Affichage des articles dont le libellé est தமிழுக்கு உழைத்தோர். Afficher tous les articles
Affichage des articles dont le libellé est தமிழுக்கு உழைத்தோர். Afficher tous les articles

lundi 9 décembre 2013

தமிழ்த்தாத்தா உ.வே.சா




தமிழ்த்தாத்தா .வே.சா

அங்கும் இங்கும் அலைவதுவோ?
     ஆசை பெருகிக் குலைவதுவோ?
எங்கும் திரியும் தெருநாய்போல்
     இழிந்து கிடந்து நலிவதுவோ?
பொங்கும் அறிவு! பெரும்புலமை!
     புவியைப் புரட்டும் நுண்கவிதை!
தங்கும் புகழை எனக்கீந்து
     தாயே தமிழே காத்திடுக!

மதியார் வாசல் மிதியாதே!
     மனமே! பகைக்குப் பணியாதே!
விதியோன் கையில் பொம்மையென
     விளைந்த காலம்! துவளாதே!
சதியோர் கூட்டு! கலங்காதே!
     தமிழின் வன்மை! இறைத்தன்மை!
மதியின் செல்வர்! .வே.சா
     வாழ்வும் வளமும் தமிழாகும்!

பற்று! பாசம்! புகராசை!
     பதவி! பட்டம்! பேராசை!
சுற்றும் நட்பு! பிறர்பொருளைச்
     சுருட்டும் நினைவு! பொய்நடிப்பு!
சற்றும் என்னைச் சாராமல்
     தமிழே! தாயே அருட்செய்தாய்!
முற்றும் தமிழே! .வே.சா
     முகிழ்த்த வாழ்வைப் பாடுகிறேன்!

தம்மின் வாழ்க்கைத் தழைத்திடவே
     தமிழைச் சொல்லிப் பிழைக்கின்றான்!
செம்பொன் தமிழின் திறமறியான்!
     செம்மை சேர்க்கும் அறமறியான்!
நம்மின் தமிழர் உயர்வின்றி
     நண்டின் கதைபோல் கிடக்கின்றார்!
கும்பென் றிருட்டே! .வே.சா
     கொடுத்த விளக்கை ஏற்றுகவே!

அன்னை இல்லம் பெயர்மட்டும்!
     அம்மா முதியோர் இல்லத்தில்!
பெண்ணை மதியான்! மேடையிலே
     பெண்ணின் உரிமை பேசுகிறான்!
கண்ணை விற்றே ஓவியமா?
     மண்ணை விற்றே புலம்பெயர்வா?
என்னைக் காக்கும் .வே.சா
     ஈடில் அறிஞா் வணங்குகிறேன்!

பொன்னும் பொருளும் சேர்த்திடவே
     போட்டி போடும் தமிழர்களே!
மண்ணும் மணியும் பெருகிடவே
     வாழ்வை இழக்கும் மனிதர்களே!
வண்ணத் தமிழின் ஏடுகளை
     வாழ்வாய் வளமாய் எண்ணிமனம்
உண்ணா துறங்கா(து) .வே.சா
     உழைத்தார்! தமிழின் பொற்காலம்!

சுடரும் புலமை! நறுங்கவிதை
     சுரக்கும் உள்ளம்! நூலாய்ந்து
படரும் அறிவு! சுவடிகளைப்
     பதிக்கும் மாண்பு! எழுத்தாற்றல்!
உடலும் உயிரும் தமிழாக
     ஒளிரும் வடிவம்! எந்நாளும்
தொடரும் புகழ்சேர் .வே.சா
     தொண்டின் இமயம்! போற்றுகிறேன்!

எந்த மொழிக்கும் குறையின்றி
     இருந்த மொழிதான் செந்தமிழும்!
சந்தத் தமிழின் துணைக்கொண்டு
     வந்த மொழிகள் பற்பலவாம்!
சொந்தத் தாயின் நினைவின்றித்
     தூங்கும் தமிழன் விழிப்புறவே
தந்த நூல்கள்! .வே.சா
     தமிழர் வணங்கும் இறையென்பேன்!

நாயும் நரியும் நண்டுகளும்
     நாற்றப் பன்றி கழுதைகளும்
பாயும் புலியும் சிறுத்தைகளும்
     பறக்கும் கழுகு ஆந்தைகளும்
பேயும் பிறவும் அலைமோதும்
     மனிதர் உருவில்! இவைக்கண்டு
காயும் நெஞ்சம்! .வே.சா
     தமிழின் தாத்தா! காத்தருளே!

உண்மை ஒளிரும் இடந்தேடி
     உரிமை முழங்கும் களந்தேடி
வண்மை மின்னும் உளந்தேடி
     வண்ணக் கவிஞன் அலைகின்றேன்!
நுண்மை பொங்கும் மொழியாற்றல்!
     நோக்கம் ஒன்றே! தமிழ்உயர்வு!
திண்மை பொங்கும் .வே.சா
     திறத்தை உடையார் கிடைப்பாரோ?

08-05-2008

mercredi 27 novembre 2013

பாவாணர் (தாயும் சேயும்)

மொழிஞாயிறு 
ஞா. தேவநேயப் பாவாணா்

மொழிபலவும் உணர்ந்தவராய் இருந்த தாலே
       முத்தமிழே உயர்ந்ததெனும் முடிவைக் கண்டார்!
பழிபலவும் தன்முன்னர்ச் சூழ்ந்திட் டாலும்
       பைந்தமிழின் சீருரைக்கத் தயங்க மாட்டார்!
வழிபலவும் வாழ்வதற்கே இருந்திட் டாலும்
       மதிமயக்கும் வேற்றுமொழி பேச மாட்டார்!
இழிவுபல சிறுமதியார் செய்திட் டாலும்
       எழில்தமிழைக் காத்திடவே தவற மாட்டார்!

முந்துதமிழ் மூவேந்தர் முறையாய்க் காத்த
       முத்தமிழ்தாம் மொழிகளிலே மூத்த தாகும்!
செந்தமிழில் வடசொற்கள் சேரு மாயின்
       சிறப்பான நம்மொழியும் சிதைந்து போகும்!
அந்தமிழர் துயில்வதனால் ஆங்கி லந்தான்
       அருந்தமிழை விரைவாக விழுங்கக் கூடும்!
நந்தமிழர் இவையுணர்ந்து நாட்டத் தோடு
       நற்றமிழைப் போற்றிடவே வேண்டும் என்றார்!

செந்தமிழின் வேர்ச்சொல்லைச் சீராய் ஆய்ந்து
       சிறப்பான ஆய்வுரைகள் செய்[து] உயர்ந்தார்!
சிந்தைமகிழ் புதுமைகளைச் செப்பி நின்று
       சிறுமதியோர் சூழ்ச்சிக்கு வேட்டு வைத்தார்!
நந்தமிழே ஆரியத்தின் மூல மென்று
       நறுக்காகத் தெளிவுறவே எடுத்து ரைத்தார்!
வந்துபுகா(து) அயற்சொற்கள் அவர்ப டைப்பில்
       வண்டமிழை உயிரெனவே கொண்ட தாலே!

முத்தமிழ்ச்சீர் இயலிசைசேர் நாட கத்தை
       மூவேந்தர் வளர்த்திட்டார் அந்த நாளில்!
முத்தான செந்தமிழாம் நந்தம் தாயை
       முறையாகக் கல்லாதார் தமிழர் ஆகார்!
சொத்தாகும் தமிழ்நூலைக் கற்றுங் கூடச்
       சொல்வேறு செயல்வேறாய்த் திரிகின் றாரே
'செத்தாலும் தமிழ்பேசிச் சாவீர்' என்றே
       சீறிவரும் சொல்லெடுத்துச் சாடி னாரே!

தம்நலத்தைப் பாராமல் கண்துஞ் சாமல்
       தமிழ்மொழியின் உயர்வுக்கே பாடு பட்டார்!
நம்பெயரை நாம்வாழும் ஊரின் பேரை
       நற்றமிழில் கண்டிடவே விருப்பப் பட்டார்!
பம்பரமாய்த் தமிழ்த்தொண்டு துணிச்ச லோடு
       பாரினிலே புரிந்தவரை மறக்கப் போமோ?
செம்மொழியாம் நம்மொழியைக் காலப் போக்கில்
       சிதைக்கவந்த பிறமொழியைத் துரத்திட் டாரே!

தாய்மொழியின் உணர்வொடு,தாய் நாட்டுப் பற்றும்,
       தந்நலமே இல்லாத வாழ்வுங் கொண்டு
தூய்மையதாம் தமிழ்மொழியின் வளர்ச்சிக் காகத்
       தொடர்ந்துபல நற்பணிகள் புரிந்து நின்றார்!
வாய்மறையாம் குறளுக்குப் புதிய தாக
       வளமான உரைகண்டு மகிழ்ந்து போனார்!
சேய்பிறக்கத் தாய்மகிழுந் தன்மை போன்று
       செந்தமிழ்த்தாய் மகிழ்ந்தனள்பா வாண ராலே!

(தாய் - தமிழ், சேய் - பாவாணர், 
23-03-2002 அன்று புதுவை நற்றமிழ் இதழ் நடத்திய 
பாவாணர் நூற்றாண்டு விழா மலருக்கு எழுதிய பாக்கள்)

mercredi 20 novembre 2013

முருகன் தூதர்




முருகன் தூதர்

சொல்லவரும் கருத்தெல்லாம் முருகன் சீரே!
     சுடர்நெஞ்சின் நினைவெல்லாம் தமிழின் வாழ்வே!
நல்லருள்சேர் நெறியெல்லாம் உலகோர் ஏற்க
     நன்குரைத்த பொழிவெல்லாம் இன்பத் தேனே!
அல்லலுறும் புவியோர்தம் துன்பம் தீர
     ஆய்ந்தளித்த நூலெல்லாம் அருளின் மாண்பே!
வல்லதமிழ் வளங்காத்த கிருபா னந்த
     வாரியார்போல் இனியொருவர் காணப் போமோ?

சந்தமொலிர் திருப்புகழைப் பாடிப் பாடி,
     சாந்தமொளிர் அருட்பாவை நெஞ்சிற் சூடி,
எந்தையொளிர் கம்பனவன் கவியிற் கூடி,
     இன்பமொளிர் நல்லுரைகள் தந்தார் கோடி!
கந்தனொளிர் புகழ்பரப்ப வந்த தூதர்!
     கந்தமொளிர் செயல்படைக்கப் பிறந்த தொண்டர்!
சிந்தையொளிர் அருண்மணக்கும் கிருபா னந்த
     வாரியார்போல் சீருலகில் காணப் போமோ?

06-11-2002

mercredi 23 octobre 2013

வாலியைப் போற்றுவோம் - 3




வாலியைப் போற்றுவோம்!
[தலைமைக் கவிதை]

தோழி தோழர் வாலி புகழை
வாழி என்று வாழ்த்தி வடித்தனர்!

இளமை பொங்கும் இனிய பாக்களை
வளமைத் தமிழில் வழங்கிய வாலி!
வாலிபக் கவிஞர்! வசனக் கவிஞர்!
மாலினைப் போற்றி மகிழ்ந்த கவிஞர்!
காவியக் கவிஞர்! காப்பியக் கவிஞர்!
ஓவியக் கவிஞர்! உணர்ச்சிக் கவிஞர்!
திரையிசை போற்றும் தேன்மனக் கவிஞர்!
உரைநடை நூல்களால் ஒளிரும் கவிஞர்!
எண்ணம் யாவும் இனிக்கும் வண்ணம்
கண்ணன் கழலிணை காட்டிய கவிஞர்!
கம்பன் கவிதையுள் கட்டுண் டிருந்து
செம்பொன் இராமனைச் செப்பிய கவிஞர்!
வள்ளுவர் வடித்த வான்மறை அமுதை
அள்ளிப் பருகிய அறநெறிக் கவிஞர்!
கலைஞர் தமிழில் காதல் கொண்டு
குலையாய்ப் பாக்கள் கொடுத்த கவிஞர்!
வித்தக கவிஞர் விசயின் நெஞ்சுள்
முத்தமிழ் ஆக முகிழ்த்த கவிஞர்!
ஏந்தல் எங்கள் இராமா நுசனின்
பூந்தாள் போற்றிப் புகழ்ந்த கவிஞர்!
இன்னும் இவர்கள் இருக்கிறார் என்று
மின்னும் மாந்தரை மீட்டிய கவிஞர்!
பாண்டவர் பூமி பாடிய கவிஞர்!
ஆண்டவர் அடிகளில் ஆழ்ந்த கவிஞர்!
ஆனந்த விகடனில் அனைவரும் மகிழத்
தேனார் கவிதைகள் தீட்டிய கவிஞர்!
திரையிசை பூக்கள் திகட்டா ஆயிரத்தை
மரைமகள் அருளால் வழங்கிய கவிஞர்!
கம்பன் எண்பது கவிநூல் பாடி
எம்மனம் புகுந்த ஈடில் கவிஞர்!
வெற்றிவேல் முருகனை வெண்பா யாப்பில்
பற்றிக் களித்த பக்தி கவிஞர்!
பொய்க்கால் என்னும் பொலிவுடை நூலை
நெய்போல் மணக்க நெய்த கவிஞர்!
அம்மா என்னும் அன்பொளிர் நூலை
இம்மண் தழைக்க ஈந்த கவிஞர்!
நெஞ்சுள் ஆடும் நினைவு நாடா
கொஞ்சும் தமிழால் குவித்த கவிஞர்!
அழகிய சிங்கர் விழுமிய நூலைப்
பழகிய தமிழால் பகன்ற கவிஞர்!

வாலியின் நூல்களை வரிசைப் படுத்த
வாலியின் வால்போல் வளரும் ஐயா!
வல்ல கவிகளை வடித்த வாலியைச்
செல்லத் தமிழால் சீராட்டு வோமே!

காளியின் தாசன் போன்று
     கவிதைகள் படைத்தோர் வாழி!
வாலியின் புகழை இங்கு
     வளமுறச் சுவைத்தோர் வாழி!
வேலியின் அரணைப் போன்று
     வியன்தமிழ் காப்போர் வாழி!
நாளினை இனிக்கச் செய்த
     நல்லவர் வாழி! நன்றி!

18.05.2013