mardi 31 juillet 2018

வெண்பா மேடை - 91



வெண்பா
மேடை - 91
  
பொருள் பின்வரும்நிலை யணி வெண்பா!
  
நனிமண மல்லிகையின் நன்மணம் தோற்கும்!
பனிமணக் கூர்விழி பார்வை - எனைத்தாக்கும்!
நெஞ்சம் உறுவலி நீண்டு கழிதுன்பம்
விஞ்சுமே சால விரிந்து!
  
கண்தீட்டும் காவியமும், கையெழுதும் ஓவியமும்
பண்கட்டும் நன்னெஞ்சும் பாழ்படுத்தும்! - பெண்மணியே!
நான்வடிக்கும் பாப்படித்து நன்மடலை நீபடைத்துத்
தேன்குடிக்கும் வாழ்வைச் செதுக்கு!
  
[பாட்டரசர் கி. பாரதிதாசன்]
  
ஒரு செய்யுளில் ஒரு சொல் பலமுறை ஒரே பொருளில் பயின்றுவருவது சொற்பொருட்பின்வரு நிலையணி எனப்படும்.
  
ஒரு செய்யுளில் ஒரு சொல் பலமுறை வேறு வேறு பொருளில் பயின்றுவருவது சொற்பின் வருநிலையணி எனப்படும்.
  
ஒரு செய்யுளில் பல சொற்கள் ஒரு பொருளில் பயின்றுவருவது பொருட்பின்வருநிலை யணி எனப்படும்.
  
மேற்கண்ட முதல் வெண்பாவில் நனி, கூர், உறு, கழி, சால ஆகிய சொற்கள் மிகுதி என்ற ஒரு பொருள்மேல் நின்றனவாதலின் பொருள் பின்வரும்நிலை யணியைப் பெற்றது.
  
இரண்டாம் வெண்பாவில் தீட்டுதல், கட்டுதல், வடித்தால், படைத்தல், செதுக்குதல் ஆகிய சொற்கள் எழுதுதல் என்னும் ஒரு பொருள்மேல் வந்தனவாதலின் பொருள் பின்வரும்நிலை யணியைப் பெற்றது.
  
இவ்வாறு பல சொற்கள் ஒரு பொருளில் வருமாறு, விரும்பிய பொருளில் ஒரு வெண்பா பாடுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.
  
"பாவலர் பயிலரங்கம்" என்ற குழுவில் இணைந்து பொருள்பின்வருநிலை யணி வெண்பாவைத் தனிப்பதிவாகப் பதிவிட வேண்டுகிறேன்!
  
அன்புடன்
  
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்:
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்
30.07.2018

சொற்பின்வருநிலை யணி



சொற்பின்வருநிலை
யணி
  
1.
அணிபடிக்கும் பெண்ணே! அணியே! அணியாய்ப்
பணிபடைக்கும் நற்பாவாய் பாராய்! - அணிசெய்[து]
அணிகொண்டு வாழ்கின்றாய்! ஆரமுதே உன்னால்
பிணிகொண்டு நீளுமென் பித்து!
  
அணி - இலக்கணம், அழகு. படை, அவங்காரம், பெருமை,
  
2.
காலை உதித்ததடி! காலை முழங்குதடி!
காலை கசக்குதடி கட்டழகே! - வேலை
வெறுக்குதடி! நற்காலை வேண்டியே பாடல்
கிறுக்குதடி நெஞ்சம் கிடந்து!
  
காலை - கதிரவன், முரசம், விடியற்காலை, நற்றருணம்.
  
3.
நுாலை நிகர்த்தவளே! நுாலை சுமப்பதுமேன்?
நுாலை யறியாமல் நோக்குவதேன? - மாலையுடன்
நுாலை அணிந்திடவும் நுாலை அமைத்திடவும்
நுாலை உணர்ந்தே நுவல்
  
நுால் - பஞ்சிநுால், படிக்கும் சுவடி, சாத்திரம், மங்கலநாண், ஆகமம், ஆலோசனை.
  
4.
குளிர்முருகு காய்க்குதடி! கோன்முருகு கோவில்
ஒளிர்முருகு காணுதடி! ஊரே - தெளிமுருகு
ஏற்றுச் சிறக்குதடி! இன்முருகு மாலையுடன்
போற்று! மனமுருகு பூத்து!
  
முருகு - எலுமிச்சை, முருகன், திருவிழா, அழகு, மணம், இளமை.
  
5.
மெய்யொளிர் பேரழகே! மெய்மொழி கூறுகிறேன்!
மெய்யொளிர் மேனியன் மேலாணை! - மெய்யுயிர்
ஒன்றும் உறவாக ஓர்நிலை ஊற்றிடுவோம்!
என்றும் உயிர்மெய் இசைத்து!
  
மெய் - உடல், உண்மை, மெய்ப்பொருள், ஒற்றெழுத்து, அறிவு.
  
6.
தேமா பழுத்ததடி! சீர்மா செழித்ததடி!
வா..மா விரைந்து வளமாபோல் - பாமா..உன்
கார்மா விழிகள் கவிமா புனையும்..நீ
தார்மா அணங்கின் தகை!
  
மா : மாமரம், நிலம், குதிரை, வண்டு, அழகு, இலக்குமி
  
7.
பாரொளி நாதனைப் பாடிப் பணிந்திடுவோம்!
காரொளி வானழகை கண்டுவப்போம்! - சீரொளி
பெண்ணழகே! பொன்னொளி பெற்றிடுவோம்! தாமரைக்
கண்ணழகே! இன்னொளி காட்டு!
  
ஒளி: சூரியன், நிலவு, விளக்கு, புகழ்
8.
ஆவி நிகர்த்தவளே! அன்பே! அரும்தேநீர்
ஆவி பறக்க அளித்தனையே! - ஆவியெனை
மேவி மயக்குதடி! மெய்யாவி பூக்குதடி!
கூவி நடத்துதடி கூத்து!
  
ஆவி : உயிர், புகை, வாசம், குளம்
  
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்
31.07.2018

dimanche 29 juillet 2018

வெண்பா மேடை - 90


வெண்பா மேடை - 90

சொற்பின் வருநிலையணி  வெண்பா

மாலை மயங்குதடி! மாலை தொடுத்திவோம்!
மாலை வணங்கி மகிழ்ந்திடுவோம்! - சோலைமதுப்
பாமாலை பாடிப் படைத்திடுவோம்! முன்வினையாம்
மாமாலை நீங்கும் மனத்து!

[பாட்டரசர் கி. பாரதிதாசன்]

ஒரு செய்யுளில் ஒரு சொல் பலமுறை வேறு வேறு பொருளில் பயின்று வருவது சொற்பின் வருநிலையணி எனப்படும்.

மேற்கண்ட வெண்பாவில் 'மாலை' என்ற சொல் ஐந்து முறை வந்து வேறு வேறு பொருளைக் கொண்டுள்ளது. [மாலைப்பொழுது, மலர்மாலை, திருமால், செய்யுள், இருள்]

இவ்வெண்பாவில் மாலை என்னும் சொலே  பின்னும் பல இடத்தும் வந்து வேறு பல பொருள் அளித்தமையால் சொற்பின் வருநிலையணி யாயிற்று.

இவ்வாறு ஓரேசொல் வேறு வேறு பொருளில் மூன்றுமுறைக்குக் குறையாமல்
வருமாறு, விரும்பிய பொருளில்  ஒரு வெண்பா பாடுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.

"பாவலர் பயிலரங்கம்" என்ற குழுவில் இணைந்து சொற்பின் வருநிலையணி வெண்பாவைத் தனிப்பதிவாகப் பதிவிட வேண்டுகிறேன்!

அன்புடன்

பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்:
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்
29.07.2018