டே!

 

பெருமை பெற்றுப் புகழ்வீசும்

      பிரான்சு நாட்டில் வாழ்தமிழர்

அருமை யுற்றுத் தமிழ்ப்பணியை

      ஆற்றும் வல்ல வரலாற்றைத்

திரு..மை கொண்டு வடித்துள்ள

      சீர்மை முனைவர் அச்முதீனார்

ஒருமை வள்ளல் பாட்டாக

      ஓங்கி வாழ்க பல்லாண்டே!

 

சாலை சோலை அழகொளிரும்

      சால்பு மிக்க பிரான்சினிலே

காலை மாலை பாராமல்

      கடமை யாற்றும் தமிழ்மக்கள்

மூளை கொண்ட மொழிப்பற்றை

      மொழிந்த முனைவர் அச்முதீனார்

மாலை யிட்டு வாழ்த்துகிறேன்

      மகிழ்ந்து வாழ்க பல்லாண்டே! 

  

ஒண்மைத் தமிழின் சீர்காக்க,

      உயிராய் இனத்தின் போ்காக்க,

தண்மை கொண்ட மேனாட்டில்

      தமிழர் அமைத்த சங்கங்கள்

உண்மைப் பணியை நன்காய்ந்தே

      உரைத்த முனைவர் அச்முதீனார்

வண்மை யிறைவன் திருவருளால்

      வாழ்க வாழ்க பல்லாண்டே!

 

புலமே பெயர்ந்த திருநாட்டில்

      புகழே யடைந்த தமிழ்மக்கள்

உளமே உவக்கும் வண்ணத்தில்

      உலகே போற்றும் இந்நுாலை

வலமே செல்லும் தேரழகாய்

      வடித்த முனைவர் அச்முதீனார்

கலமே கற்ற பாட்டரசன்

      கவிபோல் வாழ்க பல்லாண்டே!

 

அன்புடன்

பாட்டரசர் கி. பாரதிதாசன்

தலைவர்

கம்பன் கழகம், பிரான்சு

தொல்காப்பியர் கழகம், பிரான்சு

உலகத் தமிழ்ச் சிறகம்

பாவலர் பயிலரங்கம், பிரான்சு

30.07.2026

 

கல்விச்செம்மல் பார்வதியார்

 



கல்விச்செம்மல் பார்வதி தனகாந்தராசர்

அமுத விழா வாழ்த்து

 

புதுவை நகரின் புகழைக் காக்கும்

        பூந்தேன் மனத்துப் பார்வதியார்!

மதுவைக் குழைத்து வழங்கும் மொழியார்!

        மலராய் மணக்கும் பொன்விழியார்!

இது..வை அது..வை இயம்பும் முன்னே

        எடுத்து வழங்குங் கொடைமதியார்!

பொதுமை புனையும் புலவன் யானும்

        போற்றிப் பாடி வாழ்த்துகிறேன்!

 

கடலுார் மண்ணின் கருணை யாலே

        காலம் வென்ற பார்வதியார்!

உடலுார் உணர்வில்  உண்மை ஒழுக்கம்

        உற்ற இருகண் போல்கொண்டார்!

இடரூர் வாழ்வை எதிர்த்து நின்றே

        இறைவன் அருளால் தினம்வென்றார்!

மடலுார் பாட்டின் மன்னன் யானும்

        மாட்சி பாடி வாழ்த்துகிறேன்!

 

அன்பே வாழ்க்கை அறமே ஆக்கம்

        அகத்துள் கொண்ட பார்வதியார்!

துன்பே யோடத் துணிவே யேற்றுத்

        தொடர்ந்து கல்விப் பணிசெய்தார்!

இன்பே தமிழ்தான் என்றே சொல்லி

        நன்றே நாட்டுக் கரணானார்!

நன்பே நல்கும் நல்ல புலவன்

        நயமே பாடி வாழ்த்துகிறேன்!

 

வேலன் கோயில் வேண்டி யமைத்து

        விழாக்கள் செய்யும் பார்வதியார்!

மாலன் மார்பின் மங்கை போன்று

        வாரி வழங்கும் உளமுற்றார்!

ஞாலன் ஒளிபோல் நன்மை பொழிந்து

        நல்லோர் வாழ்த்தும் சீர்பெற்றார்!

மூலன் தமிழால் முகிழ்த்த அமுதை

        முன்னே பாடி வாழ்த்துகிறேன்!

 

பண்பிஃ தென்றும் பணிவிஃ தென்றும்

        பற்றி வாழும் பார்வதியார்!

நண்பிஃ தென்றும் நலமிஃ தென்றும்

        நாடிப் போற்றுங் குறள்வழியார்!

கண்டிஃ தென்றும் குண்டிஃ தென்றும்

        தொண்டிஃ தென்றும் தெளிவுடையார்!

எண்ப தகவை ஏற்ற அன்னை

        எழிலைப் பாடி வாழ்த்துகிறேன்!

 

பாட்டரசர் கி. பாரதிதாசன்

தலைவர்

கம்பன் கழகம், பிரான்சு

தொல்காப்பியர் கழகம், பிரான்சு

உலகத் தமிழ்ச் சிறகம்

பாவலர் பயிலரங்கம், பிரான்சு

02.08.2026

lundi 6 avril 2026

விருத்த மேடை - 104

 

விருத்த மேடை  - 104

 

அறுசீர் விருத்தம்

[குறிலீற்றுமா+கூவிளம்+மா+விளம்+விளம்+மா]

 
பொருவ னார்புரி நுாலர்

…… புணர்முலை உமையவ ளோடு

மருவ னார்மரு வார்பால்

…… வருவது மில்லைநம் மடிகள்

திருவ னார்பணிந் தேத்தும்

…… திகழ்திரு வாஞ்சியத் துறையும்

ஒருவ னார்அடி யாரை

…… ஊழ்வினை நலியவொட் டாரே!

 

[சுந்தரர் தேவாரம் - 7995]

 

வாக்கை விற்றிடும் மக்கள்!

…… வந்திடும் நடிகர்பின் கூட்டம்!

நாக்கை நன்முதல் ஆக்கி

…… நரியெனச் சுற்றிடும் தலைவர்!

காக்கைக் கூட்டினில் குயில்போல்

…… கட்சியில் கூட்டுறும் சூதர்!

போக்கை யெண்ணியே வாடிப்

…… புனைந்துள பாப்பயன் தருமோ?

 

[பாட்டரசர்] 10.04.2026

 

முதல் சீர் குறிலீற்றுமா, இரண்டாம் சீர் கூவிளம், மூன்றாம் சீரும் ஆறாம் சீரும் மா, நான்காம் சீரும் ஐந்தாம் சீரும் விளம் என ஓரடி அமையும். இவ்வமைப்பிலேயே நான்கடிகள் வரும். நான்கடிகள் ஓரெதுகை பெறும். ஒன்று நான்காம் சீர்கள் மோனையுறும். விளம் வரும் இடங்களில் மாங்காய் அருகி வருதலும் உண்டு.

 

விரும்பிய தலைப்பில் இவ்வகை அறுசீர் விருத்தம் ஒன்று இயற்றுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.

 

பாட்டரசர் கி. பாரதிதாசன்

கம்பன் கழகம் பிரான்சு.
தொல்காப்பியர் கழகம், பிரான்சு

உலகத் தமிழ்ச் சிறகம்

dimanche 5 avril 2026

விருத்த மேடை - 103

 

விருத்த மேடை  - 103

 

அறுசீர் விருத்தம்

[முதல் நான்கு சீர்கள் வெண்டளை+மா+தேமா]

 
மறையின் மணந்தாரை வன்பரதர்

……… பாக்கத்து மடவார் செங்கை

இறைவளைகள் துாற்றுவதை ஏழையம்

……… எங்ஙனம்யாங்[கு] அறிகோம்? ஐய!

நிறைமதியும் மீனும் எனஅன்னம்

……… நீள்புன்னை அரும்பிப் பூத்த

பொறைமலிபூங் கொம்பேற வண்டாம்பல்

……… ஊதும் புகாரே எம்மூர்!

 

[சிலப்பதிகாரம், கானல் வரி - 29]

 

கல்வித் தகத்தால் திரைசூழ்

……… கடற்காழிக் கவுணி சீரார்

நல்வித் தகத்தால் இனிதுணரும்

……… ஞானசம் பந்தன் எண்ணும்

சொல்வித் தகத்தால் இறைவன்

……… திருநா ஏத்து பாடல்

வல்வித் தகத்தான் மொழிவார்

……… பழியில்இம் மண்ணின் மேலே!

 

[திருஞானசம்பந்தர் தேவாரம் - 2255]

 

பெருமை

 

பெண்ணின் பெருமையைப் பேணிப் புகழ்ந்திடப்

……… பெருகும் சீரே!

மண்ணின் பெருமையை வாழ்த்தி மகிழ்ந்திட

……… மணக்கும் தாரே!

எண்ணின் பெருமையை ஏத்தித் தெளிந்திட

……… ஏந்தும் ஊரே!

பண்ணின் பெருமையைப் பாடிக் களித்திடப்

……… படரும் பேரே!

 

[பாட்டரசர்] 10.04.2026

 

முதல் நான்கு சீர்கள் வெண்டளையில் அமையும். ஐந்தாம் சீர் மாச்சீர் ஆகும். ஆறாம் சீர் தேமாவாகும். இவ்வமைப்பிலேயே நான்கடிகள் வரும். நான்கடிகள் ஓரெதுகை பெறும். ஒன்று ஐந்தாம் சீர்கள் மோனையுறும்.  

 

விரும்பிய தலைப்பில் இவ்வகை அறுசீர் விருத்தம் ஒன்று இயற்றுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.

 

பாட்டரசர் கி. பாரதிதாசன்

கம்பன் கழகம் பிரான்சு.
தொல்காப்பியர் கழகம், பிரான்சு

உலகத் தமிழ்ச் சிறகம்

10.04.2026

samedi 4 avril 2026

விருத்த மேடை - 102

 

விருத்த மேடை  - 102

 

அறுசீர் விருத்தம்

[மா+மா+மா+மா+விளம்+கூவிளங்காய்]

 
பேரார் மதமா உரிவை போர்த்துப்

…… பொடியணி மேனியனாய்க்

காரார் கடலின் நஞ்சம் உண்ட

…… கண்ணுதல் விண்ணவனுார்

பாரார் வைகைப் புனல்வாய்ப் பரப்பிப்

…… பண்மணி பொன்கொழித்துச்

சீரார் வாரி சேர நின்ற

…… தென்திருப் பூவணமே

 

[திருஞானசம்பந்தர் தேவாரம் - 690]

 

நான் பிறந்த நகர்

 

நேராம் பாதை நெஞ்சைக் கவரும்

…… நிறையெழில் பூத்தொளிரும்!

சீராம் தமிழைச் சிந்தைக் கூட்டில்

…… சிறப்புறக் காத்தொளிரும்!

கூராம் அறிவால் கொள்ளை தீட்டிக்

…… குணநலங் கோத்தொளிரும்!

காராம் மழைபோல் கவிதை பொழியும்

…… கனித்தமிழ் நற்புதுவை!

 

[பாட்டரசர்] 04.04.2026

 

இந்த அறுசீர் விருத்தம் மா+மா+மா+மா+விளம்+கூவிளங்காய் என்ற சீரமைப்பை ஓரடியாகக் கொண்டது. இவ்வமைப்பிலேயே நான்கடிகள் அமைந்திருக்க வேண்டும். நான்கடிகளும் ஓரெதுகை பெற்றிருக்க வேண்டும். ஒன்று, ஐந்தாம் சீர்களில் மோனை அமைய வேண்டும்.

 

ஆறாம் சீர் கூவிளங்காய் வரும் இடத்தில் புளிமாங்காய்ச் சீரும், தேமாந்தண்பூச் சீரும் எங்கோ ஓரிடம் வருதலும் உண்டு. [எழுத்து எண்ணிக்கையில் கூவிளங்காய்போன்று ஒற்று நீக்கி நான்கு எழுத்துக்களைப் புளிமாங்காயும் தேமாந்தண்பூவும் பெற்றுள்ளன]

 

விரும்பிய தலைப்பில் இவ்வகை அறுசீர் விருத்தம் ஒன்று இயற்றுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.

 

பாட்டரசர் கி. பாரதிதாசன்

கம்பன் கழகம் பிரான்சு.
தொல்காப்பியர் கழகம், பிரான்சு

உலகத் தமிழ்ச் சிறகம்

04.04.2026

samedi 21 mars 2026

விருத்த மேடை - 101

 


விருத்த மேடை  - 101

 

கட்டளை அறுசீர் விருத்தம்

[நேர் : 19 எழுத்து, நிரை : 20 எழுத்து]

 

சன்மம் பலபல செய்து வெளிப்பட்டுச்

……. சங்கொடு சக்கரம்வில்

ஒண்மை யுடைய வுலகையொள் வாள்தண்டு

…… கொண்டுபுள் ளூர்ந்துலகில்

வன்மை யுடைய அரக்கர் அசுரரை

…… மாளப் படைபொருத

நன்மை யுடையவன் சீர்பர வப்பெற்ற

…… நானோர் குறைவிலனே!

 

[நம்மாழ்வார், திருவாய்மொழி]

 

குறைவில் தடங்கடல் கோளர வேறித்தன்

…… கோலச்செந் தாமரைக்கண்

உறைபவன் போலவோர் யோகு புணர்ந்த

…… ஒளிமணி வண்ணன்கண்ணன்

கறையணி மூக்குடைப் புள்ளைக் கடாவி

…… அசுரரைக் காய்ந்தவம்மான்

நிறைபுகழ் ஏத்தியும் பாடியும் ஆடியும்

…… யானொரு முட்டிலனே!

 

[நம்மாழ்வார், திருவாய்மொழி]

 

இல்லம் இனிக்க இளமை செழிக்க

…… இளையவள் வந்திடுவாள்!

வெல்லம் இனிக்க விருந்து மணக்க

…… வியன்கவி தந்திடுவாள்!

உள்ளம் இனிக்க உறவு கொழிக்க

…… உயர்மனை காத்திடுவாள்!

செல்லம் அவளின் சிறப்பை யுரைக்கச்

…… செகத்தினில் சொல்லிலையே!

 
[பாட்டரசர்] 20.03.2026

 

ஓரடியில் ஐந்து சீர்களைப் பெற்றுவரும் கட்டளைக் கலித்துறை இலக்கணத்தை ஒத்து, ஓரடியில் ஆறு சீர்களைப் பெற்றுவரும் கட்டளை அறுசீர் விருத்தம் இது. நேரசையில் தொடங்கும் பாடல் அடிக்கு 19 எழுத்துக்களையும், நிரையசையில் தொடங்கும் பாடல் அடிக்கு 20 எழுத்துக்களையும் பெறும்.  ஒவ்வோர் அடியும் வெண்டளை பெறும். அடியின் ஈற்றிலிருந்து அடியின் தொடக்கத்திற்கு வெண்டளை பார்க்க வேண்டியதில்லை. அடியின் ஈற்றுச்சீர் விளங்காயாக வரும். முதல் நான்கு சீர்களில் விளங்காய் வராது. விளங்காய் வரும் 6 ஆம் சீர் இடத்தில் மாங்கனியும், மாந்தண்பூ ஆகிய சீர்கள் அருகி வரும். மேலே இரண்டாம் விருத்தத்தில் தேமாந்தண்பூ  [வண்ணன்கண்ணன்] வந்துள்ளதைக் காண்க.

 

நான்கடிகள் ஓரெதுகை பெறும். முதல் சீரும் ஐந்தாம் சீரும் மோனையுறும்.

 

விரும்பிய தலைப்பில் இவ்வகை அறுசீர் விருத்தம் ஒன்று இயற்றுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.

 

பாட்டரசர் கி. பாரதிதாசன்

கம்பன் கழகம் பிரான்சு.
தொல்காப்பியர் கழகம், பிரான்சு

உலகத் தமிழ்ச் சிறகம்

20.03.2026

dimanche 15 mars 2026

விருத்த மேடை 100

 


விருத்த மேடை  - 100

 

அறுசீர் விருத்தம்

 

கட்டளை விருத்தம்

 

மற்றிருந் தீர்கட் கறியலாகா

………..மாதவன் என்பதோர் அன்புதன்னை

உற்றிருந் தேனுக் குரைப்பதெல்லாம்

………..ஊமைய ரோடு செவிடர்வார்த்தை

பெற்றிருந் தாளை ஒழியவேபோய்ப்

………..பேர்த்தொரு தாயில் வளர்ந்தநம்பி

மற்பொருந் தாமல் களமடைந்த

………..மதுரைப் புறத்தென்னை உய்திடுமின்

 

[ஆண்டாள், நாச்சியார் திருமொழி, நாலாயிர திவ்வியப் பிரபந்தம் - 617]

 

கலைமகள் தாயே! கவிக்கடலே!

………..கடையன் எனக்கும் அருள்தருவாய்!

தலைமகள் ஆன தமிழணங்கின்

………..தாள்கள் அளிக்கும் பொருள்தருவாய்!

அலைமகள் ஆகத் தொடர்ந்துவரும்

………..ஆக்கஞ் சிறக்கத் துணைபுரிவாய்!

மலைமகள் வன்மை மனமடைய

………..மலர்கள் துாவி யுனைத்தொழுதேன்!

 

[பாட்டரசர்] 13.03.2026

 

எழுத்தெண்ணிக்கை ஒன்றி வரும் பாடலைக் கட்டளைப் பெயரிட்டுச் சொல்லப்படும். மேலுள்ள அறுசீர் விருத்தத்தில் நிரையில் தொடங்கும் அரையடியில் 11 எழுத்துக்கள் வரும். நேரில் தொடங்கும் அரையடியில் 10 எழுத்துக்கள் வரும். ஒவ்வோர் அரையடியும் வெண்டளை பெறும். அரையடியின் ஈற்றுச்சீர் விளங்காயாக வரும். முதல் இரு சீர்களில் விளங்காய் வராது. விளங்காய் வரும் 3 ஆம் சீரிலும், 6 ஆம் சீரிலும் மாந்தண்பூ ஆகிய நாலசைச் சீர்கள் அருகி வரும்.

 

நான்கடிகள் ஓரெதுகை பெறும். முதல் சீரும் நான்காம் சீரும் மோனையுறும்.

 

விரும்பிய தலைப்பில் இவ்வகை அறுசீர் விருத்தம் ஒன்று இயற்றுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.

 

பாட்டரசர் கி. பாரதிதாசன்

கம்பன் கழகம் பிரான்சு.
தொல்காப்பியர் கழகம், பிரான்சு

உலகத் தமிழ்ச் சிறகம்

14.03.2026

mercredi 7 janvier 2026

சாற்றுகவி

 

பாவலர்மணி வா. சண்முகம் எழுதிய

வெண்பாத் திரட்டு நுாலுக்குச்

சாற்றுகவி

 

வெண்பா அழகில் விருப்பம் மிகுந்தோங்க

நண்பா படி..இந்த நன்னுாலைப் - பண்பாடும்

ஆற்றல் நிறைந்தோங்கும்! அன்புடை..வா. சண்முகனார்

போற்றப் புனைந்தார் புகழ்!

 

பாட்டின் இயலறிந்தும், பாடும் வளமறிந்தும்,

ஏட்டின் எழிலறிந்தும் தீட்டிய..நுால் - மூட்டுமே

காட்டின் மலர்வாசம்! கற்றுக் களிக்குமனம்

நாட்டில் பெறுமே நலம்!

 

ஊரோங்கப் பாரின் உறவோங்க நெஞ்சத்துள்

நேரோங்க நெய்திட்ட இந்நுாலால் - சீரோங்கப்,

பெற்றோர் பெயரோங்க உற்ற..வா. சண்முகனார்

கற்றோர்க்[கு] அளித்தார் களிப்பு!

 

எங்கும் தமிழ்பரவ என்றும் பணியாற்றிப்

சங்கப் புலமைத் தகைபோற்றித் - தங்கமென

வெண்பாத் திரட்டு விளைத்த..வா. சணமுகனார்

பண்பால் அடைந்தார் பயன்!

 

தண்ணிலா முற்றத்தில் தத்தி விளையாடி

எண்ணிலா ஏற்றம் இசைத்திட்டார்! - கண்ணுலாக்

காட்சியைக் கட்டிக் கவிதந்தார்! சண்முகனார்

மாட்சியை வாழ்த்துமே மண்!

 

பாட்டரசர் கி. பாரதிதாசன்

07.01.2026